Sunday, 9 April 2023

Book-43


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-16
Book-43
Pages-1216

புதிய தரிசனங்கள்
-பொன்னீலன்

நாவல் கம்யூனிஸ்ட் கட்சிகளை பற்றிய நூல் என்பதால் அதன் விவரங்களை தெரிந்து கொள்வோம். சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை தீர்க்க ராணுவ நடவடிக்கை வழி கிடையாது பேச்சுவார்த்தை தான் ஒரே வழி என்று கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இ.எம்.எஸ், ராமமூர்த்தி போன்றவர்கள் வாதாடினார்கள். ஆனால் டாங்கே போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சீனாவுக்கு எதிரான நேருவின் ராணுவ நடவடிக்கைக்கு டாங்கே தலைமையான கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவளித்தனர். சீன ஆக்கிரமிப்பு பிரச்சினையில் நேரு வழி ஆதரித்ததால் இ.எம் எஸ் போன்றவர்கள் காங்கிரசின் வால் என்று கடுமையாக விமர்சனம் செய்தனர். பதிலுக்கு அவர்கள் சீன ஏஜெண்டுகள் என முத்திரை குத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் என இரண்டாக உடைந்தது.  1967 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நக்சல் பாரி கிராமத்தில் நடைபெற்ற உழவர் எழுச்சியால் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என மூன்றாவது ஆக கட்சி பிரிந்தது. ஆக இந்த மூன்று கட்சிகளும் தான் முக்கியமாக தற்போது உள்ளது.

அதன் பின்பு இந்திரா காந்தி எடுத்த எமர்ஜென்சி நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தது இந்தியாவில் இரண்டே கட்சிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்(CPI) அதிமுகவும் தான். மற்ற அனைத்து கட்சிகளும் இந்திரா காந்திக்கு எதிராகவே இருந்தன. இந்த எமர்ஜென்சி காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பெரு மன்றம் சார்பில் எமர்ஜென்சி ஆதரித்ததால் ஏற்பட்ட விளைவுகளையும் அதன்பின் ஏற்பட்ட மன கசப்புகளையும் இந்த நாவல் விளக்குகிறது. பொதுவாக இடதுசாரிகளிடம் உள்ள முக்கியமான விஷயம் என்னவென்றால் மற்ற கட்சிகளை விமர்சனம் செய்வதோடு அவர்களும் சுயவிமர்சனம் செய்து கொள்வார்கள். அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பொன்னீலன் அவர்கள் இந்த நாவலின் வழியாக சுய விமர்சனத்திற்கு வழிகாட்டி உள்ளார்.

#கதை

நாவலின் கதையானது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகில் உள்ள அனந்தனூர் எனும் கற்பனை கிராமத்தில் நடப்பது போல் காட்டி உள்ளனர். இதில் மூன்று குடும்பங்கள் அதாவது மூன்று வர்க்கங்கள் என்று சொல்லப்படக்கூடிய பெரிய தெருவில் மேல் தட்டு வர்க்கமும் நடுத்தெருவில் இடைப்பட்ட சமூகமும் அடித்தட்டு பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகமும் வசித்து வருகிறதாக நாவலில் வருகிறது. மேல்த்தட்டு வர்க்கங்கள் போல தியாகி ராமநாதன் காங்கிரசை சேர்ந்தவராகவும் மேகநாதன் குடும்பமும் நடுத்தர வர்க்கத்தினரின் முந்திரி ஆலை தொழில் அதிபர் காளியப்பன் குடும்பம் மற்றும் ரங்கசாமி குடும்பத்தில் மூன்று பேர் உள்ளனர். அவர்களில் முறையே இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என மூன்று கட்சிகளை சேர்ந்தவர்களும் உள்ளனர். இதில் ராகவன் என்னும் கதாபாத்திரம் அரசு ஊழியராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈடுபாட்டாளராக உள்ளார். கீழ் தெருவில் உள்ள முக்கியமானவர்களில் செல்லையா அர்ஜுனன் துரை ஓவியர் திரவியம் உள்ளிட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கதையின் ஆரம்ப பகுதியில் முந்திரி ஆலையில் வேலை செய்து வரும் லட்சுமியை மேஸ்திரி அடித்து விட ஒட்டுமொத்த தொழிலாளர்களும் போனஸ் உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். விவரம் அறிந்த காளியப்பனின் மகன் அவர்கள் கோரிக்கை நிராகரிக்கிறார். ஆனால் காளியப்பன் அதெல்லாம் செய்து தருவதாகவும் அரவணைத்து செல்கிறார். இது தொழிற்சாலைகள் சம்பந்தமான போராட்டமாய் நாவலில் வடிவமைக்கப்பட்டுள்ளது

மற்றொருபுறம் அடித்தட்டு மக்களான ஓவியர் திரவியம் ஒரு நாள் சலூன் கடையில் இருக்கும் போது பெருமாள் என்பவர் தகராறு ஏற்பட்டு அங்குள்ள கீழ் தட்டு மக்களை அநாகரிகமாக திட்டி சண்டையில் ஈடுபடுகிறார். இது சமூக அடக்கு முறையாக நாவலில் சொல்லப்படுகிறது. மூன்றாவதாக விவசாயத் தொழில் குத்தகை செய்து வரும் கீழ் தட்டு மக்களான செல்லையா என்பவரை குத்தகை நிலத்தை பிடுங்குவதற்காக முயல்கின்றனர் மற்றொரு குழுவினர். இவ்வாறு ஒரே கிராமத்திலேயே தொழில் விவசாயம் சமூக பிரச்சினைகள் குறித்து பேசி உள்ளனர்.

எமர்ஜென்சி கால கட்டங்களில் இளைஞர் மன்றத்தினர் இந்திரா காந்திக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கின்றனர். இதனால் இளைஞர் பெருமன்றத்திலிருந்து விலகி வாலிபர் சங்கம் என்பதனை ஆரம்பித்து அதே கிராமத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர் ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கின்றனர். இவர்களுக்கு உண்டான வாக்குவாதம் உரையாடலும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஜே பி ஆதரவு கூட்டம் நடக்கிறது. அதில் சிபிஎம் டிஎம்கே எம்எல் ஜனதா கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு காந்திய பொருளாதாரத்தை ஆதரிக்கின்றனர். அதற்கு நேர் எதிராக இந்திரா காந்தி ஆதரித்து கூட்டமும் நடத்துகின்றனர் அவர்களின் 20 அம்ச திட்டத்தினை பற்றி கூறுவதோடு முதல் பாகம் நிறைவுறுகிறது.

அவசரநிலை என்பது சர்வாதிகாரமாக ஆகும்போது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர் பெருமன்றத்தினர் உணர தொடங்குகின்றனர். 20 அம்ச திட்டத்தில் ஏற்படும் முரண்பாடு மேலிட அழுத்தம் போன்றவை அவர்களிடையே கொஞ்சம் வெறுப்பினை ஏற்படுகிறது. இதனுடைய பிரேம் என்பவர் ஜன சங்கத்தின் சார்பாக சமய மாநாடு அம்மன் விழா தேர்த்திருவிழா போன்றவற்றையெல்லாம் நடத்துகின்றனர் .இன்னும் சிலர் இளைஞர் பெருமன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைகின்றனர் ஆனால் இவர்கள் சேர்ந்த ஓரிரு நாளில் திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்படுகிறது. பின்பு மீண்டும் ஒரு சிலர் அதிமுகவில் இணைகின்றனர்.

1977 மார்ச் 21ஆம் தேதி எமர்ஜென்சி விளக்கிக் கொள்ளப்படுகிறது. ஆனாலும் கிராமத்தில்
பெரு முதலாளிகள், அதிகாரிகள் மாற்றுக் கட்சியினர் அனைவரும் இணைந்து இளைஞர்களை தாக்குகின்றனர்.தகராறுகள் தலைமறைவு வாழ்க்கை தொடர்ந்து நிலவி வருகிறது. ராகவன் அரசு ஊழியராக இருந்து ஆதரவு தெரிவித்ததால் அவருடைய வேலையும் தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறது. பின்பு நண்பர்களுக்காக அவர் ஜாமீன் எடுத்து உதவுகின்றார். இன்று அனைவரும் விடுதலையாகிய கிராமத்துக்கு வரும் போது அனைவரும் ஒரு அறிவார்ந்த உரையாடல் நிகழ்த்துகின்றனர். கட்சியின் அடித்தட்டு மக்களை கேட்காமல் மேலிருந்து கொடுக்கும் அழுத்தம் காரணமாக பல்வேறு நிலைகளில் நாம் பலவீனப்படுகிறோம் என்பதை அந்த உரையாடலில் தெரிவிக்கின்றனர்.
அதில் காங்கிரசை ஆதரித்தது தப்பு எனவும் ஆதரிக்க வேண்டிய நிலை என்ன தேவை என்ன எனவும் விரிவாக அலசுகின்றனர். எம்.எல்-ரகுராமன் மார்க்சிஸ்ட் ரங்கசாமி, இ. கம்யூனிஸ்ட் ராகவன் மூவரும் உரையாடலில் பல்வேறு காரண காரிய கேள்விகளும் பதில்களும் முன் வைக்கப்படுகின்றன

சர்வாதிகாரம் குறித்து பேசும் போது தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது சிறுபான்மை சுரண்டல்வாதிகளை அடக்க பெரும்பான்மை உழைப்பாளி மக்கள் சர்வாதிகாரம் செய்வது ஆகும்.ஊருக்கு வருவோரை உற்சாகமாய் வரவேற்றும்,
ஒவ்வொரு தாய்மார்களின் உணர்வுகளையும் மிகவும் உணர்ச்சிகரமாக பதிவு செய்துள்ளார். நாவலில். இறுதியில் அனைவரும் கட்சி அலுவலகத்திற்கு செல்லும் போது ராகவன் தோழர்களிடம் விவாதிப்பதாக நாவல் நிறைவு பெறுகிறது. அரசியல் குறித்த விவாதம் முடிந்து மனிதத்தன்மை குறித்த நாவலாய் பேசுகிறது.

சமூக எதார்த்த வாதத்திற்கு  ஒற்றை புரிதல் மையம் இருப்பதாக கற்பனை செய்து கொள்வது பண்டிதர் மடமை. வாழ்வுக்கு பல புரிதல் மையங்கள் உண்டு. அவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் பிரம்மம் என அங்கீகரித்து விட்டு இன்னொன்று மாயை என ஒடுக்குவது வன்முறை. வாழ்வின் பல குரல்களை ஒலிக்கப்பட வேண்டும் என நா. முத்து மோகன் முன்னுரையில் கூறியது அவசியமான ஒன்றாகும்

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment