Friday, 2 September 2016

கவிதை

����������������������

அதிகாரப் பூச்சிகள்
----------------------------------2.9.16------------   

தப்பித்துப்போய்விடாமல்
இடுக்கியால்
பத்திரமாய்ப் பிடித்துக்கொண்டு
தந்திரமாய்க் கொட்டும்
கருந்தேள்

சக பணியாளரிடையே
ஒருதலையாய் நடந்து
அப்பாவிகளின் முதுகில்
விஷம் கக்கும்
இருதலை நாகம்

ஆள்நடமாட்டம்
இல்லாதபோது
தலையை வெளியேநீட்டிக்
குதியாட்டம் போடும்
ஆமை

பொய்மைக் கூடுகட்டி
அசந்துவிடும் நேரத்தில்
உச்சந் தலையில்
கொட்டிவிட்டுப் பறக்கும்
கதண்டு

ஏமாந்து கிடப்பவரின்
தலைமேல் அமர்ந்து
இல்லாத பேனை
எடுப்பதாய் நடிக்கும்
கருங்குரங்கு

ஓய்ந்து சாய்ந்து
ஒருபொழுதும்
நிம்மதியாய் இருக்கவிடாமல்
கடித்துக்கொண்டிருக்கும்
மூட்டைப்பூச்சி

கண்ணிற்குப் புலப்படா
சூழ்ச்சி வலைப்பின்னி
உழைப்பவரைச்
சிக்கவைக்கும்
சிலந்தி

செல்லும் இடங்களில்
அபவாதப்
புழுக்கைகள் இட்டு
நாற்றமெடுக்கச் செய்யும்
கரப்பான்

காலநேரம் பாராமல்
வேலைபல கொடுத்துவிட்டு
உடனே முடிக்கச்சொல்லி
உள்ளிருந்தே குடைகின்ற
பிள்ளைப்பூச்சி

சிறப்பாகப் பணிபுரிந்தும்
பாராட்ட மனமின்றி
குறைகளைத் தேடித்தேடி
உளந்தடிக்கச் செய்கின்ற
பூரான்

உழைப்பெனும்
இரத்தத்தை
உரிஞ்சிக் குடித்து
சொகுசாய்த் தெரியும்
கொசு

கணப்பொழுதும்
மகிழவிடாமல்
கேள்வி ரோமங்களில்
அரிப்பெடுக்கச் செய்யும்
கம்பளிப்பூச்சி

காலடியில்
வளைதோண்டி
பிறர்ஆதாயங்களைப்
பறித்துப் பதுக்கிவைக்கும்
பெருச்சாளி

பொய்நம்பிக்கை விதைத்து
மண்கோட்டை எழுப்பி
காசைக் கபளீகரம்செய்து
அரித்து ஏப்பம்விடும்
கரையான்.

        கவிஞர் ஔவை நிர்மலா

          அதிகாரப் பூச்சிகள் ப.7

----------------------------------------------------------
இறகுகள் எழுதும் வானம்: 173
-----------------------------------------------------

No comments:

Post a Comment