“ஒருவர் கவிஞரா ?” என்பதைக் கண்டுபிடிக்க ஓர் எளிய வழி இருக்கிறது. அக்கவிஞர் எழுதியதில் ‘மகத்தான பொன்வரி’ எது என்று ஒன்றையேனும் கண்டுபிடியுங்கள். அது கவித்துவ அழகின் உச்சமாகவும் ’அடேங்கப்பா’ என்று வியந்து மயங்கும்படியாகவும் இதுவரை யாருமே சொல்லாததாகவும் அவ்வரியின் பொருளுணர்ந்தபோதே சிலிர்க்கும்படியாகவும் இருக்க வேண்டும்.
எழுதுகின்ற எல்லா வரிகளும் அவ்வாறே அமையவேண்டும் என்பதில்லை. எழுத்தின் வழியே அத்தகைய வரிகள் தொடர்ந்து தோன்றிக்கொண்டே இருக்க வேண்டும். அதைச் செய்பவர்தான் கவிஞர். மகாகவிகளிடம் இத்தகைய ஆற்றல்மிக்க அரும்வரிகள் தொடர்ந்து பொங்கி வழியும்.
“செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே” என்ற ஒற்றை வரி அந்தத் தொல்கவிஞனை உணர்த்துவது. “ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும்” என்னும்போதே ஔவையின் கவியாற்றல் வெளிப்படுகிறது. “பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை” என்கையில் பாரதியார் மகாகவி ஆகிவிடுகிறார். பாரதியின் கவிதைகள் எல்லாவற்றிலும் இத்தகைய பேராற்றலை உணர முடியும்.
“பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை” என்று திருவள்ளுவர் வினவுகையில் அவருடைய கவிதை வல்லமை தெரிகிறது. “சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது” என்பதே பிரமிளின் கவித்துவத்தை உணரப் போதுமானது.
“சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை...” என்றெழுதிய பின்பு கண்ணதாசன் கவிஞனா என்ற கேள்வி எழுமா ? ”அமைதி என்பது எழுந்து சென்ற பறவையினால் அசையும் கிளையோ...” என்னும் ஒற்றை வரி தேவதேவனுக்குப் போதுமானதா, இல்லையா ?
இவர்கள் கவிஞர்கள். பொன்னெழுத்தில் பொறிக்கத்தக்க மாண்புடைய சொற்றொடர்களை ஆக்கியவர்கள். அவற்றுக்காகவே நினைவுகொள்ளப்படுவார்கள்.
ஒருவரைக் கவிஞர் என்று கொண்டாடுவீர்கள் என்றால் அத்தகைய பொருண்மை வாய்ந்த பத்து வாக்கியங்கள் அவரிடம் தேறுமா என்று கண்டுபிடியுங்கள்.
உங்களையே நீங்கள் கவிஞர் என்று நம்பினால் நீங்கள் எழுதியவற்றில் அத்தகைய ஆற்றலுடைய பத்து வரிகள் உள்ளனவா என்று தேடுங்கள். இல்லையென்றால் முதல் வேலையாக அவற்றை எழுத முயலுங்கள். வெறுமனே செய்தித்தாள் மொழியில் கடிதத்தாள் கருத்துகளையும் உயிரற்ற வெற்று வாக்கியங்களையும் எழுதியவர்கள் ஒருபோதும் கவிஞர்களாக மாட்டார்கள். :)
கவிஞர் மகுடேசுவரன்
No comments:
Post a Comment