காலமெல்லாம் கண்ணதாசன்
-ஆர்.சி.மதிராஜ்
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
தண்ணீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
* * *
உள்ளம் என்றால் என்னவென்று கவிஞர்களும் கதையாசிரியர்களும் விதம்விதமாகக் கூறியுள்ளனர்.
உள்ளம் என்பது மலரைப்போன்றது. அதில் ஆசைகள் மலர்வதும் தெரியாது, உதிர்வதும் தெரியாது. உள்ளம் என்பது ஆழ்கடலைப்போன்றது - எப்போது அமைதியாய் இருக்கும், எப்போது பொங்கிப்பிரவகிக்கும் என்பது தெரியாது. மனம் ஒரு குரங்கு - அது கிளைக்குக் கிளை தாவிக்கொண்டே இருக்கும். இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...
உள்ளம் என்பது ஆமை என்கிறார் கவியரசர் கண்ணதாசன். தனக்கு ஓர் ஆபத்து என்று தெரிந்தால், எவரையும் தாக்க முற்படாது. தன் ஓட்டுக்குள், தன்னைத்தானே பதுக்கிக்கொள்ளும். ஆபத்து மட்டும்தான் என்றில்லை, பல நேரங்களில் எதற்கு வீண்வம்பு என்றோ, சோர்விலோ, கோபத்திலோ, பயத்திலோ, பாதுகாப்பை வேறிடத்தில் தேடாது தனக்குள் தானே சுருங்கிக்கொள்ளும். இப்படி உள்ளத்தைச் சுருக்கிக்கொண்டால் என்னவாகும்? உண்மை ஊமையாகிவிடும்.
உண்மை என்றால் என்ன? பொய்மை என்றால் என்ன? எதனைக்கொண்டு இதனை வரையறுப்பது? மனசாட்சிப்படி நடந்துகொள்வது சரியா? சட்டப்படி நடந்துகொள்வது சரியா? மனசாட்சியும் சட்டமும் ஒன்றாகப் பயணிக்கவே பயணிக்காதா? தனி ஒரு மனிதனாக சிந்திக்கையில் ஒவ்வொருவரும் தன் மனசாட்சிக்குக் கட்டுப்படவேண்டும்.
ஒரு சமூகமாகக் கூடி வாழ்கையில் சமூகத்திற்கு எது சரி என்பதை சட்டம் யோசிக்கும். அங்கு சட்டத்திற்குக் கட்டுப்படவேண்டும்.
எல்லா நேரங்களிலும் எல்லாரிடமும் நம் மனதிற்கு சரியெனப்பட்டதை பேசுகிறோமா? நம் எண்ணத்தில் நேர்மை இருந்தாலும் அப்படிப் பேசிட முடிவதில்லை. அந்தப் பேச்சால் அந்த உண்மையால் என்ன நடக்கும்? யாருக்கேனும் பாதிப்பா என்பதைப் பொறுத்தே அமைகிறது அது.
தன்னுடைய மேலதிகாரியிடம் தனக்கு சரியென்று பட்டதைச் சொல்ல முடிகிறதா? ஏழையின் சொல் அம்பலம் ஏறாது என்பார்கள். எனில் அதிகாரத்தைப் பொறுத்துதான் குரல் உயர்த்தமுடிகிறது. தன்னை விட அதிகாரம் மிக்கவர்கள் என்றில்லை, தனக்கு வேண்டப்பட்டவர்கள், நெருங்கியவர்கள், நண்பர்களிடமும் கூட அப்படிப் பேசிவிட முடிவதில்லை.
காரணம், இதனால் அவர்கள் உள்ளம் வருந்துமோ என்ற யோசனையும் பயமும் அப்படிப் பேச விடுவதில்லை.
ஒரு கவிஞனோ படைப்பாளனோ, தன் நெஞ்சில் தோன்றுவதையெல்லாம் படைத்துவிடுவதில்லை. சிலவற்றைத்தான் எடுத்து வைக்கிறார். எழுதுவதைவிட எழுதாமல் விட்டது அதிகம் என்பான் கவிஞன். பேசியதைவிட பேசாமல் விட்டது அதிகம் என்பான் பேச்சாளன்.
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் - உண்மை, ஆமை - ஊமை, சொல்லில் - நெஞ்சில், பாதி - நீதி.... என்று வார்த்தைகள் சந்தத்துக்குள் எத்தனை அழகாகப் பொருந்தியிருக்கின்றன. அப்படிப் பொருத்திய வார்த்தைகளுக்குள் தன் சிந்தனையை, பொருளை எத்துணை கச்சிதமாகப் பொருத்துகிறார் கவியரசர். அதனால்தான் அவர் கவிகளுக்கெல்லாம் அரசர்.
கடவுள் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா? இதற்கான பதிலையும், கேட்பவரின் எண்ணத்தை நோக்கியே திருப்பிவிடுகிறார் கண்ணதாசன். மலைப்பிரதேசத்தில் உருண்டையான ஒரு கல் இருக்கிறது. ஆம் அது கல்தான். அதை ஒரு தேர்ந்த சிற்பி செதுக்கிச் செதுக்கி, ஒரு உருவமாக்குகிறான்.
இப்போது கல், சிற்பம் என்ற பேருக்கு உருமாற்றமடைகிறது. அதன் மூலம், கல். ஆனால் ஒரு சிற்பத்தை கல் என்று சொல்லமாட்டோம்தானே? அதே சிற்பம் கருவறைக்குள் வைத்து வணங்கப்படும்போது கடவுள் ஆகிறது.
கல் என்று பார்ப்பதும், சிற்பமாக ரசிப்பதும், கடவுளாக வணங்குவதும் அவரவர் கண்களையும், உள்ளத்தையும் பொருத்தது என்கிறார் கண்ணதாசன்.
சரி என்பதும் தவறு என்பதும் அவரவர் பார்வையைப் பொருத்தது. கல் என்பதும் கடவுள் என்பதும் அப்படியே. உண்டென்றால் உண்டு. இல்லையென்றால் இல்லை. இன்பமும் துன்பமும் கூட அப்படித்தான்.
பெரும்பாலும் நாம் குழம்பிய மனநிலையிலேயே இருக்கிறோம். இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் நம்மை எப்போதும் ஆட்கொள்கிறது. நண்பனா பகைவனா என்பதைக்கூட புரிந்துகொள்ள இயலா நிலையில்தான் இருக்கிறோம். ஆனால் இதெல்லாம் குறுகியகாலம்தான். நாட்பட நாட்படப் புரியும். வாழ்க்கை புரியவைக்கும்.
உண்மை எல்லா நேரமும் உறங்கிக் கிடப்பதில்லை. எல்லா நேரமும் ஊமையாகவும் இருக்கமுடியாது. அது ஒரு நாள் வெடித்துக் கிளம்பும். அன்று புரட்சி உருவாகும். உண்மைக்கு மட்டும்தான் அப்படி ஒரு சக்தி இருக்கிறது. உண்மையைக் கொண்டு உருவாகும் புரட்சி மாபெரும் வெற்றிபெறும் என்பது வரலாறு.