தவித்த வாயால்
கூப்பிட்டேன்
தூரத்தில்
உயிர்வற்றிக் கிடந்தாள்
காவேரி
தாய்ப்பால் உறைந்த
மணற்குன்று முலைகளில்
மூக்குரசி
புழுதியில்
நிறம் மாறிப் பறந்தன
கொக்குகள்
இடையில் அவளை
இறுக்கிப் பிடித்த
நகக் கீறல்களிலிருந்து
கசிந்தது குருதி
மீன்களால் நெய்யப்பட்ட
அவளாடை
தொடை தெரிய
கிழிக்கப்பட்டிருந்தது
காற்றைத் துழாவி
தெறித்துக் கிடந்தன
ஓசை கழன்ற
அவள் காற்சிலம்புகள்
வெப்பம் கொப்பளிக்கும்
அவள் உடலிலிருந்து
எழும் ஆவி
கனத்துக் கனத்துச்
சூல் கொண்டு அலைகிறது
அணைகளை உடைக்கும்
ஒரு பேய்மழை மேகமாய்
'புறாக்கள் மறைந்த இரவு' நூலிலிருந்து (2005)
- பழநிபாரதி
No comments:
Post a Comment