#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-25
Book-70
Pages-192
பச்சையும் சிவப்புமாய் ஒரு பாதாம் மரம்
-முத்தரசி
அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தாமல் பதுக்குகிறார்கள்.பதுக்குவது எதுவும் பத்திரமாக இருப்பதில்லை என்பதே உலக நியதி.விருத்தி செய்பவனே திருப்தியடைகிறான். விருட்சமாகிறான்
-இறையன்பு
அருமை நண்பர் பாரத் பாரதி சார் அவர்கள் ஒரு நாள் எனக்கு இந்த புத்தகத்தை அஞ்சலில் அனுப்பி வைத்தார்கள். நாம் படிக்காத புத்தகத்தை அதுவும் நல்ல புத்தகத்தை எவர் தருகிறாரோ அவரே உண்மையான நண்பர் என்பார்கள். அதுபோல ஒரு நல்ல புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு முதலில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .இந்நூல் எழுதியவர் முதுகலை ஆசிரியர். பலரும் பணியை பாரமாக சொல்லும் போது இவர் துலாபாரமாக தன்னுடைய ரசனையையும் பணியையும் சமமாக பாவித்து தான் அனுபவித்த அனுபவங்களை தன்னுடைய நண்பருக்கு கடிதம் மூலமாக எழுதுவதில் இந்த நூல் விரிவடைகிறது. கசடுகளும் குப்பைகளும் நிறைந்திருக்கும் கரைகள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் நடு ஆற்றில் ஓடும் நீரைப் போல தூய்மையானது எங்கள் இருவரின் அன்பும் நட்பும் என்று ஆரம்பத்திலேயே இவர்களின் நட்பின் ஆழத்தை உணர முடிகிறது.
ஜெயகாந்தனின் குருபீடம் கதையில் குரு சொல்கிறார் நான் ஆசான் அல்ல என்னிடம் சீடனாக இருந்தவனை நமக்கெல்லாம் ஆசிரியர் என்று அடிக்கடி அறிவிக்கிறார். நல்ல சீடர்கள் வாய்க்கும் போது சராசரிகளும் சரியான ஆசனம் அமையப் பெறுவார்கள் என்று தெரிவித்தது போல தன்னிடம் பயின்ற மாணவி கனிஷ்காவின் ஆற்றலை புகழ்ந்து கூறுவதுடன் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதையும் சொல்கிறார். பெற்றோருக்கு உயிர் கொல்லி நோய் வாய்க்கப்பட்ட சூர்யாவின் மனநிலையை நாமும் அதே சிந்தனையில் நினைக்க வைத்து விடுகிறார் வருத்தத்துடன்
மானுடத்தின் பொது மொழியான பசியை முதலில் அறிவது தாய்மையின் கருணை தானே. அந்த கருணையில் தான் ஒவ்வொருவரின் உலகம் உயிர்பித்திருக்கிறது என்ற வரிகளுக்கு முன் உதாரணமாய் பொது தேர்வு எழுதும் குழந்தைகளுக்கு தவறாமல் சமைத்து தரும் பொறுப்பை ஏற்ற அந்த பெண்மணியின் முகம் நம்மையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகின்றன .நிர்வாகவியல் கல்லூரியில் தேர்வில் இறுதி கேள்வியாக உங்கள் வகுப்பை தினசரி சுத்தம் செய்யும் பெண்மணியின் பெயர் என்ன என்று இருக்கும் அனைவரும் அந்த கேள்வியை படித்து திகைக்கின்றனர். ஒரு நிர்வாகவியலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான விஷயம் கீழ்மட்ட ஊழியர் முதல் மேலதிகாரிகள் வரை இணைந்த ஒற்றுமையாய் பணியாற்ற வேண்டும் என்பதைத்தான் நமக்குச் சொல்கிறார்.
ஆசிரியர்கள் பலரைப் பார்த்து இருக்கிறேன் தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் இருக்கும் ஆர்வம் பின்னால் இருக்கும் மாணவர்களை தூக்கி விடுவதில் இல்லை என்று பொதுவான குற்றச்சாட்டு இருக்கிறது .ஆனால் இந்த கட்டுரையில்" நான் படிப்பதில் என்ன பெருமை இருக்க முடியும் என் பிள்ளைகளை அந்த உயரத்தை எட்ட வைப்பது தானே என் பணியின் அறமாக இருக்க முடியும்" என்று நறுக்கு தெரித்தால் போல் ஒரு வரி. கட்டுரையின் துவக்கத்தில் ஒரு திருமண விழாவில் முகமூடி அணிந்த சிரிப்பு காட்டும் மனிதர்களின் அகத்தை குறித்து அவர் அளிக்கும் வார்த்தை உரையாடல்கள் நிச்சயம் நம்மை சிந்திக்க வைக்கும். போராடும் பெண்மணிகள் புத்தகத்தை படித்த ஸ்ரீஜாவின் கதை நெகிழ்வூட்டும்
ஆசிரியர் விழாவில் நடைபெற்ற அனுபவங்களையும் ஆசிரியர் பணி குறித்த அவரின் மேலான பார்வையும் விளக்கிவிட்டு "ஆசிரியரின் வாழ்வு என்பது வரத்திற்கும் சாபத்திற்கும் இடையில் நடைபெறும் ஒரு அற்ப வாழ்வு. நீங்கதான் என் உலகம் என்கிற இதயங்களுக்கும், இந்த வாத்திகளுக்கு வேற வேலை இல்லை என தரம்தாழ்ந்து பேசும் உதடுகளுக்கும் இடையே தான் ஒரு ஆசிரியர் என்பது வாழ்ந்து தீர்த்தாக வேண்டும் என்ற நிதர்சன உண்மையையும் நமக்கு கூறியிருக்கிறார்.
முதன்முதலாக தான் பணியாற்ற வாய்ப்பு கிடைத்த நீலகிரி கேரளா எல்லையில் அமைந்துள்ள தேவாலா என்ற கிராமத்தில் பணியாற்றிய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் போது நாமும் அந்த இடத்தில் மாணவனாய் இருந்து பார்க்கிறோம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அப்போது பாடம் எடுக்கும் முறை குறித்தும் ,அவர்களின் மனதடங்கல் தாழ்வு மனப்பான்மை இயலாமை என்று இருக்கும் அவர்களுக்கு இவைகளை எல்லாம் மீறி எவ்வாறு அந்த சவால்களை நிறைவேற்றினார் என்பதைத்தான் வசிகரமாக சொல்லிவிட்டு அந்த பள்ளியை விட்டு பிரியும் போது சொல்லும் வரி நமக்கும் மனதையும் கணக்க வைக்கிறது. "எதிர்பாரா திருப்பங்களையும் துயரங்களையும் தரும் இந்த வாழ்க்கை தான், நாம் மீண்டு எழுவதற்கான மனிதர்களையும் அருள்கிறது."
சொற்களை மிகவும் ரசித்து ரசித்து செதுக்கி உள்ளார் .ஒவ்வொரு இடத்திலும் தன்னுடைய ட்ரேட் மார்க் தத்துவ முத்திரைகளை மிக இயல்பான நடையில் பதித்து விடுகிறார். அவ்வாறு ஒரு இடத்தில் "அன்பின் வார்த்தைகளுக்கு தானே வாழ்நாள் முழுவதும் தவம் இருக்கிறோம். நம்மோடு கூடவே வாழும் மனிதர்களுக்கு நம்மிடம் சொல்ல எதுவும் இல்லாமல் போகும் நொடியில் தானே ஒரு பூவின் மலர்தலை, மலையின் ஈரத்தை, உருண்டு விழும் கண்ணீரின் ஒரு துளியை, தென்றலின் சிறு தழுவலை, இசையின் ஒரு துணுக்கை, இனிப்பின் ருசியை நாம் சொற்களாக மொழியாக உருவம் செய்து கொள்கிறோம். ஒரு வார்த்தை எத்தனையோ நம்பிக்கைகளை அழித்து விடுவது போலவே சொற்களின்றி இருப்பதும் உண்மையான பேரனுபவம் என்று ரசனையுடன் இதனை எழுதி இருக்கிறார்
*வாழ்வின் படிநிலையில் கீழே இறங்க இறங்கத்தான் நட்பும் அன்பும் பிரியமும் நிபந்தனை இன்றி கிடைக்கும்
*துயரங்களை முதன் முதலில் சந்திக்கும் போது அதிர்வுற்று அதிர்வுற்று அடங்குகிறது. பின்னர் அதையே எந்த சலனமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள பழகி விடுகிறது.
*சந்தோசமாகட்டும் துக்கம் ஆகட்டும் இரண்டாவது கோட்டை அருகில் வரைந்து ,நம் கணங்களை சிறிது ஆக்கிக் கொண்டே இருக்கிறது இந்த வாழ்க்கை
*வெறும் அறிவை மட்டுமே அடைத்து நிரப்பி நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த சமூகத்தில் தான் ,தன் பெயரை தானே தாங்கிக் கொண்டு ,தன் கனவுகளை தானே வார்த்தெடுக்கும் ஒரு சமூகம் உருவாகி கொண்டு இருக்கிறது
*மற்றவர்களுக்காக வாழும் மனசுக்காரர்கள் தான் எத்தனை அழகானவர்கள் அந்த இதயங்கள் தான் கடவுளின் நிழல்கள்.
*உயிருக்கென ஓடும் ஒரு சிறு உயிரை உணவுக்கென ஓடும் ஒரு பெரு உயிர் எப்போதும் ஜெயிக்க முடியாது. வாழ்வின் மேல் விரக்தி ஏற்படாமல் பிரியம் ஏற்படுவதில்லை. என்றேனும் ஒரு நாள் துயரத்தின் இரவு விடியத்தானே வேண்டும்
*வாசிப்பு நான்கு எழுத்துக்களில் அடங்கும் ஒரு மகத்தான பெருவாழ்வு. அது ஒன்றுதான் மனித மனங்களின் மாண்பை மனதுக்கு பெரும் விசாலத்தை பரிசளிக்கிறது. கூட்டுப்புழு மனதை சிறகு விரிக்க வைக்கிறது.
*நம்பிக்கையை பரிசளிக்கும் இதயங்கள் மட்டுமே எப்போதைக்குமான தேவை எல்லோருக்கும்
தன்னுடைய ஆசிரியர் தொழிலில் ஏற்பட்ட அனுபவங்களை தனக்குரிய நடையில் மிக எளிதாக தான் படித்த வரிகளுடன் சேர்த்து நெய்து அழகிய ஆடையாக இந்த புத்தகத்தை நமக்கு கொடுத்துள்ளார். தான் கண்ட அனுபவத்தை அறிவுப்பகிர்தல் என்று சொல்லும் அளவுக்கு எவ்வளவு தூரம் அந்த அனுபவத்தை கூர் தீட்டி சொல்ல முடியுமோ அத்தனை கூராக்கி நல்ல சொற்களுடன் நமக்கு வழங்கி இருக்கிறார். நல்ல ஒரு வாசிப்பு அனுபவத்தை நல்கிய திருமதி தமிழரசி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment