சட்டை
------------
எனக்கு ஞாபகம் இருக்கிறது
உன் பின்னால் ஓடி காற்றில் படபடக்கும்
உனது சட்டையைத் துரத்திப் பிடித்தது.
பல நாட்களுக்கு முன்பு
ஒருமுறை நான் ஒரு டம்ளர் நிறைய எதையோ குடித்தேன்
அந்த பானத்தின் மேல்
உனது படம் நழுவி விழுந்து நடுங்கியது
மறுபடியும் அது வேறு யாரும் அல்ல,
ஒரு கவலையற்ற பெண்ணின் ரீங்கரித்துப் பாடும்
குரலில் நான் உன்னைத்தான் கேட்டேன்.
ஒரு இரவில் நான் ப்ரிய நண்பர்களோடு
உட்கார்ந்து கதையளக்கையில்
குளிர்காயும் நெருப்பில் செஞ்ஜுவாலைகள்
அவைகளுக்கே சொந்தமான மொழியில்
ஒரு பரந்த வெள்ளை விண்மீன்களோடு
சடசடத்து உரையாடின:
அவலட்சணமான தள்ளாடும் நிழல்களில்
பதுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தது நீ தான்.
ஞாபகார்த்தத்தின் உடைந்த பதில்கள்
என்னை அனுமதிக்கட்டும்
நீ உயிருடன் இருப்பதை அறிய
வெறிபிடித்த நகரத்தின்
தள்ளுமுள்ளுக்குள் ஏதோ ஒரு இடத்தில்
ஒரு வாசலுக்குப் பின்னால்
ஒரு மாய முகத்தை நீட்டியவாறு.
அல்லது ஒரு ஓக்மரக் கிளைகளின்
வளைவின் அடியில் மௌனமாகக் காத்திருக்கும்
பாசிபடர்ந்த இலைகளின்
ஒரு குவியலுக்குக் கீழ் எப்போதும் போல
தயாராக இருப்பாய்
மீண்டும் வெளியே ஓட, உனது படபடக்கும்
சட்டையைப் பிடிக்க நான் துரத்தும் போது
-கார்ல் சான்ட்பர்க்-(சமயவேல் )
#தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும்
மாணவியோடு அல்லது
தேர்தல் முடிவுக்காக எதிர்பார்த்திருக்கும் அரசியல்வாதியோடு
அல்லது
பிரசவிக்கப்போகும் பெண்ணோடு
இப்படி எதனோடு ஒப்பிடுவது
இந்த மனநிலையை?
இப்படிச் சொல்லலாம்
சேர்க்கப்பட்ட முதல்நாள்
பள்ளியில் அமர்ந்திருக்கும்
சிறுவன்
வீட்டுக்குப் போவதற்காகக் காத்திருக்கிறான்
மணி அடிக்க மாட்டேனென்கிறது.
- சுகுமாரன்-
No comments:
Post a Comment