Tuesday, 20 April 2021

அப்துற்-றஹீமின் வாழ்வியல் இலக்கியம் ஓர் ஆய்வு-கே.ஜீவபாரதி

#30D0044
Day-24
Book-41



அறிவின் முதற்படி பொய்யை பிரித்தறிவது,இரண்டாவது படி உண்மையை விளங்கிக் கொள்வது.

அப்துற் றஹீம் எனும் எழுத்தாளுமை முதன்முதலில் படித்தது நூலகத்தில்தான்.எழுந்திரு,ஓடு, கை குலுக்கு என்ற கார்ப்ரேட் சுயமுன்னேற்ற' நூல்களுக்கு மத்தியில் உண்மையான வாழ்வியலோடு இணைந்த சுயமுன்னேற்ற நூலை வாசித்தேன். பக்கத்துக்கு பக்கம் அறியப்படாத அறிஞர்களின் அற்புத வரிகள். வருடத்தைப் பார்த்தேன் 1950க்கு பிறகான வருடங்கள். ஆச்சர்யம்.
அப்போதே தீர்க்கதரிசனத்தோடு பல விஷயங்களை எழுதியிருந்தது ஆச்சர்யமே.உடனே அவரின் புத்தகங்களை தேடி தேடி வாசித்தேன்.
இப்புத்தகம் அவரின் 28 புத்தகங்களை ஆய்வு செய்த நூலாகும்.

எந்தவித துணையும் இல்லாமல், பெரிய பத்திரிகைகளின் கடைக்கண் பார்வையும் இல்லாமல் அப்துற் ரஹீம் வாழ்வியல் இலக்கியங்களாக அப்துல்ரஹீம் 28 நூல்களையும் 3640 பக்கங்களையும் எழுதியுள்ளார் இதில் வாழ்க்கையில் வெற்றி என்னும் நூல் 29 பதிப்பைக் கண்டுள்ளது வியக்கத் தக்கதாகும்

176 பக்கங்களை கொண்ட வாழ்க்கையில் வெற்றி என்ற புத்தகத்தில் அப்துல்ரஹீம் பயன்படுத்தி இருக்கும் எழுத்தாளர்கள் 251 ஆகும்.அவர்களின் சிந்தனை துளிகளை புத்தகம் முழுவதும் நமக்கு தந்துள்ளார். அந்த பொன்மொழிகளை படித்தாலே வாழ்க்கையில் வெற்றி வெற்றி பெறும் தைரியமும் தன்னம்பிக்கையும் நமக்கு வரும்.
மு.வ வைப்போல் அறச் சொற்களையும், வாழ்வியல் இலக்கணங்களையும், பொருத்தமான திருக்குறள்களையும் இப்புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளார்.

இறுதி முகலாயப் பேரரசரான பகதூர் ஷாவின் மனதை துன்புறுத்தி, அவரை அடிபணிய வைக்கும் நோக்கத்துடன்..பிரிட்டிஷார் அவரின் புதல்வர்களை கொன்று அவர்களின் தலைகளை ஒரு பீங்கானில் வைத்து மூடி பகதூர்ஷாவுக்கு அன்பளிப்பாக அனுப்பினார். திறந்து பார்க்கும்போது பகதூர்ஷா மயங்கி விழுந்து விடவில்லை, மாறாக கலகலவென்று சிரித்தார். இதை கண்டு வியப்புற்று ஊழியரை நோக்கி உன்னுடைய தளபதி என் மனதை துன்புறுத்துவதுக்காக  செய்துள்ளார் ஆனால் நான் ஒருபோதும் கவலை அடைய மாட்டேன் என்று கூறியதை கவலைப்படாதே என்னும் நூலில் தெரிவித்தபோது வியப்பாக இருந்தது.

முன்னேறுவது எப்படி? என்ற இரண்டு வார்த்தைகளை திருப்பி போட்டு பார்த்தால் எப்படி முன்னேறுவது? என்று அமையும். ஏனெனில் எப்படி முன்னேறுவது என்பதை சிந்திக்க வேண்டும். முன்னேறுவது எப்படி என்று கூறும் நேர் வழிகளையும், சிந்தனைகளையும், நமக்கு தந்துள்ளார். அப்துற் றஹுமின் மிகப் பெரிய ஆற்றல் சிந்தனையில் மாற்றம் ஏற்படுத்தினால்.. அவர்களின் செயல்களிலும் மாற்றம் ஏற்படும் என்பதை புரிந்து கொண்டு சிந்தனையை செம்மைப்படுத்தும் பல்வேறு விஷயங்களை தந்துள்ளார்

இல்லறம் குறித்த புத்தகத்தில்

திருமணத்தில் அழகு மிக முக்கிய இடம்பிடிக்கிறது.அழகு குறித்து விரிவாய் கூறி ஒவ்வொர் ஆணும் பெண்ணும் தன்னுடைய அழகுக்கேற்றவரை மணக்கலாம். ஒரு அறிஞர் சொன்னது போல் இருவகை மணமுண்டு. ஒன்று நீ காதலுக்காக மணமுடித்தால் நல்ல இரவையும் கெட்ட பகலையும் பெறுவாய். பணத்துக்காக மணமுடித்தால் மகிழ்ச்சிகரமான நாட்கள் இல்லாமல் போய்விடும்.துன்பநாட்கள் இருக்காது

பெண் முத்தைப்போன்றவள். கடலில் இருந்து என்ன பயன். மாலையாக அணியப்பெற்றால் தான் பெருமை.புகுந்தவீட்டில் சென்றபின் சில நாள் கழித்து ஒரு சலசலப்பு வரும்.மனைவிக்காக பேசுவதா,மதருக்காக பேசுவதா என குழம்பி அமைதி காக்கும்போது ஊர் அவனை பத்திப் பேசும்.பட் இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்குனு சைலன்ட் மோடுல சந்திராயானுக்கே ராக்கெட் விடும் அனுபவம் ஆணுக்கு வந்துவிடுகிறது.ஒரு பெண்ணின் நா தான் அவளுடைய வாள்;அதனை அவள் துருப்பிடிக்க அனுமதிப்பதே இல்லை.அதனை நல்வழியில் பயன்படுத்த வேண்டுமென கூறுகிறார்.ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதை புத்தகம் முழுவதும் அதிக மேற்கோள்களுடன் சொல்லியிருப்பார்.

அன்புள்ள தம்பிக்கு

கடித இலக்கியம் போல் தன் தம்பிக்கு அறிவுரை கூறும் வாழ்வியல் நூலாக இப்புத்தகம் உள்ளது.

நல்லொழுக்கம் என்பது இனிமையான நறுமண பூண்டுக்கு நிகர் ஆகும். அதனை நசுக்கினால்தான் அதன் நறுமணம்
கம்மென்று கமழும் என்ற பேகன் கூறியதை நினைவூட்டுவார். நல்லொழுக்கமே ஒருவனுக்கு கவசம் என்று ஒரு அண்ணன் தம்பிகளுக்கு ஒழுக்கம் குறித்து சொல்லும் போது பல்வேறு மேற்கோள்களை கூறுவார்.

" ஒரு சிற்பி தான் செய்த சிலையின் பின்பாகத்தை ஒழுங்காக செய்து கொண்டிருந்தார். அதனை பார்த்த ஒருவன் சிலையின் முகப்பைதானே  மக்கள் பார்ப்பர். பின்புறம் சுவரின் பக்கத்தில் தானே உள்ளது என்றார். அதனை மக்கள் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்ப்பான் அல்லவா என்று மறுமொழி பகர்ந்தார் அந்த சிற்பி. இப்படி பல்வேறுபட்ட துணுக்குகள் இப்புத்தகத்தில் இருக்கிறது.

#பணம்

பணத்தைப் பற்றிக் கூறும் போது ஒரு இடத்தில் இவ்வாறு கூறுகிறார் "வருமானத்தை காலணிக்கு நிகராக கூறலாம். அது சிறிதாக இருப்பேன் அதை அணிந்திருப்பவனின் காலை கடிக்கிறது. பெரிதாக இருப்பின் அவனை சற்று தடுமாற செய்கிறது.

ஓராண்டிற்குள் பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்ற விரும்புபவன் ஆறு மாதத்துக்குள் தூக்கு மேடையில் ஏறி விடுவான். விரைவாக சுண்ணாம்பாலும் செங்கல்லாலும் எழுப்பப்படும் கட்டிடம் விரைவில் விழுந்துவிடும். நேர்மையான முறையில் சிறிது சிறிதாக சேர்க்கப்படுவது நிறைந்து பெருகும்.

மனம் கவர்ந்த வரிகள்

*ஹிட்லர் படித்த இளவரசன் என்ற நூலில் "வழிகள் எதுவாயினும் குறிக்கோள் அடைவதே முக்கியம்" என்று கூறப்பட்டிருந்தது. ஹிட்லரை தவறான வழியில் அழைத்துச் சென்று அழித்தது.

*மனம் பேச ஆரம்பிக்கும் பொழுது நியாயம் மௌனம் சாதிக்கிறது

*தலையமைந்த யானைக்கு வினை அமைந்த பாகன் போலவும் , அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போலவும் நூலுக்கு இன்றியமையாதது முன்னுரை ஆகும் -நச்சினார்க்கினியர்

*நினைவாற்றல் அறிவிற்கு ஒரு ஆணி

* சிறு மனிதர்கள் வறுமைக்கு அடங்கி விடும் போது, பெரிய மனிதர்கள் வறுமையை தங்களுக்கு அடிபணியச் செய்து மேலேறி நிற்க்கிறார்கள்.

*இன்று உலகம் விரும்புவது தனித்தன்மையுடன் சிந்தித்துச்செயலாற்றுகின்றவர்களையேயன்றி பிறருடைய சிந்தனையைச் செயலாற்றும் மனித இயந்திரங்களையல்ல. 

* அறிவின் முதற்படி என்னவென்றால் பொய்யை பிரித்தறிவது, இரண்டாவது படி உண்மையை விளங்கிக் கொள்வது

அப்துற் றஹீமின் புத்தகங்கள் யதார்த்தம் சார்ந்தவை. வாழ்வை வாழ்ந்து பார்த்த ஒரு முதிர்ந்த அறிஞரின் பார்வையில் வாழ்க்கை எவ்வாறு அமைந்தது, எப்படி அமைத்துக் கொள்ளலாம்.. என்பதை அனுபவப் பகிர்வாக இப்புத்தகத்தை நான் பார்க்கிறேன் .வெறுமனே சம்பிரதாயமாக சுய முன்னேற்றத்தை பற்றிக் குறிப்பிடாமல் பக்குவப்பட்ட யதார்த்தத்துடன் கூறும் பொழுது நாமும் இவை சரிதான் என்று மனதுக்கு படும்படி இவருடைய கருத்துக்கள் அமைந்துள்ளது. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் அப்துற் றஹீம் அவர்களுடையது. பல்வேறு புத்தகங்களின் கருத்துக்களை மேற்கோள்களை நமக்கு இவரின் எழுத்துக்கள் வாயிலாக.. ஒவ்வொன்றிலும் நமக்கு தந்துள்ளார். இவரை படிப்பது பத்து புத்தகங்களை படிப்பதற்கு சமம் ஆகும்

 தொடர்ந்து பகிர்வோம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment