Wednesday, 14 September 2016

நறுக்குகள்- நன்றி மினிமீன்ஸ்


பிரார்த்தனை
இந்த உலகம்
நம்மால்
அழியாமலிருக்கட்டும்.
-வைத்தீஸ்வரன்

* யுத்தம் பற்றிய ஒரு மிகச்சுருக்கமான அறிமுகம்
நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களானால்
அது கண்ணீரின் குருதி
நீங்கள் ஒடுக்குபவர்களானால்
அது குருதியின் கண்ணீர்.
-சேரன்

* கடல் மீது ஒரு பறவை
தனது பழைய தீவைத் தேடிச்செல்கிறது
தீவு இதுவரை அறிந்திராத
புதிய தானியத்தை விதைக்க
அலகில் முற்றிய கதிரோடு
மண்வாசனையை ஞாபகம்கொண்டு
பறவைக்கும் தீவுக்குமிடையே
ஆறாத கதிரொளி.
-மாலதி மைத்ரி

* பழகிய அறையில்
இருள்
பழகிவிட்டிருக்கிறது.
பழகாத அறையில்
இருள்
பார்க்க
மிகக் கருப்பாக இருக்கிறது.
-ச.முத்துவேல்

* மழையின் பெரிய புத்தகத்தை
யார் பிரித்துப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில் நீர் வழிந்து
கொண்டிருக்கிறது.
-தேவதச்சன்

* ஒரு பறவை பறந்துகொண்டிருக்கும்போது
மிதந்துகொண்டிருக்கிறது
கூடவே வானமும்
பறவையைச் சுட்டார்கள்
விழுந்ததோ
ஒரு துண்டு வானம்.
-பாலைநிலவன்

* வீட்டைச் சுற்றி தோட்டம் போட்டேன்
தோட்டத்தைச் சுற்றி வேலி போட்டேன்
வேலியைச் சுற்றி காவல் போட்டேன்
காவலைப் பற்றி கவலைப்பட்டேன்
-ஷண்முக சுப்பையா

No comments:

Post a Comment