#30D0044
நாள்-23
புத்தகம்-40
பிரம்மராஜன்.. உலக கவிதைகளை மிக நுட்பமாகவும் உலக கவிஞர்களின பார்வையில் கவிதையையும் நமக்கு மொழிபெயர்த்து தரக்கூடிய ஒரு முக்கிய ஆளுமை என்று சொல்லலாம் .இந் நூலில் இடம் பெற்ற கட்டுரைகள் உலக கவிஞர்கள் 33 பேர் குறித்த கவிதைகள், கவிஞர்கள் குறித்தும் ஆவணமாக நமக்கு கட்டுரை வடிவில் சொல்லி இருக்கிறார்
மௌனத்தின் முகத்தில் வீசப்பட்ட ஒரு பேச்சே வாழ்க்கை.. என்று எழுதிய ஜோசப் ப்ராட்ஸ்கி குறித்த ரஷ்ய கவிதைகள் குறித்து நமக்கு சொல்கிறார்.அவரின் நவீனத்துவ புரட்சிகரமான கருத்துகளையும் அழகியல் எதார்த்தத்துடன் உள்ள கவிதைகள் பலவற்றை நமக்கு மேற்கோள்கட்டி விளக்குகிறார்.
பெண்ணின் மனநிலையில் எழுதப்பட்ட "நம் விடைபெறுதல் மௌனமாய் நிகழட்டும்/ இசைத்தட்டு நிறுத்திவிடு/ இவ்வுலகில் தனிமைப்படுத்தல் அப்பால் வரும் பிரிவுகளின் குறிப்பு/ என்று வாழ்வின் கசப்பை ஒவ்வொரு வரியிலும் நமக்கும் கடத்துகிறார்.
ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்கு டிஎஸ் எலியட்டை படிக்காமல் கடந்திருக்க முடியாது. வோர்ட்ஸ்வெர்த்தின் எழுத்தை படித்த வாசகர்கள் நிச்சயம் எலியட்டின் கவித்துவ வழிபாட்டு முறையும் கவிகளும் வினோதமாய் தெரியும் என்று பிரம்மராஜன் தெரிவிக்கிறார்.
காரணம் எலியட்டின் கவிதைகள் வாசகனின் புரிதலுக்கு தடையாக கவிதையின் மையத்தை அணுக முடியாத அளவுக்கு சில சிக்கல்களை கொண்டதாக இருக்கும். அவரின் கவித்துவ சாதனைகளை மூன்று பிரிவுகளாக பிரித்து அதிலுள்ள கவிதைகளையும் படிமங்களையும் கூறுகிறார். இதில் கரிந்த கிராமம் எனும் கவிதையை மொழிபெயர்த்திருக்கிறார்.
கவிதையும் வரலாறும் பகுதியில் சாமுவேல் பெக்கெட் எழுதிய "ஒவ்வொரு வாக்கியமும் மற்றொன்றிற்கான தொக்கி நிற்கும் குறிப்பினையும் கொண்டுள்ளது. மற்றதினால் விளக்க மூட்டப்படுவதற்கு ஏற்புடனும் இருக்கிறது. ஒவ்வொரு சொற்றொடரும் எதையாவது சொல்லும் விருப்பத்தை உள்ளடக்கியிருக்கிறது. ஒவ்வொரு குறியீடும் எதை இலக்குவைத்து செல்கிறது என்பதை குறிக்கிறது. இந்த வகையில் அர்த்தம் என்பதும் செய்தி பரிமாற்றம் என்பது சொற்களின் நோக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன. நமது காலம் போன்றதொன்றில் கவிஞனின் விதியானது "சொற்களின் கூட்டத்துக்கு மிகத் தூய்மையான அர்த்தத்தை வழங்குவதுதான்" என்று கூறுகிறார்
தெரியாத கூட்டத்தில் தெரிந்த ஒருவரை பார்த்ததுபோல இக்கட்டுரையில் ஆல்பெர் காம்யுவின் எழுத்துக்களை படிக்கும்போது உணர முடிந்தது. காம்யூவின் ஒரு நாவலை தற்கால சமயத்திற்கும் பொருத்திப் பார்க்கும்படி இருக்கிறது
"ஓரன் நகரை கொள்ளை நோய் தாக்குகிறது. நோய் பரவாது இருக்கும் பொருட்டு எல்லைகள் மூடப்பட்டு மனிதர்கள் நகருக்குள் வருவதும் தடை செய்யப்படுகிறது. மருத்துவ காரணங்களை அலசுகிறார்கள. மனிதன் மரணத்தை சந்திக்கும் போது எங்கனம் நடந்து கொள்ள வேண்டும் என்ற அறப் பிரச்சனை விளக்கப்படுகிறது. இதில் டாக்டரான ரியூ நாவலின் விவரணை குரலாக இருக்கிறார். கொள்ளை நோய் பற்றியும் அந்த சமயத்தில் மனிதர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும் ஒவ்வொரு பாத்திரங்களும் வேறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இறுதியில் நோய் முற்றாக நீங்கிய பின் சந்தோஷம அடைகின்றனர்.
ஆயினும் நோய்க் கிருமிகள் முற்றிலும் அளிக்கப்படுவதில்லை, காலம் காலமாக மரச்சாமான்களுக்கி டையிலும் நிலத்தடி சேமிப்பு அறைகளிலும் கிருமிகள் பதுங்கி இருந்து திடீரென்று ஒரு நாள் ஒரு மகிழ்ச்சியான நகரை தாக்கக்கூடும் என்று நாவலை முடித்து இருப்பார் காம்யு.இக்கால காலகட்டத்திற்கு இந்த எழுத்துக்கள் மிகவும் பொருத்தமானவையாக இருக்கின்றன.
#ரசித்தது
*இறந்துபோன எழுத்தாளர்கள் நமக்கு வெகு தொலைவில் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அறிந்திருந்ததை விட நாம் அறிபவை அதிகம்
*இயற்கை கலையை பார்த்து காப்பி அடிக்கிறது -ஆஸ்கார் வைல்ட்
*போர் என்பது மற்றவர்கள் எல்லோரும் திட்டமிட்ட மடமையினால் உண்டாக்கப்பட்டது
*வாழ்க்கை ஓலமும் சீற்றமுமாய் ஒரு மடையனால் சொல்லப்பட்ட எதையுமே அர்த்தப்படுத்தாத கதையாகும்.
*காலடி ஓசைகள் நினைவில் எதிரொலிக்கின்றன
நாம் போகாத பாதையின் வழியாக நாம் திறக்காத கதவினை நோக்கி
*கவிதை என்பது சொற்களால் நெய்யப்பட்ட ஒரு இயந்திரமாகும். ஒரு கவிதை உருவாக்கத்தின் போது நிறைய மனோவியல் தொழில்நுட்பங்கள் செயல்படுகின்றன.
*எந்த இரு அர்த்தங்களுடன் எதார்த்தம் தன்னை நமக்கு வெளிப்படுத்திக் கொள்கிறது அதுவே கவிதை மொழி
மற்ற புத்தகங்களை போல் இல்லாமல் சற்று அடர்த்தியானது. அடர்த்தியான நடையில் அயலக கவிஞர்களின் கவிதை நுட்பத்தினை அறியக்கூடிய வகையில் இப்புத்தகம் இருக்கிறது. வாசிப்பு அனுபவத்திற்காக இப்புத்தகத்தை அனைவரும் வாசிக்க வேண்டும்
தொடர்ந்து பகிர்வோம் தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment