"தமிழன் என்றோர் இனமுண்டு;அவனுக்கு சீரியல் பார்க்கும் குணமுண்டு..தமிழகத்தில் சீரியல் பார்க்காதவர்களின் எண்ணிக்கை கொரோனாவுக்கு மாஸ்க் போடாதவர்களை போல் விரல்விட்டு எண்ணிவிடலாம்.இந்த லாக்டவுன் ஆண்களையும் சீரியல் பார்க்க வச்சிடுச்சு.ஒவ்வொரு சீரியலும் ஒரு ரகம்.ஆனால் காட்சியமைப்பின் பேட்டன் எல்லாம் ஒரே ரகம்
எல்லா சீரியலையும் பார்க்கும்போது தமிழ் சீரியலுக்கு இன்னும் கொஞ்சம் பட்டி டிங்கரிங் சேர்த்தால் பட்டாசு கெளப்பும் என்பதற்கான வழிமுறையை பத்தி யோசித்தபோது சிக்கிய சிறு பொறிகள்
ஒரு குடும்பத்தில் அஞ்சு பெண் பிள்ளைகள்,அல்லது அனைத்தும் பெண் பிள்ளைகளாக இருந்தால் தான் சீரியல் வளர்ப்பது என்பது மெட்டி ஒலி கால மெத்தட்.ஒரு குடும்பம் ஒரு மகன் என காலத்துக்கேத்த ரூட்டை மாத்தனும்.
#வேலை
பெண்கள் ஆபிஸ்க்கு போறதுன்னாலே கன்ஷ்ரக்சன் பிசினஸ் தானா.வேற வேலையே நாட்டுல இல்லையா.அப்புறம் அதுல தொழில் போட்டினு பழைய சோத்துல ஈ மொய்க்கிற விசயத்தை சேர்க்காம, ஒரு வாத்தியாரு,ஒரு ரிசப்னனிஸ்ட், க்ளார்க் வேலை என வெரைட்டிய காட்டுனா பார்க்கிறதுக்கே கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். மூனு ஆண்கள் இருக்கும் குடும்பத்தில் எப்பவும் இரண்டாவது மருமகதான் மோசமானவளா.. இது நியாயமரே.. ஏதோ ஆனந்தம் படத்தில் ரம்பா அப்பிடி நடிச்சிட்டாங்கன்னு எல்லா சீரியலிலும் இரண்டாவது மருமகளை அப்பிடித்தான் காட்டனுமா.அது என்ன இரண்டாயிரம் ரூபாய்க்கு சேஞ்ச் வாங்குவதுபோல் அவ்வளவு கஷ்டமா..மாத்துங்கப்பு.
#செஞ்சுரி அடித்த சீன்கள்
லொகேசன் கிடைக்காம காரில் போய் சீரியல் எடுப்பது புரியுது.அந்த
நேரத்தில் எப்.எம்மில் வரும் எதாவது பாடலில் வரும் நுட்பங்களை சொல்லலாம்.சினிமாவை பத்தி தெரியாத சங்கதிகளை வசனத்தில் கொண்டு வரலாம்.பொதுவான விஷயங்களை பேசலாம்.குட்டிக் கதைகளை கதைக்கலாம்.
90 களில் கேட்ட ஜோக்குகளை சொல்லாமல் புதுசா டைமிங் ஜோக்குகளை சொல்லலாம்.
எப்போதுமே பழி வாங்க கூடிய அண்ணி,மாமியார்,நாத்தனார்..
இவங்க எப்போதும் ப்ரண்ட்லியான கதாபாத்திரமாய் இருக்கவே மாட்டாங்களா.எப்போதுமே எடுத்து அடிச்சிருவேன் பாத்துக்க மோடியிலேயே இருக்காங்க
சோடா புட்டி கண்ணாடி போட்டாலே முட்டாளாத்தான் காட்டுவீங்களா.
ஹீரோ/ஹீரோயின் அப்பா எப்பவும் பேப்பர் பார்த்துட்டு வீட்டுலயேதான் இருக்காரு..அப்புறம் சாப்பாட்டு என்னதான் பண்ணுவாங்க.இதை மாத்தி வீட்டிலேயே எதாவது தொழில் செய்வது போல் காட்டலாம்.
#இசையில்
இசையில் எனக்கு பிடிக்காததே இடிச்சத்தம் என்கிற மாதிரி.. திரும்பினால்,நடந்தால்,முறைத்தால், கண்ணாடி கழட்டினால்..இடி மின்னல்.அப்பப்பா..மாத்துங்கப்பா பின்னணி இசையை..ஒவ்வொரு சீனையுமே க்ளைமேக்ஸ் காட்சி போல் நினைத்து இசையமைக்க வேண்டாமே.
எமோசனல் சீன்களில்
இடிசத்தத்துக்கு பதிலா வேற இயற்கை சத்தத்தை யூஸ் பன்னுங்கப்பா.காது ஙொய்யினு கேட்குதில்ல."வில்லியும் ஹீரோயின் நேருக்கு நேர் வரும்போது அக்னி நட்சத்திரம் இசையேவா உஸ்ஸ்.
"அப்பிடியே காதலன் ல ரகுவரனை காட்டும் ஒரு தீம் மியூசிக்,சத்ரியன் ல விஜய்காந்த் வரும்போது வரும் மியூசிக்கையும் மாத்திடுங்க.முடியல..
நகைச்சுவை சீன்களின் போது வரும் இசை உண்மையில் வர்ற சிரிப்பை கூட நிறித்திடுது ப்ரோ.
#மேக்கப்
அளவுக்கு மிஞ்சினால் மேக்கப்பும் அசிங்கம்.பாத்திரம் விளக்கிற பொண்ணுக்கு எதுக்குங்க கோல்டன் ஃபேசியல் வித் ஐ ப்ரோ ப்ளக்கிங்.
கண்ணுக்கு மை அழகுனு ஒரு காலத்தில வைரமுத்தே சொல்லியிருக்காரு.ஆனால் நீங்களே அந்த சீரியல பாருங்க.
கண்ணுல மை பூச சொன்னால் கட்ட வண்டி மை எடுத்து இழுக்குனது மாதிரி என்னம்மா நீங்க இப்பிடி பண்றீங்களேம்மா.
வீட்டில் வெங்காயம் உரிக்கிற பெண்ணுக்கு இண்ட்ரோ கொடுக்கும் போது விவாகா,சாமுத்ரிகா சேலை மாதிரி ஹைரேஞ்சு பொடவை தான் கட்டனும்னு இல்ல, சாதாரண சின்னாளபட்டி, சென்னிமலை புடவையே போதும் பாஸ்.
ஆபிசுக்கு போறதுனாலே கார்லதான் போகனுமா?பைக்,ஷேர் ஆட்டோவில் போனால் இன்னும் கொஞ்சம் இயல்பாய் இருக்குமே.
#கதை
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்-வாழ்ந்து கெட்ட குடும்பம்,
பொன்மனச் செம்மல்- மூன்று மகன் மூன்று மருமகள்,
வா அருகில் வா-முதல் மனைவி இறந்து பேயாய் வருவது
மூன்றாம் பிறை-மனநலம் குன்றிய பெண்
ஆனந்தம்-அண்ணன் தம்பி கதை
அம்மன்- சாதாரண ஏழைப்பெண்ணை காப்பாற்ற கடவுளே கால் டாக்சியில் வருவது மாதிரி.ஏங்க ஆத்தா என்ன அப்பத்தாவா கூப்பிட்டதும் வர.
அக்னிநட்சத்திரம்-இரு மனைவி கதை
அதுஒரு கனாக்காலம்-வேலைக்கார பெண் ஹவுஸ் ஓனர் பையனை கரெக்ட் செய்வது
இந்த கதையெல்லாம் எடுக்காம இருந்தால் புதிய இந்தியாவே பிறந்த மாதிரி மகிழ்ச்சியடைவோம்.
#திரைக்கதை
காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க பத்து எபிசோட்
அவர் வில்லனை அடையாளம் காட்ட அஞ்சு எபிசோடுனு வைக்காம முடிந்தவரை குறைந்த எபிசோடில் டெம்போ ஏத்தலாம்.
கேரளா,ஆந்திராவில் கடத்தி வைக்கிறதெல்லாம் நம்பியார் காட்டு பங்களாவில் கடத்தி வச்ச காலம் அதை மாற்றலாம்.
கதையில் சுதி கொறஞ்சா உடனே ஊட்டிக்கு போகனுமா? ஏற்காடு, கொல்லிமலை,வால்பாறையெல்லம் இருக்கே.
இனி இவருக்கு பதிலா இவர்தான் கணவர் னு மாத்தாதீங்க. கஷ்டமாயிருக்கு.
ஹீரோ/ஹீரோயின் கால்சீட் இல்லைனா காமெடியனை வைத்து காமெடிங்கிற பேர்ல கத்திச்சண்டை போடாம சிரிப்பு வருவது மாதிரி சீனை கிரியேட் பன்னலாம். டைகர் கார்டன் தங்கதுரை சொன்ன ஜோக்குகளை தவிர்க்க பாருங்க.
#வசனம்
*ஆகா..ஷ்,சந்தோ..ஷ், ரமே..ஷ் னு
இவ்வளவு சுதி சுத்தமா கூப்பிடுவது உங்களுக்கே காதுல பூ சுத்தற மாதிரி இல்ல.நார்மலா கூப்பிட்டாலே போதும்
*பணக்கார வில்லினாலே.. நாக்குல கொப்புளம் வந்தது போல் பேசினால்தான் ஸ்டைலிஷ் னு நினைப்பதை மாற்றனும்.
*மனைவியை ஒவ்வொரு முறையும் பேர் சொல்லி கூப்பிடுவது ஏதோ கோர்ட்ல அமீனா கூப்பிடுவது போல இருக்கு.நார்மல் லைப் போல் டேய், இவளே,பட்டபேர்,பெட் நேம்வச்சு கூப்பிடலாம்.
*வசனம் பேசச் சொன்னால் யோசிக்க கூடாது.ஆடியன்ஸை எதிர்பார்ப்பு ஏற்படுத்தறேன் சொல்லிட்டு கடுப்பேத்த கூடாது.
*பிசினஸ் பிசினஸ் னு நாட்டுல தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியாதவாறு அதையே சொல்லி ஆணி அடிக்காம தொழில்,வேலை, னு வேற வார்த்தை யூஸ் பன்னலாம்
*முடிந்தவரை சிவில் என்ஜினியராய் காட்டாமல் மெக்கானிக்கல்,EEE, ECE,டிப்ளமோ என வேறுவித படிப்பு இருக்கு என்பதை காட்டலாம்..
இதையெல்லாம் சேஞ்ச் பன்னால்
இந்தி சீரியலுக்கே சேலஞ்ச் செய்யலாம்
#வெப் சீரியஸ் காலம்
இதையெல்லாம் யார் உங்களை பார்க்க சொன்னானு மனைவியோட மேக்கப் கிட்டை பார்த்த கணவனை கேட்பது போல் கேட்காம காலத்திற்கு ஏற்றவாறு சீரியலை சேஞ்ச் பன்னனும். இனி வரும் காலம் அமெசான் ப்ரைம், வெப் சீரியஸ் என வந்துவிட்டது. மக்கள் எல்லாம் புதுமையான விஷயங்களை பார்க்க பழகிட்டாங்க.இவர்களை நம் பக்கம் இழுக்க நுட்பமான வகையில் மெனக்கெடனும்.
மெகா சீரியல் என்பது திருப்பாதிரிபுலியூர் பாசஞ்சர் வண்டி மாதிரி,எப்போது வேண்டுமானாலும் இறங்கி ஏறலாம். கதை கால் இன்ஞ்தான் நகரும் என்பார் சுஜாதா.
அதுபோல் இல்லாமல் சுவாரஸ்யமாய் எடுத்தால் எல்லோரும் பார்ப்பாங்க.அடுத்து என்ன வரும் என்ற எதிர்பார்ப்பே ஒரு காட்சியை பார்க்க தூண்டுகோலாக இருக்கும்.அந்த நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால் இன்னும் சீரியல்
உச்சம் தொடும் என்பதில் சந்தேகம் இல்லை.
-மணிகண்டபிரபு