Saturday 31 July 2021
திட்டம் இரண்டு விமர்சனம்*மணி
தமிழன்பன்
info
Friday 30 July 2021
ஆயிரம் நியாயங்கள் இருக்கலாம், தர்மம் ஒன்றுதானே? - பாரத் பெட்ரோலியம் விவகார பின்னணி
ஒரு சிந்தனைக்கான நேரம் வந்துவிட்டது என்றால் உலகின் எந்த ஒரு சக்தியாலும் அதைத் தடுக்க முடியாதுவிக்டர் ஹியுகோ
"Pure for sure" இந்த வார்த்தைகளை அறியாத வாகன ஓட்டியே இல்லை எனலாம். ஒற்றை விரலில் அற்புதம் எனச் சொல்லும் குறியீடு போல பாரத் பெட்ரோலியம் லோகோவை பார்த்திருப்போம். எங்கள் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை சிறந்த தரமான எரிபொருள்கள், மற்றும் சேவைகளுடன் பூர்த்தி செய்வதை "நிச்சயமாக தூய்மையானது" எனும் உத்தரவாதத்தை பாரத் பெட்ரோலிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் விதத்தில் இருக்கும். இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனத்தைத் தொடர்ந்து நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் பாரத் பெட்ரோலியம் கழகம் (BPCL) ஆகும்.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்துக்கு மும்பை, பினா, நுமாலிகார்க், கொச்சி ஆகிய இடங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கின்றன.1920ம் ஆண்டு துவங்கப்பட்ட பர்மாஷெல் கூட்டு நிறுவனம், ஜனவரி 24, 1976 அன்று, பர்மா ஷெல் குழும நிறுவனங்கள் இந்திய அரசால் கையகப்படுத்தப்பட்டு நூறு சதவீத பங்குகளை மத்திய அரசு வாங்கியது. ஆகஸ்ட் 1, 1977 அன்று, இது பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என மறுபெயரிடப்பட்டது. நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட முதல் சுத்திகரிப்பு நிலையம் இதுவாகும்
BPCL நிறுவனம் 1992ல் சில்லறை விற்பனை நிலையங்களை ஆரம்பித்தது.1994ல் பிற நிறுவனங்களுடன் இணைந்து லூப்ரிகன்ட் ஆயில் விற்பனையிலும் இறங்கியது. சமையல் எரிவாயுவில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனங்களில் இதுவும் ஒன்று.பிபிசிஎல் 2.1 கோடி உஜ்வாலா வாடிக்கையாளர்கள் உட்பட 8.4 கோடிக்கும் மேற்பட்ட உள்நாட்டு எல்பிஜி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.நாடு முழுவதும் 15079 பெட்ரோல் நிலையங்களும், ஆறாயிரத்துக்கு மேற்பட்ட எல்பிஜி முகவர்களும், 13000 நிரந்தரத் தொழிலாளர்களும் இருக்கின்றனர்.
நாட்டின் பெட்ரோலிய உற்பத்தியில் 24 சதவிகிதத்தை கொண்டுள்ளது BPCL. மார்ச் 31, 2021 உடன் முடிவடைந்த நிதியாண்டில், பங்கு விற்பனையின் பின்னணியில் பிபிசிஎல் பதிவுசெய்த நிகர லாபம் ரூ 19,041.67 கோடியாகும். ஜனவரி-மார்ச் காலாண்டில், நிகர லாபம் ரூ .2,777.62 கோடிகள் ஆகும்.
#தனியார்மயம்
இந்தியாவில் லாபம் வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இதில் மத்திய அரசுக்கு இருக்கும் 53.29 பங்குகளை தனியாருக்கு விற்க, கடந்த 2019 ல் செப்டம்பர் 30ம் நாள் முதலீட்டாளர் குழுவின் ஒப்புதல் பெற்று,2020 மார்ச் 31க்குள் பங்குகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.ஆனால் கொரொனா தொற்று காரணமாக இதைப் பற்றி பேசாததால் நிம்மதியடைந்திருந்த நிலையில் மீண்டும் பட்ஜெட்டில் பாரத் நிறுவன பங்குகளை விற்பதன் மூலம் 1.05 இலட்சம் கோடி நிதி கிடைக்கும் என கூறப்பட்டது.
பங்குகளை வாங்க வந்த நிறுவனங்கள் நூறு சதவிகித பங்குகளையும் வாங்க உத்தேசித்துள்ளதாக கூறியது. பூனைகளை விட புலிகள் வலிமையானவை என எலிகள் எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை என்பது போல உடனே மத்திய அரசு ஒப்புக்கொண்டு நூறு சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதித்தது. வாஜ்பாய் காலத்தில் BPCL மற்றும் HPCL நிறுவனங்களை தனியார் மயமாக்க முயற்சி செய்தது. BPCL நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு முன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அனுமதியை பெறுதல் அவசியமென்று உச்சநீதிமன்றம் 2003ம் ஆண்டு தீர்ப்பில் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவால் HPCL ன் 34.1%பங்குகளை விற்காமல் தடுக்கப்பட்டது.
தற்போதைய குளிர் கால கூட்டத் தொடரில் நூறு சதவிகித அந்நிய முதலீட்டுக்கான அனுமதியை அளித்துள்ளது. பங்குகளை வாங்கும் நிறுவனமே ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் கவனிக்கும் எனவும் அறிவித்தது.
ஒரு நிறுவனம் அரசாங்க நிறுவனமாய் இருக்கும் போது மக்களும் நிறுவனங்களும் ஆர்வத்துடன் முதலீடு செய்வர். அதுவே பெட்ரோலிய நிறுவன பங்குகளைத் தனியாருக்கு விற்பதன் மூலம், அந்த நிறுவனம் தனது மதிப்பீட்டை இழக்கும் என்று தரக் குறியீட்டு நிறுவனமான ‘மூடிஸ்’ (Moody's) எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(எந்த முதலீட்டாளரும் ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கு முன் தாங்கள் முதலீடு செய்யப்போகும் நாட்டுக்கு மூடிஸ், பிட்ச், எஸ்&பி போன்ற நிறுவனங்கள் அளி்த்துள்ள கிரேட்(தரம்) என்ன என்பதை கவனித்து ஆய்வு செய்தபின்புதான் முதலீடு செய்வார்கள்) இதன் காரணமாக பங்குகளின் மதிப்பு குறையும். பொருளாதார பாதிப்பு ஏற்படும்)
பணமாக்குதல் அல்லது நவீனமயமாக்குதல் எனும் கருத்துப்படி மத்திய அரசு செயல்படுகிறது.சர்வதேச் முதலீட்டாளர்களை ஈர்க்க BPCL பங்கு விற்பனை மூலம் அந்நிய முதலீட்டை விரிவுபடுத்தியுள்ளது மத்திய அரசு. வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டுள்ள அனில் அகர்வாலின் வேதாந்தா, திங்க் கேஸ் மற்றும் அப்பல்லோ மேனேஜ்மென்ட் போன்ற நிறுவனங்கள் பங்குகளை வாங்க முன்னனியில் இருக்கிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்கின்றனர்.
பாரத் பெட்ரோலிய நிறுவனம் என்பது மக்களின் சொத்து. இதன் மூலம் கிடைக்கும் பங்கு தொகை பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.ஏற்கனவே ஒன்றிணைத்தல், துணை நிறுவனங்களாக மாற்றி வருவதாக கூறுகின்றனர். தற்போது தனியாருக்கு அளிக்கும் போது விலை நிர்ணய உரிமை அனைத்தும் தனியார்வசமே சென்றுவிடும். கடந்த ஆண்டில், ’பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. வாடிக்கையாளர்களுக்கு, மானியம் தொடர்ந்து வழங்கப்படும்’ என அறிவித்தது மத்திய அரசு. ’பொருளாதார வளர்ச்சிக்கு அந்நிய நேரடி முதலீடு உதவும். அதன் படி அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை உருவாக்கியுள்ளனர்’ என்றும் தெரிவித்தது.
இந்த நிதி ஆண்டில் பொதுத்துறை பங்குகள் மூலம் 1,75,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் வளர்ச்சிப்பாதையில் செல்ல முடியும் என்கின்றனர்.திறம்பட நிர்வகித்தால் இலாபமீட்டும் பொதுத்துறை நிறுவனம் மூலமே சாத்தியப்படும் என்கின்றனர் சிலர். ஏற்கனவே HPCL ன் பங்குகளை பொதுத்துறை நிறுவனங்களுக்கு உள்ளேயே மாற்றிக் கொடுத்ததில் என்ன ஆனது எனக் கேட்கின்றனர் வல்லுநர்கள்.
"ஆயிரம் நியாயங்கள் இருக்கலாம் ஆனால் தர்மம் ஒன்றுதான்" என்ற வரிதான் நினைவுக்கு வருகிறது. வருங்காலத்தில் தான் இதற்கான விடைதெரியும்.
-மணிகண்டபிரபு
சுருள் கேமராவில் 36 போட்டோக்கள் எடுத்தபோது இருந்த திருப்தி இப்போ இல்ல, ஏன்?
ஒரு புகைப்படம் உயிர்கொள்வது
நம் நினைவுகளால் மட்டும்தான்!
ஒவ்வொரு வீடுகளிலும் புகைப்படம் என்பது ஒரு பொக்கிஷம் போல வைக்கப்பட்டிருக்கும். தாத்தா அமர்ந்திருக்க பயபக்தியுடன் பாட்டி நின்றிருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படம், 80களில் ஒடிசலான தேகத்தில் தொங்கிய மீசையுடன் பெல்பாட்டம் அணிந்த அப்பா நின்றிருப்பது, புலியை முறத்தால் அடித்த பார்வையுடன் அம்மா ஆப் சாரியில் வெறித்துப் பார்ப்பது, 90களில் சோழர் பரம்பரையிலேயே முதலாவது கோட் சூட் அணிந்த மாமாக்கள் என ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு காலகட்டத்தையும் புகைப்படத்தில் பார்த்தவுடன் அவர்களின் நினைவூற்று ஆர்டிசன் கிணறு போல பொங்கும்.
டிஜிட்டல் யுகத்தின் காலகட்டத்திற்கு முன்பு வரை கூட குழந்தைகளின் ஆல்பம், ஊட்டிக்கு போன பயணம் என வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கு காண்பிக்கக் கூட ஏதாவது இருக்கும். அதன் பிறகு டிஜிட்டலில் மறுமலர்ச்சி போல "கண்டதும் சுட்டான் போட்டோகிராபர் ஆனான்" எனும் அனுபவ மொழி வந்தது. உலகம் முழுவதுமே இந்த பழக்கம் வந்துவிட்டது.
எடுத்த புகைப்படங்களை எந்த வித ஆவணங்களாகவும் பத்திரப்படுத்துவதில்லை. டிஜிட்டல் குப்பைகளாக சேர்த்து வைத்திருக்கிறோம் எந்த வித உபயோகமும் இல்லாமல் என்பது குறிப்பிடத்தக்கது
#அந்தக்காலம் அது அது
இன்றைய டிஜிட்டல் போன்களின் 'ரோல்'மாடல் அன்றைய கேமராக்களே. ஒன்றாவது படிக்கும் போது ஒரு வெள்ளிக்கிழமை நாளில் எல்லாரும் தலைக்குக் குளித்து.. ட்ரங்க் பெட்டியில் இருப்பதிலேயே எடுத்து அடிக்கும் கலர் சட்டை அணிந்து (அப்பதான் முகம் நன்றாய் தெரியும் என்பது ஐதீகம்) காலர் பட்டன் போட்டு.. டிக் டிக் பேனாவோ, ரெனால்ஸ் பேனாவோ பாக்கெட்டில் சொருகி, டிஸ்கோ சீப்பால் நொடிக்கொரு முறை தலைவாரி பூச்சூடி போட்டோ எடுக்க போ என்றாள் அன்னை போல் அத்தனை பவ்யமாய் போனோம்
போட்டோகிராபர் வருவது என்பது அரசியலுக்கு ரஜினி வருவது போல் அத்தனை இன்ப அதிர்ச்சியானது. எதையாவது மென்று கொண்டே வந்து எல்லாரையும் நேராய் நிற்க வைப்பார். பெல்ட் இல்லாதவன் அரைஞாண் கயிறுக்குள் சட்டையை செருகி.. சிரித்தால் போட்டோ ப்ளாஷ் அடிக்கும். எல்லாரும் அந்த பென்ச்சிலிருந்து இறங்கும்போது அப்படியே ஆஸ்கர் விருது வாங்கிட்டு இறங்கி வருவது போல இருக்கும். ஒருவாரம் கழித்து பார்க்கும் போது.. அடேய் நீதானா நீதானா.. அட நான் தானா நான் தானா என ரசித்துப் பார்ப்போம்.
குடும்ப போட்டோ எடுப்பது தனிக்கதை. ஸ்டூடியோவில் உள்ள வட்ட வடிவ நாற்காலியில் அப்பா அமர்ந்திருக்க.. மை இட்டால் அழகா இருப்பேனு அம்மாகிட்ட சொல்ல அவங்களும்
அருகில் நிற்க, கனகாம்பரமோ மல்லிகையோ சூடிக்கொண்டு சகோதரியும் நிற்பார்கள். சிரிச்சாப் போச்சு ரவுண்டுக்கு போன மாதிரி ஒருத்தரும் சிரிக்க மாட்டோம். இறந்தவருக்கு பதினாறு கும்பிட படையல் போட்டு, காக்கா எடுக்குமானு பார்ப்பது போல சிலை மாதிரி நிற்போம்.
*தொண்ணூறுகளில் ஓவல்சைஸ் கூலிங் கிளாஸ் பிரபலம். கன்னம் வரைக்கும் மறைக்கும் வகையில் இருக்க அதில் ஒரு போட்டோ எடுப்பார்கள்.
*கழுத்தில் மைனர் செயின், புலி நகம் போன்றவை இருந்தால் இன்னும் சிறப்பு.
*தேங்காய் எண்ணெய் தலைக்கு தேய்த்து எடுத்தால் முடி கருமையாய் தெரியும் என்பதால் போட்டோ எடுக்கப் போகும் போது அதிகம் தேய்த்துக் கொண்டு போவார்கள்.
*தலைமுடி வழித்து சீவியிருந்தால் அப்பாவி என நம்புவதைப் போலத்தான் மீசையை நுனி ஒரம் ஒழுகும் படி இறக்கி வைத்திருப்பார்கள்.
*பெண்கள் நீளமான தலைமுடியில் இரட்டை ஜடையிட்டு ஒரு ஜடையை மட்டும் முன்னால் போட்டு ஸ்டைல் காட்டுவார்கள்
*குடும்பப் பெண்கள் இருக்கிற நகைகள் அனைத்தையும் அணிந்தபடி புகைப்படம் எடுப்பதை கெளரமாய் கருதினர்.
இவ்வாறு அரிய தருணங்களை விளக்கும் அற்புத புதையலாய் நினைத்து பாதுகாத்து வருகின்றனர். இன்றைய காலத்தில் இது போல் புகைப்படங்களை காக்கிறோமா என்பது கேள்விக்குறியே.
#சகட்டுமேனிக்கு புகைப்படம்
டிஜிட்டல் யுகத்தில் ஒரு நல்ல புகைப்படத்தின் ஆயுள் மொபைலில் மெமரி புல் என்று காட்டும் வரைதான்.! பேனா வாங்கியவுடன் எழுதுகிறதா என சரிபார்ப்பது போலத்தான்.. மொபைல் வாங்கியவுடன் போட்டோ எடுத்துப் பார்ப்பதும்.ஆகாயத்தைப் பார்ப்பது,கடைவாயில் கைவைத்து யோசிப்பது, கப்பல் கவிழ்ந்தது போல் கன்னத்தில் கைவைத்து கவிஞர் போலபோஸ் கொடுப்பது,இருட்டில் அஞ்சு கொலை செய்தது போல் கொடூரமாய் பார்ப்பது என போட்டோ எடுத்துத் தள்ளியதும் வாட்ஸ் அப்,ட்விட்டர், முகநூல்,இன்ஸ்டாவில் பகிர்ந்து.. பத்து பேருக்கு tag செய்தால் தான் மனசு ஆறும்.bலைக் போடலைனா ரத்த வாந்தி வரும் ரேஞ்சுக்கு பகிர்தல் இருக்கும். லைக் போட்ட பாவத்துக்கு.. ஐம்பது பேர் கமெண்டுகளும் நமக்கும் வரும் போது தான் ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல எனும் ஜென் நிலை அடைவோம்
இயற்கைக் காட்சி, சுற்றுலாத்தளம் என எங்கு சென்றாலும் ரசிக்கும் தன்மையின்றி.. எதிர்காலத்தில் ரசிக்க புகைப்படம் எடுக்கிறோம். நல்ல மனிதர்களை கண்டால் உரையாடும் வழக்கம் சுருங்கி.. உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு சமூக வளைதளங்கில் பதிவிடுகிறோம். முந்தைய ஆட்டோகிராப் வாங்குவதன் அப்டேட் வெர்சன் செல்ஃபி எடுப்பது என்றாகிவிட்டது.
சுருள் கேமராவில் 36 போட்டோக்கள் மட்டும் எடுக்கும் போது நிதானம், தெளிவு, கம்போஸிங் ஆகியவை இருக்கும். ஆனால் தற்போது எந்தவித தெளிவும் இன்றி எடுத்துத் தள்ளுகிறோம்.ஒரு கட்டத்தில் மொபைல் ஹேங்க் ஆகும் சூழ்நிலை வரும் போது ஆசையாக எடுத்த அத்தனையும் தயவுதாட்சன்யமின்றி அழித்துவிடுகிறோம்
டிஜிட்டல் யுகத்தில் ஆல்பம் போட்டு வைப்பதெல்லாம் மலையேறிவிட்டது. ஒரு முறை எடுத்த புகைப்படத்தை நாமே கேலரிக்கு சென்று பார்ப்பதில்லை.அந்த நேரத்திற்கு மட்டும் கோணம் சரியாய் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு மறந்து விடுகிறோம்.புகைப்படம் என்பதே கடந்த காலத்தை நினைவுபடுத்தும் பொக்கிசம் என்பதை உணராமல் செய்துவிட்டது காலம்.
பல நூறு வார்த்தைகள் பேசுவதை ஒரே ஒரு புகைப்படம் பேசும் என்பார்கள். ஆனால் நவீன யுகத்தில் புகைப்படக் கலையை கற்றுக் கொள்ளக்கூட ஆர்வமின்றி கணக்கற்ற புகைப்படங்களை எடுக்கிறார்கள். சுற்றுலா அனுபவம் என்பது நினைவுகளை மூளையில் பதிய வைத்து.. தேவைப்படும் போது மீட்டெடுத்து அதை அனுபவமாக மாற்றும். ஆனால் தற்போது அந்தச் சிந்தனையையே மழுங்கடித்து போட்டோ எடுப்பதை மட்டும் நினைவில் வைத்து செல்கிறோம்.
எடுத்தவுடன் அந்த இடத்தை விட்டு அடுத்த இடத்திற்கு போட்டோ எடுக்கச் சென்றுவிடுகிறோம்.
இன்னொரு சாரார் தன்னை எத்தனைப் புகைப்படம் எடுத்துக் கொண்டாலும் திருப்தி கொள்வதில்லை.விதவிதமாய் எடுத்துக் கொண்டே இருந்தால் தான் திருப்தி. கொரொனா காலத்தில் கூட பலர் இயலாதோர்க்கு உதவி செய்தனர். சிலர் உதவி பெற்றவரின் மகிழ்ச்சியை மட்டும் புகைப்படம் எடுக்காமல் உதவி செய்வதையும் புகைப்படம் எடுத்து வலைதளங்கில் பகிர்கின்றனர். உதவி பெற்றவரின் நிலையிலிருந்து ஒரு முறை எண்ணிப் பாருங்கள். அது எத்தனை வலி நிறைந்தது என்று தெரியும்.
முக்கியமானவர்களின் பேச்சினை, பிரபலங்களின் வருகை, செயற்கையாய் குழந்தைகளை போஸ் கொடுக்கச் செய்வது என அந்தந்த நேர மகிழ்வினை அனுபவிக்காமல் போட்டோ எடுத்து மெமரி கார்டை நிரப்புகிறோம்.
புகைப்படத்திற்கான அடிப்படை விதிகள் சரியான கோணமும் தூரமும் தான். தேவையான வெளிச்சம், நிதானம், பிண்ணனி மற்றும் தேவையற்ற பொருட்களை ஃப்ரேமிலிருந்து தவிர்த்து எடுப்பதும் தான். பெரும்பாலும் புகைப்படம் எடுப்போரின் முக்கிய லாஜிக் பத்து போட்டோ எடுத்தால் ஒன்று சரியாய் வரும் என்பதுதான்.. அது தவறு. ஒன்று எடுத்தாலும் நன்றாய் ரசித்து, சரியான கோணம் வைத்து எடுத்தாலே போதும் அருமையாய் இருக்கும்.இணைய குப்பைகளை சுத்தப்படுத்த வேண்டியதில்லை.
வாழ்வின் அரிய அனுபவங்களை நிகழ்வுகளை புகைப்படங்களாக பதிவு செய்வோம். உங்களின் கேமரா தூரிகை போல. அதில் அழகான ஓவியங்களாக புகைப்படம் எடுக்க வேண்டும். பொழுது போக்கிற்கு எடுத்தாலும் இயற்கையின் ஒளியை நேர்த்தியாக கையாண்டு அந்த தருணத்தை மறக்கவியலா நினைவுகளாக பதிவு செய்வோம். புகைப்படம் எடுப்பதில் அடுத்த நிலைக்கு செல்வோம்.
-மணிகண்டபிரபு
கன்பூசியஸ்
Thursday 29 July 2021
Tuesday 27 July 2021
info
சுற்றுச்சூழல் பாதிக்குமென தெரிந்தும் அணை கட்ட துடிப்பது ஏன்? - மேக்கேதாட்டூ விவகாரம்
காவிரி வழக்கில் நாம் கர்நாடகத்தை வென்றிருக்கலாம். ஆனால், காவிரியிடம் தொடர்ந்து தோற்றுக்கொண்டிருக்கிறோம்.தங்க.ஜெயராமன்
ஒவ்வொரு வருடம் மழைக்காலம் வரும்போதெல்லாம் மாறாமல் காவிரி நீர் பிரச்சனையும் சேர்ந்தே வரும். நடந்தாய் வாழி காவேரி என்பது போய் தீர்ப்பாய் வாழி காவேரி என மாறி தமிழகத்திற்கு போராடாமல் தண்ணீர் கிடைத்ததில்லை. சில ஆண்டுகளாக இப்பிரச்சனை மேக்கேதாட்டூ வடிவில் வருகிறது. மேக்கேதாட்டூவில் கர்நாடக அரசு அணை கட்டும் பிரச்சனை தமிழக மக்களுக்கு பெரும் தலைவலியாய் வந்துவிட்டது.
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகபுரா பகுதியில் உள்ளது மேக்கேதாட்டூ. ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் பெங்களூருவில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு தான் கர்நாடக அரசு ரூ.6000 கோடி மதிப்பில் புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது.
ஒப்புதலை பெற காத்திருக்கிறது கர்நாடகம்
#காவிரி விவகாரம்
அகத்தியர் வைத்திருந்த கமண்டலத்தைக் காகம் தட்டிவிட்டதால் காவிரி வந்ததாய் உருவகப்படுத்துகிறது புராணம். குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி கர்நாடகத்தில் 320கிலோ மீட்டரும், தமிழக எல்லையில் 64 கிலோமீட்டரும், தமிழகத்தில் 416 கிலோமீட்டரும் என 800கிலோமீட்டர் பயணித்து பூம்புகாரில் கலக்கிறது.இயற்கையாய் பயணித்த காவிரி இன்று சட்டப் போராட்டம் நடத்தி உச்சநீதி மன்ற தீர்ப்பு வந்ததால் காவிரி தமிழகத்துக்கு வந்திருப்பது நினைவில் கொள்ள வேண்டிய செய்தி
நூறாண்டுகளாக இருக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டு பிரச்சனை, சட்டப் போராட்டத்தின் விளைவாய் 1991ல் உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் 205 T.M C வழங்க உத்தரவிட்டு பின் இறுதித்தீர்ப்பில்(05-02-2007) 192 T.M.C தமிழகத்துக்கு வழங்க உத்தரவிட்டது.
ஆனால் மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி நீரும், தமிழகத்துக்கு 177.25 T.M.C வழங்கும் படி இறுதித்தீர்ப்பு வந்தது.
(ஒரு கன அடி நீர் 28.3லிட்டர். ஒரு T.M.C என்பது 2830 கோடி லிட்டர்)
ஒரு ஏக்கர் நீரில் பத்தாயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். தமிழகத்தில் 24 லட்சம் ஏக்கர் பரப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நீராவது கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்குத் தான் இடி வந்து விழுந்தது மேக்கேதாட்டூ விவகாரத்தில். இத்தனை லட்சம் ஏக்கர் பாசன வசதியும் நம்பியுள்ளது காவிரியை மட்டுமே. இந்த விவகாரத்தில் ஓட்டு வங்கியை நினைவில் வைத்து கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அணை கட்டுவதில் முனைப்பு காட்டுகிறது. ஆனால் இந்த அணையினால் சுற்றுச்சூழல் பாதிக்குமென அறிக்கை அளித்துள்ளனர் சூழலியல் ஆய்வாளர்கள். ஏற்கனவே கிருஷ்ணராஜ சாகர் அணையில் 49TMC சேர்த்து வைக்கும் நிலையில் மேக்கேதாட்டூவில் 69.16 TMC நீர்த் தேக்கம் செய்தால் தமிழகத்துக்கு நீர் கிடைப்பது கானல் நீராகிவிடும்.
#கர்நாடக அணைகள்
சென்னை ராஜதானி-கர்நாடகம் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி கிருஷ்ணராஜ சாகர் அணை (124.8 அடி) 1911ல் துவங்கப்பட்டு 1933ல் கட்டி முடிக்கப்பட்டது. 48.45 டி எம்.சி தேக்கப்பட்டு திறந்துவிடப்படும் நீர் மேக்கேதாட்டூ, ஒகேனேக்கல் வழியே மேட்டூர் வந்து அடையும்.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு 93.47 டி.எம்.சி., ஆகும்.
1924ம் ஆண்டு ஒப்பந்தப்படி ஐம்பது ஆண்டுகளுக்கு 575 டி.எம்.சி நீர்வழங்கியது. 1974ல் ஒப்பந்தம் புதுப்பிக்காமல் காலாவதியானதாக கூறி காவிரி மற்றும் துணையாறுகளின் இடையே அணைகளை கட்டத் துவங்கியது கர்நாடகம்
காவிரி ஆற்றின் துணை ஆறுகளான ஹேமாவதி ஆற்றில் 1979ம் ஆண்டு கட்டப்பட்டது. அதேபோல் மற்றொரு துணையாறான கபிலாவின் குறுக்கே கபினி அணை 1974ல் கட்டியது.19.05 டி.எம்.சி கொண்ட இது பெங்களுருவின் குடி நீர்த்தேவையை பூர்த்தி செய்கிறது. ஹேமாவதி, ஹேரங்கி,கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைகளை தாண்டி தான் காவிரி தமிழகத்திற்கு வருகிறது.கபினியில் இருந்து திறந்துவிடப்படும் நீர் கபிலா ஆறு வழியாகவும்,கே.ஆர்.எஸ் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீர் காவிரி வழியாகவும் வந்து மைசூர் மாவட்டம் டி.நரசிப்புரா பகுதியில் உள்ள திருமாகூடலு பகுதியில் ஒன்றிணைந்து அகண்ட காவிரியாய் தமிழகத்திற்கு வருகிறது.
இந்த நான்கு அணைகளைத் தாண்டி ஐந்தாவதாக மேக்கேதாட்டூ அணை 2015ல் கட்ட 66 டி.எம்.சி நீரை தேக்க தீர்மானித்தது.
2018ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனாலும் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா அரசு மேக்கேதாட்டூ அணை கட்ட முடியாது என காவிரி மேலாண்மை வாரியம் விளக்கம் அளித்ததால்.. தற்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தமிழகத்தின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல் என்று அனைவரும் கருதுகின்றனர்.
ஒவ்வொரு முறையும் பருவ மழை காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யும் போது.. காவிரியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினை பயன்படுத்திக் கொண்டு கர்நாடகம் மழையோடு மழையாக காவிரி நீரை திறந்து விடுகிறது. விவசாயத் தேவைக்கு பயன்படாமல் வெள்ளத்தோடு வெள்ளமாக கடலில் கலக்கிறது. தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை தந்துவிட்டோம் என கணக்கு காட்டிவிடுகிறது கர்நாடகம் .டெல்டா விவசாயத்திற்கு தேவைப்படும் காலங்களில் நீர் கிடைக்காமல் திண்டாடுவது வாடிக்கையாகிவிட்டது. எனவே தமிழகத்திற்கு தர வேண்டிய நீரினை அன்றாடம் பங்கிட்டு அமல்படுத்தும் படி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கா'என்றால் சோலை. தான் பாயும் இடங்களில் எல்லாம் சோலைகளை விரிக்கும்(உருவாக்குதல்) தன்மை கொண்டதால் இந்த ஆறு கா விரி ஆனது.சூழலியலாளர் நக்கீரன்
'ஆனி பிறந்து விட்டால் ஆறு கரை புரளும், ஆறெல்லாம் மீன் புரளும் என்ற முதுமொழிக்கேற்ப ஆடி பிறந்தால் விதை விதைப்பதைத் தான் ஆடிப்பட்டத்தில் தேடி விதை என்பார்கள். உரிய காலத்தில் நீர் வந்தால் தான் உற்பத்திக்கு உதவும். மத்திய அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்திற்கு முழு நேரத்தலைவரை நியமிக்க வேண்டும். நடுவர் மன்ற விதிப்படி உரிய ஆய்வு நடத்தி குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட வேண்டும்.
இத்தனை சட்ட விதிகள் இருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் தர இழுத்தடிக்கும் கர்நாடக அரசு.. அணைகட்டினால் மழை இல்லை என்பதை காரணம் காட்டி சுத்தமாய் தண்ணீர் தருவதை நிறுத்திவிடும். தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீரை பெறவும்,புதிய அணை கட்டுவதைத் தடுக்கவும் தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
நடுவர் மன்றத்திற்கு உட்பட்ட அணைகளை காவிரி நடுவர் மன்றம் கண்காணிக்க வேண்டும்.இனி எந்த வித அணை கட்டுவதற்கும் அனுமதி பெற்ற பின்னே துவங்க உத்தரவிட வேண்டும்.மேலாண்மை வாரியத்திற்கு முழு அதிகாரம் கொடுத்து..சுதந்திரமாய் செயல்பட அனுமதித்தால் தான் தீர்வு காண முடியும். நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தங்குதடையின்றி தமிழகத்திற்குநீர் தர வேண்டும். "ஒருத்தரோட பிரச்சனை மத்தவங்களுக்கு எப்பவும் வேடிக்கையாதான் இருக்கும்" என்பார் அசோகமித்திரன்.இந்தப் பிரச்சனையை வேடிக்கை பார்க்காமல் உடனடியாய்
பிரச்சனையை களையுமா மத்திய அரசு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-மணிகண்டபிரபு
Sunday 25 July 2021
பாரதிதாசன்
Friday 23 July 2021
ஜெயமோகன்
Thursday 22 July 2021
நித்ய சைதன்ய யதி
ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்
Wednesday 21 July 2021
சங் சூ
தழுவுதல்-ஆரத்தழுவுதல்
சார்பட்டா பரம்பரை விமர்சனம்*மணி
நெருடா
பன்றி உண்டியல்
Tuesday 20 July 2021
சுஜாதா
Sunday 18 July 2021
முகுந்த் நாகராஜன்
படித்தது
ரோஸ்லின்
Saturday 17 July 2021
கற்பதுவே..பகிர்வதுவே-27*மணி
124 ஆண்டு கால வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை! - ஒலிம்பிக் 2021 துளிகள்
The most important thing in the Olympic Games is not winning but taking part; The essential thing in life is not conquering but fighting wellBarren Pierre de coubertin
ஒலிம்பிக் போட்டி என்றவுடன் சட்டென நினைவுக்கு வருபவை இந்த வரிகளே. ஜெஸி ஓவன்ஸையும், லஸ் லாங்கையும் பள்ளி வயதில் அறிமுகம் செய்தவை ஒலிம்பிக் போட்டிகளே. ஒவ்வொரு விளையாட்டு வீரனின் கனவுகளை நனவாக்குபவை இப்போட்டிகளே.
முதல் ஒலிம்பிக் போட்டி 1896ல் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது.
கோடைகால ஒலிம்பிக் போலவே 1924 முதல் குளிர்கால ஒலிம்பிக்கும் நடத்தப்பட்டு வருகின்றன
1994 முதல் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்து இரண்டு ஆண்டு கழித்து குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதுவரை மொத்தம் 31 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
தற்போது ஜப்பானின் டோக்கியோவில் ஜூலை 23 முதல் துவங்கும் போட்டியானது 32வது போட்டியாகும். ஒட்டு மொத்தமாக 339 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. டோக்கியோவின் 32வது ஒலிம்பிக்கை ஜப்பான் பேரரசர் நாருஹிடோ துவக்கி வைக்கும் போட்டி, ஜப்பானின் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது.
ஆயிரம் முக்கிய நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மார்ச் 25 அன்று ஜப்பானின் புகுஷிமாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு அதற்கான தொடர் ஓட்டம் ஆரம்பமானது.
ஜூலை 23 அன்று வில்வித்தை உள்ளிட்ட சில போட்டிகள் துவங்கினாலும் தடகள போட்டிகள் பெரும்பகுதி ஜூலை 24 சனிக்கிழமையன்று தொடங்குகிறது.
16 நாட்கள் நடைபெறும் போட்டியின் நிறைவு விழா ஆகஸ்ட் 8 ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது. கடந்த 124 ஆண்டு கால ஒலிம்பிக் போட்டிகளின் வரலாற்றில் முதல் முறையாக கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெற உள்ளது. முன்பு 1940 இல் இதேபோல டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்கின் பாரம்பரியம் கிரேக்கத்தில் நடைபெற்ற பண்டைய ஒலிம்பிக்கில் இருந்து பெறப்பட்டது. ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை விளையாட்டுகளை நடத்துவதற்கான கால இடைவெளி ‘ஒலிம்பியாட்’ என்று அழைக்கப்படுகிறது.
ஒலிம்பியாட் சுழற்சி ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நாளில் தொடங்கி நான்காம் ஆண்டில் டிசம்பர் முப்பத்தியோராம் தேதி முடிவடைகிறது. கொரோனா காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு பின் ஐந்தாவது ஆண்டில் நடக்க இருக்கிறது.1916,1940,1944ம் ஆண்டுகளில் உலகப்போர் காரணமாக நடைபெறவில்லை.2024 கோடைகால விளையாட்டுக்கள் பாரிஸிலும், 2028 இல் லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெறும்.
#ஒலிம்பிக் சின்னங்கள்
ஒலிம்பிக் என்றவுடன் முதலில் நினைவுக்கு ஐந்து வளையங்களுடைய ஒலிம்பிக் கொடி ஆகும். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ’பியரி டி கூபர்டீன்’ என்பவரால் 1912ஆம் ஆண்டு, இந்த கொடி உருவாக்கப்பட்டது.
ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஒருங்கிணைந்த அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து கண்டங்களை குறிப்பதாக ஒலிம்பிக் சட்டத்தின் 8ஆவது விதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதில் உள்ள நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை ஆகிய 6 நிறங்களில் ஏதாவது ஒரு நிறமாவது ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் தேசியக் கொடிகளிலும் இடம் பெற்றிருக்கும் என்பதாலேயே, இந்த நிறங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
Immortal spirit of antiquity என்று துவங்கும் பாடலை கிரேக்க பாடலாசிரியர் கோஸ்டிஸ் பலமாஸ் எழுதி சமராஸ் இசையமைத்த இப்பாடலே ஒலிம்பிக் கீதமாகும். சிடியஸ், ஆல்டியஸ், போர்டியஸ் எனும் இலத்தின் மொழி சொற்கள் ஒலிம்பிக்கின் தாரக மந்திரமாகும். தமிழில் "வேகமாய், உயர்வாய், வலுவாய்"என மொழிபெயர்த்தால் கிடைப்பது.
ஒலிம்பிக் போட்டியில் ரொக்கப்பரிசு கிடையாது. தங்கம், வெள்ளி, வெண்கலப் பரிசுகள் வழங்கப்படும். பதக்கத்தில் கிரேக்க பெண் கடவுள் நைக்கியின் பெயர் இருக்கும்.
நீலம், சிகப்பு என இரண்டு நிறம், இரண்டு அமைப்புகளில் ஒலிம்பிக் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் Miraitowa என பெயரிடப்பட்டுள்ள நீல நிற சின்னம் ஒலிம்பிக் தொடருக்கும், Someity என பெயரிடப்பட்டுள்ள சிகப்பு நிற சின்னம் பாராலிம்பிக் தொடருக்கும் ஆகும்.
1980 ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் சின்னங்கள் அந்நாட்டின் சிறப்பை விளக்கும் வகையில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
#ஒலிம்பிக் துளிகள்
*ஒலிம்பிக் பதக்க நிகழ்ச்சியின் போது பங்கேற்பாளர்கள்,பதக்கம் வழங்குவோர் என யாரும் போட்டோ எடுத்துக் கொள்ளக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்
*206 நாடுகளை சேர்ந்த 11000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
*இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணியினர் நிறவெறிக்கு எதிராக முதல் ஆட்டத்தின் போது முழங்காலில் சிறிது நேரம் நிற்க உள்ளனர்.
*வில்வித்தை, தடகளம், ஜூடோ, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டெபிள் டென்னிஸ் விளையாட்டுகளில் கலப்பு பிரிவில் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
*டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளது.அவற்றில் நான்கு இந்த ஒலிம்பிக்கில் அறிமுகமாகிறது.. கராத்தே, ஸ்கேட்டிங்,sport climbing, surfing
ஆகியவற்றோடு 13 ஆண்டுக்கு முன் நீக்கப்பட்ட பேஸ்பால் மற்றும் சாப்ட்பால் சேர்க்கப்பட்டுள்ளது.
*கிரிக்கெட் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட போட்டிகள் ஒலிம்பிக்கில் நடத்தப்படுவதில்லை.
*டிராக், நீச்சல், டிரையத்லான், வில்வித்தை மற்றும் டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட கலப்பு பாலின அணிகளுக்கான ரிலேக்கள் உள்ளிட்ட பல விளையாட்டுக்கள் இந்த வருடம் நடைபெற உள்ளது.
*கொரொனா காரணமாக இரு அணிகளும்.. ஹாக்கி போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை எனில் இரு அணிகளுக்கும் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#இந்தியா
19ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் இந்தியா ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று வந்துள்ளது.இதுவரை 9 தங்கம், 7 வெள்ளி,12 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றுள்ளது. ஆறு ஒலிம்பிக் போட்டிகளில் (1920,1924,1976,1984,1988,1992) பதக்கமின்றி நாடு திரும்பியுள்ளது. ஜப்பானின் டோக்கியோ 2021 ஒலிம்பிக்கில் 67 வீரர்கள், 52 வீராங்கனைகள் என 119பேர் 16பிரிவுகளில் 85 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானால் உருவாக்கப்பட்ட Hindustani Way எனும் பாடலை அனன்யா, நிர்மிகா சிங்,சிஷிர் சமந்த் எழுத அனன்யா பாடியுள்ளார். துவக்க விழாவில் இந்தியாவின் சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் இருவரும் தேசியக் கொடியை ஏந்திச் செல்வர்.
நிறைவு விழாவில் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்வார்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 119 வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 228 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. இதில் 67 வீரர்கள், 52 வீராங்கனைகள் அடங்குவார்கள். 85 பந்தயங்களில் நமது அணி பங்கேற்கிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அதிக எண்ணிக்கை கொண்ட இந்திய அணி இது தான்.
*ஆறு முறை சாம்பியனான மேரி கோம் பங்கேற்கும் கடைசி ஒலிம்பிக் போட்டி இது.
*மஹாராஷ்டிராவை சேர்ந்த தீபக் காப்ரா ஜிம்னாஸ்டிக் அம்பயராக ஒலிம்பிக்கில் பணியாற்ற உள்ளார்.
*இந்திய வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். மற்ற விளையாட்டு தூர்தர்ஷனிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஆன்லைன் பார்வையாளர்களுக்கு, சோனி எல்.ஐ.வி.யில் நேரலையில் இருக்கும்.
*தமிழகத்தில் இருந்து 12 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.பவானி தேவி (ஃபென்சிங்); சத்தியன் ஞானசேகரன் (டேபிள் டென்னிஸ்); சரத் கமல் (டேபிள் டென்னிஸ்); நேத்ரா குமனன், கணபதி, மற்றும் வருண் (படகோட்டம்); அரோக்கியா ராஜீவ், நாகநாதன் பாண்டி, தனலட்சுமி, சுபா வெங்கடேசன், ரேவதி வீரமணி (ரிலே ரேஸ்); மற்றும் மாரியப்பன் தங்கவேலு (உயரம் தாண்டுதல்).
*தமிழக வீரர்கள் 12 பேருக்கும் ஊக்கத் தொகையாக ஐந்து இலட்சம் தமிழக அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
*டெல்லி, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள், ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ. 3 கோடி அறிவித்துள்ளன
உலகமே இவர்களின் வெற்றியை உற்று நோக்கி கரவொலி எழுப்ப எதிர்பார்த்துள்ளனர்.
"முதல் அடியிலும், முடிவு அடியிலும் ஒரே விழிப்புணர்வுடன் இருப்பவனுக்கே சிகரங்கள் சாத்தியம். அதில் ஏறிய பிறகு அவனே சிகரமாகி விடுகிறான்" எனும் வெ.இறையன்புவின் வரிகள் விளையாட்டு வீரர்களுக்கே முழுவதும் பொருந்துகிறது.
திறமையின் மூலம் வெல்லும் அனைவரும் போற்றதலுக்குரியவர்களே! அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவராயினும் வணக்கத்திற்குரியவர்களே! வரவேற்க காத்திருப்போம்.
-மணிகண்டபிரபு
ஒவ்வொரு ஜன்னலிலும் புதிய காட்சிகள்..! - விண்டோஸின் பயணம்
வருங்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கம்ப்யூட்டர் இருக்கும். அதில் என்னுடைய சாப்ட்வேர் தான் இயங்கிக் கொண்டிருக்கும்பில்கேட்ஸ்
"ஜன்னலைத் திறந்தான். காட்சிகள் அவனைப் பார்த்தன"
என்பது கவிஞர் ராஜா சந்திரசேகரின் வரி. இணையத்திலும் இன்று சாளரத்தை திறந்தால் உலகம் உங்களை காண வழிவகை செய்துவிட்டது. உலகின் பல பகுதிகளில் கணினிகளில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளம்(Operating System) முதல் பதிப்பிலிருந்து, இன்று வெளியாகியுள்ள வெர்சன் 11 வரை வளர்ச்சி பெற்றுள்ளது.
பில்கேட்ஸ் மற்றும் பால் ஆவென் இணைந்து மைக்ரோசாப்ட் எனும் நிறுவனத்தை 1975ல் துவங்கினார்கள். மைக்ரோ-சாப்ட் என்பது மைக்ரோ கணினிகளுக்கான மென்பொருள் எழுதுகிறவர்கள் என்பது பொருள். நாளடைவில் பெயர் ஒன்றாகி மைக்ரோசாப்ட் என்றானது
முதன்முதலில் அல்டெய்ர் பேசிக் என விளையாட்டு மென்பொருள் இவர்களுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அடுத்தடுத்த வேலைகளுக்குப் பின் I.B.M நிறுவனம் தயாரிக்கும் பர்சனல் கம்யூட்டர்களுக்கான சாப்ட்வேரை தயாரிக்கும் பொறுப்பு மைக்ரோசாப்டுக்கு வந்தது. கூடவே O.S (operating system) தயாரிக்கும் பொறுப்பும். பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் 1981ல் IBM-PC கம்ப்யூட்டர் மைக்ரோசாப்டின் சாப்ட்வேர் மற்றும் pc-dos ஆப்ரேட்டிங் சிஸ்டத்துடன் வெளிவந்து வெற்றியடைந்தவுடன்.. ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இன்னும் புதுமையை படைக்க விரும்பி கால மாற்றத்திற்கு தேவையான புதிய ஓ.எஸ்க்கு Interface Manager என பெயர் சூட்டினர்.
பின்னர் பெயரின் நீளம் கருதி Windows எனபெயர் சுருக்கினர். ஒவ்வொரு ஜன்னலை திறக்கும் போதும் புதிய காட்சிகள் உங்களுக்கு காணக்கிடைக்கும் எனும் உள் அர்த்தத்தோடு பெயர்சூட்டினர்.
1985 நவம்பர் 20ம் தேதி மைக்ரோசாப்ட் விண்டோஸ்-1 எனும் பெயரில் இயங்குதளதை வெளியிட்டார் பில்கேட்ஸ்.அப்போது அதன் விலை 99 அமெரிக்க டாலர்.மல்டி டாஸ்கிங்,மவுஸ் பயன்பாட்டை அப்போதுதான் அதிகரித்தது.சில குறைபாடுகளுடன் தோல்வியடைந்தாலும் 1987 டிசம்பர் மாதம் 9ம் தேதி விண்டோஸ்-2 வெளிவந்தது.மைக்ரோசாப்ட் word, பவர்பாய்ண்ட், எக்ஸெல் உடன் இதில் கன்ட்ரோல் பேனல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹார்ட் டிஸ்க் இல்லாத கம்யூட்டரிலும் இரண்டு பிளாப்பி ட்ரைவுகள் மூலம் இயங்கு முறை சேர்க்கப்பட்டது. கோப்புகளை சீர்படுத்தும் முறை, விரிவாக்கப்பட்ட வன்பொருள் என நிறுவனத்திற்கு ஓரளவு வெற்றி தேடித் தந்தது.
அதற்குப் பிறகு விண்டோஸ் - 3.0 1990 மே22ம் தேதி வெளிவந்தது.
முதல் இரு வடிவங்களில் உள்ள குறைகளை சரி செய்து மேம்படுத்தப்பட்ட கன்ட்ரோல் பேனலுடன் கேம் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. 3.1ல் மல்ட்டி மீடியா, வேகம், நம்பகத் தன்மையுடன் விண்டோஸில் அடுத்தடுத்து திறக்கிற பக்கங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இருந்தது வரவேற்பைப் பெற்றது.
இரண்டு வருடங்களில் ஒரு கோடி சி.டிக்கள் விற்பனை செய்யப்பட்டது. இதன் பிறகே மைக்ரோசாப்ட் தன் முழு கவனத்தையும் இயங்கு தள சந்தையில் செலுத்தியது.
முதல் இரண்டு மாதங்களில் மூன்று மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டன. இந்த overlapping windows தன்னிடமிருந்து காப்பியடித்தாக ஆப்பிள் நிறுவனம் நீதிமன்றம் சென்றது தனிக்கதை.
*1995ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி சாதாரண மக்களை நினைவில் வைத்து ஆப்ரேட்டிங் சிஸ்டம், டாஸ்க் பார், சிஸ்டம் ட்ரே, நோட்டிபிகேசன், மேக்சிமைஸ்-மினிமைஸ் ஆகிய எல்லா வசதிகளுடன் விண்டோஸ்-95 வெளியானது. இந்த பதிப்பில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவியும் சேர்ந்தே வந்தது. ஸ்டார்ட் பட்டன், டாஸ்க் பார் போன்ற வசதிகள் இந்த பதிப்பிலிருந்தே ஆரம்பித்தது.
*1998ம் ஆண்டு ஜூன் 25ல் விண்டோஸ் 98 அறிமுகமானது. MS-DOS அடிப்படையாகக் கொண்ட விண்டோஸின் கடைசி பதிப்பாகும்.
ஸ்கேனர், மவுஸ்,கீ போர்ட், ஜாய் ஸ்டிக் ஆகியவற்றை யு.எஸ்.பி போர்ட் மூலம் பயன்படுத்த முடிந்தது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 4” இல் உள்ளமைக்கப்பட்டது.
*விண்டோஸ் 2000 செப்டம்பர் மாதம் மைக்ரோசாப்ட் என்.டி NT- NETWORK (WORKSTATION) தொழில்நுட்பத்தில் உருவாகி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2001ல் விண்டோஸ் எக்ஸ்பி செயல் திறன் மிகுந்த இதன் பயன்பாடு அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தது. File Management, பாதுகாப்பு, உறுதி, வேகம் என அனைத்து பிரிவுகளிலும் மேம்படுத்தப்பட்டு வெளியானது.
அப்போது பலரும் இந்த வெர்சனைத் தான் அதிகம் பயன்படுத்தினர். அதனைத் தொடர்ந்து விண்டோஸ் சர்வர் 2003லும்,விரிந்த காட்சி எனப் பொருள்படும் விண்டோஸ் விஸ்டா 2006லும்,விண்டோஸ் சர்வர் 2008லும், விண்டோஸ் 7-2009லும், விண்டோஸ் சர்வர் 2012லும் பல ஓ.எஸ்களை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. முதல் 9 மாதங்களில் 15 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டன.
2012 அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 வெளியிடப்பட்டது. இதில் ஸ்டார்ட் மெனு உள்ளிட்ட சில குறைபாடுகள் இருந்ததால் அதிகம் பேர் விண்டோஸ் 7ஐயே பயன்படுத்தி வந்தனர்.அதனால் ஸ்டார்ட் ஆப்சன் சேர்க்கப்பட்டு விண்டோஸ் 8.1 வந்தது.2015 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டுமாக Windows 10 இயங்குதளம் சில கூடுதல் மேம்பாட்டுடன் windows 11 ஆக ஜூன் 24 அன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் மைக்ரோசாப்டின் அடுத்த தலைமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள Windows 11 இயங்குதளம், பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
விண்டோஸ் 11ன் திரை 720p அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கிறது. task bar, start menu திரையின் நடுவில் இருக்கும்.இதன் அருகிலேயே search option இருப்பதால் எளிதில் தேட உதவுகிறது. cloud storage file மற்றும் data களை எளிதில் தேட முடியும்.
Auto HDR இருப்பதால் வீடியோக்கள் மற்றும் image துல்லியமாக இருக்கும்.
DirectX 12 சப்போர்ட் செய்வதால் திருப்தியான அனுபவத்தைப் பெறலாம்.Touch screen இருப்பதால் கீ போர்ட் இல்லாமலேயே பயன்படுத்தலாம். voice typing, writing என அத்தனை அம்சங்களுடன் பாகுபலி ட்ரைலர் போல் விண்டோஸ் 11 வந்துள்ளது.டாஸ்க் பாரில் சாட் பாக்ஸ் உள்ளதால் அதன் மூலம் எளிதாக மெசேஜ்,வீடியோ கால் ஆடியோ கால் செய்யும் வசதி உள்ளது.
Widget update செய்திருப்பதால் செய்தி, வானிலை ஆகியவை துல்லியமாய் இருக்கும். Snap group& snap layout ல் நிறைய பக்கங்களை ஒரே நேரத்தில் திரையில் பார்க்கலாம். ஸ்னாப் தளவமைப்புகள் மூன்று விண்டோக்களை அருகருகே வைப்பது, ஒரு பெரிய விண்டோ இரண்டு சிறிய விண்டோக்களை பக்கத்தில் அடுக்கி வைக்கும் வசதி இருக்கிறது.
ஸ்கிரீனின் பல்வேறு பொஷிஷன்களில் ஆட்டோமேட்டிக்காக ஒரு tab-ஐ வைக்க யூஸர்களுக்கு உதவுகிறது. வாய்ஸ் டைப்பிங் வசதியுடன்.. ஆன்ராய்ட் app களை சப்போர்ட் செய்யும் விதத்தில் Microsoft storeல் பதிவிறக்கம் செய்து கணினியில் கையாள வகை செய்யப்பட்டுள்ளது. ஒரிஜினல் windows 10 வைத்திருப்பவர்கள் மட்டும் விண்டோஸ் 11ஐ அப்டேட் செய்யலாம் என சொல்லியுள்ளனர். க்ராக்ட் வெர்சன், டூப்ளிகெட்&பீட்டா வெர்சன் பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது என்கின்றனர் வல்லுநர்கள்.
*new wall paper new theme பத்து வகைகள் உள்ளன. Transparent மற்றும் அனிமேஷன்கள் அசைவுடன் கூடிய விண்டோக்கள் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
*start மெனு நடுவில் இருக்கும். விரும்பினால் இடது புறம் வைத்துக் கொள்ளலாம்.
*மைக்ரோசாப்டின் Teams..வீடியோ கான்ஃபெரன்சிங் மற்றும் மெசேஜிங் வசதி உள்ளிணைக்கப்பட்டுள்ளது
*அடிக்கடி உபயோகிக்கும் செயலிகள், முதலில் பார்க்க வேண்டியவைகளை pinned முறையில் மேலே customize செய்து வைத்துக்கொள்ளலாம்
*HDR அல்லாத கேம்களை விளையாடும் போது,HDR ஆனது தானாகவே லைட்டிங்கை புதுப்பித்துக் கொள்ளும்.
*search ல் தேடலின் நேரத்தை குறைக்கும் வகையில் பரிந்துரைகளையும் காட்டும்
*ஒவ்வொரு ஐகான்களின் கீழே நிழல் போல குறிப்புகள் உள்ளன.
*split-screen mode இதில் உள்ளது கூடுதல் வசதி.
*widgets இதில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.மேலே பக்கங்களை திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது கீழே முக்கியச் செய்திகள் மற்றும் கட்டுரைகளையும் க்ளிக் செய்து படிக்கலாம்..பார்க்கலாம்.
*பயன்பாட்டில் இருக்கும் போது வரும் இ-மெயில்களை appல் சென்று பார்க்காமல் உடனடியாய் அவ்வப்போது படிக்கலாம்.
முதன்முதலில் வந்த கணினிகள் பெரிய அளவில் இருந்தன. தற்போது கணினிகள் பாக்கெட்டுகள் வைத்து செல்லும் அளவிற்கு கூட வந்துவிட்டன. உலகின் சுருக்கமும் டெக்னாலஜியின் வேகமும் புதிய பாய்ச்சலில் இருக்கிறது. அதற்குஉதவுவது போல் ஆப்ரெட்டிங் சிஸ்ட்ம் முன்னேறிக் கொண்டே வருகின்றன.
விண்டோஸ் 11 முழுவதும் பயன்பாட்டிற்கு வரும் போதுதான் இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அறியமுடியும்.
-மணிகண்டபிரபு