#30D0044
நாள்-22
புத்தகம்-37
உரைநடை என்பது சந்தையை
வேடிக்கை பார்ப்பது போன்றது-
கவிதை என்பது நீர்நிலையை நாடிவரும் பறவைகளை வேடிக்கை பார்ப்பது போன்றது
-எஸ்.ரா
மனதில் தோன்றும் எண்ணங்களை மிக மென்மையான வார்த்தைகளில் சொல்வது கவிதை எனும் கலை. அதில் பெண்களின் உணர்வுகளையும், அவர்களுக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகளையும் மிக அழுத்தமாக சொல்வதில் கவிஞர் வெண்ணிலா அவர்களுக்கு தனி இடம் உண்டு. அந்த வகையில் இத்தொகுப்பில் தன் கவிதை 11 தொகுப்புகளை இணைத்து ஒரு புத்தகமாக நம் கைகளில் இருக்கிறது. நான் எப்போதும் ரசிப்பது அவரின் சிறு கவிதைகள் தான். ஏனெனில் சிறு குறு வரிகளில் மிகப் பெரிய உண்மைகளை அவர் சொல்லியிருக்கக் கூடும். அந்த வகையில் நான் ரசித்த சில கவிதைகள்
*அன்பு கொண்ட உன் முன் நிற்கும்போது
பேரழகின் தோரணை வந்துவிடுகிறது எனக்கு
*முத்தத்தில் துவங்கி
முத்தத்தில் முடியும்
தாம்பத்தியம்
எத்தனை பேருக்கு வாய்க்கிறது
யாரும் சொல்லாமலேயே கற்றுக்கொள்கிறார்கள்
அலுத்து தூங்குவதற்கான உடற்பயிற்சியாக.
*விஷப்பாம்பு ஒன்று
என் மீதேறி
நிதானமாக
கடந்து போகிறது
புரிதலற்ற உன்
பார்வைகளை
சந்திக்கும் பொழுதெல்லாம்.
*ஊடலின் நேரங்களில் விரவிக்கிடந்து
வெறுமை சுமக்கின்றன
ஒரு முத்தத்திற்கான
இடைவெளிகள்
*உள்ளே வீசப்படும்
செய்தித்தாளை
அப்பாவிடம் கொடுக்கவும்
கீரை விற்பவன் வந்தால்
அம்மாவைக் கூப்பிடவும்
கற்றுக் கொள்கிறது குழந்தை
யாரும் கற்றுத் தராமலேயே
*துண்டொன்றைக்
கட்டிக்கொண்டு
அம்மாவாக முடிகிறது
குழந்தைகளால்
குழந்தையாக முடியாமல்
தவித்துக் கொண்டிருப்பது
அம்மாக்கள் தான்
*கருத்த தோலுக்கருகில் சிவந்தது போலவும்,
சிவந்த தோலுக்கருகில் கொஞ்சம் கருப்புதானோ எனவும் கண்ணாமூஞ்சி காட்டுகிறது என் மாநிறக் கை
*எனக்கான உன்னை
உன்னில் தேடித் தேடி
ஏமாறுகிறேன்.
உனக்கான என்னை
உனக்கு உணர்த்த முடியவில்லை.
எனக்கானதாகவும்,
உனக்கானதாகவும்
யாருக்கானதாகவும்
இல்லாமல்
இயங்கிக் கொண்டிருக்கிறது
அவரவர்களின் 'நான்'
*இரவின் மௌனத்தை பறவையின் முதல் குரல் கலைக்கிறது...!
*நானும் அந்த நாயும்
குழந்தைக்குச் சோறூட்டும்
மையப்புள்ளியில் சந்தித்துக் கொள்கிறோம்
கையில் எடுக்கும் ஒவ்வொரு கவளமும்
உள்ளிறங்க வேண்டும் என நானும்
கீழே விழ வேண்டும் என நாயும்
அவரவர் எதிர்பார்ப்பில் !
*ஜன்னலோர இருக்கைக்கு
அடுத்ததே என்றாலும்
அந்நியப்பட்டுப் போகிறது
வானம் !
*ஒருநாள் கூட
மனித முகங்களையே வெளிக்காட்டாத
அந்த வீட்டில்
வெறுமையை மறைக்க
விதம் விதமாய்
பூத்துக் குலுங்குகின்றன
பூக்கள்
எல்லா நாட்களிலும்.
*மகளுக்கு
வாய்ப்பதில்லை
தாயுமான தந்தை
பேத்திகளுக்காக
மாறுகிறார்கள்
தந்தையாக தாத்தாக்கள்
இதுபோல் எண்ணற்ற கவிதைகள் புத்தகம் முழுவதும் நம் மன உணர்வுகளை அசைத்துப் பார்க்கவும், ரசித்து பார்க்கவும் தன் எழுத்தின் வழியே நம்மிடம் கைகுலுக்கி ..புத்தகம் அதற்குள் முடிந்து விட்டதா என்று எண்ணிப் பார்க்கும் அளவுக்கு ஒவ்வொரு கவிதையையும் நேர்த்தியாக படைத்துள்ளார் கவிஞர் வெண்ணிலா
தொடர்ந்து பகிர்வோம் தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment