Thursday, 1 April 2021

கற்பதுவே.. பகிர்வதுவே-21*மணி




அறிதல் வேறு;உணர்தல் வேறு.அறிதலுக்கு அடிப்படை தெரிதல்.உணர்தலுக்கு அடிப்படை அனுபவித்தல்

-வலம்புரி ஜான்

#ரகசியமான ரகசியங்கள்
-கோமல் அன்பரசன்

எல்லாருக்கும் தெரிந்த தகவலாய் இருக்கும்.ஆனால் தெரியாத தகவல் மீதமிருக்கும்.அதை எடுத்து யாராவது சொன்னால் அப்படி ஒரு ஆச்சர்யமாய் இருக்கும். அப்படித்தான் தினத்தந்தியில் தொடராய் வரும் போது.. ஏதோ தெரிந்து கொள்ளப் போகிறோம் என ஆர்வத்துடன் பார்த்திருக்கிறேன்.அந்த ஆர்வத்தை ஏற்படுத்துவதுதான் எழுதுவோரின் கடமை.ஏனெனில் அறிவு என்பது மலை வாழை போல் இருக்கும் இந்நாளில் அதை மலையிலிருந்து கொண்டு வந்து கொடுத்தால் எப்படியிருக்கும்.அதுபோலத் தான் இப்புத்தகம்.

வழி சொல்லுபவர்களில் ஆட்டோக்காரர்கள் தான் அந்நாளைய கூகுள் மேப்.சேருமிடம் சொல்லும் முன் வழியில் உள்ள சிறுசிறு குறிப்பை சொல்லி..அதைத் தேடிச் செல்லும்போது அத்தனை சுவாரஸ்யமாய் இருக்கும்.அது போல தெரிந்த தகவலினூடே தெரியாத தகவல் அறிந்து கொள்வதும் வாசிப்பனுபவம்.

மும்தாஜ் இறந்தபோது ஷாஜகான் தாஜ்மஹால் கட்டினார் என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் அதற்கு பின் உள்ள வரலாறு சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் கோமல் அன்பரசன். தனது 18 வயதில் உயிர் நீத்த போது ஷாஜகானுக்கு 39 வயது. அப்போது மனைவியின் இழப்பால் மிகுந்த துயரத்திற்கு உண்டான ஷாஜகான்.. தன் மூத்த மகள் ஜகானாரா வின் கவனிப்பில் தான் இருந்தார்.இறுதிவரை மகள் திருமணம் செய்யவில்லை. மும்தாஜ்க்கு 14பிள்ளைகள். 7 பேர் இறந்துபோயினர்.இறுதிகாலத்தில் மும்தாஜ் வாங்கிய 4 சத்தியங்களில் ஒன்று.. தமக்கு கல்லறை கட்ட வேண்டுமென்பது.

 அதற்காக யமுனை நதிக்கரையில் 42 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு முன்பு பர்ஹான்பூர் புலாரா மஹாலில் புதைக்கப்பட்டிருந்த மும்தாஜ் தோண்டி எடுக்கப்பட்டு பின் தாஜ்மஹாலில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டார்.லாகூரை சேர்ந்த உஸ்தாத் அகமது என்பவர் தான் தாஜ்மஹாலை வடிவமைத்தார். ராஜஸ்தானின் புகழ்பற்ற மக்ரானா என்ற இடத்திலிருந்துதான் சலவை கற்கள் கொண்டு வரப்பட்டன

முகலாயர்களின் காலத்துக்குப்பின் வில்லியம் பெண்டிங் பிரபு தாஜ்மஹாலை இடித்துவிடலாம் என்று யோசனை சொன்ன போது கர்சன் பிரபுதான் அந்த யோசனையை நிராகரித்து தாஜ்மஹாலை பாதுகாத்தார். அதோடு பெரிய பித்தளை விளக்கு ஒன்றை வரவழைத்து சமாதிகளுக்கு மேல் தொங்க விட்டவர் கர்சன் பிரபு என்பதும் முக்கியமானது.

*ராமானுஜன் காலம் கசக்கி எறிந்த கணிதப்பூ கட்டுரையில்  ராமானுஜத்தை அருகில் இருந்து பார்த்தது போல் ஒரு பிரமிப்பை இந்த கட்டுரை நமக்கு தருகிறது. ராமானுஜன் எல்லா பாடத்திலும் தோல்வி என்பது பொய். ஏனெனில் அவர் கல்லூரியில் படிக்கும்போது கணிதத்தை தவிர மற்ற பாடங்களில் தான் தோல்வியை சந்தித்தார். பேராசிரியர் ஹார்டி அவர்களின் அழைப்பின் பேரில் மேலைநாட்டிற்கு சென்றதும், உடல் நலமில்லாமல் கஷ்டப்பட்டதும், விடிய விடிய கணிதங்களை போட்டு பார்த்துக்கொண்டு இருப்பார் என்ற அவரின் மனைவியின் கூற்றும் இன்னும் மேலும் தெரியாத சம்பவங்களை இக்கட்டுரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம்

சுபாஷ் சந்திரபோஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் அவரின் காதல் மனைவியான எமிலி போஸ் குறித்த கட்டுரை சுவாரஸ்யமானது.300க்கு மேற்பட்ட கடிதங்களை தனது காதல் மனைவியான எமிலிக்கு அப்போது அனுப்பியுள்ளார். வியன்னாவை சேர்ந்த எமிலியிடம் இந்தியாவில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அவருடைய போராட்டத்திற்கு மிகவும் உந்துசக்தியாக  இருந்த எமிலி இறுதியில் திருமணம் முடிந்த உடன் நான்கரை மாத குழந்தையையும் விட்டுவிட்டு கணவர் சுதந்திரப் போராட்டத்திற்கு வேறு நாட்டுக்கு செல்வதையும் ஊக்குவித்தார். சொல்லப்படாத அவரை குறித்த இன்னும் ஏராளமான தகவல்கள் இதில் நிறைந்துள்ளது.

ஜெய்ஹிந்த் செண்பகராமனின் முழு வரலாறையும் சுருக்கமாய் பதிவு செய்ததுடன்,உலகையே அதிர வைத்த எம்டன் கப்பல் இறுதியில் என்ன ஆனது,43 ஆண்டு கால வாழ்க்கையில் 26 ஆண்டுகள் இந்திய விடுதலைக்கு உதவி இறுதியில் நேர்ந்த கோர சம்பவத்தையும் அறிய முடிகிறது. அவர் இறந்தபோது 17சிறு பெட்டிகளில் இருந்த ஆவணங்கள் இந்திய போலிஸார் எடுத்துச் சென்று பாதுகாக்கப்படுவதாய் சொல்லி இன்று வரை ரகசியமாய் உள்ளது.

கஸ்தூரிபாய்.வ.உ.சி,ஜோதி ராவ் புலே,பகத்சிங்,அம்பேத்கர், செல்லம்மா பாரதி,பெரோஸ் காந்தி,
டாக்டர் முத்துலட்சுமி, 21 ஆண்டுகள் பயணித்து பழி தீர்த்த உத்தம்சிங், வல்லபாய் படேல்,இந்திராவை சுட்டுக் கொன்ற கொலையாளிகள் குறித்த தகவல்கள்,அதிகம் தெரியாத மாருதியின் காதலனான சஞ்சய் காந்தி ஆகியோர் குறித்து சுவையான தகவல்கள் நிறைந்துள்ளது.

#படித்ததில் பிடித்தது

*ஏடிஎம் எனப்படும் பணம் வழங்கும் எந்திரத்தின் பாஸ்வேர்டு போன்றவை கண்டுபிடிக்க இராமானுஜனின் கண்டுபிடிப்பு பயன் பட்டுள்ளது.

*ஜெய் ஹிந்த் என்ற கோஷததை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் செண்பகராமன் தான்

*பறிக்கப்பட்ட வழக்கறிஞர் உரிமத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வாலிஸ் என்பவர் தான் மீண்டும் வழங்க ஆணையிட்டார். அதன் நன்றிக்கடனாக தன் கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார்

*வ.வு.சி வழக்கு குறித்த ஆவணங்கள் ஆங்கிலேயரிடம் சிக்காத படி அவற்றை சி.கா சுப்பிரமணிய முதலியார் எரித்து விட்டால் அந்த நன்றிக்காக தன்னுடைய இன்னொரு மகனுக்கு சுப்பிரமணியன் என பெயர் சூட்டினார் வ உ சி

*சத்தியமேவ ஜெயதே என்ற சொற்றொடரை முதலில் பயன்படுத்தியவர் இந்திய தலைவர் ஜோதிராவ் புலே தான் அவர் தமது கடிதங்களில் தொடக்கத்தில் இதனை குறிப்பிட்டு வந்தார்

*அம்பேத்கருக்கு ஐந்து பிள்ளைகள் அவர்களில் நான்கு பேர் சில ஆண்டுகளிலேயே இறந்து விட்டனர் அதில் யஷ்வந்த் ராவ் மட்டுமே தப்பிப் பிழைத்தவர் ஆவார்

தொடர்ந்து பகிர்வோம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment