நட்சத்திரக் குறியிட்ட தற்கொலைக் கவிதை
தற்கொலைக்கான உத்தேசம் இல்லையெனினும்
கவிதை பிடித்திருந்ததால்
அதன் பக்கத்தில் நட்சத்திரக் குறியிட்டு
பத்திரிக்கையை மூடி வைத்தேன்
குளித்து விட்டு வந்தவுடன்
அதை எடுத்து
அந்தப் பக்கத்தில் இருந்த
இன்னும் இரண்டு கவிதைகளுக்கும் நட்சத்திரக் குறியிட்டேன்
அப்படியும் திருப்தி வராமல்
பக்கம் முழுவதும் ஆங்காங்கு
நட்சத்திரம் வரைந்து
ஸ்டேப்ளர் பின்னுக்கு மேல்
ஒரு பிறை நிலவை
வரைந்தேன்
கீழே இரு மலைத்தொடர் இருக்க வேண்டும்
என்று தோன்றியது
அதை வரைந்து
அப்புறம் கூட்டம் கூட்டமாக
மரங்களை வரைந்து
நடுவில் ஒரு நதியையும் ஓடவிட்டேன்
நிம்மதியாக வெளியே போனேன்.
இரவு மறுபடியும் அதைப் பிரித்தேன்
மலைத்தொடர் மேலும்
மரங்களின் நடுவிலும்
குட்டி யானைகள்
நடந்து கொண்டிருந்தன
அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தபோது
வரையக் கற்றுக்கொண்ட யானைகள்
– முகுந்த் நாகராஜன்
No comments:
Post a Comment