Sunday, 4 April 2021

கற்பதுவே..பகிர்வதுவே-25*மணி



மூட நம்பிக்கைக்கான விஷ முறிவு மருந்து அறிவியல்
-ஆடம் ஸ்மித்

#ஹிபாகுஷா
-ம.ஜெகதீஸ்வரன்

இரண்டாம் உலகப்போர்-அச்சு நாடுகள்-நேச நாடுகள், இவையனைத்து ஆறாம் வகுப்பு சமூகவியலில் இருந்தே படிப்பதுதான்.போட்டித்தேர்வுக்கு தயாராகிறவராய் இருந்தால் அந்த குண்டின் எடை,உயரம் உள்ளிட்ட இன்னபிற தகவல்களை அறிந்திருப்பர்.ஆனால் இப்புத்தகம் போர் ஆரம்பித்ததிலிருந்து குண்டு தயாரித்து வீசியது, அதன் விளைவுகள் பற்றி விரிவாக கண்முன்னால் கொண்டு குவிக்கிறது.அணு குண்டு வெடிப்பில் தீ காயங்களுடன் உயிர் பிழைத்தவர்கள் ஹிபாகுஷா என்று தனியாக அடையாளப்படுத்தப் படுகின்றனர்.அவர்களைப் பற்றியும் புத்தகம் பேசுகிறது.

#போர் ஆமாம் போர்

1941 டிசம்பர் 11 வரை அமெரிக்க ஐக்கிய நாடு போரில் ஈடுபடாமல் நடுநிலை வகித்து வந்தாலும், பிரிட்டனுக்கு ஏராளமான உதவிகளை அளித்து வந்தது. டிசம்பர் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை போரின் போக்கை மாற்ற விரும்பிய ஜப்பான் அமெரிக்காவின் பியர்ல் துறைமுகம் மீது தாக்குதலை நடத்தியது. இதனால் வெகுண்டு எழுந்த அமெரிக்க தானும் போரில் குதித்தது.

ஜப்பானை அடிபணிய 1945ல் நான்கு பெரிய தீவுகளில் தெற்கே அமைந்துள்ள கியூசி என்னும் தீவின் மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமிக்க திட்டமிடப்பட்டிருந்தது அமெரிக்கா. ஆனால் ஜப்பான் பகுதியில் பனி பெய்கின்ற குளிர்காலம் என்பதால் ஐந்து மாத கால இடைவெளி இருந்தது.என்ன செய்வதென தெரியாமல் இருந்த அமெரிக்கா அப்போதுதான் அணுகுண்டுகளை பயன்படுத்துவதன் மூலம் ஜப்பானை அடி பணிய வைக்கலாம் என்று ஆலோசனை முன் வைக்கப்பட்டது. அணு ஆயுதத்தை பயன்படுத்தும் அறிக்கை அளிக்கப்பட்டது அது ஜப்பானுக்கு இறுதி நிபந்தனையும் இறுதி எச்சரிக்கையுமாக அளிக்கப்பட்டது.

அப்போது மன்னராய் இருந்தவர்க்கு போர் நிறுத்தியபின் என்ன நிலை என குறிப்பிடப்படவில்லை என்பதால் அமைச்சர் கொரேச்சிகா அனாமி போரை நிறுத்த விரும்பவில்லை. அணு குண்டு தாக்குதலுக்கு முன் ஜப்பானை எச்சரிக்க அமெரிக்க விமானம் மூலம் குண்டு மழை பொழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

#அணுகுண்டு கண்டுபிடிப்பு

ஜெர்மனி நாடு அணு குண்டு தயாரிப்பதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டதாக தகவல் வந்தவுடன்..அமெரிக்கா அந்த நாட்டுக்கு முன்பு அணுகுண்டு தயாரிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டது. அதன் விளைவாக இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கையில் 1942ஆம் ஆண்டு அமெரிக்கா தன்னுடைய ரகசிய திட்டமான மான்ஹாட்டன் திட்டத்தை செயல்படுத்த துவங்கி இருந்தது. அதன் நோக்கம் அணுகுண்டு தயாரிப்பது. உலக நாடுகளுக்கு தெரியாமல் பரம ரகசியமாக அதனை வைத்திருந்தது. 1945 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் நாள் வெற்றிகரமாக ட்ரினிடி என்ற தீவில் வெடிக்க வைத்து அணுகுண்டு சோதனை நடத்தியது

யுரேனியம் 235 தனிமத்தை இயற்கையாக யுரேனியத் தாதுவில் இருந்து பிரித்தெடுத்தல், அணுக்கரு தொடர்வினையை கட்டுப்படுத்துதல், யுரேனியம்235 பயன்படுத்தி ஒரு வெடிகுண்டை தயாரித்தல் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். புளூட்டோனியம் என்ற தனிமம் இயற்கையில் கிடைப்பதில்லை. யுரேனியத்தை நியூட்ரான்களின் தாக்குதலுக்கு படுத்துவதன் மூலம் பெறப்படுகிறது.யுரேனியம் போல் புளூட்டோனியன் 239 அணுக்கருப் பிளவுவினைக்கு பயன்படுத்துவதாக கண்டறிந்தனர்.

ஒரு மரபுரீதி குண்டோடு ஒப்பிடும்பது
 அணுகுண்டு பத்து லட்சம் மடங்கு சக்தி வாய்ந்தது. 10,000 லாரிகளில் நிரப்பப்பட்ட ஆர்டிஎஸ் வெடிமருந்து மொத்தமாக ஒரே இடத்தில் வைத்து வெடிக்கப்பட்டால் எவ்வளவு சேதம் ஏற்படுமோ அவ்வளவு சேதம் ஏற்படும்.உந்து வகை, வெடிப்பு வகை  மூலம் அணுகுண்டுகள் இரண்டு முறையில் வடிவமைக்கப் படுகின்றன என்பதும் அது குறித்த விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது

#தாக்குதல்

அணுகுண்டு வீச ஹிரோஷிமா நாகசாகி ஆகிய நகரங்களை தேர்ந்தெடுத்தும், அதன் பின்னணியும் சொல்லப்பட்டுள்ளது. சோதனைக்கு உட்படுத்தட்ட புளூட்டோனிய குண்டுகளை தவிர்த்து யுரேனியத்தால் ஆன குண்டு வீச முடிவு செய்ததையும்,அந்த ஒவ்வொரு நாளின் மணித்துளிகளையும் கவனமாக இப்புத்தகம் பதிவு செய்துள்ளது. அடுத்ததாக நாகசாகிமீது கடைசி நேர முடிவின் படி அதாவது கொகுரா என்ற நகரை தான் இலக்காக முதலில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அங்கே மேகங்கள் சூழ்ந்து இருந்ததால் நாகசாகியை தேர்ந்தெடுக்க வேண்டியதாகிவிட்டது  

#வெடிப்பின் விளைவுகள

வீசப்பட்ட அணுகுண்டு 15 ஆயிரம் டன் ட்ரை நைட்ரோடொலுவீன் வெடிமருந்து திறனுக்கு சமமானது. 600 மீட்டர் வரை நெருப்பு புகை வானில் பரவியது. இப்பகுதியின் பொருட்களின் மேல் 540 டிகிரி பாரன்ஹீட் செல்சியஸ் வெப்பம் பரவியது.பல ஆயிரம் பேர் தோல் வெந்து செத்தனர். நகரின் மையப் பகுதியில் 5000டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தால் கூரை ஓடுகளும் கருங்கற்கள் உருகின. 1.6 கிலோ மீட்டர் தொலைவு வரை இருந்த மக்கள் தோல் வெந்து மாண்டனர். இரண்டே வாரத்தில் கதிர்வீச்சு காரணமாக 12,000 பேர் நகரத்தை விட்டு பல கி.மீ தொலைவில் இருந்தவர்கள் உருக்குலைந்து போனார்கள்.

தீக்காயங்கள் ஏற்பட்டு எரிச்சலை தாங்க முடியாமல் ஆற்றுக்குள் குதித்து அடித்துச் செல்லப்பட்டனர். அந்த ஆறு 100 டிகிரிக்கும் மேல் கொதித்துக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குண்டு வெடிப்பினால் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மக்கள் உடனடியாக இறந்தனர். பல ஆயிரம் பேர் காயமுற்றனர்.குண்டு வெடித்த்ந் போது அந்த தீப்பந்த வெப்பநிலை 3 லட்சம் டிகிரி பாரன்ஹீட் செல்சியஸ் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அடுத்தபடியாக கண்ணுக்குத் தெரியாத கதிரியக்கத்தின் மூலம் உடலில் வெள்ளை நிற புள்ளிகள் தென்பட்டன.தீயில் தப்பித்தாலும் சில ஆண்டுகள் கழித்து புற்றுநோயால் பாதிக்கப் பட்டனர். கதிரியக்கத்தால் ஏற்பட்ட நோய்க்கு நிவாரணம் கிடையாது.குண்டு வெடித்த போது நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும் படங்களாக புத்தகத்தில் உள்ளது. ஒரு சிறிய குழந்தை சைக்கிளில் சென்று கொண்டிருந்தது..அந்த குழந்தை குண்டு வெடித்தபோது ஒரு நிமிடத்தில் ஆவியாகி வெறும் சடலமான உடல் மட்டும் கிடப்பதைப் பார்க்கும்போது மனது கனக்கிறது

குண்டுவெடிப்பின் போது அகிகோ என்பவர் தான் ஜன்னல் வழியாக பிரகாசமான ஒளியை பார்த்ததாகவும், அடுத்த நிமிடமே கும்மிருட்டு வந்ததாகவும், அதன் நெருப்பு ஜுவாலைகள் குண்டுவெடிப்பின் விளைவுகளையும் கூறியுள்ளார். இவ்வாறு அணுகுண்டுக்கு விளைவுகளையும் அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் நாசங்களையும் புத்தகம் விவரிக்கிறது. குண்டுவெடிப்பின் போது நிகழ்ந்த சில சம்பவங்கள் மனதைத் சுடுகின்றன. குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட இன்னும் மீளாத பலர் தங்களின் உபாதைகளையும் இதில் பதிவு செய்துள்ளனர்.யோசுக்கே யமஹ என்பவர்தான் மறுநாள் படம்பிடித்த படப்பிடிப்பு அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.இவரின்
மூலம் தான் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததே மக்களுக்கு தெரிய வந்தது.

வரலாற்றின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுப்பவர்கள் அந்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வார்கள்.

-ஜார்ஜ் சான்டயானா கூறுவார்

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment