விசி. விஜய் பொன்னுசாமி எழுதிய
"கொஞ்சம் சிரி பூக்கள் மலர பழகிக்கொள்ளட்டும்"
நூலிலிருந்து.....
*கருப்பை செத்த கதை*
உழுதவன் கணக்குப் பார்த்தா
ஒழக்கு மிஞ்சாதுமிஞ்சாதுன்னு
புழுதிய தட்டிட்டு
புறப்படுறேன்னு சொன்னிக
வெளிநாடு....
கூழோ கஞ்சியோ
குடிச்சிப்புட்டு
கூடி வாழ்வோமுன்னு
நான் அழுதேன்
அழுகைய நிறுத்து புள்ளனு
அடுக்குனீக பட்டியலு
நூறு தென்ன மத்தியில
மெத்த வீடு கட்டணும்
பக்கத்துல படகு கார் ஒண்ணு நிக்கணும்
கட கன்னி வச்சு
காசு பணம் சேர்க்கணும்
ஒனக்கு நூறு பவுனோட
ஓடி வாறேன் பாரு புள்ளனு
புறப்பட்டீக
ஏரோப்பிளேன் ஏறி
ஏஞ்சாமி பறக்கையில
ஏம் மனசு
தரையில விழுந்து தவிக்குது
கடுதாசி எழுதுனீக
பிரிச்சுப் படிக்கையில
கலங்கின ஏங் கண்ணுக்கு
எழுத்தெல்லாம்
ரெண்டு ரெண்டா தெரியுது
ஓட்டி கிடைக்கலேனு
ஓயாம புலம்புறீக
இங்க
வட்டி கட்டலேனு
வாய்க்கு வந்தபடி பேசுறான்
மாட்டு சாணந் தேச்சு குளிப்பாட்ட
மனசு ஒப்பாதவ
இங்க கக்கூசு கழுவுறேன்னு
கண்ணீர் விட்டீக
ஓட்டல் வேல பாக்குறேனு
ஒரு நாள் சொன்னீக
மூடி முழிக்கிறதுக்குள்ள மூணு வருசம் ஓடிப்போச்சு
ஓடி ஓடி தேடுனது
கடனுக்கே சரியாப் போச்சு
நடு ராத்திரியில எந்திரிச்சு
நாங் குளிக்கிறது தெரியாம
ரினிவலு வாங்கிட்டேன்னு
நிம்மதியா சிரிக்கிறீக
நீங்க அனுப்புன காசுல
ஊரோட எல்லையில
ஒரு காணி நிலம் வாங்கி
தேரோடும் இடைவெளியில்
தென்ன நூறு வச்சுப்புட்டேன்
போர் ஒண்ணு போட்டு
புள்ளைகள வளர்க்கிறேன்
கொழு கொழுன்னு வளருதய்யா
குருத்தெல்லாம் சிரிக்குதய்யா
நீ வந்து பாருய்யான்னு
நாஞ்சொன்னா
அடி கூறு கெட்டவளே
வீடு ஒண்ணு கட்டுடீன்னு சொன்னீக
வீடு ஒண்ணு கட்டி
விளக்கேத்தி வச்சு
கண்ணு பூக்க
நா
காத்திருக்கேன்
வச்ச தென்னைக்கு
வயசு ஆறாகிப்போச்சு
பச்ச புள்ளையா தெரிஞ்சது
இன்னைக்கு
பத்து கொல தள்ளி நிக்குது
ஈரக்கொல நடுங்குதய்யா
என்ன நெனச்சா
என் வயிறு
பொட்டக்காடா மாறுறதுக்குள்ள
பொறப்பட்டு வாருமையா
சீமத் தொர நீங்க
சீக்கிரம் வந்துருவீகன்னதும்
பறக்கிற பிளேனெல்லாம்
பார்த்து பரிதவிக்குது
ஏம் மனசு
இன்னைக்கு
வர்றீகன்னதும்
சென்னைக்கு
நா வந்துபுட்டேன்
ஏரோப்பிளேன்
வந்துருச்சுன்னு
எல்லோரும் நிக்கிறாக
வர்றவுக எல்லாரையும்
எக்கி எக்கி பார்க்கிறப்ப
திக்கு திக்குனு அடிக்குது
ஏ.... உசுரு
தூரத்தில வர்றது
ஏந் தொரதேனு தெரிஞ்சதும்
உள்ளுக்குள்ள உருவாச்சு
ஒரு கோடி மின்சாரம்
தெகச்சு நா நிற்கையில
தேன்மொழின்னு கூப்பிடுறீக
பொசுக்குன்னு கண்ணீரு
பொத்துக்கிட்டு ஊத்துது.
இளமைய வித்து
என்னென்னவோ
வாங்கி வந்திருக்கிற
நெலமைய நெனச்சு
நா அழுகிறது தெரியாம
அதுதே வந்துட்டேன்னு
ஆறுதலா சொல்றீக
காரும் வாங்கியாச்சு
ஜாப்பிங் காம்பிளக்சும் வாங்கியாச்சு
நூறு பவுனு பீரோவுல
நிம்மதியா தூங்குது
இளமைய தொலைச்சபின்னாடி
இதெல்லாம் என்னத்துக்கு
*தூர தேசம் போனவரே*
*எனக்கு*
*தூரம் நின்னு நூறு* *நாளாச்சு*
*மாமா*
*நீ கட தொறக்க போறம்கிற*
*ஏங் கருப்பை*
*செத்த கதைய*
*நா*
*யாருகிட்ட சொல்லியழ*
*என்னாட்டம் பொண்டுகளா*
*இனியாச்சும்*
*பொல்லாத சீமைக்கு*
*போறமுன்னு* *சொல்லுறவனுக்கு*
*பொண்டாட்டியா* *வந்துறாதீக*
No comments:
Post a Comment