Friday, 9 February 2018

கவிதை

வருத்தம்

சுந்தர ராமசாமி

வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டடைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத்தொடங்கினேன்
பின் வில்வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரையேற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்துவைத்த கற்பூரம்போல்
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது
இனி ஆயஹ்த்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்

#
உரிமை

எஸ்.வைத்தீஸ்வரன்

அவன் வீட்டு சாக்கடையில்
அடுத்த வீட்டு நாய்படுத்துப்
புரளுவது ஒரு வழக்கமாச்சு
உரிமையால்
ஆனமட்டும் விரட்டிப் பார்த்தும்
அது நகரவில்லை, ஒருநாள்
ஆளுயரத் தடியெடுத்து
ஆத்திரத்தால் அடித்துவிட
அது வள்ளென வால்மடக்கிக்
குதித்தோட
அவன் வாய்க்குள்ளே
சள்ளென  சகதி விழுந்து தெறித்தது
அவன் வீட்டு சகதி

No comments:

Post a Comment