Thursday, 6 April 2023

book-33


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-14
Book-33
Pages-272

ஸ்கெட்சஸ்
-திருச்செந்தாழை

ஞாபகங்களை மொழியில் நெய்வது தவிர நீ செய்வது ஒன்றுமில்லை. ஆனால் அதைவிட இந்த பிரபஞ்சத்தை அலங்கரிப்பதும் வேறில்லை

திருச்செந்தாழையின் சிறுகதைகளும் கவிதைகள் போலவே மொழிநடை மிகவும் ஆழமானது. நின்று ஒரு கணம் ரசிக்க வைப்பது .சிந்திக்கத் தூண்ட வைப்பது. மொழியின் கூர்மையை உணர்ந்த இடங்கள் பல உண்டு. காலச்சுவடில் வந்த அந்த சிறுகதை தொகுப்பு மற்றும் விலாசம் ஆகியவற்றில் வரும் சொற்களே அந்த கதைகளை வலைப்பின்னல் போல் பின்னிக் கொள்ளும்‌. அந்த உத்வேகம் தந்த வாசிப்பில் இவரின் தற்போதைய கவிதை தொகுப்பான ஸ்கெட்ஸை வாசித்து முடித்தேன்.

வாசக மனம் வெறுமையானது. கவிதையானது அந்த வெறுமையில் ஒருவருடைய கற்பனையில் அதில் ஊறும் எண்ணங்களையும், நிகழ்காலத்தில் பார்க்க தவறியதையும், கடந்த காலத்தில் வாழ்ந்த அனுபவத்தையும் மீட்டுக் கொண்டு வரும். அந்த கவிதையை நம் வெறுமையில் இட்டு நிரப்புகிறது.

/புத்தகம் வாசிக்கும் போதெல்லாம், பூமிக்கு வெளியே இருந்தவாறு அமைதியாக எல்லோரையும் பார்த்தபடி இருக்கும் உணர்வு/ என்ற கவிதை புத்தகத்தை தனிமையில் வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர்ந்து வரிகளை சுற்றி இருக்கிறார்

/புதிய ஊர்களில் முதலில் உணரும் அந்த அனாதைத்தனத்தில் எவ்வளவு கிளர்ச்சி!
 ஒரு சிறுகதையின் முதல் வரியை துவக்குவது போல/

 உண்மைகள் இந்த வரியை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன் அடையாளம் தெரியாத ஊரில் அனாதை போல சுற்றி தருவது சுதந்திர உணர்வை நமக்கு கொடுக்கும். கற்றுக்கொள்ளும் பாடத்தையும் போதிக்கும்

/பின்னால் அமர்ந்திருக்கும் நிறைசூலி மனைவியுடன் 
சண்டையிட்ட படி கவனமாக சைக்கிள் மிதிக்கிறான் 
அப்படி ஒரு அழகான கோபம் எங்கேயும் இல்லை/

 பரபரப்பு நிறைந்த உலகில் இதுபோல் அழகியலையும் காணத் தவற விடுவதில்லை இந்த கவிதை

/கடந்த காலங்களின் துயரை 
இந்த நாளொன்றுக்குள் அனுமதிக்காமல் 
காலை உடைத்து திருப்பி அனுப்பும் உன் கருணையின் மீது லேசான காதலும் உண்டு/ அதாவது நிகழ்கால சோகம் கடந்த கால சோகத்தை விடவும் அதிகமாக இருப்பதால்
இப்போது இருக்கும் சோகம் பழைய சோகத்தை
சாட்டையால் அடித்து விரட்டுகிறது .

/அரசாங்க மருத்துவமனையின் 
மாடி ஜன்னல் வழியே ஒரு வளைக்கரம் 
தூர வான வெளிச்சங்களை குழந்தைக்கு காண்பிக்கிறது பதட்டத்துக்கும் இயல்புக்கும் இடையே அவ்வளவு இருள்/

நல்ல ஒரு அழகியல் இக்கவிதை.

/கைவிடப்பட்டவைகள் 
தனிமையில் சிறு தெய்வங்களாய் உறைந்திருக்கின்றன/

 இது ஒரு நிகழ்கால உண்மைகளை எடுத்து வைக்கிறது. பெருந்தெய்வங்களுக்கு கொடுக்கும் மரியாதைகள் சிறு தெய்வங்களுக்கு நாம் கொடுப்பதில்லை புறக்கணிக்கிறோம் .எளியவை என்பதால் தான் இந்த உணர்வு நம்மிடமிருந்து வருகிறது என நினைக்கிறேன்.

/சிறிய அறைகள் கொண்ட வீடல்லவா?
 தாங்கவியலா தனிமையில் தப்பிக்க எண்ணி, 
திரும்பிய பக்கமெல்லாம் எதிர்பட்ட என்மீதே எத்தனை முறை முட்டிக்கொண்டேன் 
நினைவில்லை/

 தனிமையின் இறுக்கத்தை பொறுத்தவரை தன்னைத்தானே தன்மீது மோதிக் கொள்வது போல அறையை உருவகப்படுத்தி இருக்கிறார்.

/தெரிந்தே செய்கின்ற தவறுகளின் போதெல்லாம் 
அமானுஷ்யமாக 
என் தோளிலேயே கைபோட்டு, 
என் அமைதியின் மீது 
பேசிய படியே வருகிறான் நான்/

நாம் தெரிந்தே சில சமயங்களில் தவறு செய்து விடுவோம். ஆனால் அந்த குற்றம் நம் மீது கை போட்டு பேசிக்கொண்டே வரும். அதிலிருந்து விடுபடலாம் என எண்ணும்போது நீண்ட நாள் ஆகும்.

/யாரும் அமர விரும்பாத மழைக்கால பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் சிலை என அமர்ந்திருக்கிறாள்.
 பழைய பேருந்தின் துருக்களிடையே கசிந்து கொட்டுகிறது மழை மகிழ்ச்சியின் கசப்பிலிருந்து.. கனவுகளின் சிதைவிலிருந்து.. புகைபடுத்தபடியே சாலையோரம் நிற்பவனுக்கு 
கொட்டும் மழையை வாங்கியபடி ஜன்னலோரம் அமர்ந்திருப்பவர்களை பார்த்தவுடன் புரிந்து கொள்ள முடிகிறது 
துருவிலிருந்து வழிகின்ற கண்ணீரை 
ஏன் என கேட்க வேண்டியதே இல்லை எனவும்/ 

அன்றாடம் நாம் பார்க்கும் இது போன்ற பெண்ணின் அழுகைக்கு காரணம் கேட்க முடியாதபடி காரணம் கேட்க முடியாதபடி ஒரு நிலையில் நிற்கும் ஒரு ஆணின் மனநிலையை இப்படி படம் பிடித்துக் காட்டுகிறார்

/அதீத பிரியங்களை 
எதிர்கொள்ளும் போதெல்லாம் மேலும் தனிமை அடைகிறான். தானியம் ஏந்திய விரல் நுனி ஏங்க கம்பி கோடுகளில் ஒடுங்குகிறது வானிலிருந்து பறிக்கப்பட்ட 
சிறு பறவை/

/உறக்கத்திற்குள் நுழைகின்ற போது நமது பிரக்ஞையின் சரடை யாருடைய கையில் ஒப்புவித்துச் செல்கிறோம்./

/அன்பு என்பது பரஸ்பரம் 
தனிமையின் வாலை
மிதித்துக் கொள்வது./

இதுபோல் எண்ணற்ற கவிதைகள்
படிக்க படிக்க சொல்லின் வளத்தில் நம்முடைய கற்பனைகளும் ஊறித் திளைக்கின்றன. சொல்லில் சொல்லப்படாத மீதி உண்மைகள் இல்லாவிட்டால் கவிதைகளில் நாம் நம்முடைய தேடலை உருவாக்கிக் கொள்ள முடிகிறது .அந்த தேடலின் முடிவில் உண்மைகளை நாமே தரிசிக்க முடிகிறது. அதுதான் நல்ல கவிதையின் அடையாளம். அந்த வகையில் இந்த புத்தகத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது

தொடர்ந்து வாசிப்போம்

 தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment