Tuesday, 20 April 2021

கனவுகளின் மிச்சம்-அருணன்

#30D0044

நாள்-22
புத்தகம்-38



வரலாறு என்பது சுகமான கடற்கரைச் சாலை அல்ல; அது கடினமான மலையேற்றப் பாதை. அங்கே வளைவு நெளிவு இருக்கும், சில எதிர்பாராத விபத்துகள் நடக்கும். ஆனால் பாதை என்னவோ முன்னோக்கியே செல்கிறது. அதை முடிந்த அளவு செப்பனிட்டுக் கொண்டே அதோ ஒரு முன்னோடி போகிறார்.

அருணன் என்றவுடன் நினைவுக்கு வருவது தொலைக்காட்சி நிகழ்ச்சி விவாதத்தில் பங்கேற்பாளர் என்று மட்டுமே.ஆனால் அவர் தொடர் வாசிப்பாளர்.பல புத்தகங்களை எழுதியுள்ளார்.இடதுசாரி தலைவர்களில் முக்கிய பேச்சாளராக இருக்கிறார்.திருப்பூர் புத்தக கண்காட்சியில் வாசிப்பு குறித்து சில ஆண்டுக்கு முன் இவர் பேசிய பேச்சு மறக்க முடியாதது.அதில் கல்கியின் சிறுகதை ஒன்றை கூறினார். 1940களில் ஒரு திருமண மண்டபத்தில் நாயகன் நாயகியின் அழகில் மயங்கி ஒரு கடிதம் கொடுக்கிறார்.அக்கடிதத்தை பெற்ற அப்பெண் அழுகிறார்.காரணம் படிக்க தெரியாததால்..அக்கால கட்டத்தில் பெண் கல்வி எந்த இடத்தில் இருந்தது என்பது குறித்து பேசினார்.

பேராசிரியர் அருணன் அவர்கள் தன் இளமைக்காலத்தில் தான் சந்தித்த அனுபவங்களும், தான் படித்த வரலாற்று நூல்களும், ஆய்வுகளும், தான் எழுதிய கட்டுரைகளும், தனக்கேற்பட்ட அனுபவங்களையும் புத்தகமாக கனவுகளின் மிச்சம் எனும் நூலாக தந்துள்ளார்.

இளமையில் புத்தக வாசிப்பில் அறிமுகமானபோது ராஜாஜி எழுதிய "அபேத வாதம்" தான்.அபேதம் என்றால் பேதமின்மை அதாவது சமத்துவம் என்பது ஆகும். பெட்ரண்ட் ரஸல் எழுதி திராவிடர் கழகம் வெளியிட்டிருந்த நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல எனும் சிறு பிரசாரமும் அவருக்கு மனதுக்கு மிக நெருக்கமாக இளமைப்பருவத்தில் அமைந்தது.

 எம்.காம் முடித்த கையோடு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக தேர்ந்தெடுத்து, பின் அஞ்சல் வழிக் கல்வியில் பேராசிரியராக பணிக்குச் சேர்ந்தார். அப்போதுதான் செம்மலரில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்திருந்தார்
 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துவக்கிய நிகழ்வையும் அதில் பணியாற்றிய அனுபவத்தையும் 1987 இல் தமுஎகச வின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது, 18 ஆண்டுகள் தொடர்ந்து எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக பணியாற்றிய அனுபவத்தையும் நமக்கு
 பகிர்ந்து கொள்கிறார்.

களப்பிரர் காலம் இருண்ட காலமா?,
மானுடம் தந்த கம்பன் எனும் தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதினார். காரல் மார்க்ஸ் வாழ்வும் சிந்தனையும், லெனின் வாழ்வும் சிந்தனையும், அண்ணா ஆட்சியை பிடித்தது எப்படி?, எனும் தலைப்பில் புத்தகமும், ஓசோவை முன்வைத்து விவாதம் எனும் புத்தகம் புத்தரின் கருத்துகளுக்கும் ஓசோவின் கருத்துகளுக்கும் உள்ள நடைமுறை தன்மையே விவாதிப்பது போல் இருக்கும்.

அருணன் எழுதிய புத்தகங்களில் முக்கியமானதான காலந்தோறும் பிராமணியம் புத்தகம் பிறந்த கதையும், அது வளர்ந்த கதையும், அது வந்தபோது ஏற்பட்ட விவாதங்களையும் நமக்கு பகிர்ந்து இருக்கிறார். அதற்கு அடுத்ததாக யுகங்களின் தத்துவம், கடவுளின் கதை எனும் புத்தகத்தை எழுதியுள்ளார்.பயண இலக்கியம், தொலைக்காட்சி விவாதம் என தொடர்ந்து தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

#ரசித்தது

*துவங்கப்பட்ட அனைத்திற்கும் முடிவு இருக்கிறது. தானாக முடிவதற்கு முன்பு வம்பாக முடித்து வைப்பதற்கும் ஒரு வைராக்கியம் வேண்டும்.

*நா பார்த்தசாரதியின் நாவலில் நாயகி மணிக்கட்டில் கடிகாரத்தை கட்டியபடியே "காலத்தையே உங்கள் கையில் கட்டி விட்டேன்" என்பாள். அதற்கு அவனும் நாம் தான் காலத்தின் கையில் கட்டுண்டவர்கள்
என்பான்.

*நீங்கள் மட்டும் மார்க்சியத்தை படிக்க வில்லை எனில் திக்குத் தெரியாத காட்டில் அலைகிற ஒரு தனி ஆளாகிப் போவீர்கள்- பிடல் காஸ்ட்ரோ

*ஒருவன் அடுத்தவரது வெற்றியை வாழ்த்திப் பேசினால் அதில் பொறாமை இரகசியமாக மறைந்திருக்கிறது. ஒருவன் அடுத்தவரது இழப்புக்காக வருத்தம் தெரிவித்தால் அதில் மகிழ்ச்சி இரகசியமாக மறைந்திருக்கிறது.

*ஒழுக்கமற்ற அறிவு ஒருபோதும் ஞானத்தைக் கொண்டு வராது

*கற்களை கும்பிடுவதன் மூலம் கடவுளை காண முடியும் என்றால் நான் மலையையே கும்பிடுவேன்
- கபீர்

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment