Saturday, 22 April 2023

book-80


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-29
Book-80
Pages-544

ஃபியோதர் தஸ்ரயெவ்ஸ்கி-200
-க.விக்னேஷ்வரன்

இந்த ஆண்டு வாங்கிய முக்கியமான புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று. இந்த புத்தகத்தை படிப்பதற்கு முன் அவர் குறித்த படித்தது வெண்ணிற இரவுகளும் நிலவறை குறிப்புகளும் தான். நிலவறை குறிப்புகள் படித்த பின்தான் இவர் மீது மானசீகமாக மரியாதை ஏற்பட்டது. இவர் குறித்து மேலும் தேடித்தேடி வாசித்தபோது எல்லாம் பெரிய பெரிய புத்தகங்களாக இருந்தன. ஒவ்வொன்றாக தேடி வாசித்துக் கொண்டிருந்த வேலையில் தான் இந்த புத்தகம் இந்த ஆண்டு வந்திருந்தது. இது பெரும் மகிழ்வுடன் வாசிக்கத் தொடங்கினேன். இதில் முன்னுரை நேர்காணல் மொழிபெயர்ப்பு நேர்காணல்கள் 28 ஆளுமைகளின் கட்டுரைகள் மொழி சார்ந்த சிறுகதைகள் மூன்று சிறுகதைகள் என்று இதில் உள்ளன.

ஷேக்ஸ்பியர் நாடகத்தில் தான் ஒரு சில கதாபாத்திரங்கள் மிக முக்கியமானதாக இருக்கும். அதேபோல இவர் நாவல் ஒன்றில் இவான் வைக்கும் வாதங்கள் கடவுள் பற்றிய பார்வையை நமக்கு கொடுக்கும். அதில் ஒரு இடத்தில் சிலுவையில் இருந்து நீ இறங்கி வா அப்போதுதான் உங்களை நம்புவோம் என்று மக்கள் கூச்சலிட்ட போதும், நீ இறங்கி வரவில்லை. காரணம் அற்புதம் செய்து மனிதரை அன்பால் ஏற்கனவே விரும்பவில்லை. அதேபோல் அதிகாரம் கொண்டு மனிதரை அடிமைப்படுத்தவும் நமக்கு பிடிக்காது இப்படியான தர்க்கத்தை அந்த கதாபாத்திரம் செய்கிறது.

வாசிப்பு என்ற வார்த்தையை தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகள் நிராகரிக்கின்றன என்று சொல்லலாம். நாம் அவரை கற்கலாம் கற்று ஏற்கவும் மறுக்கவும் செய்யலாம். நாம் வெறுமனே வாசிப்பு என்பது எடுத்து எடுப்பில் ஒரு சிருஷ்டியை விழுங்கி ஏப்பம் விடுதல் போல. தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளை கற்று நிராகரித்தவர்களும் உண்டு வாசித்து புளதாகிதம் அடைந்தவர்களும் உண்டு என்று அவருடைய படைப்புகளின் சாராம்சத்தை விளக்கி கூறி சுந்தரராமசாமி சொல்கிறார்.

தலை மறைவுக் குறிப்புகளில் லிசா கூறியதாக ஒரு காட்சி வரும் அவள் வறுமையின் காரணமாக இழி தொழிலுக்கு வந்துவிட்ட போதிலும் என் கௌரவத்திற்கு ஏற்பட்ட இழுக்கின் பொருட்டு யாராவது ஒருவரை பழிவாங்கும் பொருட்டு என் வெறுப்பை உன் மீது கொட்டினேன் .உன்னை எள்ளி நகையாடினேன் .நான் அவமதிக்கப்பட்டேன் எனவே நானும் யாரேனும் அவமதிக்க விரும்பினேன். அவர்கள் என்னை தூசு மாதிரி நடத்தினார்கள் எனவே நானும் வலிமை காட்ட விரும்பினேன் என்று கூறுவதாகவும் உளவியல் பண்புகளை பின்னால் வந்த உளவியலாளர்கள் சொன்னதற்கு முன்பே தன்னுடைய கதாபாத்திரங்களில் பொருத்திருப்பதாக அவருக்கு புகழாரம் சூட்டுகிறார் எஸ் வி ராஜதுரை.

தஸ்தாயெவ்ஸ்கியின் தனித்துவம் என்பது நாவல்களை  வாழ்வின் வெளித்தோற்றங்களை கண்ணாடி என கருதாது, வாழ்வின் உள் முகங்களை ஊடுருவி பார்க்கும் முயற்சியில் விளைந்தது என்கிறார் .குதிரைகள் பூட்டிய வண்டிகள் செல்லும் போது அவர்கள் ஏன் அழுகிறார்கள்? அவர்கள் ஏன் அழுகிறார்கள் ?என டிமீட்டரி கேட்கிறான் அது குழந்தை தான் அழுகிறது என்கிறான் பதில். ஏன் அழுகிறது? எனும்போது குழந்தை குளிரில் வாடுகிறது. அதன் மெல்லிய ஆடை தாங்கக் கூடியதாக இல்லை. ஏன் அப்படி? என்று கேட்கும் போது ஏனென்றால் அவர்கள் ஏழை மக்கள் சாப்பிட அவர்களுக்கு ரொட்டி இல்லை. அதனால் பிச்சை எடுக்கிறார்கள் என்றார். அதனைக் கேட்டவுடன் அவன் மனதில் இரக்க உணர்வு  சுரக்கிறது என்று ஒருவன் கனவு முடித்து விழித்தெழும்போது கூட சமூக பார்வையோடு எழுகிறான் என டிமிட்ரிக்கு புகழாரம் சூட்டுகிறார்.

உங்கள் சகோதரன் உங்களுக்கு தீங்கு செய்தால் ஏழு தடவை அல்ல 700 தடவை மன்னிக்கும்படி தான் நான் சொல்லுவேன் என்ற அறை கூவலின் சாரத்தை அறியாதவர் அல்ல. தஸ்தாயெவ்ஸ்கி. மகத்தான மானுட கனவுகளை எதிரொலிக்கும் படைப்புலகம் அவருடையது. தன் ஆத்மாவின் நிரந்தர ஜோதியாக எரியும் மகத்தான லட்சியங்கள் குறியீட்டையே மறுதலிக்கும் நிலை வரை அவனை கொண்டு செல்லும் மன உச்சம் இது. மானுடமே மகத்தானது என்கிறான் .லட்சியங்களை விடவும் கனவுகளை விடவும் மானுடத்தை புழுதியில் புரட்டும் சகல கீழ்மைகளுக்கும் எதிராக தனது எளிய கதாபாத்திரம் மூலம் தீர்ப்பு வழங்குகிறான் என்று ஜெயமோகன் கூறுகிறார்

உலகின் தலைசிறந்த நாவல் எது என்றால் போரும் அமைதியும் என்று கூறப்பட்டாலும் உலக இலக்கியத்தில் தலைசிறந்த நாவலாசிரியர் யார் என்று கேட்டால் பியோதரை தான் சொல்வார்கள். மரண தண்டனை விதிக்கப்பட்டு தனக்கு மரணம் நெருங்கி வரும் என்ற மனவேதனை தரும் சித்திரவதைகளை எல்லாம் அனுபவித்த பிறகு நீ இனிமேல் போகலாம் உன்னை மன்னித்தாயிற்று என்று யாராவது ஒரு மனிதன் சொல்லப்பட்டிருந்தால், அப்படிப்பட்ட ஒரு மனிதன் மட்டும்தான் அவன் அந்த கணத்தில் அனுபவித்த வேதனைகளையும் சித்திரவதைகளையும் விரிவாக சொல்ல முடியும் என்று தன் பாத்திரத்தின் வழியாக வாக்குமூலம் அளிக்கிறார் என்று எம்.ஏ சுசிலா தனது கட்டுரையில் சொல்லி இருப்பார்.

தஸ்தாயெவ்ஸ்கியின் ஆக்கங்களில் தீவிர இன்பியல் முக்கிய பங்காற்றுகிறது என்று பக்தீன் தெரிவிக்கிறார் .மூன்று கதைகளின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார் "அவர் எப்போதும் மிக அசாதாரணமான எதார்த்தத்தை எடுத்துக் கொள்கிறார் .நாயகனை புற உலகில் அல்லது அகவுலகில் அசாதாரண தளத்தில் பொருத்துகிறார். பின்னர் நாம் வியக்கும் வகையில் மிகுந்த கூர்மையுடன் நாயகனின் ஆன்மாவை ஊடுருவி செல்லும் வகையில் அந்த கதையில் நாயகனின் நிலையை சொல்கிறார் என்று எழுதுகிறார். எதிர்நிலை சிக்கல் உரையாடல் வடிவத்தை போன்றது என்கிறார் பக்தீன்

முரண்பட்டு பிரிந்து நிற்பவன் என பொருள்படும் ரசிய சொல்லை உணர்த்தும் பெயர் கொண்ட மாணவன் ரஸ்கோல்னிகோவ். வட்டிக்கு கடன் கொடுக்கும் மூதாட்டி ஒருவரை உயர் நன்மையின் பொருட்டு கொலை செய்வதென்று திருகலான தர்க்கவிசாரணை ஒன்றின் முடிவில் தீர்மானிக்கிறான் .குற்றமும் தண்டனையும் நாவலின் கதை இந்த குற்றச்செயலுக்கு இரண்டு நாட்கள் முன்னர் துவங்கி அடுத்த இரு வாரங்களில் ரஸ்கோல்னிகோவ் எதிர்கொள்ளும் பல்வகை அனுபவங்களை விவரிக்கிறது. தேடப்படுவது குற்றவாளி என்றல்லாமல் தேடல் என்ற குற்றச் செயலின் உந்துவிசையை நோக்கி திரும்புகிறது. உண்மையான தேடல் கொலைகாரனாலேயே மேற்கொள்ளப்படுகிறது. தான் செய்த குற்றத்தின் காரணமாய் அமைந்த உள்நோக்கங்களை கண்டறிவது இத்தேடலின் லட்சியம். இவ்வாறு இந்த நாவல் மிக சிறப்புடன் அமைந்ததற்கு தஸ்தாயெவ்ஸ்கியின் நடையும் முக்கியமாய் இருக்கிறது.

இவ்வாறு பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி குறித்து அறிய விரும்புவார்கள் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் தான் இது. இதில் அந் நாவலின் உள்நோக்கத்தில் என்னென்ன கருத்துக்கள் சுவைப்பான சம்பவங்கள் கதாபாத்திரத்தின் உளவியல் தன்மை போன்றவற்றை குறித்த ஆளுமைகளின் கட்டுரைகள் இவர் குறித்த மேலதிக செய்திகளையும் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த கட்டுரைகள் எல்லாம் படித்து முடித்த பின் மேலும் இவரின் புத்தகங்களை எல்லாம் மறு வாசிப்பு செய்து அதனை நினைவு கூற வேண்டிய கடமையையும் இந்த புத்தகம் ஏற்படுத்துகிறது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment