அய்யப்ப மாதவனின் ‘புத்தனின் விரல் பற்றிய நகரம் தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகள்:
1.கருங்கல் பழக்கங்கள்
கருங்கல்லில் ஒளிந்திருக்கும்
கடவுளை தரிசிக்க
மணிக்கணக்கில் தவம்
மனம் பதற நிமிட நேர தரிசனம்
கைகூப்பி வணங்கினால்
கடவுளின் கூலியாள் விரட்டுகிறான்
அருள் வாங்கிப்போகிறது முகம்.
சாம்பல் பூக்கும் நெற்றியுடன்
கருங்கல் பழக்கங்கள்.
2.மிக அருகில் குழந்தைகள்
வீட்டின் அருகிலும் போகுமிடங்களிலும்
கண்களுக்குத் தட்டுப்படுகிறார்கள்
குழந்தைகள்
அப்பாவிடமும் அம்மாவிடமும்
ஏதாவது கேள்விகளைக் கேட்டுக்கொண்டும்
சிரித்துக்கொண்டும்
அழுதுகொண்டுமிருக்கிறார்கள்
சின்னச் சின்ன உருவங்களாய்
பேசும் பொம்மைகளாய் உலவுகிறார்கள்
விளையாட்டுப் பொருட்களிடையே
விளையாடப்படுகிறார்கள்
விரிந்த விரல்களிடையே
ஓர் உன்னத உலகம்
சுழன்றுகொண்டிருக்கிறது
சின்னப்பையன்
இறக்கை முளைத்த குதிரையில்
வான் வெளியில் பறக்கிறான்
நட்சத்திரங்களைப் பொறுக்கிக்கொள்கிறான்
அவனிடம்
இறக்கைகள் இருக்கின்றன
நினைத்த கணமெல்லாம்
செல்ல முடியா
இடங்களுக்குச் சென்றுவருகின்றான்
தட்டான்களோடும் விட்டில்களோடும்
பட்டாம்பூச்சிகளிடமும்
சிநேகம் வைத்திருக்கிறான்
உரையாற்றுகிறான்
எனக்கு வயதாகிக்கொண்டிருந்தாலும்
வேறு எங்கு எங்கோ
குழந்தைகள் பிறந்துகொண்டே
இருக்கிறார்கள்
என் கண் முன்னால்
என் கைகளை விட்டு சற்று தூரத்தில்
விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment