Friday, 2 April 2021

கற்பதுவே..பகிர்வதுவே-22*மணி




#என்றும் காந்தி
-ஆசை

என் ஆதிக்கத்துக்கு எதிராக என் மனைவி செயல்படும் வழிமுறையிலிருந்தே சத்தியாகிரகத்தை நான் கற்றுக்கொண்டேன்

-காந்தி

கடல் அலை,ரயில் பார்ப்பது போல என்றும் சலிக்காதது காந்தி குறித்து படிப்பதும்.தி இந்துவில் ஆசை எழுதி வந்த இத்தொடர் அப்போதே படித்துவிடுவேன்.புத்தகமாக வந்த போது ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டது போன்ற திருப்தி.தெரிந்ததிலிருந்து தெரியாததற்குப் போவது போல் 48 கட்டுரைகளும் தெரிந்த தகவல்களிலிருந்து தெரியாத தகவல் நோக்கி செல்கிறது.

காந்தியின் பிறப்பிலிருந்து ஆரம்பித்து அவருடைய குடும்பத்தின்
 வாழ்க்கையையும் அவர் வெளி நாட்டிற்கு படிக்கச் சென்ற பிறகு வக்கீல் தொழில் புரிய மற்றொரு நாட்டுக்கு செல்வதாய் இருந்து பின்பு இந்தியா வந்ததும் என ஒரு ஒன்லைன் கதைகளை வைத்துக் கொண்டு ஒவ்வொரு கட்டுரைகளிலும் தெரியாத பல விஷயங்களை நமக்கு கூறுவது வியப்பை தருகிறது

காந்தியின் முதல் வழக்கும் காந்தியை மூன்றாம்வகுப்பு ஆக்கிய முதல் வகுப்பு பயணமும், உலகை மாற்றிய காந்தியின் பயணத்தையும் சுவைபட விவரிக்கிறது. சத்தியாகிரகம் பிறந்த கதையில் 1906ம் ஆண்டு காந்தி தென்னாப்ரிகாவுக்கு வந்து 13 ஆண்டுகள் கழித்து ட்ரான்வாஸ் பகுதியில் நிறவெறிக்கு எதிரான முதல் போராட்டத்தைக் கையிலெடுத்தார்.

அப்போது தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற போராட்டத்திற்கு சாத்வீக எதிர்ப்பு என பெயர் சூட்டினார் காந்தி.வேறு ஒரு பெயரை பரிந்துரை செய்ய இந்தியன் ஒப்பீனியனில் அறிவிப்பு கொடுத்தார்.காந்தியின் உறவினர் மகன் மகன்லால் சதாகிரகம் பரிந்துரைத்தார்.இதனை சத்தியாகிரகம் என மாற்றினார் காந்தி.சத்ய+ஆக்ரஹ எனும் இரு சொற்களின் இணைவு. சத்தியத்திலிருந்து அல்லது அஹிம்சையிலிருந்து பிறந்த சக்தி என அர்த்தம்.

இந்தியாவில் சம்பாரண் மற்றும் அகமதாபாத் சத்தியாகிரகம் இரண்டும் வெற்றிகரமாய் நடத்தினார்.காந்தி ஒரு நல்ல பேச்சாளரும் கூட.சூழலுக்கு தகுந்தார் போல சுருக்கமாய் பேசுவார்.தன் ஐந்து விரலைக் காட்டி
முறையே தாழ்த்தப்பட்டோர்க்கு சமஉரிமை,இரண்டு ராட்டையில் நூல் நூற்பது,மது உண்ணாமை,இந்து- முஸ்லிம் நல்லுறவு,பெண்களுக்கான
சம உரிமை என ஐந்துவிரலுக்கு அர்த்தம் சொல்லி கை மணிக்கட்டுதான் அகிம்சை என்றதும் கூட்டம் ஆர்ப்பரிக்கும்.

உனது ஆரோக்கியம் மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது. அதை நடந்து சென்றுதான் பெற வேண்டும் எனும் கூற்று போல் அவரின் நடைபயணம் முக்கியமானது.1913 முதல் 1938 வரை தனது விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சத்தியாகிரகங்கள் போன்றவற்றின் போது மொத்தம் 79 ஆயிரம் கிலோ மீட்டர்தூரம் காந்தி நடந்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.இது பூமியை இரண்டு முறை சுற்றி வந்ததற்கு சமம்.

நடை என்பது உடற்பயிற்சிகளின் இளவரசன்.
ஒரு முறை மகன் மணிலால் பத்து வயதாய் இருக்கும்போது தன் கண்ணாடியாய் மறந்து வந்துவிட்டார்.5கி.மீ வந்தபிறகு தான் தெரிந்தது.உடனே மகனைத் திருப்பி அனுப்பி எடுத்துவரச் சொன்னாராம்.
காந்தியின் ஆசிரமத்திலிருந்து சில நாட்கள் நடந்தால் பாதல்பூர் கடற்கரை வந்துவிடும்.ஆனால் உலகத்துக்கு தெரிய 240 மைல்
தண்டி யாத்திரை 24 நாட்கள் நடந்து ஏப்-6ல் தண்டியை அடைந்தார்.

கல்வியில் காந்தியின் பார்வை தனித்துவமானது.கிராமப் புற மக்களை மனதில் வைத்து கல்வித் திட்டங்களை உருவாக்கவும்,தாய் மொழிக்கல்வி,உடலுழைப்பு, கைத்தொழில்(குலக்கல்வியல்ல தொழில்கல்வி. இது பற்றி தெளிவாக எழுதியிருக்கிறார்) என அவரின் பார்வை வித்தியாசமானது.

இதற்குப்பின் சுதந்திரதினமும், நவகாளி யாத்திரையையும், காந்தியின் சாதனை,அவரின் அரசியல் செயல்பாடு குறித்தி விரிவாக விளக்குகிறது.காந்தியின் இன்னொரு முகம் பத்திரிக்கையாளர். வெஜிட்டேரியன் எனும் இதழ்,இந்தியன் ஒப்பீனியன், யங் இந்தியா,ஹரிஜன் என அனைத்து இதழ்களிலும் எழுதிக் குவித்தவர். 

காந்தி குறித்த எதிர்மறை கேள்விகளுக்கும் அதற்குண்டான பதிலையும் விளக்கியுள்ளார். காந்தி குறித்து அவதூறு பரப்புவர்கள் சத்தியாகிரகம்,லூயிபிஷர் எழுதிய நான் கண்ட காந்தி,ஜெயமோகனின் இன்றைய காந்தி போன்றவற்றை படித்துவிட்டு பேசலாம்.செவி வழி செய்தியால் யாரை வேண்டுமானால் எதிர்க்கலாம்.ஆனால் உண்மைகளை அறிந்து, நாமும் தெளிவடைந்து பின்னர் எதிர்ப்பைக் காட்டலாம்.

#ரசித்தது

*காந்தியை உலுக்கிய இரு மரணங்கள் உதவியாளர் மகாதேவ் தேசாய் மற்றும் மனைவி கஸ்தூரிபாய் மரணம்

*1926ம் ஆண்டு மட்டும் உடல்நிலை காரணமாக பயணங்கள் மேற்கொள்ளவில்லை

*விளம்பரங்களே இல்லாமல் பத்திரிக்கை நடத்தியவர் காந்தி.தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய இந்தியன் ஒப்பீனியன்,இந்தியாவில் நடத்திய யங் இந்தியா, அரிஜன்,நவஜீவன் ஆகியவற்றில் சிறு விளம்பரம் கூட கிடையாது

*எதிரியுடன் போராடும்போது மெல்ல மெல்ல எதிரியின் அதே குணத்தை தானும் அடையாமல் இருக்கும் நிலையே சத்யாக்ரகம்

*நவகாளி யாத்திரையின் போதுதான் காந்தி தன்னுடைய பஜனைப் பாடல்களில் புதிதாய் இரு வரிகளை சேர்க்கிறார்.அது 'ஈஸ்வர அல்லா தேரே நாம்;சப்கோ சன்மதி தே பகவான்' என்பது.

ஈஸ்வரனும் அல்லாவும் ஒன்றுதான்.
இருவரும் ஒரே கடவுள் தான்.எனவே கடவுளே எங்களுக்கு நல்ல புத்தியைக்கொடு என்பது பொருள்

*சின்ன மறதி தான்
பெரிய மறதிகளை உருவாக்குகிறது

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment