#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-10
Book-21
Pages-247
ஆரோக்கியம் ஒரு பிளேட்
டாக்டர் அருண்குமார்
நீயா நானாவில் ஒரு முறை கிரீன் டீ குடிப்பது மிகவும் மேதாவித்தனம் என்று பேசிக் கொண்டிருப்பவர் மத்தியில்...ஒரு இளம் மருத்துவர் தன்னுடைய வாதங்களை மெல்ல மெல்ல எடுத்து வைத்து அனைவரின் அறியாமையும் ஒருசேரத் துடைத்தெறிந்து ஒவ்வொருவர் அருந்தும் டீயிலும் எத்தனை அளவு சத்து உள்ளது என்பதை மிக நேர்த்தியாக எடுத்துரைத்தார். இணையத்தில் மிகவும் பாராட்டு பெற்ற அந்த உரையை சில நாட்களுக்குப் பின் தொடராக அம்மருத்துவர் எழுதுவதாக அறிவிக்கப்பட்டவுடன் வாசிக்கும் ஆர்வம் இயல்பிலேயே ஏற்பட்டது. அப்படித்தான் ஆனந்த விகடனில் தற்போது வரை வெளிவந்து கொண்டிருக்கும் ஆரோக்கியம் ஒரு பிளேட் எனும் தொடர்.. தற்போது வரை வெளிவந்தாலும் இந்த புத்தகத்தில் 26 பாகங்களுக்கான கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. வரக்கூடிய காலகட்டங்களிலும் அந்த கட்டுரைகள் மிகுந்த வரவேற்பை பெற்று வாசித்து தூண்டும் விதத்தில் இருக்கும்.
பொதுவாக மருத்துவ கட்டுரை என்பது நம்முடைய அறியாமையை முழுக்க முழுக்க சுட்டிக்காட்டுவதாகும். நாம் இதுவரை பின்பற்றிய உணவு முறை ஆரோக்கியம் குறித்த நம்மளுடைய மதிப்பீடுகள் புரதம் கொழுப்பு என உணவு பழக்க வழக்கம் உட்பட அனைத்தையும் நமக்கு சொல்லிக் கொடுக்கும்.நோய்களை தெரிந்து கொள்வதன் மூலம் நமக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுகிறது. அது வாசிப்பின் மூலம் பெற்றது எனும் போது இன்னும் கூடுதல் பெருமிதம் நமக்குள் ஏற்பட்டு விடுகிறது.
நம்முடைய உணவுப் பழக்கத்தின் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்வதோடு தற்போதைய மார்க்கெட்டிங்கில் உணவு முறை எவ்வாறெல்லாம் மாற்றம் பெற்றுள்ளது.. சர்க்கரை நோய் மற்றும் புரத குறைபாடு முட்டையின் மகத்துவம் என்பன போன்ற கட்டுரைகள் சொல்வதோடு ஒவ்வொரு பெட்டிகளிலும் அந்த கட்டுரை தொடர்பான கேள்விகள்.. உதாரணத்திற்கு முட்டை பற்றி சொல்லும் போது கர்ப்பிணிகளுக்கு முட்டை நல்லதா? மகத்தான மஞ்சள் கரு போன்றவையும் சொல்லப்படுகின்றன.
அரிசி குறித்தும் அரசியின் மூலம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் சொல்வதோடு மாவு சத்து குறித்த வதந்தியை நமக்குச் சொல்கிறார். கைக்குத்தல் அரிசி போன்றவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் அப்படி கிடையாது. மில்லில் அரைக்கப்பட்ட லேயர் நீக்கப்பட்ட 100 கிராம் பச்சரிசியில் 78 கிராம் மாவுச்சத்து உண்டு என்றால் புழுங்கல் அரிசியில் 77 கிராம் உள்ளது. தைக்குத்தல் அரிசியில் 76 கிராம் உள்ளது. பிரவுன் அரிசியிலும் 74 கிராமம் மாவுச்சத்து இருக்கிறது. எனவே பிரவுன் அரிசியின் சுவை பிடிக்கவில்லை என்பவர்கள் புழுங்கல் அரிசிக்கு மாறிவிடலாம் என நினைக்காமல்.. எதுவாக இருந்தாலும் அளவாக சாப்பிட வேண்டும். எந்த அரிசியாக இருந்தாலும் பெரிய வித்தியாசம் இல்லை எனும் பேருண்மை இதன் மூலம் தெரிய வருகிறது.
அரிசி கோதுமை போன்ற தானியங்களில் உள்ளது போலவே சிறுதானியங்களிலும் சத்துக்கள் நிறைய உள்ளன நியூட்ரியன்ட்ஸ் எனப்படும் மாவுச்சத்து புரதச்சத்து போன்ற நம் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன ஒவ்வொரு சிறுதானியங்களின் நன்மைகளையும் அலசி ஆராயும் போது முத்தாய்ப்பாய் ஒரு வரி சொல்கிறார்
Millets were the first crops millets are the future crops
மனிதர்கள் முதலில் விளைவித்த சிறுதானியங்கள் எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அரிசியை போன்ற தானியங்களை விளைவிக்க முடியாத சூழல் வரும்போது நம்மை மீட்க போகின்றன என்ற ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்களாம். மற்ற தானியங்களோடு ஒப்பிடும் போது சிறுதானியங்கள் 15 முதல்20 சதவீதம் வரை அதிக பயன்களை கொண்டது.
ரவை மைதா கோதுமை மூன்றும் ஒரு தாய் பிள்ளைகள் தான். எந்த விஷயங்கள் மைதா உடலுக்கு கெடுதல் என்று சொல்கிறார்களோ அந்த விஷயங்கள் அனைத்தும் சமமாக ரவையிலும் இருக்கின்றன. கோதுமையின் மேல் இருக்கும் உமியை எடுத்து விட்டால் அதன் தவிட்டுப் பகுதி இருக்கும் அதற்குள் endosperm,germ லேயர்கள் இருக்கும். அதனை அப்படியே சாப்பிட்டால் கோதுமை. கோதுமையின் தவிடு மற்றும் லேயர்களை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் endosperm
பகுதியை மட்டும் மாவாக அரைத்தால் அதுதான் மைதா. இதில் நார்ச்சத்து இருக்காது.
ரவையும் மைதாவும் ஒன்றுதான் .திட்டை நீக்கி உள்ளிருக்கும்
endosperm நைசாக அரைத்தால் அது மைதா. கொஞ்சம் கரகரப்பாக அரைத்தால் ரவை. இரண்டிலும் ஒரே சத்துக்கள் தான். வித்தியாசம் கிடையாது. இதுவே தவிடு நீக்காமல் முழு கோதுமையையும் கரகரப்பாக அரைத்தால் அது சம்பா ரவை. முழு கோதுமைக்கு சமம். ஒன்றிலும் இருக்கும் சத்துக்களை ஒவ்வொன்றாக தனித்தனியாக விரிவாக விளக்குகிறார்.
சர்க்கரை நோயாளிகள் மாவுச்சத்து அளவை குறைத்து ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்களும் செல்ல உணவை சரியான அளவில் எடுத்துக் கொண்டால் சர்க்கரை அளவு சரியாக இருக்கும். சாதத்தை வடிக்கும் தண்ணீரில் 10 முதல் 15 சதவீதம் வரை ஸ்டார்ச் எனப்படும் மாவுச்சத்து இருக்கும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் அந்த தண்ணீரை தவிர்ப்பது நல்லது. மிக எளிதாக ஜீரணம் ஆகக் கூடியது ஆனால் சர்க்கரை அதிகமாகும் மற்றபடி உள்ளவர்கள் தாராளமாய் பருகலாம்.
பிராய்லர் கோழிகளின் வரலாறு 1975 களின் துவங்குகிறது இவை சீக்கிரம் வளர்ந்து நல்ல எடை மற்றும் சுவை கொடுப்பதால் அதையே தேர்வு செய்து வளர்த்தார்கள். தொடக்கத்தில் 60 முதல் 70 நாட்கள் ஆனாலும் தற்போது 40 நாட்கள் மட்டுமே வளர்க்கப்படுகிறது. பிராய்லர் கோழி வளர்ப்பில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. பிராய்லர் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசி போடப்படுகிறதா என்ற கேள்விக்கு மறுத்துள்ளார்.சாதாரண நோய் தடுப்பு ஊசி மட்டுமே போடப்படுகிறது என்று கூறுகிறார் .இவை வேகமாக வருவதற்கு சில காரணங்கள் உண்டு. ஒன்று கோழியின் breed. நாட்டுக்கோழி வளர்வதற்கு மூன்று மாதங்கள் ஆகும் ஆனால் பிராய்லர் கோழி விரைவில் வளர்கிறது. பிராய்லர் கோழிகளுக்கு கொடுக்கப்படும் உணவு வகைகள் முக்கியமானவை. கோழிகள் நோய் தாக்கி இறந்து விடக்கூடாது என்பதற்காக தீவனங்களில் ஆன்டிபயாடிக்ஸ் பயன்படுத்துகிறார்கள். இதுவும் சில சமயங்களில் கெடுதலாக அமைகிறது.
*வாட்ஸ் அப்பில் வரும் மருத்துவக் கதைகளை மருத்துவ விழிப்புணர்வை நம்ப வேண்டாம் என்று முதலிலேயே சொல்லிவிடுகிறார்
*பாஸ்மதியில் செய்யப்பட்ட பிரியாணி ஒரு முழு பிளேட் சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்கிறார்
*பழங்களில் குளுக்கோஸ் சுக்ரோஸ் ஃப்ரக்டோஸ் மூன்று வகையான சத்துக்கள் இருக்கின்றன. இதைவிட அதில் இருக்கும் நார்ச்சத்து முக்கியம். பழத்தை அரைத்து வடிகட்டி ஜூஸ் ஆக குடிக்கும் போது அதில் இருக்கும் நார்ச்சத்து போய் விடுகிறது. எனவே பழங்களை அப்படியே நார்ச்சத்துடன் எடுத்துக் கொள்வதே நல்லது.
*மாப்பிள்ளை சம்பா அரிசி மட்டுமல்ல மற்ற எல்லா உமியோடு உட்கொள்ளும் முழு தானியமும் நரம்புக்கு உகந்த முக்கியமான வைட்டமினை அதிக அளவு தரும்.
மேலும் இதய நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு, கொழுப்பு குறித்த வரலாறும் செயல்பாடுகளும் உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கு உண்டான வழிமுறைகள் தண்ணீரை நாம் ஆரோக்கியமானமாக எப்போது உணரப்போகிறோம் என்பது போன்ற அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தக்கூடிய நிறைய மருத்துவ தகவல்கள் இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெற்றுள்ளது. தற்போது ஒவ்வொரு வாரமும் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்டான பதிலையும் சந்தேகத்தையும் சொல்லி அவரும் தன்னுடைய பாணியில் மருத்துவ தகவல்களை மருத்துவக் கட்டுரைகளை ஐயங்களை நீக்கி வருகிறார். வாசிப்பு என்பது இது போன்ற விழிப்புணர்வையும் உள்ளடக்கியதே என்பதை உணர்ந்து கொண்டு இது போன்ற மருத்துவ கட்டுரைகளையும் வாசிக்க வேண்டியது நமது கடமை ஆகும்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment