Saturday, 1 April 2023

book-16


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-8
Book-16
Pages-304

தமிழ் மண்ணே வணக்கம்
த.செ.ஞானவேல்

உங்களில் எவரேனும் ஒரு தீமையை கண்டால், தமது கைகளால் தடுக்கட்டும் இல்லாவிடில் நாவால் தடுக்கட்டும், அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் தடுக்கட்டும் 
-இஸ்லாம்

ஜெய் பீம் புகழ் த.செ ஞானவேல் கலந்துரையாடிய ஆளுமைகள் பற்றிய தொகுப்பு தான் இந்நூல். சமகாலத்தில் வாழ்ந்த மாபெரும் ஆளுமைகள் குறித்த ஆய்வு போல் இந்நூல் இருக்கிறது. பொதுவாக இது போன்ற நூல்களைப் படிக்கும் போது ஒரு சுய முன்னேற்ற நூல் படித்தது போன்ற தோற்றம் தரும். ஏனெனில் அவர்கள் கடந்து வந்த பாதைகள் பெரும்பாலும் கரடு முரடான பாதைகள். தான் கண்டறிந்த விஷயங்களை அனுபவ பகிர்வு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ளவும் உதவும் என்பதால் இது போன்ற கட்டுரைகளை மிகவும் விரும்பி படிப்பது உண்டு. இதில் 41 ஆளுமைகள் குறித்த கட்டுரைகள் இருக்கின்றன அதில் என்னை கவர்ந்த சில கட்டுரைகளை படித்த சுவையான சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

ஜாதி இன்னும் இருக்கிறதா என்பதை ஒரு மேல் ஜாதியிடரிடம் கேட்டால் அவர் இல்லை என்று தான் சொல்வார். நடுத்தர வர்க்கத்தினரிடம் கேட்டால் பெரும்பாலும் இல்லை என்று அனுப்பி விடுவார். ஆனால் ஒரு தாழ்த்தப்பட்டவரிடம் கேட்டால் மட்டுமே அவருடைய வலியை நாம் உணர முடியும். அதுபோல தொல். திருமாவளவனின் நேர்காணலில் இந்த காலத்தில் யார் ஜாதி பார்க்கிறார் என்று பேசுபவரின் கவனத்திற்கு.. செய்தித்தாளில் வருகின்ற மணமகள் மணமகன் தேவை விளம்பரங்களை பாருங்கள் என்று நெத்தி பொட்டில் அடித்தது போல சொல்லி இருப்பார். சரி மதம் மாறினால் ஜாதி ஒழிந்து விடுமா என்றால் அதுதான் இல்லை கிறிஸ்தவ நாடார் கிறிஸ்தவ முதலியார் என்று அங்கேயும் தன் கூறிய பற்களை காட்டுகிறது ஜாதி என்று ஜாதி குறித்த விமர்சனத்தை பதிவு செய்திருப்பார்.

ஐந்து அப்பங்கள் இரண்டு மீன்களை கொண்டு 5000 நபர்களுக்கு உணவு படைத்தார் இயேசு என்கிறது பைபிள். இன்று 5000 நபர்களுக்கு உரிய அப்பங்களையும் மீன்களையும் ஐந்தே அரசியல்வாதிகள் பங்கிட்டு கொள்கிறார்கள். வேரில் விஷமேறிவிட்டால் கனிகளும் அப்படித்தான் இருக்கும். ஒரு சமூகத்துக்கு அரசியல் தான் ஆணிவேர். அரசியல் அசிங்கமானால் நாடே அசிங்கமானதாக அர்த்தம் என்று இன்றைய அரசியல் நிலை‌ குறித்து தோழர் நல்ல கண்ணு கூறி இருப்பார். வாசிப்பின் அனுபவத்தில் தேர்ந்த கருத்துக்களை சொல்லும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஒரு இடத்தில் அடுத்த தலைமுறைக்கான ரோல் மாடலாக காந்தியும் நேரும் இருக்க வேண்டும் என்பது தவறான எண்ணம். தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் நல்ல ரோல் மாடலாக இருக்க முடியும் இருக்க வேண்டும் என்று அழுத்தமாய் ஆழமான உண்மையை உணர்த்தி இருப்பார்.

பாரதிதாசன் புதுவையில் ஆசிரியராக இருந்தபோது அ எழுத்தை சொல்லித் தர அணில் படம் வரைந்து இருப்பதை கண்டித்து பிரெஞ்சு அரசுக்கு கடிதம் எழுதினார். குழந்தையின் வாழ்க்கை அம்மாவிலிருந்து தொடங்க வேண்டும் தவிர அணிலில் இருந்து தொடங்கக்கூடாது என்று அவர் சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டு மாற்றம் செய்தது புதுவை அரசு. ஆனால் இன்றோ நம் பிள்ளைகளின் வாழ்க்கையை ஆப்பிள் முதல் தொடங்குகிறார்கள் .அந்நிய உலகத்தை தெரிந்து கொள்வது நல்லது .ஆனால் தாய் மொழியை தவிர்ப்பதால் நாம் நம் வாழ்க்கைக்கு அந்நியமாகி போவதை எப்போது புரிந்து கொள்ள போகிறோம் என்று சொல்லி இருப்பார் சுபவீ.

எரிவது நின்றால் புகைவதும் நிற்கும். ஏமாறுவது குறைந்தால் ஏமாற்றுவதும் குறையும். அப்போது சட்டம் ஒரு இருட்டறையாக இருக்காது .தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் விளக்காக இருக்கும்.. என்று தான் சந்தித்த வழக்குகளை பற்றிய அழகிய பயணங்களை இரத்தின சுருக்கமாக நீதிபதி சந்துரு அவர்கள் தெரிவித்து இருந்தார். ஒழுக்கம் என்பது கெட்ட செய்கையில் இருந்து விலகி இருப்பது அல்ல கெட்ட செய்கையே செய்யாமல் இருப்பது தான் எனும் பெர்னாட்ஷாவின் வார்த்தையை இன்றளவும் கடைப்பிடித்திருக்கும் நடிகர் சிவக்குமாரின் அனுபவம் வேறுவிதமானது.

உரிமைகளோடு வாழ்ந்தால் தான் நாம் மனிதர்கள். உரிமைகள் அற்றவர்களுக்கு வரலாறு தந்த பட்டம் அடிமைதான் என்ற வரிகளுக்கு எடுத்துக்காட்டாய் மனித உரிமை ஆர்வலர் சுரேஷ் அவர்களின் களப்போராட்டம் குறித்த கட்டுரை இப்படியும் செயல்பாட்டாளர்கள் இருக்கிறார்களா என்பதை உணர வைக்கிறது. மைதிலி சிவராமன் குறித்த கட்டுரையில் பெண்களின் நலனுக்கு அவர் எவ்வாறு உழைத்திருக்கிறார் என்பதை சுருங்கச் சொன்னாலும் மைதிலி சிவராமன் குறித்த விரிவான கட்டுரை ஜெயமோகனின் தளத்தில் படித்த போது உண்மையில் மெய்சிலிர்த்தது. மைதிலி சிவராமன் போன்ற பெண் ஆளுமைகளை இன்றைய பெண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அனைவரும் சமம் என்று சொல்லுகிற அரசியல் சாசனத்தின் அர்த்தம் மிகுந்த வார்த்தைகளில் உள்ள அனைவரும் என்று சொல்லில் அரவாணிகள் இருக்கிறார்களா இல்லையா நாகரீகம் அடைந்தவர்கள் பதில் சொல்லட்டும் என்று ஆசா பாரதியின் நேர்காணலின் இறுதியில் ஞானவேல் குறிப்பிட்டு இருப்பார்.

மக்களே ஆயுதம் மக்களே கேடயம் 
ஓர் அணியில் திரண்டு கடந்த காலத்தின் 
சூழ்ச்சிகள் பலவற்றை முறியடித்தோம் 
சாதனைகள் பல படைத்தோம் 

திண்டிவனம் பகுதிகளில் துண்டு பிரசுரங்களில் கண்ட கவிதை .மலைவாழ் மக்களின் போராட்டங்களில் குறிப்பாக இருளர் சமூகத்தின் பால் பல்வேறு போராட்டங்களை முன் நின்று நடத்தவர் சமூக களப்பணியாளர் கல்யாணி அவர்கள் .அவர் குறித்த தகவல்கள் போராட்டங்களும் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது. தமிழில் ஏட்டுக்கல்வி மட்டும் இல்லாத இணைய வழி கல்வி மூலம் உலகெங்கும் தமிழ் மொழி பரப்பிய செம்மலாக தமிழ் இணைய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வா.செ குழந்தைசாமி அவர்களை குறிப்பிடலாம். 247 தமிழ் எழுத்துக்களை 107 குறியீடுகள் மூலம் எழுதிக் கொண்டிருக்கிறோம் இதற்கு மாற்றாக அதிகபட்ச 39 குறியீடுகளை மட்டுமே பயன்படுத்தி ஒரு எழுத்து கூட குறையாமல் 247 தமிழ் எழுத்துக்களை எழுத முடியும் என்று நிரூபித்து காட்டியவர்.

இவர்கள் தவிர முகம் அறியாத களப்பணியாளர்களாக சமூக போராளிகளாக சமூக செயல்பாட்டாளர்களாக இருக்கும் பல்வேறு ஆளுமைகள் குறித்த கட்டுரைகள் மிகுந்த மன நிறைவை தந்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அவர்களின் சாதனைகளை இரண்டு மூன்று பக்கங்கள் பதிவு செய்திருந்தாலும் பின்னர் அவர்கள் குறித்த முழு விவரங்களையும் அறிய இது ஒரு துவக்கமாக இருந்ததை உணரலாம் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment