Friday, 23 April 2021

சுப்பராயுலு முதல் பழனிசாமி வரை..! - தமிழக முதல்வர்கள் வரலாறு #MyVikatan-மணிகண்டபிரபு


சென்னை சட்டமன்றம் 1861 பிரிட்டிஷ் கவுன்சில் சட்டத்தின் மூலம் துவக்கப்பட்டது. அப்போது அம்மன்றம் ஆலோசனை அவையாக மட்டுமே இருந்தது. இந்திய கவுன்சில் சட்டம் 1892 ன் படி சென்னை மாகாண சட்டமன்றத்தின் அதிகார எல்லையை விரிவுபடுத்தியது. 1909இல் மிண்டோ மார்லி சீர்திருத்தங்களின் விளைவாக மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இம்மன்றத்தில் இடம் பெற்றனர். பின்னர் 1919ல் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின்படி அமைக்கப்பட்ட இரட்டை ஆட்சியின் கீழ் நடைபெற்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களை நேரடியாகத் தேர்ந்தெடுத்தனர். இந்த உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் ஓரவை(Unicameral) அமைப்பாக 1920 இல் இருந்து 1937 வரை செயல்பட்டது.

ஆளுநர் நியமன உறுப்பினர்கள் தவிர 127 உறுப்பினர்களில் 98 பேர் 61 தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவை வகுப்பு வாரியாக, சிறப்பு தொகுதி வாரியாக, ஒதுக்கப்பட்ட தொகுதிவாரியாக இருந்தன.


#முதல் தேர்தல்

சென்னை சட்டமன்றத்திற்கான முதல் பொதுத்தேர்தல் 1920ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அதில் சொத்து தகுதி உடையோர் மட்டுமே வாக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். முதல் தேர்தலில் 24.9 சதவீதம் வாக்குகள் பதிவாகி மைலாப்பூரில் அதிகபட்சமாக 52 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இத்தேர்தலில் காந்தியின் வேண்டுகோளுக்கிணங்க காங்கிரஸ் தேர்தலை புறக்கணித்தது. நீதிக்கட்சியின் தீவிர பிரச்சாரமும், பிராமணர் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்ததால் நீதிக் கட்சியை வெற்றி பெற்றது.


சென்னை இராஜதானி ஆளுநர் வில்லிங்டன் தேர்தலில் வெற்றிபெற்ற நீதிக்கட்சித் தலைவர் தியாகராய செட்டியாரை ஆட்சி அமைக்குமாறு அழைத்தார். ஆனால் அவர் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை அவருக்கு பதிலாக சுப்பராயலு நாயுடு முதலமைச்சரானார். நீதிக்கட்சியின முதல் அமைச்சரவை 1923 செப்டம்பர் 11 வரை பதவியில் இருந்தது


இரண்டாவது தேர்தலில் காங்கிரஸுக்குள் சுயராஜ்ய கட்சி என்ற தனி அமைப்பை உருவாக்கி தேர்தலில் நின்றனர். 1923ம் ஆண்டு அக்டோபர் 31ம் நாள் தேர்தல் நடத்தப்பட்டது. மழை வெள்ளம் காரணமாக தேர்தல் உரிய நாளில் முடியாமல் நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. 17 தொகுதிகளில் 20 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 44 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெற்றது. இதில் சுயராஜ்ய கட்சி போட்டியிட்ட 14 இடங்களிலும் வெற்றி பெற்றது. நீதிக்கட்சி தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும் அரசாங்கத்தை அமைக்க கூடிய பெரும்பான்மை இல்லாததால் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பனகல் அரசர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இரண்டாம் அமைச்சரவை பதவி ஏற்றது.


1926 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சுயராஜ்ய கட்சி சத்தியமூர்த்தி தலைமையில் களம் இறங்கி 47 இடங்களை கைப்பற்றியது. நீதிக்கட்சி 21 இடங்களில் மட்டுமே வென்றது. இம்முறை தனிப்பெரும்பான்மை பெற்ற சுயராஜ்ஜியக் கட்சி ஆட்சி அமைக்க மறுத்துவிட்டதால் ஆளுநர் சுயேட்சைகளில் ஒருவரான டாக்டர் பி. சுப்பராயன்(மோகன் குமாரமங்கலத்தின் தந்தை) முதலமைச்சராக சுயராஜ்ய கட்சி மற்றும் நீதிக்கட்சி ஆகிவற்றின் ஆதரவோடு ஆட்சி நடத்தினார்.

அடுத்து 1930 தேர்தலில்.. லாகூர் காங்கிரஸ் மாநாட்டுத் தீர்மானத்தின் படி காங்கிரஸ் போட்டியிடாததால் நீதிக்கட்சி சார்பில் முனுசாமி நாயுடு ஆட்சியமைத்தார். 1932ல் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேறியதால் பொப்பிலி அரசர் முதல்வரானார்.


1937ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 156 இடங்களில் வெற்றி பெற்றது. பலரும் எதிர்பார்த்தது போல் சத்தியமூர்த்தி முதல்வராகாமல் மேலிட முடிவின்படி ராஜாஜி முதல்வரானார்.1939ல் பிரிட்டிஷாருடன் ஒத்துழைப்பதில்லை எனும் காங்கிரஸின் முடிவின்படி ராஜாஜி பதவி விலகியபின் ஆளுநர் ஆட்சி 1939 முதல் 1946வரை நடந்தது. மீண்டும் 1946 தேர்தலில் ஆந்திராவை சேர்ந்த ஒருவருக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட வேண்டிய உடன்பாட்டின் காரணமாக டி.பிரகாசம் முதல்வரானார்.1947 நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தினால் ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார்.


இந்திய சுதந்திரத்தின் போது ஓமந்தூரார்தான் தமிழகத்தின் முதல்வராய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அவருக்குப்பின் 1949ல் பூசப்பாடி சஞ்சீவி குமாரராஜா முதல்வரானார். காங்கிரஸின் கோஷ்டி பூசல் அதிகமாய் இருந்தது இக்கால கட்டத்தில்தான்.


#சுதந்திரத்திற்குப் பின்

தேசிய, மாநில கட்சிகளைத்தவிர சுயேட்சைகளும் பெருமளவில் சுதந்திரத்திற்குப் பின் போட்டியிட்டனர்.தேர்தலில் சின்னங்களை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் அப்போது ஆணையத்தில் பணியாற்றிய எம். எஸ். சேத்தி ( M. S. Sethi) என்கிற ஓவியர் உருவாக்கியதுதான் நாம் அழுத்தும் ஒவ்வொரு சின்னத்தையும் உருவாக்கினார். அவரது பாணி சின்னங்களையே இப்போதும் உருவாக்கி வருகிறது இந்தியத் தேர்தல் ஆணையம்


1952ல் நேருவுக்கும் ராஜாஜிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக ராஜாஜி மாநில அரசியலில் நுழைந்து இரண்டு ஆண்டுகள் எம்.எல்.ஏ வாக போட்டியிடாமல் எம்.எல்.சியாக பதவிபெற்று மாநில முதல்வரானார். குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு காரணமாக 24-3-1954ல் ராஜினாமா செய்தார்.

1954 முதல் 1963வரை காமராஜர் முதல்வராய் இருந்து சாதனைகள் செய்தார். அடுத்து கே பிளான் திட்டப் படி காமராஜர் 1963ல் பதவி விலகியதை அடுத்து மீஞ்சூர் பக்தவச்சலம் முதல்வரானார். விலைவாசி உயர்வு, உணவுப் பஞ்சம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக 1967 தேர்தலில் 138 இடங்களில் வென்று திமுக சார்பில் அண்ணா 1967 மார்ச் 6ம் தேதி முதல்வரானார்.


அண்ணாவின் மறைவிற்குப் பின் 1969ல் மு.கருணாநிதி முதல்வரானார்.1972ம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தலை முன் கூட்டியே 1971ல்நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடைபெற்று. திமுக வெற்றி பெற்று முன் மீண்டும் கருணாநிதி முதல்வரானார். அதற்கு அடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுகவை விட்டு பிரிந்த எம்.ஜி.ஆர்..1977 தேர்தலில் அதிமுக ஆட்சியமைத்து முதல்வரானார். 1987வரை முதல்வராய் இருந்து எம்.ஜி.ஆர் இயற்கை எய்திய பின் வி.என்.ஜானகி 1988ல் முதல்வரானார். 24 நாட்களுக்குப் பிறகு அமைச்சரவை கலைக்கப்பட்டு 1989ல் நான்கு முனைப்போட்டி நிலவியபோது கருணாநிதி முதல்வரானார். ஆனால் தமிழகத்தில் விடுதலைப்புலிகளை ஒடுக்கத் தவறிவிட்டார் எனக் கூறி ஆட்சியை 1991 ஜனவரி 30ம் தேதி கலைத்தனர்.


1991ல் ராஜிவ் காந்தி படுகொலையின் காரணமாக எழுந்த அனுதாப அலையால் அதிமுக வென்று ஜெ.ஜெயலலிதா முதல்வரானார்.1996ல் மீண்டும் நான்காம் முறையாக கருணாநிதி முதல்வரானார். 2001ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெ.ஜெயலலிதா முதல்வரானார். அப்போது டான்சி வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதால் பெரியகுளம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் சிறிது காலம் முதல்வரானார்.அதன்பின் வழக்கில் வென்று ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.2006 தேர்தலில் திமுக 96 இடங்களை பெற்று காங்கிரஸ் உதவியுடன் கருணாநிதி ஐந்தாம் முறையாக முதல்வரானார்.


2011ம் ஆண்டு தேர்தலில் 146 இடங்கள் வென்று மூன்றாம் முறையாக ஜெயலலிதா முதல்வரானார். 2016ம் ஆண்டு 134 இடங்களில் வென்று மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார். அதே ஆண்டு ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து ஓ பன்னீர் செல்வம் முதல்வரானார். அதன் பின் கட்சியில் எடுத்த முடிவின் காரணமாக 16-2-2017ல் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.

இந்தியா விடுதலை பெற்ற பின்னர் 16-வது சட்டசபைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. மே 2ம் தேதி வெற்றி பெறுபவர் தமிழகத்தின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். வரலாறு யார் பெயரை முன் மொழிய காத்திருக்கிறது என்பதை அறிய காத்திருப்போமாக.!

-மணிகண்டபிரபு

No comments:

Post a Comment