Tuesday, 20 April 2021

எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர் ஜான் ஹோல்ட்


#30D0044
நாள்-26
புத்தகம்-44

#

ஒரு வருட காலம் குழந்தைகளை வீட்டிலேயே முடக்கி வைத்து விட்டது கொரோனா. கற்கும் ஆற்றல் பாதி மழுங்கி விட்டது. தொலைக்காட்சி மொபைல் போன் என்று அவர்களின் காலம் கழிகிறது. மனக்கணக்கு மனப்பாட சக்தி என எதுவும் அவர்கள் செய்ய தயாராக இல்லை. எந்திரங்களின் உதவியை நாடி பழகியதால் மனக்கணக்கு போடும் நுட்பம் கை வரவில்லை. உண்மையில் குழந்தைகள் எவ்வாறு கற்கின்றனர் என இந்த புத்தகம் விவரிக்கிறது.

3 வயது முதல் 5 வயது வரை குழந்தைகளின் கற்றல் சிறப்பாக நிகழ்கிறது என்பதை உளவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிறகு பள்ளிக்கு வந்த உடனே ஒரு அச்சுறுத்தல் அல்லது பயத்தின் காரணமாக அவர்களின் கற்றல் சற்று பின்னடைவை சந்தித்தது.

குழந்தைகள் குறித்து கற்றல் பகுதியில் குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள், இடது மூளை மற்றும் வலது மூளையின் செயல்பாடு, எதார்த்தமாக உலகில் கண்ணில் படும் பொருட்களையெல்லாம் குழந்தைகள் இயல்பாக தேர்வுசெய்து கற்பது. ஒவ்வொரு குழந்தையும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுவதால் ஒரு குழந்தை மீதான ஆய்வில் இருந்து பெறப்படும் முடிவுகள் தவறாக கணிக்க வாய்ப்புள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடுக்கி குழந்தைகள் கற்றலை குறித்து விளக்குகிறது.

கற்றுத்தரும் கலையின் ஒரு பகுதி என்பது கற்பவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் திறன் பெற்றிருப்பது தான். ஒரு மனநிலையில் இருப்பவர்கள் அடுத்த நொடியிலேயே அடுத்த மன நிலைக்கு மாறிவிடுவார்கள். விளையாட்டுகளும் சோதனை முயற்சிகளும் எனும் கட்டுரையில் குழந்தைகளின் மனநிலை அறிந்து கற்பதற்கான சாத்தியக்கூறுகளையும்.. அவர் வீட்டில் இருக்கும் குழந்தை மூலம் ஒவ்வொரு நாளின் தொடர் விளைவுகளை பற்றிக் கூறி சிந்திக்க வைக்கிறார். மேலைநாட்டு கல்வியாளர்களின் கற்பித்தல் முறைகளையும் சுய கற்பனை முயற்சிகளை மையமாக வைத்து கற்பதுவும், கற்க விரும்பாத பல விஷயங்களை கற்கும்படி சொல்லும்போது கீழ்ப்படியாமை குறித்து குழந்தைகள் சிந்திக்கின்றனர்.

குழந்தைகளின் பேச்சு குறித்து கூறும்போது குழந்தைகள் ஒலிகளை முதலில் நன்கு கேட்கிறார்கள்.
அழுவதை தவிர மற்ற நேரங்களில் எந்த சத்தமும் செய்யாமல் சுற்றியிருக்கும் ஒலிகளை கூர்ந்து கவனிக்கிறார்கள்.கேட்ட ஒலிகளைக் கொண்டு தமது விருப்பம் மற்றும் உணர்வு சார்ந்த அர்த்தங்களை வெளிப்படுத்துகிறார்கள். சிக்காகோோ பள்ளிகளில் வாசித்தல் பயிற்சியை 500 வல்லுநர்கள் இணைந்து 283 பயிற்சிகளாக தொகுக்கின்றனர்.
 இவ்வாறு பேச்சுப் பயிற்சி குறித்து பல்வேறு தரவுகள் மற்றும்
எடுத்துக்காட்டுகளுடன் இப்பகுதி விளக்குகிறார்.

புரியாத இடத்தில் இருக்கும்போது நமக்கு என்ன மனநிலை தோன்றுமோ.. அதே போல்தான் குழந்தைகள் முதன்முதலில் வாசிக்கும்போது என்னவென்று தெரியாமல் விழிப்பார்கள். கௌரவமும் நுண்ணுணர்வு மிக்க குழந்தைகளே சிலவேளைகளில் எதிர்வினை ஆற்றி இவை என்ன எனக் கேட்பார்கள். நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை நாம் கற்றுத் தர முன்வரும் போது லேசான தயக்கமும் சொந்த விருப்பத்திற்கு மாறாக கற்கிறோமோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டு ஓடிவிடும்.

 நமக்கு தெரிந்த விஷயத்தை தான் கற்கிறோம் என்று முதலிலேயே சிந்தித்து விடும். குழந்தை அப்போது தெரியாத விஷயம் வருகிறபோது படிக்க சோர்வாகி ஓடிப்போய்விடும். முதல் பக்கத்தில் பார்த்த வார்த்தை தான் அடுத்த பக்கத்தில் வருகிறது என்று நாம் எண்ணிக் கொண்டாலும் குழந்தைகளை பொறுத்தவரை அது சற்று கடினமான செயல்தான். அக்குழந்தை அந்த வார்த்தையை முதன் முதலில் பார்ப்பது போலவே இருக்கும். மெதுவாகத்தான் கற்கும். முட்டாள்தனமாக கற்கிறாயே என்று கோபப்படக் கூடாது. வாசித்தலை பொறுத்தவரை குழந்தைகளுக்கு இருக்கும் பொறுமையை விட கற்பிப்போருக்கு இருக்கும் பொறுமை அதிகமாக இருக்கவேண்டும் .தவறாக உச்சரித்தாலும் உடனே திருத்தவும் சுட்டிக்காட்டவும் செய்யாமல் பொறுமையாக மேம்போக்காக செய்ய வேண்டும்.

குழந்தைகள் நம்மை நம்ப வேண்டுமானால் நாம் முதலில் நம்மை நாம் நம்ப வேண்டும்.
 நாம் அன்று எவ்வாறு நடத்தப்பட்டோமோ அவ்வாறுதான் இப்போது நமது குழந்தைகளை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். சிதறிய கற்றல் என்பது தற்போது நடைமுறை ஆகியுள்ளது. வார தேர்வு என்பது தினசரி தேர்வு, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தேர்வு, ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் தேர்வு என்று மாறி உளளது. கற்றதை மேலும் மேலும் திருப்பி எழுதிப் பார்த்து சிந்திப்பதற்கு நேரம் இல்லாமல் செய்து விடுகிறோம். ஒவ்வொரும் ஒவ்வொருவருக்குமான பார்வையை மழுங்கடித்து விட்டு ஒரே திசையில் கடிவாளம் இட்ட குதிரையைப் போல் சென்று கொண்டிருக்கிறோம். அவ்வாறு அல்லாது குழந்தைகள் கற்பதற்கு உதவி புரிந்து கற்றுக்கொடுத்தால் நம்மை விட பாக்கியசாலிகள் வேறு யாருமில்லை.

 தொடர்ந்து பகிர்வோம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment