#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-18
Book-51
Pages-288
மும்மூர்த்திகள்
-சரவண கார்த்திகேயன்
கேள்வி கேட்பது ஒரு கலை என்பார்கள். கேள்வி கேட்பதன் இன்னொரு வகை தான் பேட்டி எடுத்தல். ஆனால் பேட்டி எடுப்பது என்பது பதில் சொல்பவருக்கு எவ்வளவு தெரியும் என நினைத்துக் கொள்வதை விட கேள்வி கேட்பவருக்கு எவ்வளவு தெரியும் என காட்டிக்கொள்வதே அதிகம். ஒரு நேர்காணல் செய்ய வேண்டுமாயின் கேள்வி கேட்பவர் அவரைப் பற்றிய முழு விவரங்களை அறிந்து கொண்டு இன்னும் அதில் மிச்சம் இருக்கும் அல்லது அதை நீச்சியாக ஏதேனும் ஒரு கேள்வி கேட்டு அவரின் அனுபவத்துளியை அப்படியே அள்ளி எடுப்பது போல அந்த கேள்வி அமைந்தால் கேட்பவருக்கும் அதை படிப்பவருக்கும் சுவாரஸ்யம் தானே .அப்படித்தான் இந்த புத்தகம் எதெச்சியாய் கிடைத்துப் படித்தது. எழுத்தாளர் ட்விட்டரில் நண்பராய் இருப்பதால் இன்னும் கூடுதல் நம்பிக்கையுடன் படித்தேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. மூன்று ஆளுமைகளை பற்றி முழுமையாக தனக்கு தெரிந்த விடயத்தையும் அவர்களின் பதில்களையும் வைத்து அற்புதமான ஒரு வாசிப்பு அனுபவத்தை தந்தது இப்புத்தகம்.
நேர்காணல் பொதுவாக வார இதழ்களில் மூன்று பக்கங்களுக்கு மிகாமலும் இலக்கிய இதழ்களில் 30 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கும். ஏனெனில் நேர்காணல் என்பது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. முதலில் ஜெயமோகன் பற்றிய நேர்காணலில் பல்வேறு கேள்விகள் மிக அழகாக கேட்கப்பட்டுள்ளன.சு.ரா பற்றிய கேள்விக்கு அவரைப் பற்றி சொல்லும்போது சிற்றிதழ் என்பது அளித்த பரவசத்தை இன்று ஆச்சரியத்துடன் நினைத்துக் கொள்கிறோன். குறைவாக எழுதுவது மட்டுமல்ல எழுதாமல் இருப்பதே கூட படைப்பு செயல்பாடு என நம்பினோம் என்று ஜே ஜே சில குறிப்புகள் பற்றி ஓர் இடத்தில் கூறுகிறார்.
மொழியின் உச்ச வெளிப்பாடு பற்றிய கேள்விக்கு காவியம்தான் என்று பதில் சொல்கிறார். கவிதை ஒரு முழுமை அனுபவத்தை அளிப்பதில்லை அது ஒரு துளியில் வாழ்க்கையை நோக்கி அமைகிறது. ஆகவே அது குறைபாடு கொண்டது. நவீன கவிதையின் இந்த துளித்தன்மை அதன் பலம் அதன் பலவீனமும் அதுவே என்கிறார்.
எழுத்தாளனின் சமூக கடமை என எதை கருத்துகிறீர்கள் என்று கேள்விக்கு களப்பணிக்கு ஓர் ஒற்றைப்படியான வேகம் தேவை. அதுதான் நம்பிக்கை அளிக்கிறது. சூழலில் போராளிகளை எடுத்துக் கொண்டால் சூழலியல் பிரச்சனை சரி செய்தால் உலகம் சரியாகிவிடும் என்பார்கள். அந்த நம்பிக்கை இல்லாமல் அவர்கள் செயல்படுவது இயலாது .ஆனால் இலக்கியத்துக்கு அவை எதிரானவை .இலக்கியம் அனைத்து பக்கங்களையும் பார்ப்பதாக இருக்க வேண்டும். எந்த வகையான தீவிர செயல்பாடு இலக்கியத்தை வலுவிழக்க செய்யும். மேலும் மொழி என்பது ஒரு விசித்திரமான ஊடகம். எல்லா கலையும் அப்படித்தான் மொழியிலும் சிக்கலானது .அது அன்றாட செயல்பாடு முதல் ஆழ் மனக்கனவு வரை பல அடுக்குகள் கொண்டது. அதிலேயே வாழ்ந்தால் ஒழிய அதில் உண்மையில் எதையும் சாதிக்க முடியாது.
#யுவன் சந்திரசேகர்
எதற்காக எழுதுகிறீர்கள் எனும் கேள்விக்கு? எனக்கு வாசிக்க பிடித்திருந்தது அதேபோல் எழுத பிடித்திருக்கிறது என்று நச்சென்று பதில் சொல்கிறார் ஆரம்பத்திலிருந்து. ஸ்டார் எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. இரண்டே காரணங்கள் தான் ஒன்று நான் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர்களுக்கு என்னுடைய எழுத்து பொருட்படுத்த தக்கதாக இருக்க வேண்டும். இரண்டாவது சீரிய வாசகன் எனது பெயரை பத்திரிகையில் காணும் போது அதை தாண்டி போகக்கூடாது என்னும் ஆசை என்கிறார் இயல்பாக.
ஒரு படைப்பின் கரு உருவாகும் விதம் இன்னமும் மர்மமானதாக தான் இருக்கிறது .ஆனால் அது சற்று தெளிவுறும் விதமாக திரண்ட பிறகு, அதற்கு உருவம் அளிப்பதில் பிரக்ஞை பூர்வமான செயல்பாட்டின் பங்கு அதிகம் .ஆனாலும் ஒரு குறிப்பிட்ட விகிதம் ஆழ்மனச் செயல்பாடும் அதில் கலந்து இருக்கிறது. மனதில் இரண்டு தளங்களும் ஈடுபடுகின்றன. எதிர்புறத்தில் ஒரு கதாபாத்திரங்களை தன்னிச்சையாக உதித்து அதன் ஆதாரப் பிள்ளை தேடும் வாக்கியங்கள் வழிபயணம் தொடரும் போதும் இதுதான் நிகழ்கிறது. முழுவதும் எழுதி முடிக்கப்பட்ட பிறகு நான் நேசிக்கும் இலக்கும் மிக நெருக்கமாக நகர்த்திக் கொண்டு போவது தான் படைப்பின் வெற்றி இருப்பதாக கருதுகிறார்
நான் மிகவும் ரசித்த கேள்விகளில் ஒன்று நாவலுக்கு முன்னுரை எழுதாமல் ஏன் பின்னுரை எழுதுகிறீர்கள் ஒருவேளை நாவலை வாசித்தவன் மட்டும் நான் சந்திப்பேன் என்று அர்த்தமா? எனும் கேள்விக்கு வாசகன் தன்னிச்சையாக சுதந்திரமாக ஒரு படைப்பை படித்த பின் அது குறித்து அந்த ஆசிரியருக்கு ஏதேனும் சொல்ல இருந்தால் கேட்டுக் கொள்ளலாம் கேட்காமல் போகலாம்.
முன்கூட்டியே வாசகனை நாவலுக்கு தயார்படுத்த வேண்டும் என நினைக்கவில்லை என்று அற்புதமாய் ஒரு பதிலை சொல்லி இருக்கிறார்.
#பெருமாள் முருகன்
சிறுகதை எழுதிக் கொண்டிருக்கும்போது நாவல் எழுதும் பழக்கம் எப்போது வந்தது எனும் கேள்விக்கு இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதாய் ஒரு உணர்வு அந்த கதைகளுக்கு நான் எடுத்துக் கொண்ட களம் சிறுகதைக்கானது அல்ல என்ற தீர்மானித்தேன் தொடர்ந்து நண்பர்களின் உற்சாகத்தினால் நாவல் என் கைக்கு வந்தது. மன ஓசை இதழில் ஆசிரியராக மூன்றாண்டுகள் செயல்பட்டது எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காலமாய் நான் பார்க்கிறேன். மொழி சார்ந்து கற்றுக் கொள்வதற்கும் ஒரு பத்திரிக்கை எப்படி நடத்துவது என கற்றுக் கொள்வதற்கும் உதவியது எனக்கு அது ஒரு களமாக இருந்தது.
மாதொருபாகன் பிரச்சனை வந்தபோது உண்டான மனநிலை கையாண்ட விதங்கள் நீதிமன்ற தீர்ப்பு என்பன பற்றிய விரிவான ஆய்வு போல ஒவ்வொரு கேள்விகளையும் நறுக்கென கேட்டிருப்பார். அதேபோல் அவரின் படைப்புகளான கூளமாதாரி மொழிபெயர்ப்பு சம்பந்தமான நூல்கள் குறித்தும் மிக விரிவாக கேட்டிருந்தார்.
*பேட்டி என்பதற்கு பதிலாக நேர்காணல் என்ற சொல்லை அறிமுகம் செய்தது கோமல் சுவாமிநாதன் தான்
*எழுத எழுத எழுதுவதற்கு இடம் தெரிந்து கொண்டே இருக்கும். அப்படி தெரியாமல் ஆகும்போது நின்று விடுகிறோம் .அப்போதுதான் திரும்பிப் பார்க்கிறோம்
*குரு என்பவர் ஒரு கடல். அலைகளை தான் தனிமனிதர்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்
* ஆசிரியர் ஒரு துறையில் நமக்கு கல்வி அளித்தவர் குரு நம்மை முழுமை நோக்கி வழி நடத்துபவர் கற்றும் அகத்தை முழுமை செய்கிறார் குரு ஆசிரியர் பாடங்களை சொல்லித் தருகிறார்கள்
*எழுத்து சில வரிகளுக்கு மேல் கட்டற்று தன்னிச்சையாக பெறுக வேண்டும்
*அறிவியலை நாம் முறையாக கற்றவர்கள் அல்ல. அறிவியலை தகவல் கல்வியாகவே நாம் கற்கிறோம். அறிவியல் கொள்கைகளை புரிந்து கொள்வதற்கும் தொடர்ந்து சிந்திப்பதற்கும் இங்கு நமக்கு பயிற்சியே இல்லை
*ஒளித்து வைப்பதை வாசகன் கண்டுபிடித்து விட்டால் மகிழ்ச்சி அடைகிறான் .அதை இலக்கிய அனுபவம் என நினைத்துக் கொள்கிறான்
*குறத்தி முடிக்கில் தங்கம் சொல்வாள் நடந்ததெல்லாம் நடக்காமல் இருந்திருக்கனுங்க. இதுதான் நாகராஜனின் மொத்த கதை உலகத்தின் அடியோட்டம்
*இப்படி ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டோம் எனில் காரியங்களை அதற்கு தக்கவாறு நடத்திக் கொண்டே போகலாம்
*தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை ஒரு விசித்திரமான வயிற்று எரிச்சல் என்னவெனில் ஆன்மீகம் என்ற சொல் விழுந்த உடனே அது ஒரு மதத்துடன் போய் ஒட்டிக் கொள்கிறது
*தோன்றுவதை தோன்றும் போது தோன்றும் விதமாக எழுதுவது என்னுடைய சுதந்திரம்
*எழுத்தாளன் எழுத்து என வந்து விட்டாலே நீர்மட்டத்துக்கு மேல் தலையை மட்டுமாவது மேலே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு
*மோசமான மொழியில் சொல்லப்பட்ட நல்ல கதை நல்ல மொழியில் சொல்லப்பட்ட கேவலமான கதை என சிறுகதைகளில் இருக்க முடியும்
மூன்று ஆளுமைகளைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் அவர்களைப் பற்றிய நுணுக்கமான செய்திகளை ஒவ்வொரு கேள்விகளும் அறிய முடிந்தது. அவர்களின் படைப்புலகம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது. அவர்கள் எங்கிருந்து அந்த படைப்புகளை தேடி எடுக்கிறார்கள் படைப்புகள் குறித்த மற்றும் வாசகர்கள் குறித்தான அவர்களின் பார்வை என்னென்ன என்பது குறித்து எல்லாம் மிக ஆழமாக அழகாக சிறப்பாக இந்த நேர்காணல்கள் அனைத்தும் அமைந்திருக்கின்றன .எந்த கேள்வியும் இதெல்லாம் ஒரு கேள்வியா என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொரு கேள்விக்கும் சீர்தூக்கி தரம் பார்த்து கேட்கப்பட்டுள்ளத
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment