#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-8
Book-15
Pages-479
அன்பெனும் தொட்டத்திலே
-ஓஷோ
வாசிப்பின் ஆரம்ப காலத்தில் கல்கி மு.வ இறையன்பு போன்றவர்களின் வரிசைக்கு பிறகு அதிகம் வாசித்தது ஓஷோ அவர்களை தான். ஒரு கேள்வி அதற்கான பதில்.. அது சம்பந்தமான ஆன்மீகத்திலோ அல்லது தத்துவத்திலோ அல்லது மனித வாழ்விலோ நடந்த ஒரு சுவையான சம்பவத்தை சொல்லி தான் சொல்ல வந்த கருத்தை எவ்வளவு தூரம் விளக்க முடியுமோ அவ்வளவு தூரம் விளக்குவார் .அறியாமை, ஞானம் , உளவியல் காரணங்கள் போன்ற ஒவ்வொன்றும் அவரின் கட்டுரைகளில் வெளிப்படும் .ஆனால் இவை அனைத்துமே அவர் எழுதியதில்லை பேசியது என்று நினைக்கும் போது பிரமிப்பாய் இருக்கும் .எல்லா மதங்களையும் சகட்டுமேனிக்கு திட்டுவார் ,எல்லா மதங்களில் உள்ள உண்மை தன்மையை மனதார பாராட்டுவார். அந்த வகையில் இந்த புத்தகத்தின் மூலம் பல எண்ணக் கதவுகள் திறக்கும் வகையில் ஒவ்வொன்றும் அமைந்திருந்தன.
ஒருநாள் ஒரு இளைஞனிடம் அறியாததை தேடு என உபதேசம் செய்தேன் .ஏன் ?எப்படி ?அறியாததை எப்படி தேட முடியும். அது என்னவென்றே தெரியாத போது எப்படி எங்கே தேடுவேன். நாம் அறிந்ததைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம். தெரிந்ததை தேட ஆரம்பித்தால் நாம் ஒரு சிறிய வட்டத்துக்குள் தேடிக் கொண்டிருப்போம் .செக்கு இழுக்கும் மாட்டை போல. அறியாததை தேடுங்கள் என்று அதற்கான விளக்கத்தையும் முழுவதும் சொல்லி இருப்பார். அறிந்தது மனம் அறியாததே கடவுள்.. இப்படி தத்துவ சொற்கள் ஒவ்வொன்றிலும் தோட்டாக்கள் போல தெரிக்கும்.
மனிதனின் அகங்காரம் தன்னுணர்வற்ற இருண்ட மூலையிலிருந்து செயல்படுகிறது .அது எப்போதும் வெளிச்சத்துக்கு வராது. இதற்கு உதாரணமாக ஆங்கிலேயர்கள் எப்போதும் நகைச்சுவை துணுக்கை கூறினால் மூன்று முறை சிரிப்பார்களாம். முதலில் அதை கேட்கும் போது அவர்களுக்கு அந்த துணுக்கு புரியாது என்றாலும் சிரிப்பார்கள். சொன்னவர்கள் மனம் புண்பட்டு விடக்கூடாது என்று. இரண்டாவது முறை நடு இரவில் பாதி தூக்கத்தில் திடீரென்று அந்த துணுக்கு புரிந்து விடும் போது சிரிப்பார்கள்.. ஓஹோ இதுதானா என்று. மூன்றாவது முறை சிரிப்பது எதற்காக என்றால் இது கூட நமக்கு தெரியாமல் முட்டாளாக இருந்து விட்டேனே என்று. அகங்காரத்தை இதுபோல் நாமே எண்ணிக் கடந்தால் தான் உண்டு.
ஒரு தொழிலதிபர் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார் வலையில் ஒரு மீன் சிக்கியது ஆனால் அந்த மீன் பேசத் தொடங்கியது. என்னை மீண்டும் நீரில் போட்டால் உங்களுக்கு நான் மூன்று வரங்கள் தருவேன் என்றது. தொழிலதிபர் பேச்சுவார்த்தை நடத்திப் பழக்கப்பட்டவர் யோசனைக்கு பின்
ஐந்து வருடங்கள் தாயேன் என்றார்.
இல்லை மூன்று வரங்கள் தான் என்றது
சரி நான்கரை தா என்றார். இல்லை மூன்று தான் என்றது. சரி உனக்கும் வேண்டாம் எனக்கு வேண்டாம் நான்காக தா என்றது .
இந்த முறை மீன் பதில் அளிக்கவில்லை. அது இறந்து விட்டது.
வாழ்நாள் மிகவும் குறுகியது. நாம் இங்கே நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. உங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு
பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று ஒரு சிறு கதைகளின் மூலம் மிகப்பெரிய உண்மை விளக்கி இருப்பார்.
புரிதல் குறித்து சொல்லும் போது மற்றொரு கதையை சொல்லி இருப்பார். ஆற்றில் நீந்தி கொண்டிருந்த ஒரு மீனை கரையில் தூக்கி போட்டது ஒரு குரங்கு .பாவம் நீ தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தாய் .நல்ல வேளை கடைசி நேரத்தில் நான் உன்னை பார்த்ததால் காப்பாற்ற முடிந்தது என்று வீர வசனம் பேசியது குரங்கு. தன் கருணையால் அது நிச்சயம் மீனை கொள்ளத்தான் போகிறது. இதில் இருக்கும் ஆழமான கருத்தை உணர வேண்டும். அந்த உணர்வு தான் நமது திருப்புமுனை என்று கூறுகிறார்.
சொர்க்கத்துக்கு செல்லும் எல்லா வழிகளும் சொர்க்கம் தான் அது ஒரு மகத்தான வாக்கியம்.சொர்க்கத்தை இலக்காக வைத்துப் பயணம் செய்யாதீர்கள். வழியிலேயே சொர்க்கம் இருக்கிறது நானே வழி கடவுள் வழி இலக்கு அல்ல கடவுள் இங்கிருக்கிறார். அன்று எப்போதோ இருந்தார் என்று சொல்வது சரி இல்லை. கடவுள் என்னுள் இருக்கிறார் .உங்களுள் இருக்கிறார் சுற்றிலும் இருக்கிறார் என்று சொல்கிறார்.
மார்ட்டின் பூபர் அன்பு செலுத்துவதை இரண்டாகப் பிரிக்கிறார் நான்- நீ அன்பு. நீங்கள் ஒரு காரை நேசிக்கிறீர்கள் என்றால் நீங்கள் நேசிப்பது ஒரு ஜட பொருளை மட்டுமே .அந்த ஜடப்பொருளால் ஒருநாளும் உங்களுக்கு சுதந்திரத்தை தர முடியாது. அதீத பற்றுவைக்க தொடங்கும் போது நீங்களும் ஒரு ஜடப்பொருளாக மாறிவிடுகிறீர்கள். அதேபோல் நான் நீ வகை அன்பு. அதில் அன்பு மனங்கள் சந்திக்கின்றன .ஆத்மாக்கள் சந்திக்கின்றன. நுட்பமான பேதங்கள் இருந்தாலும் அதில் பணிவு இருக்கிறது. எந்த எல்லைகளும் பாகுபாடுகளும் இல்லாமல் இறுதிவரை தொடர்கிறது.
#ரசித்தது
*நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள் என்பதில்லை. நீங்கள் அந்த கோபமாகவே மாறிவிடுகிறீர்கள் என்பது தான் உண்மை. கோபத்தின் பிடியில் நீங்கள் இருக்கும் போது செய்யும் செய்கைக்கு நீங்கள் பின்னால் வருத்தப்படலாம்
*ஊழலின் ஊற்றுக்கண் அதிகாரம் தான். மட்டற்ற அதிகாரம் மட்டற்ற ஊழலுக்குத் தான் வழிவகுக்கும்
*முதலாளித்துவம் போகிற போக்கில் ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு மறைந்து விடும். ஒரு மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக சாவதைப் போல முதலாளித்துவம் ஒருநாள் மறைந்துவிடும். ஆனால் அது மாரடைப்பிலோ சாலை விபத்திலோ நிகழும் திடீர் மரணமாக இருக்காது.
*உச்சகட்ட போதனை என்ன?
ஜென் துறவி அது உங்களுக்கு சொந்தமாகும் வரை புரியாது
*புதிதாக பிறக்கும் குழந்தையை பார்த்தால் அண்ணாந்து பார்த்து கடவுள் என்னும் நம்பிக்கை இழக்கவில்லை என்று சொல்வேன் -தாகூர்
எத்தனை முறை படித்தாலும் ஓஷோவின் புத்தகங்கள் கருத்துக்கள் கதைகள் எண்ணல்கள் என ஒவ்வொன்றையும் புத்தகத்தில் படித்து ரசிக்கலாம்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment