Wednesday, 21 April 2021

பெருந்தலைவரின் நிழலில்-பழ.நெடுமாறன்


#30D0044
நாள்-27
புத்தகம்-45

#

மேய்ப்பவன் கையிலிருக்கும் குச்சி தண்டிப்பதற்கு அல்ல
வழிநடத்திச் செல்வதற்கே

பழ.நெடுமாறன் தொகுத்த இப்புத்தகத்தில் 69 தலைப்புகளில் காமராஜர் குறித்தும், அவர்தம் கொள்கைகளை குறித்தும் அவரின் நிழலாக இருந்து பார்த்து காமராஜர் வாழ்க்கையை தொகுத்துக் கூறியுள்ளார் பழ்.நெடுமாறான்.1958ம் ஆண்டு தாம் பயின்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டம் குறித்து பேசும்போது தான் முதன் முதலில் காமராஜரை சந்தித்தார். அன்றிலிருந்து காமராஜர் மீது பற்றும் பாசமும் அவருக்கு இயற்கையாகவே தோன்றிவிட்டது

எங்கோ ஒரு ஊரில் பிறந்து தீரர் சத்தியமூர்த்தியின் பேச்சை கேட்டு விடுதலை வேள்வியில் பங்கெடுத்து அந்நாளில் நீதிக்கட்சியின் பெரும்பான்மையை எதிர்த்து காங்கிரசை வளர்க்கும் முக்கிய பொறுப்பில் காமராஜர் இருந்தது தெரிகிறது. 1937 தேர்தலில் சாத்தூர் விவி ராமசாமி எனம் நீதிக்கட்சியின்
 தூண்களில் ஒருவரை எதிர்த்து காமராஜர் நின்றார். அதேபோல் ராமநாதபுரம் மன்னரை எதிர்த்து முத்துராமலிங்கத் தேவரை சத்தியமூர்த்தி நிறுத்தி இருவரையும் வெற்றிபெற வைத்தார். இதன்மூலம் தமிழகமெங்கும் இருவரின் புகழ் பரவியது.காமராசர் இறக்கும் வரையில் சத்தியமூர்த்தியின் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருந்தார்.

இப்போது போல் மத்திய தலைமைகளை கேட்டு முடிவு எடுக்கும் நிலை இல்லை அப்போது மாநில கமிட்டிக்கு இல்லை. கர்நாடகாவில் நிஜலிங்கப்பாவும் தமிழகத்தில் காமராஜரும் காங்கிரஸின் அசைக்க முடியாத மாநில உரிமைகளை பெரும் தலைவர்களாக விளங்கினர். மாநிலத்தின் முடிவினை கேட்டுத்தான் மத்திய காங்கிரஸ் கமிட்டி செயல்பட்டது என்பது ஒரு காலத்தில் வரலாறாக இருந்தது

காமராஜர் அரசியலில் அதிகாரத்தில் வந்த பொழுது மிகவும் எளிமையாகவும், நிர்வாகத்தில் மிக நேர்மையாகவும், தன்னுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் சி. சுப்பிரமணியம், பக்தவச்சலம் ஆகியோரை தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்ததும்.. சென்னை மாநில கல்வித் துறையின் 100 ஆண்டுகள் முடியும் போது முதன்முதலாக தமிழன் ஒருவனுக்கு பொதுக் கல்வி இயக்குனர் கிட்டியது என நெகிழ்ச்சியுடன் சுந்தரவடிவேலு அவர்கள் கூறியதும் இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டியவை.

காமராஜரின் வாழ்வில் முக்கியமானது ரஷ்ய பயணம். அங்கே அனைவருக்கும் கல்வி, அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்,இருப்பதை பார்வையிட்டு அப்படியே தமிழ்நாட்டில் நிறைவேற்ற வேண்டும் என்று ஆசை கொண்டு கல்விச்சாலைகள் திறந்தார். இன்னொன்று முக்கியமானது இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் தான் பொது நூலகச் சட்டம் இயற்றப்பட்டு.. தமிழகமெங்கும் 1100 கிளை நூலகங்களிலும் 2000 வழங்கு முறை நூலகங்களும் ஏற்படுத்தப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது. சேலம் உருக்காலை வந்தது காமராஜரின் ஆலோசனையின் தான் .இன்றும் மேட்டூரில் நாம் காணும்போது ஒருபுறம் குடியிருப்பும், ஒருபுறமும் தொழிற்சாலையும் என அன்றே தீர்க்க தரிசனத்தோடு சிந்தித்து
தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். குத்தூசி குருசாமியின் சாதி ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதுடன்  சாதிகளறற சமுதாயத்தை படைப்பதில் உண்மையான ஈடுபாட்டையும் உணர முடியும்.

காமராஜரின் மிக முக்கியமான திட்டங்களில் நீர் மேலாண்மையும் ஒன்று .அவர் கொண்டுவந்த புள்ளம்பாடி கால்வாய் திட்டம், மணிமுத்தாறு திட்டம் ,கிருஷ்ணா பெண்ணாறு கால்வாய்த்திட்டம்.  அவர் காலத்தில் நிறைவேற்றிய பாசன வசதி திட்டங்கள் மற்றும்
பரம்பிக்குளம் - ஆழியாறு போன்ற நீர் நிலை திட்டங்கள் நூலில் இடம் கூறப்பட்டுள்ளன.

காமராஜருக்கும் நேருவுக்கும் இருந்த நட்பு ,தமிழகத்தில் திருவிக, பெரியார், ராமமூர்த்தி, ஜீவா போன்றோருடன் அரசியல் நாகரிகத்துடன் பழகி வந்த பாங்கும்,  அண்டை மாநிலத்தவரிடம் இருந்த நட்பும், இந்தி குறித்த காமராஜரின் நிலைப்பாடும், காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததும், ஈ.வெ.கி சம்பத் தலைமையிலான தமிழ் தேசிய கட்சியை காங்கிரசுடன் இணைந்தது குறித்தும், தேர்தலில் போட்டியிட்ட சம்பவங்களும் காந்திக்குப் பின் காமராஜர்தான் என்ற தமிழக மக்களின் நிலைப்பாடும் புத்தகத்தில் தெளிவாகவும் விரிவாகவும் கூறப்பட்டுள்ளது.

பெரியாரும் காமராஜரும், ராஜாஜி உடனான அண்ணா உடனான நட்புகள் குறித்தும், காமராஜரின் சீடராக வாழ்ந்த சிவாஜி குறித்தும் ,காமராஜர்  தலைவர் எனக்கு என கூறிய எம்ஜிஆரின் கருத்துக்களும் பல்வேறு சுதந்திர போராட்ட தியாகிகள் ,அரசியல் மேதைகளுடன் பழகிய அனுபவங்களை கடைசியில் எடுத்துக் கூறியுள்ளார்.

ஒவ்வொரு கட்டுரையின் கீழே வரும் பெட்டிச் செய்தியின் மூலம் வரலாற்று நிகழ்வுகளையும் அறிய முடிந்தது.

#ரசித்தவை

*மதிய உணவுக்குப் பிறகு அவரிடம் ஒரே ஒரு சிகரெட் புகைக்கும் பழக்கம் இருந்தது. பிறருக்கு முன்னால் அவர் அதை செய்யவே மாட்டார். பிறர் முன் புகைப்பது அநாகரிகம் எனக் கருதுவார்.

*காமராஜரின் நூலகத்தில் ஆங்கில நூல்கள் குறிப்பாக லெனின், காந்தி, நேரு, பாரதியார், காண்டேகர், புகழ்பெற்ற அரசியல் ஆய்வாளர்கள் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா இன்சைட் ஈரோப் நூல்களும் டைம்ஸ் பத்திரிகைகளும் இருந்ததாக கூறியுள்ளார்.

*கமல்ஹாசனின் சகோதரி நளினியின் நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற காமராஜர் நீ மேடை எல்லாமே ஆடக்கூடாது. ஒருவேளை உங்கள் வீட்டில் யாராவது நாட்டியக் கலையை வளர்க்க விரும்பினால் இதோ நிற்கிறாரே கமல்ஹாசன் அவனை மேடையேறி ஆடச் சொல் என்று கூறினார். பிறகாலத்தில் அவரின் வாக்கு பலித்தது

*தமிழகத்தில் திருச்சி நகரில் தான் பெரியாருக்கு முதன்முதலில் சிலை நிறுவப்பட்டது. அப்போது காமராஜர் தோல்வியடைந்திருந்தார். அண்ணா அப்போது முதலமைச்சர். வருவாரா என்ற ஐயத்துடன் காத்திருந்தபோது மாலையில் அண்ணாவும் காமராஜரும் சாரட் வண்டியில் அமர்ந்து, ஊர்வலமாக சென்று காமராஜர் பெரியார் சிலையை திறந்து வைத்து உரையாற்றினார்.

*இந்தியாவில் சம நீதி கேட்டு நடத்தப்பட்ட முதல் போராட்டம் வைக்கம் போராட்டம் ஆகும். ஈவெரா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காமராசர் ஜீவானந்தம் ஆகிய இருவரும் இளம் தொண்டர்களாக பங்கெடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment