எந்த வயதில் எழுதுவது
அல்லது
செய்யத்தகாதன செய்தல்
1982-85 என்பது எனது பதின் பருவத்தின் முடிவு.
அந்தக் காலகட்டத்தில் எழுதியவற்றில் பக்க அளவுகள் குறைந்த படைப்புகள் 86 முதல் எனது கிரணம் எழுத்துகளாக வெளிவரத்தொடங்கின.
அதற்குப் பிறகு நான் சந்தித்த எழுத்தாளர்கள் கவிஞர்கள் அனைவருமே என்னிடம் ஐம்பது வயது கொண்ட ஒரு பிரஞ்சு எழுத்தாளனிடம் நடந்துகொள்வது போன்றே நடந்து கொண்டதைக் கண்டு மனம் தடுமாறியிருக்கிறேன்.
அவர்கள் என்னிலும் மூத்தவர்கள் ஆனால் என்னைத் தம்முடன் இணையாகவோ தம்மிலும் மூத்த ஒரு எழுத்தாளன் போலவோ என்னிடம் நடந்து கொண்டதையும் அன்பு அல்லது வெறுப்புக் காட்டியதையும் அனுபவித்து உள்ளுக்குள் தடுமாறியிருக்கிறேன்.
இந்திரா பார்த்தசாரதி அவர்கள் என்னை முதன் முதலில் நேரில் சந்தித்தபோது தோழர் ரவிகுமார் உடன் இருந்தார். அன்று அவர் சொன்னது பிரேதா என்பவர் ஒரு 55 வயது பிரஞ்சு-தமிழராக இருக்கலாம் என்று நினைத்திருந்தேன் ஆனால் நீங்கள் அவருடைய கடைசி மகன் போல இருக்கிறீர்கள் என்றார். அவருக்கே உரிய கிண்டலுடன் நீங்கள் மதிக்கும் அளவுக்கு நான் எழுதியிருக்கிறேனோ இல்லையோ எனக்கு ஒரு தகுதி உண்டு கிரணம் இதழின் முதல் சந்தாதாரர் நான் என்றார்.
அதற்குப் பிறகு வந்த காலங்களில் அவருடன் பல மணிநேரங்கள் பேசியிருக்கிறேன். எதோ எனக்குத் தெரியாதது எதுவுமில்லை என்பது போல பேசிக்கொண்டிருப்பார். உலக நாடகங்களைப் பற்றி பேச அழைத்துதான் என்னை நாடகத்துறையில் சிக்க வைத்தார். அது பெரிய கதை.
அய்யா கி.ரா புதுவை வந்த புதிதில் பார்க்கும்போது வணக்கம் சொல்வதுடன் சரி. அவரைச் சந்திக்க பலபேர் வந்து செல்வார்கள். பிறகு அவருடன் அன்பார்ந்த நெருக்கம் வளர்ந்த பின் ஒரு நாள் சொன்னார் அம்மாவும், வேறு சில நண்பர்களும் இருந்தார்கள். புதுவை வந்த பின் பல பேர் என்னை ஒரு எழுத்தாளனாக சந்திக்க வந்துள்ளனர். ஆனால் புதுச்“சேரி வந்ததிலிருந்து நான் சந்திக்க விரும்பிய எழுத்தாளர் பிரேம்-தான் என்றார்.
அது என்னை நெகிழவைத்தது. கி.ராஜநாராயணன் எழுத்துலகம் எழுதிய போது மக்கள் பாராட்டு விருதுகள் எல்லாம் வேண்டும்தான் ஆனால் மற்ற எழுத்தாளர்களுக்கு கிடைக்காத ஒரு விருது என்னைப் பற்றி நீங்கள் எழுதியது என்றார்.
அன்புக்குரிய சுந்தர ராமசாமி, அணுக்கம் காட்டும் அசோகமித்திரன் போன்றவர்களுடன் நான் உரையாடிய போதெல்லாம் அவர்கள் காட்டிய மகிழ்ச்சியும் பெருமிதமும் பல அர்த்தங்களைக் கொண்டது. 2004 என நினைக்கிறேன் ஒரு மூன்று நாட்கள் சு.ரா. அசோகமித்திரன், நான் மூவரும் பகல் முழுக்க டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் புள்வெளியில் நாற்காலியில் உட்கார்ந்து பேசிக்கொண்டே இருப்போம்
ஒரு முறை உள்ளே நிகழ்ச்சி நடப்பதாக ஒரு எழுத்தாளர் வந்து
என்னை அழைத்தார் சு.ரா அதெல்லாம் பெரியவங்க நிகழ்ச்சி நாங்க ஏதோ சின்னப் பிள்ளைகள் பேசிக்கொண்டிருக்கிறோம் விட்டுடுங்க அய்யா என்றார். அசோகமித்திரன் அது போல பேச்சுகளை பிறகு எப்பவும் கேட்கலாம். இது போல நாங்க பேச சந்தர்பம் கிடைக்குமா தெரியல. நீங்க போங்க என்றார். என் இளைய நணபர்கள் அதற்குப் பிறகு மூன்று இளம் எழுத்தாளர்கள் என்று எங்களைக் கேலி செய்து கொண்டிருந்தார்கள்.
அதற்கும் பல அர்த்தங்கள் உண்டு.
தேவதச்சன், தேவதேவன் போன்ற என்னிலும் மூத்த படைப்பாளிகளுடன் பழக்கம் ஏற்பட்ட பின் அவர்கள் சொன்னது நினைவில் இருக்கிறது. இந்த வயதில் இப்படி எழுதிவிட்டால் பிறகு உங்கள் எழுத்தை நீங்களே மீற முடியாமல் போகலாம். அதற்கு நான் இருவேறு பதில்கள் சொல்லியிருக்கிறேன்.
ஆனால் இன்று எழுதும் ஒருவருக்கு நான் சொல்ல விரும்புவது.
ஓய்வு ஒழிச்சலின்றி எழுதுங்கள், அல்லது ஓய்வு பெற்றபின் எழுதுங்கள்.
பின் குறிப்பு:
எழுத்துக்குள் அனைத்தையும் செய்ய முடிவு செய்துவிட்டால் பிறகு எழுத்து உங்களைக் காக்கவில்லை, பாக்கவில்லை என்று புலம்பிக்கொண்டிருக்காதீர்கள்.
எழுத்து வேறு எதுவும் செய்யத் தெரியாதவர்களின் இடம் அல்ல.
No comments:
Post a Comment