Saturday, 17 September 2016

என்னை மாற்றிய புத்தகங்கள்-சாருநிவேதிதா

என்னை மாற்றிய புத்தகங்கள் - பெரியாரை பற்றி எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களின் உரை..

(14.01.2009 மாலை 6.00 மணிக்கு சென்னை சங்கமத்தில் சாரு ஆற்றிய உரை)
என்னை மாற்றிய புத்தகங்கள் என்பதை விட என்னை மாற்றிய சிந்தனையாளர் என்று இந்த உரையின் தலைப்பைச் சற்றே மாற்றி வைத்துக் கொள்கிறேன். ஏனென்றால், எனக்குப் பிடித்த புத்தகங்கள் என்று இருந்திருந்தால் சில பல புத்தகங்களின் பெயர்களைச் சொல்லியிருக்கலாம். ஆனால், கொடுக்கப் பட்டுள்ள தலைப்பு என்னை மாற்றிய புத்தகங்கள். ‘ மாற்றிய ’ என்றால் அதற்கு முந்தைய நான் வேறு; அதற்குப் பிந்திய நான் வேறு என்ற அளவுக்கு என்னுடைய ஆளுமையிலும், அறிதல் முறையிலும், மதிப்பீடுகளிலும் முற்றிலுமாக மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். என் வாழ்வில் அப்படிப் பட்ட மாற்றத்தை ஏற்படுத்திய ஒரே சிந்தனையாளர் என பெரியார் ஈ.வே.ராவை மட்டுமே குறிப்பிடுவேன்.

இளம் பிராயத்திலேயே என்னுடைய அறிதல் முறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியவர் பெரியார்.

பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப் படும் அத்தனை விஷயங்களையும் வேரோடு பிடுங்கிப் போட்டவர் அவர். பள்ளிக்கூடத்தில் காந்தியை மகாத்மா என்று சொல்லிக் கொடுத்தார்கள். பெரியாரோ அவரை கபட சந்நியாசி என்றும், துராத்மா என்றும் சொன்னார். வெறும் வசையாக அல்ல; காரணத்தையும் சொன்னார். அந்தக் காரணம், தீண்டப்படாதவர்களுக்கு தனிக் கோவில், தனிப் பள்ளி, தனிக் கிணறுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று சொன்னவர் காந்தி என்பதை நமக்கு சுட்டிக் காட்டினார்.

பள்ளிகளில் பள்ளி தொடங்கியதும் ‘இறை வணக்கம் ’ என்றார்கள்; பெரியாரோ கடவுளே இல்லை என்றார். பள்ளிகளில் சாதி இல்லை என்று பாட்டு சொல்லிக் கொடுத்து பொய் சொன்னார்கள்; பெரியார் ‘சமூகத்தில் சாதிகள் இருக்கின்றன; மேல் சாதிக்காரனோடு சண்டை போட்டு நம்முடைய உரிமையையும், சுய மரியாதையையும் மீட்க வேண்டும் ’ என்றார். மனு ஸ்மிருதியில் என்னவெல்லாம் எழுதியிருக்கின்றன என்று ஓயாது பேசினார்.

பள்ளிக்கூடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து என்றார்கள்; பெரியாரோ தமிழ் ஒரு காட்டு மிராண்டி மொழி என்றார். பெரியாரின் பேச்சுக்களில் மிகவும் தவறாகப்
புரிந்து கொள்ளப்பட்ட வாக்கியம் இது. அவர் அப்படிச் சொன்னதன் மூலம் தமிழைப் பழிக்கவில்லை. தமிழில் அறிவார்த்த சிந்தனைகள் இல்லை என்றார். இருப்பதெல்லாம் வெறும் பக்தியும் கவிதையும்தானே தவிர, எல்லா மனிதர்களும் சம உரிமையுடன் வாழ்வதற்கான ஜனநாயகம் பற்றிய எந்தச் சிந்தனையும் தமிழ் மொழியில் இல்லை என்றார். இந்த மொழி சாதியையும், அதன் மூலமாக சாதீய ஒடுக்குமுறையையும் ஆதரிக்கிறது என்றார். அதனால்தான் அவ்வளவு கடுமையாக ‘காட்டுமிராண்டி மொழி ’ என்று சொன்னார். ஏனென்றால், இந்தத் தமிழ்ச் சமூகம் பல நூற்றாண்டுகளாக சாதி அடிமைத்தனத்தை வளர்த்து வந்திருக்கிறது. அது பற்றிய எந்தப் பிரக்ஞையும் இன்றி மந்த நிலையில் கிடந்த இந்தச் சமூகத்தை இப்படித் தடியால் அடித்து எழுப்பினால்தான் இதில் ஒரு சிறு அசைவாவது ஏற்படும் என்று நம்பினார் பெரியார்.

என்னுடைய எழுத்தில் பரிச்சயமுள்ளவர்களுக்குத் தெரியும்; என் எழுத்து எந்தவிதமான சாதி அடையாளத்திற்குள்ளும் அகப்படாது என. சாதி மட்டும் அல்லாமல், மதம், இனம், மொழி, தேசம் என்ற எல்லாவிதமான அடையாளங்களையும் மறுக்க வேண்டும் என்பதே என் எழுத்தின் ஒட்டு மொத்த செய்தி. சாதி, மதம், இனம், மொழி, தேசம் போன்றவற்றின் மீதான அபிமானமே இந்த உலகம் மனித வாழ்க்கைக்கு சற்றும் லாயக்கற்றதாக இருப்பதற்கு முக்கியக் காரணம் எனலாம். மத அபிமானம், தேச அபிமானம் ஆகியவற்றின் காரணமாகவே உலகில் நூற்றுக் கணக்கான போர்கள் காலம் காலமாகத் தொடர்ந்து வருகின்றன என்பதையும், அதன் காரணமாகவே லட்சக் கணக்கான, கோடிக் கணக்கான மனிதர்கள் கொல்லப் பட்டு வருகிறார்கள் என்பதையும் நாம் அறிவோம். ஆக, இத்தகைய அநீதிக்கு எதிராக எழுத்தை ஒரு ஆயுதமாக ஏந்தி முன்வருகின்ற ஒரு எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும்?

எழுத்தாளன் என்பவனை விடுங்கள்; ஒரு சீரிய மனிதன் என்பதற்கான அடையாளமே இந்தக் குறுகிய அபிமானங்களையெல்லாம் விட்டு ஒழிப்பதுதான் என்று என்னுடைய சிறு பிராயத்திலேயே எனக்குக் கற்பித்த ஆசான் பெரியார் ஈ.வே.ரா. ‘ குலாபிமானம், பாஷாபிமானம், தேசாபிமானம் என்ற மூன்றையும் விட்டு ஒழியுங்கள் ’ என்றார் பெரியார்.

” தேசியம் என்பது ஒரு போலி உணர்ச்சி. ஏனென்றால் , தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொதுமக்கள் – அதாவது , உலகில் எங்கும் பெரும்பான்மையான மக்கள் பாமரராயும் , தொழில் இன்றியும் , தொழில் செய்தாலும் ஜீவனத்திற்க்கும் வாழ்விற்க்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதைத் தடைப்படுத்தவும் , ஆங்காங்குள்ள செல்வந்தர்களாலும் அதிகாரப் பிரியர்களாலும் சோம்பேறி வாழக்கைச் சுபாவிகளாலும் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியாகும். தேசியம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது.
தோழர்களே! உங்களுக்கு ஒன்று கூறுகிறேன். சரீரத்தினால் நெற்றி வியர்வை சொட்ட கஷ்டப்படும் மக்களைப் பாருங்கள். அவர்க ள் கல்வி யும் , மனிதத்தன்மை யும், மான மு ம் இல்லாமல் செத்திருப்பதை ப் பாருங்கள். வேலையில்லாமல் திண்டாடும் மக்களையும் அவர்களது பெண்டு பிள்ளைகளின் பட்டினியையும் , கொடுமையையும் பாருங்கள். வீடுவாசல் இல்லாமல் மூட்டை முடிச்சுகளைத் தலையில் சுமந்து கொண்டு கஞ்சிக்கு ஊர் ஊராய்த் திரியும் கூலி மக்களைப் பாருங்கள். இவ்வித மக்கள் உலகில் எங்கெங்கு யார் யாரால் கஷ்டப்படுத்தப் படுகிறார்கள் என்பதையும் பாருங்கள் உயர்ந்தவன் - தாழ்ந்தவன் , பார்ப்பான் - பறையன் , முதலாளி - தொழிலாளி , குரு - சிஸ்யன் , மகாத்மா - சாதாரண ஆத்மா , அரசன் - குடிகள் , அதிகாரி - பிரஜை என்பவை முதலாகிய பாகுபாடுகளை இடித்துத் தள்ளித் தரைமட்டமாக்குங்கள். அதன்மீது தேசம் , மதம் , ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாததாகிய மனித சமூக த்தை, சமஉரிமை - சமநிலை என்கிற கட்டடத்தைக் கட்டுங்கள். இதைச் செய்ய நீங்கள் உலகத்திலுள்ள கஷ்டப்படும் எல்லா மக்களுடனும் ஜாதி , மதம் , தேசம் என்கிற வித்தியாசம் இல்லாமல் பிரிவினைக்கு ஆளாகாமல் ஒன்று சேருங்கள். ”

(1932 அக்டோ பர் இலங்கையில் தந்தை பெரியார் ஆற்றிய உரை.)

இந்தியா போன்ற ஒரு தேசத்தில் வாழும் ஒரு மனிதன் எதிர்கொள்ளும் அடுத்த பிரச்சினை, பெண்ணடிமைத் தனம். சாதியைப் போலவே நமது ரத்தத்தில் பெண்ணடிமைத் தனத்தையும் ஊட்டி வளர்ப்பது குடும்பம் என்ற அமைப்புதான்.

” உலகத்திற்குப் பயன்படும்படியான பாதி மனித சக்தியை , பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் ‘ கலியாணம் ' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘ கலியாணம் ' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான் , கணவன் - மனைவி என்ற உறவும் , பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. பெண்களை அடிமையாக்கவே ‘ கலியாணம் ' என்ற முறை ஏற்படுத்தப்பட்டது.

இந்த நாட்டிலே ஒரு பெண்ணானவள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்றால் , அவள் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை உணர்வோடு இருக்கிறாளோ , அவ்வளவுக்கு அவ்வளவு அவள் உயர்ந்த பதிவிரதையாகப் பாவிக்கப்படுகிறாள். இதைத்தான் , நமது இதிகாசங்களும் புராணங்களும் சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.
வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய மனிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதியிருக்கிறானே தவிர , ஆண்களோடு சரிசமானமான உரிமையுடையவர்களாகக் கூறவில்லையே. ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது ?
பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா ? சிங்காரிப்பது - ஜோடித்துக் கொள்வது - சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா ? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா ?

நான் 1932 இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை , ‘ Proposed Husband and Wife ’ என்கிறார்கள். ‘ அப்படி என்றால் என்ன அர்த்தம் ?’ என்று கேட்டேன். ‘ நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம் ’ என்றார்கள். ‘ எவ்வளவு காலமாக ? ' என்று கேட்டேன். ‘ எட்டு மாதமாக ' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள் ? அந்த நாடு முன்னேறுமா ? ‘ பதிவிரதம் ' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா ? “
(' விடுதலை ' 28.6.1973 )

சாதி, மதம், மொழி ஆகியவற்றின் மீதான வெறியை ஒரு மனிதனிடம் உண்டாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது குடும்பம் என்ற அமைப்புதான். முக்கியமாக, திருமணத்தின் போதுதான் சாதி என்பது முன்னிலைப் படுத்தப் படுகிறது. என்னுடைய வாழ்க்கையிலிருந்து ஒரு உதாரணம் கொடுக்க விரும்புகிறேன். என் தந்தை ஆந்திராவைச் சேர்ந்தவர். என் தாயின் குடும்பம் இரண்டாம் உலகப் போரின் போது பர்மாவிலிருந்து தமிழகம் வந்து குடியேறியவர்கள். அம்மாவின் தந்தை பர்மாவில் ஒரு பர்மியப் பெண்ணுக்குப் பிறந்தவர். இப்படி ஒரு கலவையான குடும்பத்துப் பெண்ணைக் காதலித்து சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவராக இருந்தாலும், என்னுடைய திருமணம் என்று வந்த போது நான் தன்னுடைய மூதாதையரின் சாதியிலேயே பெண் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தியவர் என் தாய். ஆனால் நான் அவர் பேச்சைக் கேட்கவில்லை.

திருமணத்தைப் போலவே – அல்லது, திருமணத்தை விடவும் – சாதி மத அனுஷ்டானங்கள் தீவிரமான முறையில் பின்பற்றப் படுவது மரணத்தின் போது. அந்த இடத்தில் நாம் குடும்பத்திற்கு எதிராகப் பேசவும் முடியாது. உறவு, பந்தம், பாசம் போன்ற கடுமையான ஆயுதங்களால் நாம் தாக்கப்படக் கூடிய அபாயம் இருக்கிறது. உதாரணமாக, என்னுடைய தாயார் மரணமடைந்த போது நானே வீட்டின் மூத்த மகன் என்பதால் சடலத்துக்குக் கொள்ளி போடுதல் முதலான சடங்குகளைச் செய்வதற்காக அழைக்கப் பட்டேன். ஆனால், சுய மரியாதைத் திருமணம் செய்து கொண்ட என்னுடைய தந்தை மரணச் சடங்கின் போது வைதீக முறையைக் கடைப் பிடித்ததாலும், பிராமணர்களின் உணவுக் கலாச்சாரத்தை நான் சில காலத்துக்குக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டதாலும் என் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையை நான் செய்யவில்லை. நான் எந்த சாதிக்கும் எதிர்ப்பாளன் அல்ல. ஆனால், தாய்க்குத் தனயன் செய்ய வேண்டிய இறுதிக் கடமை என்ற பெயரில் வேறோர் கலாச்சாரம் என் வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தத் தலைப்பட்டதால் நான் அந்தச் சுடுகாட்டில் அதை மறுதலித்தேன்.

காரணம், என்னுடைய ஆசான் பெரியார். அவர் தன்னுடைய தாயாரைப் பற்றிச் சொல்லுகிறார்: “ இவ்வளவு பிற்போக்குத்தனமான கருத்துக்களையுடைய ஒரு பெண்மணி இவ்வளவு காலம் உயிரோடு இருந்திருக்க எவ்வித நியாயமும் இல்லை. ”
அதனால்தான் குறிப்பிட்டேன், சமூகம் எவற்றையெல்லாம் உன்னதமானவை என்று போற்றியதோ அந்த மதிப்பீடுகளையெல்லாம் கேள்விக்குட்படுத்தினார் பெரியார். யாராக இருந்தாலும் அவர்கள் முன்வைக்கும் மதிப்பீடுகள் ஒட்டு மொத்த மனித இனத்துக்கு எதிராக இருந்தால் அவர்களை மறுதலியுங்கள் என்று தன் வாழ்நாள் பூராவும் நமக்குக் கற்பித்தார்.

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்: நம்மில் யாரேனும் இந்த அளவுக்கு கொள்கைப் பிடிப்பு உள்ளவராக இருக்கிறோமா? அதனால்தான் என்னுடைய ஆசான் பெரியார் என்றேன்.

பெரியாரின் வாழ்விலிருந்து இன்னோர் உதாரணம்: 1933 - இல் அவரது மனைவி நாகம்மை மறைந்த அடுத்த நாளே தடையை மீறி , ஒரு கிறிஸ்துவ கலப்புத் திருமணத்தை நடத்தி வைத்து பெரியார் ஒரு மாதகாலம் சிறை புகுந்தா ர். தன் மனைவியின் மறைவு குறித்து அவர் சொல்வதைப் பாருங்கள்:
” 2, 3 வருடங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் சங்கராச்சாரிகள் போல (அவ்வளவு ஆடம்பரத்துக்காகவோ, பண வசூலுக்காகவோ அல்ல) சஞ்சாரத்திலேயே , சுற்றுப் பிரயாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும், நமக்கென்று ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ என்பது கூடாதென்றும் கருதி இருந்தது உண்டு. ஆனால் , அதற்கு வேறு எவ்விதத் தடையும் இருந்திருக்கவில்லையென்றாலும் , நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தார். இப்போது அந்தத் தடை இல்லாமல் போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால் , நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக!“
' குடிஅரசு ' 14.5.1933

இந்த அளவுக்கு இந்த உலகில் யாராவது தனது மனைவியைப் பற்றியும், தன் தாயாரைப் பற்றியும் பேச முடியுமா என்று எனக்குச் சொல்லுங்கள். ‘ அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் ’ என்று எனக்குப் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுத்தார்கள். பள்ளிக்கூடம் மட்டுமல்லாமல், திருக்குறளும், இன்ன பிற நீதி நூல்களும், சமூக நிறுவனங்களும் இதையே எனக்குக் கற்பித்தன. ஆனால், பெரியார் நிறுவனமயமான புனிதங்கள் அனைத்தையும் எதிர்த்தார்.

ஒரு சம்பவம் எனக்கு ஞாபகம் வருகிறது. முப்பதுகளில் பெரியார் ஐரோப்பாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது பெர்லின் நகரில் இருந்த நிர்வாணிகள் சங்கத்துக்குச் சென்றார். தேகத்தில் எந்த ஆடையும் இல்லாமல் பிறந்த மேனியர்களாய் வாழ்ந்து கொண்டிருந்த அந்தச் சங்க உறுப்பினர்களுடன் பெரியாரும் ஆடைகளைக் களைந்து விட்டு நிர்வாணமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதிலிருந்து நான் புரிந்து கொள்ளும் விஷயம் என்னவென்றால், நமக்கு மிகவும் வித்தியாசமான வாழ்க்கை முறையைக் கொண்டவர்களையும் நாம் அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான். இன்றைய காலகட்டத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களை அப்படிக் குறிப்பிடலாம்..

சுருக்கமாகச் சொன்னால், சமூகம் நம் மூளையில் திணிக்கின்ற அனைத்து விஷயங்களைப் பற்றியும் வேறோர் கோணத்திலிருந்து பார்க்கும் புதிய விதமான சிந்தனைப் போக்கை நமக்குக் கற்பித்தவர் பெரியார்.

பெரியாருக்குப் பிறகே நான் ஃப்ரெஞ்ச் சிந்தனாவாதிகளான ஃபூக்கோ, லக்கான் போன்றவர்களைக் கண்டடைந்தேன். அவர்கள் இவ்வகைச் சிந்தனை முறையை கட்டுடைத்தல் (de-construction) என்கிறார்கள். பெரியாரின் வாழ்நாள் முழுவதுமான பேச்சு, எழுத்து இரண்டையும் ஃபூக்கோவின் மொழியில் decanozing discourses என்று சொல்லலாம். அதிகாரத்துக்கு எதிரான சொல்லாடல் என்று இதை மொழி பெயர்க்கலாம். எல்லாவிதமான அதிகாரத்தையும் எதிர்த்தல் என்பதே பெரியாரின் செய்தியாக இருந்தது எனலாம்.
இந்த உலகத்துக்கு ஜனநாயகத் தத்துவத்தின் அடிப்படைகளைக் கற்பித்தவர்கள் ப்ஃரெஞ்ச் தத்துவவாதிகளான ரூஸோவும், வால்டேரும். அவர்களுக்கு நிகரானவர் பெரியார் ஈ.வே.ரா.
அவர்தான் என் எழுத்து மற்றும் வாழ்வின் சிந்தனாமுறையை மாற்றியவர்.

இதைச் சொல்லிக் கொள்ளும் இந்த நேரத்தில், இந்த ‘ சென்னை சங்கமம் ’ நிகழ்ச்சியின் வாயிலாக கனிமொழிக்கு ஒரு வேண்டுகோளையும் முன்வைக்கிறேன். அது என்னவென்றால், பெரியாரின் எழுத்து, பேச்சு, மற்றும் நூல்கள் அனைத்தும் தேசவுடைமை ஆக்கப்பட வேண்டும். தமிழில் யார் யாருடைய நூல்களோ தேசவுடைமை ஆக்கப்பட்டு விட்டன. இப்போது நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன் ’ எல்லா அரங்குகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் பெரியாரின் நூல்களோ இன்றளவும் யாருக்குமே கிடைக்காத, யாருமே படிக்காத விஷயமாக மறக்கடிக்கப் பட்டு விட்டது.

ஒரு பொழுது போக்கு நூலுக்குக் கிடைக்கும் மரியாதை கூட தமிழகத்தின் மிகப் பெரிய சிந்தனையாளரான, தமிழர்களின் வாழ்வையே மாற்றியமைத்த பெரியாரின் நூல்களுக்குக் கிடைக்கவில்லை என்பது தமிழ்ச் சமூகத்தின் அவல நிலையைக் காட்டுகிறது. ஃப்ரான்ஸில் ரூஸோவையும், வால்டேரையும் தெரியாத, படிக்காத ஒருவரைப் பார்ப்பது அரிது. ஆனால் அந்த இருவருக்கும் நிகரான பெரியார் யார் என்று தெரியாமலேயே இரண்டு தலைமுறைத் தமிழர்கள் உருவாகி விட்டனர். இன்றைய இளைய தலைமுறையினருக்கு ரூஸோவையும், வால்டேரையும் தெரியும்; ஆனால் பெரியாரைத் தெரியாது. இதை மாற்றியமைக்க கனிமொழிக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. பெரியாரின் நூல்கள் அனைத்தும் தேசவுடைமை ஆக்கப்பட வேண்டும். இதற்கு கனிமொழி ஆவன செய்ய வேண்டும். இது இந்த ஆட்சியில் மட்டும்தான் முடியும். அப்படி நடந்தால் தமிழ்ச் சமூகத்தில் உண்மையாகவே புரட்சிகரமான மாற்றங்களை அது ஏற்படுத்தும்.
***

No comments:

Post a Comment