Tuesday, 4 April 2023

book-23


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-11
Book-23
Pages-320

மேய்ப்பவர்கள்
-பவா செல்லதுரை

மேய்ப்பவன் கையிலிருக்கும் குச்சி தண்டிப்பதற்கு அல்ல
வழிநடத்திச் செல்வதற்கே

-படித்தது

கதை சொல்லியாக அறிமுகமாவதற்கு முன்பு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் பொறுப்பாளராக இருந்து தமிழகத்தில் கலை இலக்கிய நிகழ்வை முன்னெடுத்தவரும் தமிழகத்தில் திருவண்ணாமலை வியக்கும் வகையில்  கலை இரவு என்பதை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தியவர்கள் கருப்பு கருணாவும் பவாவும் தான். தான் பயணித்த இடதுசாரி இயக்கங்களில் தன்னை செதுக்கிய தன்னை வழி நடத்திய ஆசான்களை பற்றிய ஆளுமைகளின் தொகுப்பு தான் இப் புத்தகம் .பவா செல்லதுரையின் நேர்காணலுடன் புத்தகம் துவங்குகிறது. அதிலேயே அவரின் பிம்பத்தையும் இயக்க வாழ்வையும் கலை இலக்கிய மேடைகளில் பெற்ற அனுபவத்தையும் தன் வாசிப்பு அனுபவத்தையும் அதில் பகிர்ந்து கொள்கிறார்.

ஒரு முற்போக்கு எழுத்தாளர் சங்க மேடையில் கருத்த மனிதர் பேசிய ஐந்தாவது நிமிடத்தில் ஒரு லாரியின் ஹாரன் சத்தம் தொடர்ந்து ஒலித்தது. மேடை நகராதுனே  நீங்கள் தான் சைடு எடுக்கணும் என்ற பதில் ஒட்டுமொத்த கூட்டத்தின் ஆர வாரத்தையும் கையில் எடுத்துக் கொண்டார். அவர்தான் மேடை கலைவாணர் நன்மாறன். பேசுவதற்கு பெரும் கூட்டம் அவருக்கு தேவையில்லை யாரோ ஒரு பாட்டாளி தோழனின் இரு கண்கள் போதும்.  இருமுறை மதுரை கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் எப்போதும் எளிமை தான் அவருக்கு. முதல்வர் ஜெயலலிதா தன் மீது மரியாதை கொண்டது என் மீது மட்டுமல்ல எனது செயல்பாட்டின் மீது எனது கொள்கையின் மீது எனது கட்சியின் மீது என்ற சிலாகிப்போடு கூறுவார். தோழர் சங்கரய்யாவுக்காக மதுரை கிழக்கு தொகுதியின் பணியாற்றிய போது எம்ஜிஆர் அப்போது பிரச்சாரத்துக்கு வந்திருந்தார். எனக்கு ஒரு லட்சம் ஓட்டு போட வாய்ப்பு இருந்தால் ஒரு லட்சம் ஓட்டையும் தோழர் சங்கரய்யாவுக்கே போடுவேன் என்று கூறியதை மனதில் நிறுத்தி எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகமே உன் செயல்தான் மாறாதா என்று அடர்த்தியான சொற்களோடு அவர் பற்றி ஆளுமையை படிக்கும் போது இன்னும் அவர் மீது மதிப்பு கூடுகிறது.

இன்றும் கூட எஸ் ராமகிருஷ்ணனின் புத்தகத்தை எடுத்து பார்த்தால் முன்னுரையில் நன்றி சொல்பவர்கள் வரிசையில் எஸ்.ஏ.பெருமாள் இருப்பார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஒருவராக விளங்கிய தோழர் பெருமாள் தான் அந்தப் பெயர். ஸ்தாபனமே முக்கியம் தனிநபர்கள் அல்ல தனிமனிதர்களின் சங்கிலி தான் இயக்கம். தனி மனிதர்களின் அடர்த்தி தான் அதன் நகர்வு .தனிநபர்களின் தொடர்ச்சியான இயக்கமே அதை முன்னெடுத்து செலுத்துகிறது என்று நல்ல ஒரு அறிமுகத்துடன் அவரை அறிமுகப்படுத்துகிறார்.மார்க்சிய இயக்கத்தில் தொடர்ந்து ஆங்கிலத்தில் வாசிப்பவர்கள் வெகு சிலர்தான் அதில் இவர் ஒருவர்.

உள்ளங்கை சூட்டை பரிமாறிக் கொண்டது முதல் அவரின் கதைகளை என் வாழ்வில் ஒரு அங்கமாக வைத்து பார்த்தவர் தான் மேலாண்மை பொன்னுச்சாமி. ஜெயகாந்தனுக்கு பிறகு ஆனந்த விகடன் அதிகம் கதைகள் எழுதியவர்களில் அவரும் ஒருவர் எளிதான நடையில் எளிமையான மனிதர்களை அருமையாக சொல்லி இருப்பார்.

கோடுகள் இல்லா உலகம் ஒருநாள் வானில் சுழன்றிட வேண்டும் ஏனும் ரமணின் வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் கந்தர்வன். படைப்பாளி காற்றை போல சகலத்தையும் மீறி சகலத்திலும் பரவிட வேண்டியவன். நம் எல்லா பாசாங்குகளும் காலத்தின் முன் எப்படியோ கலைந்து விடுகின்றன. நாம் கட்டிய வேஷம் கலைய ஒரு ஆலங்கட்டி மழை கூட வேண்டாம். வெறும் தூறலுக்கே கரைந்து விடுகிறது. காலம் தான் நம்மை வாழ்வில் முன் இப்படி நிர்மூலம் ஆக்குவது என கந்தர்வனை பற்றி சொல்லிய வரிகள் இவை. பத்தினி ஓலம் கதைகளைப் பற்றி சொல்லிய கதை இன்னும் காதல் ஒலிக்கிறது. இறுதியில் அடக்கு முறையில் வர அழிவிக்கும் புரட்சியில் வர்ற அழிவுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியல. ஆனா தம்பி என்னோட ஒரே நம்பிக்கை மார்க்சியம் தான் என்றார் கந்தர்வன்.

நான் ஏன் நாத்திகன் ஆனேன் 
கற்பூரம் வாங்க காசு இல்லாததால் 
நான் கிறிஸ்துவனானேன் 
மெழுகுவர்த்தி கூட இருபத்தைந்து காசு 
இப்போது நான் முஸ்லிம் ஆனேன் 
லுங்கி கட்டாத கோவனதாரிகளை 
மசூதிக்குள் அனுமதிப்பதில்லை 
இப்போது நான் நாத்திகன் ஆனேன்.

எனும் பிரளயன் கவிதைகளை முன்வைத்து அவர் குறித்த பணியாற்றிய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். தமிழ் நாடக மேடை உலகில் முருக பூபதிக்கு என்று தனித்த இடம் உண்டு நாடகம் பார்த்து அனுபவத்தையும், கிராமிய பாடல்கள் பாடும் போது தவறாமல் ஒலிக்கும் இரு பெயர்கள் கரிசல்களில் கிருஷ்ணசாமியும
 வையம்பட்டி முத்துச்சாமியம் அவர்களுடைய ஆளுமை திறத்தையும் நமக்குச் சொல்லி இருப்பார். மேலும் பல்லவன் உதயசங்கர் பற்றியும் உதயசங்கரின் யாவர் வீட்டிலும் கதையை ஒரு நல்ல கதையாக நமக்கு அறிமுகப்படுத்தி இருப்பார்.

தமுஎச மேடையில் கதை சொல்லியாய் அறிமுகமான வேல ராமமூர்த்தி நல்ல ஒரு சிறுகதை எழுத்தாளர்.என்னுடன் தங்கி இருந்த ராமமூர்த்தியோடு கோணங்கியும் வந்து சேர ஒரே குதூகலம் தான். இந்தியா டுடேவில் இருளப்பசாமி 21 கிடாய்களும் கதை வந்திருந்தது. அது அவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது .வேலாவின் கதைகளில் ஜாதி பெருமிதமாய் குறிப்பிடாமல் கதையோடு சொல்லி இருப்பார். இழிவுகள் புறக்கணிப்பு பெருமிதம் அவமானம் எல்லாவற்றையும் ஒருசேர அவருடைய கதைகளில் காணலாம். மதுரையின் இன்னொரு அடையாளமாய் வாசிப்பையும் பண்பாட்டையும் கள செயல்பாட்டாளராக நின்று போராடும் அ. முத்துகிருஷ்ணன் பற்றி சொல்லிய விதம் நன்று. அதேபோல் முகவை பாலாஜியாக அறிமுகமாகி பின்னாடி பெரிய மேடைப் பேச்சாளராய் வளர்ந்த பாரதி கிருஷ்ணகுமார் குறித்தும் அறிமுகப்படுத்திய கந்தர்வன் குறித்தும் நன்றியுடன் நினைவு கூறுகிறார். பல கவிதைகளை கவிஞர்களே மறந்திருக்க கூடும் ஆனால் பாரதி கிருஷ்ணகுமார் பேச்சில் பட்டதும் அந்த சொற்களுக்கு புதிய உரம் வந்துவிடும்.

டிசம்பர் 25ஆம் தேதி தமுஎச மேடையில் காவல் கோட்டம் நாவல் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தின் அடர்த்தியே பிரமிப்பாய் இருந்தது. அந்த ஆண்டு ஆனந்த விகடன் சிறந்த நாவல் பட்டியலில் அதுவும் வந்தது. ஒரு வாரத்துக்குள் சிறந்த நாவலா என்று பிரபஞ்சனிடம் பேசிக் கொண்டிருந்தபோது சிபாரிசு செய்ததே நான் தான் என்றார். முதல் 200 பக்கங்கள் படித்த உடனே தமிழின் சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று என்ற ஒப்புக்கொண்டார். அதில் வரும் கிழவியின் பாத்திரத்தை போல் உயர்ப்புள்ள ஒரு பாட்டியை இதுவரை கண்டதில்லை என ஜெயமோகன் எழுதினார்

இன்னும் மீதம் இருக்கும் கம்யூனிஸ்ட் என்ற பகுதியில் வி.பி குணசேகரின் அறிமுகம். தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஆளுமை.  அந்த காலத்தில் பிஇ படித்து ஒரு நிறுவனத்தில் பொறுப்பில் இருந்து பின்னர் பழங்குடி மக்களின் போராட்டங்களில் ஈடுபட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராக தன்னை இணைத்துக் கொள்கிறார். மலைவாழ் மக்களே ஒவ்வொரு வனத்தின் ஆதார சக்தி .அவர்களற்ற வனம் பெறும் பாலைவனம் என்பார் .எந்த பழங்குடி வீட்டிலும் தேவைக்கு அதிகமாக ஒரு மூட்டை தானத்தை கூட பார்த்ததில்லை என வியப்போடு அவர் சொல்லி இருப்பார். மாற்றப்படும் வனச் சட்டங்கள் அவர்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் எவ்வாறெல்லாம் மாற்றுகின்றன என்பதை களத்தில் நின்று போராடும் அவர் நிச்சயம் போற்றப்பட வேண்டிய தோழர்

#ரசித்தது

*இரண்டு பேர் பீடி குடிப்பதை பார்த்து நானும் அதை கைக்கொண்டால் என்னவென்று ஆர்வம் மேலிட்ட ஆளுமைகள் ஒருவர் மம்முட்டி இன்னொருவர் நன்மாறன்.

*மனம் எங்கள் காரை வந்து பழ மயில்கள் சென்று கொண்டிருந்தது

இது போன்ற பல ஆளுமைகளைப் பற்றி தெரிந்து கொண்டது நிச்சயம் புத்துணர்ச்சியும் பெருமித்தையும் தந்தது. 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment