பிரம்மராஜன் கவிதைகள்
-------------------------------------------------
1)பிரம்மராஜன் கவிதைகள் இசை,ஓவியம்,வாசிப்பு ஆகியவை தனிமனிதனில் அல்லது இயற்கையின் மீது பொருத்திப் பார்ப்பதால் உருவாகும் ஒன்றாக இருக்கிறது.
2)பிரம்மராஜன் கவிதைகளில் கவிதை உணர்ச்சியை தான் ஏற்படுத்த வேண்டும் என்ற மரபு தவிர்க்கப்படுகிறது. இங்கு அறிவானது உணர்வாகிறது .மேலும் உணர்ச்சிகளின் Juxtaposition அவரது கவிதைகளில் மிகுந்து காணப்படுகிறது. அதன்காரணமாக ஒன்று இன்னொன்றை அடைந்து அது பலகுரல் தன்மை கொண்டதாகிறது.பிரம்மராஜன் கவிதைகள் ஒரு வாசிப்பில் தீர்ந்துபோவதில்லை. ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு மையம் கிடைக்கிறது
3)நற்றிணை, கிழக்கு ஐரோப்பிய கவிதைகள் ஆகியவற்றுடன் தான் பிரம்மராஜன் கவிதைகளை ஒப்பிட முடியும். நற்றிணையின் பலதளத் தன்மை, இரண்டு குறிப்புகளை சொல்லி மூன்றாவதை உணர்த்ததுதல் ஆகிய உத்திகள் பிரம்மராஜன் கவிதைகளில் சரளமாக தென்படுகிறது. மேலும் கிழக்கு ஐரோப்பிய கவிதைகளின் இறுக்கமான கட்டமைப்பை இவருடைய கவிதைகளிலும் காணலாம்.கவிதையில் இருந்து ஒரு சொல்லை நீக்கினாலும் கவிதையே சீரழிந்து விடும் அளவுக்கான இறுக்கம் பிரம்மராஜன் கவிதைகளின் தனிச்சிறப்பு. இதே தன்மையை கைலாஷ் சிவனின் சூன்யபிளவு என்ற முழுக்க முழுக்க படிமங்களால் ஆன கவிதை தொகுப்பில் காணலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
4)மற்றொரு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில் பிரம்மராஜன் கவிதைகளில் இணைப்புசரடுகள் பெரும்பாலும் இல்லை. அதன் காரணமாக வாக்கியத்தின் இறுதி அடுத்த வாக்கியத்தின் முதல் வார்த்தையுடன் இணைந்து மற்றொரு பிரதி உருவாகிறது.
5)பிரம்மராஜனின் கவிதைகளை டாடாயிச தொடர்ச்சி என சொல்லலாம். ஏனெனில் அவருடைய கவிதைகள் Tristan Tzaraவின் How to make Dadist poem என்ற கவிதை உருவாக்கம் பற்றிய கவிதையின் படி செய்தோம் எனில் ஏகப்பட்ட பிரதிகளை தருவிக்கலாம் . மேலும் அவருடைய பெரும்பான்மை பாடுபொருள் கோபம், எதிர்வினை என்பது குறிப்பிடத்தக்கது. இதை மஹாவாக்கியம் , புராதன இதயம் ஆகியவற்றில் காணலாம்.
6)1)படிமக்கவிதை -அறிந்த நிரந்தரம்
2)மிகக்குறைவான அலங்கார தன்மைகளை உடைய கவிதைகள் -வலி உணரும் மனிதர்கள்
3)மொழிரீதியான கவிதைகள் -ஞாபகசிற்பம்
4)Extreme Plain Poetry- புராதன இதயம்
5)மேற்குறிப்பிட்ட மூன்று போக்குகளும் கலந்த தளர்வான நடை கவிதைகள் -மஹாவாக்கியம்
என்று அவருடைய கவிதைகள் பரிணாம வளர்ச்சியடைந்து வந்துள்ளது.ஒவ்வொரு தொகுப்பும் முந்தைய தொகுப்பின் தேக்க நிலையை உடைத்துக் கொண்டு வந்துள்ளது.
7)பிரம்மராஜனின் அசாத்யமான கவிதைகள் எனில் புராதன இதயம் தொகுப்பில் இருக்கும் புராதன இதயம், நெய்தல் தேசம், வெற்று நானும் வெற்று நீயும் ஆகும். ஏனெனில் படிமங்களை பயன்படுத்தாமல் மொழியும் தளர்வடையாமல் நீள் கவிதை பல்குரல் தன்மையுடன் பல தளங்களுடன் என்பது கவிதையை பொருத்தவரையில் அசாத்யமான முயற்சி. இது அந்த மூன்று கவிதைகளில் வெற்றிகரமாக செய்துகாட்டப்பட்டுள்ளது .
8)அறிந்த நிரந்தரம், எதிர்கொள்ளல் ,உலோக தாலாட்டு, புராதன இதயம், நெய்தல் தேசம், வெறும் நானும் வெறும் நீயும் , புதிய கில்லட்டீன் ,கடல் பற்றிய கவிதைகள்(17), சித்ரூபினி கவிதைகள்(5),பிரயாணத்திலிருந்து ஒரு கடிதம் ,எதிர்கவிதையாளருடன் ஒரு பேட்டி ,நிலவின் இதயத்தாளம் ,கையிலாயத்திற்கடியில் பத்து தலைகள்,அதற்கு பிறகும், யுக அந்தரத்தில் ஒரு ஹரன்,தெரிதல் புரிதல்,மொழி மீறிய காதல்(கள்) , மிருகத்துடன் ஒரு புதிய மனிதன் சில குறிப்புகள் , முதல் மற்றும் இறுதி வரிகள் ஆகியவை சிறந்த கவிதைகள் என சொல்லலாம்.
9)பிரம்மராஜன் கவிதைகளில் குறைபாடு என்னவெனில் , கவிதைகளில் பெரும் பின்புலம் கட்டமைக்கப்பட்டு கடைசியில் ஒரு பகுதி மட்டும் எஞ்ச மற்றவற்றை நீக்கிவிடுதல் அல்லது அர்த்தம் கலைத்தல் போக்கு. இதனால் கவிஞன் வரிகளை வீணாக்குகிறான் . இந்த பிரச்சினை புராதன இதயம் தொகுப்பில் மிகுந்து காணப்படுகிறது. இந்த அர்த்தம் கலைத்தல் என்பதை உத்தி என்று சொன்னாலும் அதை கவிதையின் பிரச்சினை என்றே கருதுகிறேன். மேலும் அவருடைய கவிதைகளில் உணர்ச்சி-அறிவு சமநிலை தவறி போகிறது என்று நாம் ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும் .கவிதையின் அறிவுத்தன்மைக்கு அவர் சகாயம் தான் செய்கிறார். ஆனால் அது மிகுந்து விட்டதோ என்று தோன்றுகிறது.
10)பிரம்மராஜன் கவிதைகள் இந்த உணர்வு-அறிவு சமநிலையோடு, அர்த்தம் கலைத்து வரிகளை வீணாக்கும் போக்கு இல்லாமல் வெளிவரும் எனில் அது மேலும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
மற்றபடி புரியவில்லை என நாகரிகமாக சொல்லி தன் மீதுள்ள தவறை ஆசிரியன் மீது சுமத்துவது என்பது ஆபத்தான போக்கு. வாசகனை தயார் செய்யும் பிரதிகள் இருக்கத்தான் செய்கிறது. எப்படி உலிசஸ் நாவலோ அது போலத்தான் பிரம்மராஜன் கவிதைகளும். இதுவே கணக்கு புரியவில்லை எனில் ஆசிரியரிடம் கேட்டு தெளிந்து கொள்கிறோமோ அது போலத்தான் கவிதையும். கவிதை புரியவில்லை என்பது முழுக்க முழுக்க வாசகனின் பிரச்சினை. அவன் தான் முழு முயற்சி எடுக்க வேண்டும் .
மேலும் கவிதை என்பது உணர்ச்சிகளை மட்டும் வெளிப்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு என்பது பிரம்மராஜன் கவிதைகள் உணர்த்துவது.
(ஜென்மயில் தொகுப்பை தவிர்த்து இது எழுதப்பட்டிருக்கிறது.)