Wednesday, 12 April 2017

பாரதிதம்பி

செய்திகளின் மிகை உற்பத்தி

-பாரதி தம்பி

இந்த ஆண்டு 5 லட்சம் கார்கள் விற்பனை ஆகும் என்றால், நாட்டில் இருக்கும் பத்து கார் கம்பெனிகளும் ஆளுக்கு 5 லட்சம் கார்கள் தயாரிக்கின்றன. Potential customers அதே எண்ணிக்கைதான். ஆனால், பொருளின் எண்ணிக்கையோ பத்து மடங்கு அதிகம். இதுபோன்ற சூழலில் இயல்பாக என்ன நடக்க வேண்டும்? போட்டி காரணமாக பொருட்களின் விலை குறைய வேண்டும்.

சந்தைப் போட்டி, பொருட்களின் விலையைக் குறைக்கும் என்றுதான் முதலாளித்துவ பொருளியலில் நம்பிக்கைக் கொண்டோர் காலம் காலமாக சொல்லி வருகின்றனர். 'மானியங்களை நிறுத்த வேண்டும்' என்ற வாதத்துக்கு அவர்கள் முன்வைக்கும் தர்க்கமே இதுதான். ஆனால் நடைமுறை என்ன?
தக்காளி உற்பத்தி அதிகம். அதனால் விலை வீழ்ச்சி எனப் படிக்கிறோம். ஆனால் ஒருபோதும் இத்தகைய பொருட்களின் விலை வீழ்ச்சி அடைவது இல்லை. மாறாக, தங்களிடம் உள்ள மிகை உற்பத்திப் பொருட்களை வாங்குவதற்கு ஏற்ப, வாடிக்கையாளர்களின் மனங்களை தயார் செய்கிறார்கள்.

சந்தையின் மனநிலையை தமக்கு இசைவாக மாற்றி அமைக்கிறார்கள்.
இதேஅர்த்தத்தில் சொன்னால், இது செய்திகளின் மிகை உற்பத்திக் காலம். நாள்தோறும் உருவாக்கப்படும் எண்ணற்ற செய்திகளை உள்வாங்கிக்கொள்ளும் அளவுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும், வாழ்நிலையும் இல்லை. இதனால்தான் பொருட்களை விற்பதற்கு ஆடி தள்ளுபடி தேவைப்படுவதைப் போல, செய்திகளை வழங்குவதற்குக் கொண்டாட்ட நாட்கள் தேவைப்படுகின்றன. புதியப் புதியக் கொண்டாட்ட தினங்கள் உற்பத்தி செய்யப்படுவது இதன் பொருட்டே. (இது தினங்களாகக் கூட இல்லை. இப்போது எல்லாம் மணி, நிமிடக் கணக்கில் வந்துவிட்டது).

இந்த அடிப்படையில்ல், இதற்கு தேர்தல் மிகப்பெரிய தீனிதான்.
ஆனால் இதன் பக்க விளைவை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். செய்திகளின் மிகை உற்பத்திக் காரணமாக, அவற்றை நாம் நுகரும் காலம் (Duration) வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு செய்திக்கான காலாவதி காலம் (Validity time) சுருங்கிவிட்டது. ஒரு செய்தி நம் மீது செல்வாக்கு செலுத்தும் நேரம் குறைந்துகொண்டே வருகிறது. ஒரு செல்போன் மாடலில் இருந்து இன்னொன்றுக்கு நம் கவனம் திரும்புவதற்கான நேரம் சுருங்குவதைக் காட்டிலும், இது வேகமாக நடைபெறுகிறது.
நமக்கு முன்னே எண்ணற்ற செய்திகள் கணம்தோறும் கடைபரப்பப்படுகின்றன. அவை, ஒவ்வொன்றும் புதிய நுகர்வோரைக் கோருகின்றன.

மிகையான பொருள் உற்பத்தியின் சந்தைப் போட்டி, பொருளின் தரத்தை மேம்படுத்துவதும், விலையைக் குறைப்பதும் நடைபெறாததைப் போலவே, மிகையான செய்தி உற்பத்தியிலும் அது நடைபெறவில்லை. முயற்சிக்கப்படுகிறது என்றபோதிலும், நமது நீண்ட கால கவனத்தை பெற வேண்டிய தேவை இல்லை என்பதால், கவன ஈர்ப்பே முன்னிலைப் பெறுகிறது.
பொருள் உற்பத்தியும், செய்தி உற்பத்தியும் ஒரே அலைவரிசையில், ஒரே அளவுகோலில் நடைபெறும் காலம் இது. செய்தியும், ஒரு பொருளாக மாறும் காலம் இது. Now, news is a product.

No comments:

Post a Comment