Sunday, 11 April 2021

கற்பதுவே..பகிர்வதுவே-27*மணி




குளிர் காய்வதற்காய் 
சுள்ளி பொறுக்கச் சென்றாய்,
சுள்ளி பொறுக்குவதிலேயே உன் காலம் கழிந்துவிட்டதே,
எப்போது நீ குளிர் காயப் போகிறாய்?

-அப்துல்ரகுமான்

#கூகை
-சோ.தருமன்

காலவெளியில் ஒரு சமூகம் தன்னைத்தானே எப்படி கடந்து போகிறது என்பதை நாவல் வழியே காட்சிப்படுத்துகிறார்.கூகை என்பது ஆந்தை.நாவல் முழுக்க குறியீடாகவே வருகிறது.கீழ் சாதி என்று சொல்லிவிட்டு கடந்துவிட முடியாதபடி அம்மக்களின் உணர்வுகளை,வாழ்நிலையை படம் பிடித்துக் காட்டியுள்ளார். நகரத்திலிருந்து ஜாதிகுறித்த பார்வை என்பது ஜன்னலில் ரசிக்கும் மழை போல..இவ்வளவு தான் எனத் தோன்றும்.ஆனால் சொட்ட நனைந்து வருபவனுக்கு இடி,மின்னல் போன்ற மழையின் கோரமுகம் தெரியும்.

ஆந்தை என்பது ஒரு குறியீடாக உள்ளது .அது தன் வலிமையை உணராதது. இருளில் வெளிவந்து உலகத்திற்கு பயந்து பகலில் அஞ்சி ஒடுங்கி தன் பொந்துக்குள் கிடக்கும். அதனை அருவருப்பாக பார்ப்பதும், கோரமாக நினைத்து குத்துவதும், அதன் ஒளி கேட்பதை அபசகுணம் எனக் கருதுவதும் தாழ்த்தப்பட்டோரின் குறியீடாக வைத்து படைப்பாக உருவாக்கியுள்ளார் தர்மன்

#கதை

ஒரு ஊர்ல ஒரு கிராமம்.ஜமீன் ஆதிக்க சாதிகள் நிறைந்தது. ஊருக்கு ஒதுக்குப்புறம் இரு தாழ்த்தப்பட்ட சமூகம் குடியிருக்கும் இருப்புகள்.செருப்புப்போடாத, தோளில் துண்டு போடக்கூடாத இருப்பு.ஒரு சமூகத்தின் தலைவன் போல சீனிக்கிழவன்.ஆலமரத்தடியில்
கூடை முடைந்து கூகை(ஆந்தை) சாமியை கும்பிட்டு வருவதோடு, அந்த சமூகத்தை சேர்ந்தவர்களையும்
கும்பிட வைக்கிறார்.

இன்னொரு சமூகத்து பெண்களை தகாத முறையில் ஆதிக்க சாதியினர் நடத்தியதால் ஊரைவிட்டே போய்விடுகின்றனர்.
அந்த ஊரில் நடராஜ் ஐயர் என்பவர் தனது மகன் பட்டணத்தில் வேலையில் இருப்பதால் ஊருக்குப் போவதாகவும் நிலத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குத்தகைக்கும்,வீட்டினை பராமரிக்கும் பொறுப்பினை சீனிக்கிழவனிடம் கொடுத்துவிட்டுப் போகிறார்.

கீழ்சாதி மக்களுக்கு நிலமா என ஜமீன் முதல் அத்தனை பேரும் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்க,அப்பு சுப்பன் என்பவன் மேல்சாதியினர் இருவரை கொன்றுவிட்டு தலைமறை வாகிறான். வீட்டில் பெண்களிடம் விசாரிக்கவந்த ஏட்டுவையும் கொன்று விட்டு இடம்பெயர்கிறான்.

சீனிக்கிழவன் என்ன ஆனார், கிராமமே ஒருகட்டத்தில் மதம் மாறியதால் கூகையின் நிலை என்ன ஆயிற்று,அடிபட்ட பாம்பான ஆதிக்க சாதியினரும்,ஜமீனும் என்ன செய்தார்கள்,அப்பு சுப்பனும் மாரியும் இறுதியில் என்ன ஆனார்கள் என்பதை திரைப்படம் பார்ப்பது போல் தர்மன் விறுவிறுப்பாக எழுதியுள்ளார்.

கதையின் இறுதியில் பேச்சி இவ்வாறாக சொல்லுவார் பட்டிக்காட்டில் இருந்தப்போ கையில் மம்பட்டியும் களைவெட்டியும் இருந்துச்சு.உங்க கையில காடு, தோட்டம், வயக்காடு இருந்துச்சு நாங்கள் உழைச்சா ஓடா போனதுதான் மிச்சம்.

டவுனுக்கு போயி பொழச்சுக்கலாம்னு ஊரை விட்டுப் போனப்ப கையில தார்ச் சட்டியும், ஜல்லி உடைக்க சுத்தியளும் கிடைச்சது.உங்க கையில பேக்டரி, கம்பெனி காண்ட்ராக்ட் கிடைச்சது.

 இதை எல்லாத்தையும் விட்டுட்டு சீரழிஞ்சது போதும் என்று திகைச்சு நிற்கும் போது ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒரு கையில் கட்சிக் கொடியும், இன்னொரு கையிலும் பிராந்தி பாட்டில் திணிச்சிட்டீங்க. இனிமே அதிகாரமே உங்க கையில நாங்க கூகையைப் போல மறைந்து, பயந்து, ஒளிந்து, பதுங்கி..அட கடவுளே உனக்கு கண்ணில்லையா? காலம்பூரா இப்படியா சீரழியணும் என்று பேச்சு குலுங்கி குலுங்கி அழுதாள்

#ரசித்தது

*ஆகாய தட்டில் நட்சத்திர பருக்கைகள் திங்கும் ஈசனை போல ஏறிட்டுப் பார்த்துவிட்டு முகம் திருப்பிக் கொண்டான். காற்றை உண்ணும் கலை கற்றவன் போல மௌனித்து இருந்தான்

*என் பயம் தானே எதிரியின் வீரம்

*மாடு இல்லாமல் விவசாயம் பண்ணுவதும், மனைவி இல்லாதவன் குடும்பம் நடத்துவதும் ஒன்றுதான். நாடு இல்லன்ன சம்சாரியே இல்லை

*சிட்டுக்குருவியை தேடி சிங்கங்கள் வந்தன (ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்டோரின் குடிசைக்கு வருவதைப் பற்றி சொன்னபோது)

*கூகை இரைதேடும் கலையை சிலந்தியிடம் கற்றது. எலிப்பொந்துக்கு பக்கத்தில் படுத்து உறங்கும் போது இரவில் கூகை
மல்லாந்து படுத்து இறக்கைகளை விரித்து தவமிருக்கும் தந்திரம் இரை தேடி வெளியேறி அலையும் எலிகள்
ஆந்தையின் இரவின் மீது வந்து கொரிக்கும்போது பிடித்து தின்று விடும்.இரை தேடி இரையாகும் எலிகளுக்கு எமன்

*கதவு போட்டு பூட்டிய கட்டடத்துக்குள் வாழ்வது தெய்வம் அல்ல தெய்வ நம்பிக்கை

*பறவையின் அழகே அதன் நிர்வாணம் தான் .பறவைகளின் தூய்மையும் நிர்வாணம் தான்.

*புத்தி என்கிற வார்த்தையை சொல்லாத. அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது. நம்ம அப்பன, தாத்தன பாட்டன என்னைக்கு மறந்துட்டு நாகரீகம் அறிவு விஞ்ஞானம் என்று பேசினமோ அன்னைக்கே நாம எல்லாரும் முட்டாளாயிட்டோம்.

*சொல்லப்போனால் கூகை ஒரு ஊம சாமி. தன்னோட வலியும் வேதனையும் துக்கத்தையும் துயரத்தையும் தனக்குள்ளேயே அடக்கிவிட்டு வாழ கற்றுக் கொடுக்கிற சாமி தான்  ஊமச்சாமி

அருமையான புத்தகம்

தொடர்ந்து பகிர்வோம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment