Wednesday, 5 April 2023

book-28


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-12
Book-28
Pages-215

கவிதையின் அந்தரங்கம் 
க.வை பழனிச்சாமி

மனித உரையாடலுக்கு வெளியே சொற்களுக்கு ஒரு பயனும் இல்லை மொழியின் சொற்களில் மனித அனுபவம் மட்டுமே சேகரமாகிக் கிடக்கிறது

தி இந்துவில் பழனிச்சாமியின் கட்டுரைகளை பலமுறை படித்திருக்கிறேன். கவிதைக்கு உண்டான நுட்பத்தை நுணுகி அலசி ஆராயும் அவரின் கட்டுரைகள் என்றும் மனதுக்கு நெருக்கமானவை இந்த புத்தகமும் அப்படித்தான்.

கவிதை வாசிப்பது வார்த்தைகளை படிப்பதல்ல. குறிப்பிட்ட கவிதைக்குள் சென்று முழுமையாக வாசித்து கவித்துவத்தை அறிவது. யாருடைய கவிதைகளைப் பற்றி நாம் பேசினாலும் பழக்கமான சில கவிதைகளை திரும்பத் திரும்பச் சொல்லி மகிழ்கிறோம். அல்லது ஒரு மதிப்பீட்டை பதிவு செய்கிறோம். ஆழமாக சென்று வாசிக்காத பல கவிதைகள் தேங்கி கிடக்கின்றன. கவிதை வாசிப்பு அவ்வளவு எளிதானதல்ல. தேர்ந்த வாசகனுக்கு மட்டுமே திறந்து காட்ட என வைத்திருக்கும் அந்தரங்கமே கவிதை என்ற இந்த பத்தியை படிக்கும் போது அவரின் மொழிகளும் நமக்கு தெரிகிறது.

கவிதைக்கு இடையிலான உரையாடல் தான் அவரின் கவித்துவத்துக்கு உண்மையான அடையாளம். பெட்டிக்கடை நாராயண் இடத்தை இன்று பெரிய வணிக நிறுவனங்கள் பிடித்துக் கொண்டனர்.விழுங்க தொடங்கி விட்டன. இந்த இடத்தில் பிச்சமூர்த்தியின் கவிதை ஆழம் வியக்க வைக்கிறது..

*மூட்டையை பிரிக்கும் முன்னர் 
முந்நூறு பேர் இருந்தால் 
சலிப்பது எங்கே 
புடைப்பது எங்கே 
புண்ணியம் செய்யத்தான் 
பொழுது எங்கே?

இந்த மனம் தான் தற்கால வாழ்தல். இன்றைய வாழ்தலுக்கும் பொருந்துவது கவிதையின் ஆற்றல்.
பூட்டி இருந்தால் பேர்த்தெரிய முயலாதே குடைக்கம்பி தேடாதே.. என்று நெருங்கி அன்போடு பேசுகிறது காட்டுவாத்து கவிதை.

அறிவைப் புறங்களில் தேடல் கற்றுக் கொண்டவற்றுக்கு வெளியேயும் பயணம் செய்கிற மனம் என்று சி. மணியின் ஆளுமையை சொல்ல வருகிறார். பழக்கம் எனும் தலைப்பில் அவரின் கவிதை

பழக்கத்துக்கு இவன் ஒரு அடிமை 
பழக்கமற்ற எதையும் இதுவரை 
செய்ததில்லை -இனிமேல் 
செய்யப் போவதில் பழக்கமற்றது 
சாவது ஒன்றுதான் 
சாவதும் 
பழக்கமானதோ என்னவோ 
அதுவும் நாள்தோறும்.

வாசித்து முடிக்கும் போது முதல் வரியும் இறுதி வரியும் இணைந்து கவிதை மீது அறியாத வெளியில் வினை வெளிச்சம் படுகிறது.

ஞான கூத்தனின் கடைசி பெட்டி கவிதைகள் ஒரு ரயில் நிலையத்தை கண்முன்னே கொண்டு வருகிறார் .அதற்கான விளக்கத்தை எழுதும்போது "எஞ்சிய இட்லியோடு ஒருவன் ஓடுகிறான்" என்ற வரியில் அவசரமும் போதாமையும் தெரிகிறது. ரயிலில் காட்சிப்படுத்த ஏராளமான நிகழ்வுகள் இருக்க கவிதைக்குள் இந்த இரண்டு நிகழ்வுகள் மட்டுமே வருகின்றன. கவிஞனின் மனம் எந்த உணர்வை வாசகனுக்கு ஏற்படுத்த விளைகிறது. அன்பு அவசரம் போதாமை போன்ற உணர்வுகள் இந்த இரண்டு நிகழ்வுகளிலும் வெளிப்படுகின்றன. சற்று நேரத்தில் ரயில் போய்விடும் என்பதில் வலியை உணர்கிறோம். அவரவர் அனுபவம் சார்ந்த யாரையும் இட்டு நிரப்பி கொள்ளலாம்.

நான் என்னையே தேடிக் கொண்டிருக்கிறேன் கவிதையில்.. ஒரு வரி நகுலன் இப்படி எழுதுகிறார்
" மௌனம் என்னை கைதட்டி அழைத்தது" என்று. மௌனம் ஒருவித உறவாக நெருங்கி இருப்பதை உணர்கிறோம். இந்த வரி அதிகமாக நம் மனதை நெருங்கி உறவாடும்.

ஆயுள் ஆயிரம் என்றாலும்
 மிச்சங்கள் இருக்கும் மலை போல் 
வாழ்ந்து கொண்டிருப்பது முக்கியம் கிடைத்தவற்றை 
முடிந்தவற்றை 
பொறிகள் வியப்புடன் உண்டு 
நக்கிச்சுவைத்து 
சீரணத்திற்கேற்ப
மென்று உண்பது 
முக்கியம்

வாழ்கிற கணத்தை பேசுகிற அதே நேரத்தில் முடிவிலியின் பேராண்மையையும் உணர்த்துகிறது கவிதை என்று சுந்தர ராமசாமி எழுதுகிறார்

வார்த்தைகள் மூடுகின்றன ஊற்றை 
வார்த்தைகள் தடுக்கின்றன காற்றை 
வார்த்தைகள் மறைக்கின்றன தழலை 
வார்த்தைகள் பறிக்கின்றன காலடி மண்ணை 

தேவதச்சன் எழுதிய இந்த நான்கு வரிகள் கவிதை குறித்து கவிதை. கவிதை காட்டும் இரக்கம். ஒட்டுமொத்த மானிடத்தின் மீது விழுகிறது. சரிதல் என்ற சொல் வைத்திருக்கும் பின்புறம் யாருக்கும் பொருந்துகிறது.

 சாளரத்தை திறந்து பார்க்கும் போது காட்சிகள் இருக்கின்றன. ஆனால் கவிதைக்குள் இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்கிறது மனிதனோ அல்லது பொருளை கவிதைக்குள் பார்ப்பதற்கு கவிதைக்கு வெளியே பார்ப்பதற்கும் வேறுபாடு உள்ளது. கவிதைக்குள் காணும் எல்லாமும் பொருளாகவும் அர்த்தமாகும் வாசகனை நெருங்குகிறது .இந்த பொருளும் அர்த்தமும் அந்த நேரம் பிறப்பவை கவிதையாகும் இடம் அதுவாகவும் இருக்கலாம்

மேலும் 
கவிதை எழுதுவது 
என்பது 
ஒரு குண்டு பல்பை 
ஹோல்டரில் மாற்றுவது போல இருக்கிறது 

எளிய தினசரி வாழ்வில் இருந்து கவிதையின் பேரொளி பார்வைக்கு வருகிறது

#அது கானகத்து பறவையாம் 
அடிக்கடி தென்படாதாம் 
அபூர்வமா

 அது 
திரும்பிய வழியில் திரும்பிப் போனது 
அதுவரை அறைக்குள்
 வாழ்ந்த கானகம் 

பறவையோடு காண வேண்டும் திரும்பிப் போவது பறவையால் நிகழ்கிறது அந்த மாயப்பறவையை பின்தொடர்பு வாசகம் என்று சுகுமாரனின் கவிதையை நமக்கு படம்பிடித்து காட்டுகிறார் பழனிசாமி

*ரசித்தது

*கவிதை அறிவுடன் தொடர்பு கொள்ள முயல்வதில்லை உணர்வுடன் தான் உறவாட முயல்கிறது

*உள்ளத்தின் வேட்டை வார்த்தையில் தோணுமா என்கிறார் இந்த எண்ணம் தான் கவிதைக்குள் அவரை வழி நடத்தியது

*கொட்டி விட்ட தண்ணீர் 
தரையில் ஓடியது .ஓடி 
சற்று தூரத்தில் நின்று விட்டது 
வலி தெரியாது போல் 

நீரின் ஓட்டமே கவிதைக்கான நிகழ்வாக்குகிறது

ஒரு நல்ல கவிதையை நல்ல வாசக பார்வையுடன் பார்த்து அதனை விவரித்து மிக எளிமையாகவும் நாம் காண தவறிய ஒன்றை நமக்கு விளக்கிச் சொல்லும் போது அந்த கவிதை இன்னும் நம் மனதில் மேன்மையாகப் படிகிறது. இதை இத்தனை நாள் நான் கவனிக்கவில்லையே என்ற குற்ற உணர்வும் தெரிகிறது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment