ஒரே ஒரு ஒன்லைன் வைத்து ஒரு 573 பக்கமும் எழுதியது ராஜ் கெளதமன் எனும் எழுத்தாளனின் வெற்றி தான்.
எல்லா பாத்திரங்களின் நிழலாக சாதி என்னும் பாத்திரமும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
ஒரு தெற்கத்தி ஆர்.சி தெருவுக்குள் நம்மையும் இருக்க வைப்பதுதான் இந்நாவலின் வெற்றி.எல்லா கசப்பு மருந்துகளையும் இனிப்பு சேர்த்து பரிமாறியிருக்கிறார்.வட்டார நடையில் கதை சொல்லியிருப்பது விறுவிறுப்புடன் படிக்க உதவுகிறது.
தலித் தன்வரலாற்று நூல்கள் பல இருந்தாலும் யதார்த்த எழுத்தில் இந்நாவல் மிளிர்கிறது.
இறுதியில் சிலுவையின் நிலையை படித்து முடித்தவுடன் தியேட்டரில் இருந்து கனத்த மெளனத்துடன் வரவழைத்தது போல் இருந்தது.
#சிலுவைராஜ்
புதுப்பட்டி ஆர்.சி கிறித்துவ தெருவில் வசிப்பவன் சிலுவைராஜ். ஏற்றத்தாழ்வுமிக்க அத்தெருவில் ஏழையாய் வாழ்கிறான்.அவன் அப்பா ராணுவத்திலிருந்து பணம் அனுப்புவார்.ஊரிலும்,பள்ளியிலும், விடுதியிலும் அவன் தொட்டதெல்லாம் குற்றமென ஏசுவார்கள்.சிறுவயதில் மிட்டாய்களை திருடியதாய் குற்றம் சாட்டப்படுவது சாதியின் அடிப்படையிலேதான்.
பாடப்புத்தகம் தாண்டி பல கதைப்புத்தகம் படிக்கிறான். மதுரையில் பி.யூ.சி படிக்கிறான்.கணக்குக்கும் அவனுக்கும் சென்னைக்கும் மிக அருகாமையில் உள்ள தூரம்.ஆனால் அறிவியலில் படு சுட்டி. திருநெல்வேலி st சேவியர் கல்லூரியில் பி.எஸ்.சி விலங்கியல் படித்து கல்லூரியிலேயே ட்யூட்டராக தற்காலிக வேலை பல செய்கிறான்.
இருப்பினும் நிரந்தர வேலையின்றி அவஸ்தைப்படுகிறான்.
குடும்பத்தினர் எதிர்பார்ப்பு, சொந்தங்களின் ஏளனம் அவனை துரத்துகிறது.நக்சலைட் தொடர்பு, பெங்களூரு ஓடிப்போய் பின் மீண்டும் புதுப்பட்டிக்கு வந்து..
ஊருக்கு வந்து, கர்ணம் அடித்து, கையெழுத்து வாங்கி சீல்தூர் தாலுகா ஆபிசல் கொடுத்து, தாசில்தார் சீல் வாங்கி வந்த காப்பியோடு மதம் மாறிய சான்றுகளை வைத்து பேப்பரில் பிரசுரம் செய்து,பல்வேறு இடங்களுக்கு அனுப்பி உத்தரவு வாங்கி, தமிழக அரசு கெஜட்டில் மதம் மாறியது, பெயர் மாறியது. தாசில்தார் தந்த அந்த எஸ்.சி சான்றிதழும், அந்த கெஜட் காப்பியும் அவன் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்களை உண்டாக்கப் போகின்றன என்பது அப்ப சிலுவைக்கு தெரியாது. எத்தனையோ வருஷமாக அரும்பாடுபட்டு படித்து வாங்கிய பட்டங்களை விட, அந்த பேப்பர்கள் தான் அவனை எங்கெங்கோ கொண்டு போயின என்று முடித்திருப்பார்.
இறுதியில் அவன் எடுக்கும் முடிவுதான் பலரின் வயிற்றுப்பிழைப்பை தோலுரித்துக்காட்டுகிறது. இந்த முடிவினை அறிய 574 பக்கம் படித்தேன்.ஆகவே யதார்த்தமான முடிவே இந்நாவலின் வெற்றி.
#ரசித்தவை
*தண்ணிப்பாம்பைப் பிடித்துக் கொல்லாமல் இருப்பது, கிணற்றில் குதித்து நீஞ்சாமல் இருப்பது, கரட்டாண்டியை சுருக்குப் போட்டுப் பிடித்து குறுக்கே அறுத்துக் கொல்லாமல் இருப்பது போன்ற பால்ய கால விளையாட்டுகள் விரவிக்கிடக்கின்றன
*தப்புகளை தராதரம் பிரிப்பதில் அறிவைவிட மனம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது
*ராக்கம்மா பாட்டி சொல்லும் கதைகள்
*சிவாஜி ரசிகரா எம்.ஜி.ஆர் ரசிகரா என சண்டையிடுவது.பாசமலர் படம் வந்தபோது சிவாஜி ரசிகரா மாறுவது.
( புதிய பறவை படத்தில் சிட்டுக்குருவி பாட்டில் சிவாஜி கீழே குனிந்து எழும்போது ஒரு காரணம் சொல்வானுக ஜென்மத்துக்கும் மறக்காது டா டேய்)
*ஒரு தலித்தின் பிரச்னைகள் நாவல் முழுக்கவே பேசப்பட்டிருக்கிறது.அவர்களின் இடர்களை அவ்வப்போது பதிவு செய்துகொண்டே வருகிறது.
*சாவு மணி
"வீட்டில் யாரும் இறந்தால் மத்த கிறிஸ்டியன்களுக்கு தெரிவிக்க நேரே சாமியாரிடம் வந்து பீஸ் கட்டணும். பிறகு மற்றவர்களுக்கு தெரிவிக்க சர்ச்சில் சாவுக்கு அடிக்கிற மணியடிச்சு தெருவிப்பாங்க.
வழக்கமா 'டிங் டாங்' னு அடிக்கும்.சாவுன்னா டிங் டிங் டிங் னு மட்டும் அடிக்கும்.கயிற்றை அதுக்கு தோதா இழுத்து விடுவாங்க.
ஒரு நாவல் என்பது எழுத்தாளர் உருவகப்படுத்தும் வாழ்க்கையை நம்மையும் அதனுடன் இணைந்து வாழ வைப்பதுதான்.இந்நாவலில் அதனை உணரலாம்.சிலுவையின் அருகில் இருந்து நாம் கவனியாது விட்ட உலகை நுட்பமாய் பார்க்க வைக்கிறார்.ஒரு நாவல் படிக்க முதலில் தேவை பொறுமை.இதனை புரிந்துகொண்டு விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் கொடுப்பதுதான் எழுத்தாளனின் வெற்றியே. ராஜ் கெளதமன் மொழிநடை இதனை சாத்தியமாக்கியுள்ளது.
தான் வளரும் சூழல்,இளமைப் பருவம் தான் ஜாதி குறித்த விதையை ஊன்றச் செய்கிறது. இதனை சீர்தூக்கிப் பார்க்க கல்வி அவசியமாகிறது.கல்வியினால் சிந்திப்பது தொடர்ந்தால் சாதி குறித்த மாற்றம் வரும்
நாவலின் இறுதி நிச்சயம் கனக்க வைக்கும்.அற்புதமான வாசிப்பனுவம்.
"ஜாதி மாற முடியாததால்
பலர் மதம் மாறுகின்றனர்"
-தொடர்ந்து பகிர்வோம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment