ரோஸ் - (ஆயிஷா.ரா.நடராசன்) ஒரு பார்வை:
அப்பா - அம்மா இருவரும் வேலைக்குச் செல்கிற குடும்பத்தின் ஒரே பிள்ளை,சிறுவன் தேவா. இரண்டாம் வகுப்பு படிக்கிறான். அவனது வீட்டுத் தோட்டத்திலுள்ள ரோஜாச்செடியில் பூ பூத்திருக்கிறது. தூங்கி எழுந்ததும் ரோஜாப்பூவைப் பார்க்கும் ஆர்வத்திலிருக்கும் தேவா... அலுவலக அவசரத்தில் பரபரக்கும் அவனது அம்மா- அப்பா. இவர்களிடையேயான எதார்த்த உரையாடலோடு தொடங்குகிறது கதை.
அப்பா-அம்மாவின் அலுவல் அவசரங்களால் ரோஜாப்பூவைப் பார்க்க அனுமதிக்கப்படாத சிறுவன் தேவாவின் எண்ண ஓட்டங்களை ஒரு கோர்வையாக்கி அன்றைய நாள் முழுதும் வகுப்பறை நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திக் காட்டியிருக்கும் ஆசிரியருக்கு ஒரு சபாஷ்.
"டேய் எம்.சக்தி" என்று தன் நண்பனை, அவனது இனீஷியலோடு விளிக்கும் தொனியில் நம்மையும் நம் பழைய வகுப்பறை நினைவுகளுக்குள் கைபிடித்து அழைத்துச் சென்றுவிடுகிறார், ஆயிஷா.
தன் வீட்டில் ரோஜா பூத்திருப்பதாக ஆங்கில ஆசிரியரிடம் தேவா கூறியபோது, "பூவைப் பார்ப்பது முக்கியமில்லை. அதற்குரிய spelling தெரிகிறதா என்பதுதான் முக்கியம்" எனும் ஆசிரியரின் பதிலில்,நமது கல்விமுறையின் முரண்கள் நம் கண்முன் வந்து போகின்றன.
இடைவேளையின்போது "வரிசையில போ டா; இல்லாட்டி பி.டி மிஸ் அடிப்பாங்க" எனும் நண்பனிடன் "எனக்கு அர்ஜென்ட்டா பாத்ரூம் வருதுடா, எப்படி வரிசையில போறது?" என்கிற குரலின் வலியை யோசிக்கும்போது, நமது வகுப்பறை கட்டுப்பாடுகளின் கட்டுகளை,சிறிதளவேனும் தளர்க்கவேண்டுமென்று தோன்றுகிறது.
அம்மா, அப்பா தொடங்கி ஆங்கிலம், தமிழ் ஆசிரியர்களைக் கடந்து வாட்ச்மேன் தாத்தா வரை யாரேனும் ஒருவராவது தனது ரோஜாப்பூவைப் பற்றி தன்னைப் பேசவிட மாட்டார்களா என்கிற ஏக்கம் சிறுவன் தேவாவோடு கூட, நமக்கும் தொற்றிக்கொள்கிறது.
அத்தனை அலுவல்களும் முடிந்து,இரவு படுக்கைக்காக வீடு திரும்பிய சிறுவன் தேவா, சன்னலின் வழியே வாடிய மலரைப் பார்த்துத், தானும் வாடுகிறான். ஏக்கத்தின் மிகுதியால் பிள்ளைக்குக் காய்ச்சல் ஏற்படுகிறது.
"காசு கொடுத்து வேற ரோஜா வாங்கிக்கலாம்" என்கிற அவனது அம்மாவின் ஆறுதல் மொழிக்குள் அடங்காமல் , மீண்டும் தன் தோட்டத்தில் ஒரு ரோஜா பூக்குமா என்ற சிறுவனின் கேள்வியோடு முடிகிறது இப்புத்தகம்.
இன்றைய கல்வி சூழலில் , காகிதங்களைக் கடந்து பிள்ளைகளை சிறிதளவேனும் அவர்களுக்குப் பிடித்ததைச் செய்ய வாய்ப்பளிக்க வேண்டுமென்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார், ஆசிரியர் ஆயிஷா நடராசன்.
இல்லையெனில்,உனக்கு என்ன பிடிக்கும் என்ற கேள்விக்கு நாளைய பிள்ளைகளிடம் பதிலே இல்லாமல் போய்விடும்.
எனவே,
#குழந்தைமையை_கொண்டாடுவோம்
ஒவ்வொரு பெற்றோரும் நிச்சயமாக வாசிக்க வேண்டிய புத்தகம். பிள்ளைகளைப் பேச விடுங்கள்.
நூலின் பெயர் #ரோஸ்
ஆசிரியர் - #ஆயிஷா_ரா_நடராசன்
விலை - ரூ 40/-
வெளியீடு- #பாரதி_புத்தகாலயம்
பக்கங்கள்- 64
No comments:
Post a Comment