Friday 29 October 2021

Harry Potter

நம்முடைய திறமைகள், நாம் யார் என்று உலகுக்கு காட்டுவதில்லை. நம்முடைய தேர்வுகள் தான் நாம் யார் என்பதை காட்டுகிறது. நீங்கள் எதை தேர்ந்தெடுக்கிறீர்கள்  என்பதில் அதிக கவனம் தேவை! 

- Harry Potter

சிக்மண்ட் ப்ராய்டு

நீங்கள் ஆயிரம் விஷயங்களை பார்த்தாலும் உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் தான் உங்கள் மூளை உண்மையில் பார்க்கும்! அந்த விஷயங்களை மட்டும்தான் உங்கள் மூளை பதிவு செய்யும்! வேண்டாத விஷயம் உங்களுக்கு பிடிக்காத விஷயங்கள் உங்கள் காதுகளில் விழாது!

-சிக்மண்ட் ப்ராய்டு

info

Samsung என்றால் கொரிய மொழியில், மூன்று நட்சத்திரம் என்று அர்த்தம்.

#info

Wednesday 27 October 2021

கார் Air bag க்கு காற்று எங்கிருந்து வருகிறது ?

கார் Air bag க்கு காற்று எங்கிருந்து வருகிறது ? "

   காரில் விபத்து நேரத்தில் air bag திறந்து புஸ்ஸ்ஸ் என ஊதி மனிதர்களை காப்பாற்றுவதை பார்க்கிறோம். சரி என்னைக்காவது இதை யோசித்து இருக்கிறோமா ..? மடித்து வைக்க பட்ட air bag பையிக்குள் வினாடி நேரத்தில்.. (உண்மையில் வினாடிக்கும் குறைவான நேரத்தில் ) திடீரென காற்று எங்கிருந்து வருகிறது ? வாங்க பார்க்கலாம்.

முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் air bag குள் நிரம்பி இருப்பது காற்று அல்ல அது நைட்ரஜன் வாயு. அது எப்படி எங்கே இருந்து வருகிறது என பார்த்தால்......

காரின் முன் பக்கம் ஒரு சென்சார் வைக்க பட்டு இருக்கும் அதன் பெயர் crash sensor கார் 16 இல் இருந்து 24 கிமி வேகத்தில் போய் கொண்டு இருக்கும் போது திடீரென வேகம் முற்றிலும் தடை பட்டால் அந்த deceleration ஐ அது விபத்து என புரிந்து கொள்கிறது உடனே அதில் உள்ள சிறப்பு மெக்கானிக்கல் அமைப்பு ஒன்று இயங்கி 12 v மின்சாரத்தை inflator system என்ற ஒரு அமைப்பிற்கு அனுப்பி வைக்கிறது.அந்த inflator system க்குள் ஏற்கனவே sodium azide (NaN3) மற்றும் potassium nitrate (KNO3) வைக்க பட்டு இருக்கும். அனுப்பி வைக்க பட்ட 12 v மின்சாரம் அங்கே இக்னேட் பண்ண பட்டு சின்ன பற்ற வைப்பு ஒன்றை நிகழ்த்துகிறது. அதன் விளைவாக அங்கே வைக்க பட்ட sodiam azide மற்றும் potassium nitrate உடனடியாக வினை புரிந்து நைட்ரஜன் வாயுவை உண்டு பண்ணி நைலானால் செய்ய பட்ட bag இல் புஸ்ஸ்ஸ் என நிரம்புகிறது.

விபத்து நடந்து வினாடியில் 10 இல் 3 பங்கு நேரத்துக்குள் இவைகள் நடந்து முடிந்து விடுகின்றன. (இவைகளில் இக்னேட் பண்ண மின்காந்த வகை ஸ்விட்ச் மற்றும் மெக்கானிக்கல் வகை ஸ்விட்ச் மற்றும் பீஸோஎலக்ட்ரிக்கல் வகை ஸ்விட்ச் என பல வகையில் கிடைக்கிறது.)

ஒரு air bag ஒரு முறை மட்டுமே பயன் பட கூடியது அதன் பின் அதை மாற்றியாக வேண்டும்.

-படித்தது

கற்பதுவே பகிர்வதுவே-25*மணி



#ReadingMarathon_2021

RM314
26/100
பக்கங்கள் 138

காந்தி என்கிற காந்தப்புலம்
-முனைவர் அ.பிச்சை

இப்படி ஒரு மனிதர் சதையோடு ரத்தத்தோடும் வாழ்ந்தார் என்பதை வருங்கால மக்கள் நம்ப மறுப்பார்கள்
-காந்தி குறித்து ஐன்ஸ்டீன்

எப்போது பார்த்தாலும் சலிப்படையாதது கடல், விமானம்,ரயில், மழலையின் சிரிப்பு என சொல்லிக் கொண்டே போகலாம்.அதுபோல எப்போது படித்தாலும் ஆச்சர்யமான விஷயங்களை கற்றுக் கொள்வது காந்தியிடமிருந்து தான். தினமணியில் காந்திய அறிஞர் முனைவர் அ.பிச்சை சார் கட்டுரை எனில் முழுக்க படித்துவிட்டுத் தான் நகருவேன். காரணம் காந்தி எனும் ஆளுமையை முன்னிறுத்தும் பாங்கு.வெறுமனே புகழாமல் சம்பவங்களையும் தத்துவங்களையும் அடுக்கி அடுக்கி படிக்கிறவர்களை கருத்துக்களின் முழுமையை உள்வாங்கி புகழ வைப்பார்.இந்த புத்தகத்தில் உள்ள இருபது கட்டுரைகளிலும் ஏதேனும் தெரியாத செய்தி ஒன்றனையேனும் அதில் ஒளித்து வைத்திருப்பார். அறியாததை அறிந்து கொண்ட மகிழ்ச்சியை உள்ளூர ஏற்படுத்துவார்.

தென்னாப்பிரிக்காவில் துவங்கய ஒரு விதை பின்னர் எவ்வாறு விருச்சமானது என்பதை அங்கு நடைபெற்ற வரலாற்று நிகழ்வை பதிவு செய்துள்ளார்.சத்யாகிரகத்தை சோதனை அடிப்படையில் வெற்றி கண்டபின் இந்தியாவிலும் இதனைப் பயன்படுத்தினார்.
கோதுமையில் கல் பொறுக்கினால் சுதந்திரம் வந்துவிடுமா என இந்தியாவில் சத்யாகிரகம் செய்வதை ஐயுற்ற போதிலும் அவர் அதில் உறுதியாய் இருந்தார்.ஒரு இடத்தில் இலா காந்தி குறிப்பிடுகிறார்..இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் மகாராஷ்டிரா வில் அகோலா நகரின் பள்ளியில் கொடி ஏற்றிய பெருமை மறவாது என்கிறார்.

காந்தியை புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர் சலீல் அரீப் காத்ரி எனும் ஜெர்மானியர்.அவரை புகைப்படம் எடுத்த தருணங்கள் அற்புதமானது என்றார்.வணிக நோக்கத்திற்கோ, போட்டோவுக்கோ போஸ் கொடுக்க மாட்டேன்.நீயே எடுத்துக் கொள் என்று 700க்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்துள்ளார்.உப்பு சத்தியாகிரகத்தில் எடுத்த புகைப்படங்களில் உள்ள மக்கள் கூட்டம்தான்  அவரை இன்னும் எழுச்சி பெற வைத்தது.மீண்டும் மீண்டும் போராடுவதற்கான உத்வேகம் தந்தது.
இதே போல் கனுகாந்தியும்.பல்வேறு புகைப்படங்களை எடுத்த போதிலும் காந்தி இறக்கும் தருவாயில் நவகாளியில் இருந்ததால் புகைப்படம் எடுக்கமுடியவில்லை. காந்தியை படம் எடுத்த கையால் யாரையும் எடுக்க மாட்டேன் என்பது கேள்விப்படாத செய்தி 

கடந்த சிலநாட்களுக்கு முன் அரையாடை மனிதரான நிகழ்வு இருநூறு ஆண்டுகளை நிறைவு செய்த தமிழகத்தில் காந்தியின் வருகை.அன்று இரவு மதுரை மேலமாசி விதியில் 251ம் எண் உள்ள வீட்டில் என்ன நிகழ்ந்தது என்பதையும்,1947ல் அவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவர் மனதுக்கு பிடித்த நிகழ்வு ஒன்று நிகழ்ந்ததையும் அறிந்து மகிழ்ச்சியடைந்தார்.மேலும் காந்தியின் நினைவை கொண்டாடும் வகையில் நினைவிடத்தையும், இத்தாலி ஸ்பக்னா சதுக்கத்தில் இருக்கும் காந்தி சிலை குறித்தும் விவரித்துள்ளார்.

காந்தியின் நோக்கமெல்லாம் தேச விடுதலையைக் காட்டிலும், சமூக மறுமலர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை கொடுத்தார். வந்தேமாதரம் பாடல் வந்த கதையை நான்கு கட்டங்களாக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.
காந்திக்கு மிகவும் பிடித்த பாடல் கவிஞர் நர்சிமேதா எழுதிய "வைஷ்ணவ ஜனதோ" பாடல் தான். அது ஏன் பிடிக்கும், அதன் பொருள் யாவையும் விளக்கியுள்ளார். காந்தி இந்துத்துவா கொள்கை உடையவரா அல்லது சர்வ மத நம்பிக்கை உடையவரா என்பதை புரியாத புதிரா மகாத்மா கட்டுரை விளக்குகிறார்.

சர்தார் வல்லபாய் படேல் காந்தியின் மீது கொண்ட அன்பின் நிகழ்ச்சியையும், மரணத்தை எதிர்கொண்டபோது அவரின் மனநிலையும்,சர்ச்சிலும் காந்தியும் சந்திக்கவில்லை ஏன் அப்படி என்பதை ஒரு இடத்தில் விளக்கியுள்ளார்.ஒவ்வொரு கட்டுரையிலும் அறியாத ஒரு செய்தியையாவது அறியும் வாய்பை கொடுத்த கட்டுரையாளருக்கு நன்றிகள். ஜெயகாந்தன் கூறியது போல ஒவ்வொரு ஊரிலும் ஒரு காந்தி இருப்பார்.காந்தியம் இந்த மண்ணில் விதை போலக் கலந்திருக்கிறது.எங்கெல்லாம் சிறு முயற்சியில் ஈரம் படிகிறதோ, அங்கெல்லாம் காந்தியம் முளைத்தெழும் என்பார்

என்றென்றும் நினைவுக் கூற வேண்டியவர் காந்தி

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

கல்யாண்ஜி

இத்தனை காலம்
சவரக் கத்தியைத்
தீட்டி மகிழ்ந்தவன்
பசிக்கு பயந்து 
மல்லிகைப் பூ விற்கையில்,
எனக்கு மட்டும்
தெரிகிறது.
கத்தித் துரு
ஒவ்வொரு பூவிலும்.

-கல்யாண்ஜி

Tuesday 26 October 2021

கற்பதுவே பகிர்வதுவே-24*மணி

கற்பதுவே பகிர்வதுவே-24

*மணி

#Reading_marathon_2021 
RM314
25/100
Pages 788

#இன்றைய இந்தியா
-ரஜினி பாமிதத்

எந்த நொடியில் கலகம் தோன்றும் என்கிற அச்சம் தோன்றுகிறதோ-அது வெறும் கலகமாக இருக்காது, தேசிய இனமெங்கும் பரவியுள்ள உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருக்கும்.அந்த நொடியே நம் சாம்ராஜ்ஜியத்தை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் ஆசையும் ஒரு முடிவு கட்டாயம் இருப்பது போல் முடிவு பெறும்

-ஜெ ஆர்.ஸீலி(1883)

போட்டித் தேர்வுக்கு படிப்பவர்களும், வரலாற்று ஆய்வியல் மாணவர்களுக்கும் அடிக்கடி உச்சரிக்கும் பெயர் தான் ரஜினி பாமிதத்.பிபின் சந்திரா, டி.டி கோஸாம்பி,இர்ஃபான் ஹாபீப், ரொமிலா தர்பார்,ரமேஷ் சந்திர மஜூம்தார், ராமச்சந்திர குஹா,என பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் நினைவிலிருப்பர்.சுதந்திரம் என்பது காந்தி தலைமையிலான போராட்டம் மட்டுமே சுதந்திரம் பெற்று தந்தது என எண்ணாமல் அசோக சக்கரத்தின் நான்காவது சிங்கம் போல நம் கண்ணுக்கு தெரியாத கவனிக்கப்படாத காரணிகளும் காரணமாக உள்ளன என்பதை இது போன்ற வரலாற்று நூல்களை படிக்கும் போது அறியலாம்.

#இன்றைய இந்தியா

1936-39ம் ஆண்டிலேயே இப்புத்தகத்தின் கைப்பிரதி எழுதப்பட்டு 1940ல் ஆங்கிலத்தில் இந்தியா டுடே என வெளியானது.முதல் உலகப்போரின் காலகட்டத்திலேயே 1919-22 வரை நடைபெற்ற போராட்டங்கள இந்தியாவை உலுக்கின.இரண்டாம் உலகப்போர் முடிவில் ஐநா நாடுகளின் உரிமையைப் பற்றி பேசியது.இப்போது போல் உலக வங்கி கடன் எல்லாம் அப்போது கிடையாது.அந்த நாட்டில் உற்பத்தியாகும் வளங்களை வைத்தே நிர்வாகம் செய்து வந்தனர். போருக்குப் பின் பிரிட்டிஷாரின் மார்க்கெட் நிலவரம் தள்ளாடியது. பெருகி வரும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு தடையாய் இருந்ததாக கூறபட்டது ஆனால் அதன் பின் உள்ள காரணிகள் பற்றி விரிவாய் ஆய்வில் சொல்லியுள்ளார்.

இந்தியாவின் செல்வம்..அதனை சுரண்டி இங்கிலாந்து வளமையானது எவ்வாறு,இந்தியாவின் கிராமப்புறத்தில் நிலவிய வறுமையும் அதற்கான காரணத்தையும் விளக்குகிறது. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பில் இந்தியாவின் தொழில் சிதைவு எவ்வாறு நிகழ்ந்தது.. உதாரணத்துக்கு இந்தியாவின் பருத்தி,பட்டு ஆடைகள் இங்கிலாந்தின் ஆடைகளை காட்டிலும் லாபகரமாய் விற்கப்பட்டது.பல வரிகள் விதித்து இங்கிலாந்து தொழில்கள் இந்தியாவை பலியிட்டே உருவாக்கப்பட்டன.

இந்தியாவை தொழில் மயமாகுதலில் உள்ள பிரச்சனையும் காரணங்களும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.தொழில் புரட்சியை நவீனபடுத்தாமல் விட்டது பின்னடவிற்கு காரணம்.இதற்கு அடுத்து முக்கியமான ஒன்று விவசாய பிரச்சனை. 1926ல் அமைக்கப்பட்ட ராயல் கமிஷன் 1928ல் 800 பக்க அறிக்கை அளித்தது. இன்றைய விவசாயிகளின் போராட்டத்தைப் போல அப்போதும் அரசு கண்டுகொள்ளாமல் விட்டது. விவசாயத்தை சார்ந்தோர் எண்ணிக்கை அதிகம் இருந்ததும், அப்போதைய காலகட்டத்தில் நில ஏகபோகம், அதில் மாற்றம் கொண்டு வந்தது, உழவர்களின் சுமையை அதிகப்படுத்தியது.இதனை சைமன் கமிஷன் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் காரணமாய் விவசாயிகளின் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அது புரட்சியை நோக்கித் தள்ளியது. 1936ல் அனைத்திந்திய உழவர் மன்றம் உதயமானது.1938 மாநாட்டில் 5,50,000 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.போராட்டத்திலும் ஈடுபட்டனர்.ஒவ்வொரு ஆண்டும் இதன் வளர்ச்சி கூடியது. ஆந்திராவில் ஆயிரம் ஏக்கர் தரிசு நிலத்தை பயிர் நிலமாக்கியது, அணைக்கட்டு கட்டியது என அதிகம் பேசப்படாத புரட்சிகளை செய்துள்ளனர். 1945ல் 8,29,686 உறுப்பினர்கள் இருந்துள்ளனர். இப்படியாக பிரிட்டிசார் வெளியேறுவதற்கு விவசாயிகளும் போராட்டங்களும் முக்கிய பங்காற்றி உள்ளன.

இந்தியாவில் தேசிய இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் கூறுகிறது.தேசிய போராட்டத்தின் முதல் அலை 1905-1910 வரை உள்ள காலகட்டத்தில் கிளர்ச்சிக்கான ஆரம்ப புள்ளி வைக்கப்பட்டது. இரண்டாவது அலை 1919-1922 வரை. முதல் உலகப் போர், ரஷ்யப் புரட்சி, ஜாலியன் வாலாபாக் படுகொலை, கிலாபாத் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், ஆகியவை ஏற்பட்டது. அஹிம்சையா வன்முறையா என்பது பிரச்சனையல்ல.. மக்கள் இயக்கத்திற்கு பகையான வர்க்க நலன் பற்றிய பிரச்சனையால் 1922 தேசிய கிளர்ச்சி சிதைந்ததாக தெரிவிக்கிறார்.

மூன்றாவது பேரலை 1930-35 வரை. காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி கருத்து வேறுபாட்டினால் சுயராஜ்ய கட்சி புதிய அலைகளை ஏற்படுத்தியது. உப்பு சத்தியாகிரகம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன்பின் தொழிலாளர் இயக்க வளர்ச்சி, அதன் அமைப்புகள் உருவாக்கிய போராட்டங்கள்.. தொடர்ந்து இந்தியா முழுவதும் தொழிலாளர் இயக்க தலைவர்கள் டாங்கே,கோஷ் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு மீரட் எனும் நகரில் வைத்து விசாரணை செய்யப்பட்டது. 1933ல் தண்டனைகளும் வழங்கப்பட்டன.

1939ல் அரசியல் கண்டன வேலை நிறுத்தம் செய்வதாய் அறிவித்து 90,000 தொழிலாளர்கள் முன்னேறி தாக்கவும் செய்தனர்.பல ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு முன்னோடி இதுதான் என்கின்றனர்.தொடர்ந்து 1940ல் 3,50,000 வேலை நிறுத்தம் செய்தனர்.காந்தியின் கொள்கையை ஏற்காதவர்கள் எனக்கூறி காங்கிரசிலிருந்து இவர்களை வெளியேற்றினர்.போர் நடைபெற்ற காரணத்தினால் நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தொழிலாளர்கள் பின்வாங்கும் படி ஆகியது.

மன்னர்கள், சுதேச சமஸ்தானங்கள, வகுப்பு வாத பிரிவு, பிரிவினைவாதம், போன்றவை அரசுக்கு தலைவலியாய் அமைந்தன.1935ம் ஆண்டு அரசியல் திட்டமும், அதைத் தொடர்ந்து மாகாண ஆட்சியில் பங்கெடுத்தலும் இந்தியர்கள் அடுத்த நிலைக்குச் சென்றனர்.1945ல் இந்தியாவுக்கு வந்த தூதுக்குழு விபரங்களும் நடைபெற்ற சம்பவங்களும் சொல்லப்பட்டுள்ளன. எதிர்கால இந்தியா குறித்த சித்திரமும் சொல்லப்பட்டுள்ளது. 

#ரசித்தது

*இந்தியாவைப் பற்றி மிக மலைப்பூட்டும் உண்மை அதன் மண் வளமுடையது மக்கள் ஏழைகள்.ஏழை நாடல்ல ஏழைகள் வாழும் நாடு.

*ரயில் பாதை அமைத்ததில் பிரிட்டிஷ் கடன் சுமை பெருகியது.ஒரு மைலுக்கு 16,000டாலர் வரை.1900 வரை 22.6 கோடி செலவிடப்பட்டது. லாபம் கிடைக்கவில்லை.

*1874-79 வரை இந்திய இறக்குமதி82%. அதுவே 1909-14 63% ஆக வீழ்ந்தது.

*காங்கிரஸ் வீழ்ச்சி நோக்கி தடுமாறிக் கொண்டிருக்கிறது.நான் இந்தியாவில் இருக்கும் போதே அது அமைதியாக மரணம் அடைவதற்கு உதவ வேண்டும் என்றார் கர்சன் பிரபு.

*நாம் நம் படகுகளை எரித்துவிட்டோம்.திரும்பி போக முடியாது.-நேரு காங்கிரஸ் மாநாட்டில்

இந்தியா என்றவுடன் காந்திய போராட்டம், வழக்கமான கருத்துகளை சொல்லி 1947க்கு வராமல், காந்தியும் காங்கிரஸ் மட்டுமே விடுதலைக்கு காரணமல்ல, அதற்கு முன்நடைபெற்ற  சமூக பொருளாதார போராட்டங்களும், பல்வேறு தொழில் சங்க, விவசாயிகளின் போராட்டங்களும் காரணமாக இருக்கின்றன என்பது தெரிகிறது.பொருளாதாரச் சுமையும் ஆங்கிலேயர்கள் செல்ல காரணமாய் சொல்கிறது.இது போன்ற மறைக்கப்பட்ட வரலாறுகளை இப்புத்தகம் எடுத்துரைக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின் இன்னொரு பரிணாமத்தை அறிய முடிகிறது. சுதந்திர தினத்துக்கு உரையாற்றும் போது ஒத்துழையாமை,உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் மட்டும் சொல்லாமல் விவசாயம், தொழில் துறை போராட்டம் குறித்தும் பேசுவோம்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday 24 October 2021

BABL

BABL என்றால் Bachelor of Arts & Bachelor of Laws. ஐந்தாண்டு சட்டப்படிப்பு. சட்டப்படிப்புடன் கலைப்படிப்பும்(arts subject) படிக்கலாம்.

 LLB(Legum Baccalaureus) மூன்றாண்டு சட்டப்படிப்பு மட்டும். கலைப்படிப்பு சேர்ந்தது இல்லை

#info

காந்தி

உலகளாவிய அளவில் சிந்தியுங்கள்;ஊரளவில் உங்கள் செயல்பாட்டைத் தொடங்குங்கள்
(Think Globally;But act Locally)

-காந்தி

பிரான்சிஸ் கிருபா

தேநீர் நிறத்து மணலில்
யாருடையதெனத் தெரியாமல்
தன்னைத்தானே பிடித்துக்கொண்டு
நிற்கிறது குடை
தனிமைத் துயரம் நீட்டிய நிழலை
என்னிடம் நீட்டச் சரிகிறது சூரியன்

-பிரான்சிஸ் கிருபா

Saturday 23 October 2021

பிடிவாரண்ட்

பிடிவாரண்ட்

குற்றம் சாட்டப்பட்ட நபர், குறிப்பிட்ட நாளில் கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை என்றால் அவரைக் கைது செய்ய நீதிபதி ‘பி.டி. வாரண்ட்’ பிறப்பிப்பார். இதற்கு ஆங்கிலத்தில் PRISONER’S TRANSIT WARRANT என்று பெயர்.

*முதலில் பிணையில் விடத்தக்க பிடியாணை (Bailable Warrant)அனுப்பப்படும்

நீதிமன்றத்திற்கு வராமல் டிமிக்கி கொடுத்தால் மட்டுமே பிணையில் விடமுடியாத பிடியாணை (Non-bailable Warrant).

#info

காந்தி

ஒவ்வொருவரும் மிக எளிமையாக வாழுங்கள்; அப்பொழுதுதான் மற்றவர்கள் வாழ்வது எளிதாக இருக்கும்.

-காந்தி

Thursday 21 October 2021

ஜெயமோகன்

ஓர் இடத்தை 'இனி இங்கே வரப்போவதில்லை' என்ற எண்ணத்துடன் கவனமாகக் கூர்ந்து பார்ப்பது மிகவும் முக்கியமானது.அந்த உணர்வு இருக்குமென்றால் நாம் ஒரு காட்சியைக் கூட தவறவிடமாட்டோம்

-பயணம் குறித்து ஜெயமோகன்

சுகபோதானந்தா

ஒரு விஷயத்தைத் திறந்த மனதோடு அணுகுபவர்களிடம், புரிந்துகொள்ள எத்தனிப்பவர்களிடம் விவாதம் செய்யலாம்.ஆனால் தன் கருத்தைத் தாண்டி வேறெதையும் ஏற்றுக் கொள்ளாதவர்களிடம் விவாதிப்பது நேர விரயம்

-சுகபோதானந்தா

Wednesday 20 October 2021

அருணகிரிநாதர்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

முருகா நீ என்னை ஆட்கொள்ள வரும்போது தாய்,தந்தை, சகோதரன்,உறவினராய் வருவதைக் காட்டிலும் குருவாக வந்து என்னை ஏற்றுக்கொள்

-அருணகிரிநாதர்

படித்தது

கணிதத்தில் அடைப்புக்குறி மூன்று வகைப்படும்

(Parantheses or round Brackets) - வட்ட அடைப்புக்குறி,

(Brackets or Square Brackets) - சதுர அடைப்புக்குறி,

(Braces or Curly Brackets) - சுருள் அடைப்புக்குறி.

( ) - வட்ட அடைப்புக்குறிக்கே முதலிடம், அவை எளிதாக வளைந்து கொடுக்கும் குழந்தையை போல

[ ] - சதுர அடைப்புக்குறிக்கு இரண்டாம் இடம், அவை திடமான வளைந்து கொடுக்காத நடுத்தர வயது மனிதனை போல

{ } - சுருள் அடைப்புக்குறிக்கு மூன்றாம் இடம், அவை கூன் விழுந்த நம் முப்பாட்டன் போல

இவை மூன்றும் பயன்படுத்தப்படும் போது அவை கூட்டு அடைப்புக்குறிகள் (Nested Parantheses) என்று அழைக்கப்படுகின்றன. – {[( )]} 

-படித்தது

Monday 18 October 2021

.நாகராஜன்

மனித குணங்களை மனிதர்கள் 
சிலாகித்துப் பேசுவதைவிட 
கேலிக்கூத்து கிடையாது. 
ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய் குணங்களையே 
உயர்வாகக் கருதுகின்றன.

-ஜி.நாகராஜன்

பாஸ்கல்

நாம் வாழ்வதே இல்லை, வாழ்வோம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்

-பாஸ்கல்

படித்தது

சுயமரியாதை என்றால் என்ன?

தம் உடம்பில் இருந்து வழியும் வியர்வையில் குடும்பத்துக்கான உணவைத் தேடுவதற்குப் பெயர்தான் சுயமரியாதை

-படித்தது

Sunday 17 October 2021

சூஃபி

சூஃபி துறவியிடம் ஒரு நபர் 1000 பொற்காசுகள் கொண்ட பையை நீட்டி," எனக்கு சந்தோஷமாக எப்படி இருப்பது சொல்லுங்க,இந்த பையை உங்களுக்கு தருகிறேன் என்று சொன்னான்

துறவி எதுவும பேசாமல் அந்த பையை அவனிடம் பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தார்,
அவன் பதட்டமாக பின்னாடியே ஓடினான்
சிறிது தூரம் சென்ற பிறகு துறவி நின்று,அந்த பையை அவரிடமே கொடுத்தார்,"இது தான் சந்தோஷத்தை அடையும் வழி" என்று கூறினார்.

அவனுக்கு ஒன்றும் புரியல, துறவி விளக்க ஆரம்பித்தார்,
"இந்த பை உன்னிடம் தான் ஏற்கனவே இருந்தது,ஆனால் அப்போது நீ சந்தோஷமாக இல்லை,இப்போ சிறிது நேரம் உன்னிடம் இருந்து பறித்து கொண்டு மறுபடி கொடுத்தேன்,மீண்டும் சந்தோஷம் வந்து விட்டது,அப்போ என்ன அர்த்தம்?,

இது கிடைத்தால் தான் சந்தோஷம் என்று நீ ஒரு வரையறை வைக்கிறாய்- பணம் வீடு வேலை என்று அது கிடைக்கும் வரை நீ சந்தோஷமாக இருப்பதே இல்லை,அந்த வரையறை என்பது நீயாக உனக்கு விதித்து கொண்டவை தானே?"

"ஒரு இலக்கை அடையும் பொருட்டு பாதை எங்கும் நீ சந்தோஷத்தை புறக்கணித்து செல்கிறாய்,அது தேவை தானா?"
"மொத்தத்தில் அந்த பை,(சந்தோஷம) என்பது இயல்பாகவே உன்னிடம் இருப்பது தான்",என்று கூறி முடித்தார்.

Saturday 16 October 2021

info

நமது பார்வைக்கு புலப்படும் அதிகபட்ச தொலைவு 4-4.5 கிலோமீட்டர். பூமி வட்ட வடிவில் இருப்பதால் அதற்கு மேல் உள்ள தொலைவு நமது பார்வையில் இருந்து மறைக்கப்படும். ஆனால் ஒரு 5-10 அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து பார்த்தால் அதிக தொலைவினை காண முடியும்

#info

Friday 15 October 2021

ஜே.கிருஷ்ணமூர்த்தி

நாம் அனைவருமே பிரபலமாக விரும்புகிறோம்.  ஏதோ ஒன்றை அடைய விரும்பும் அந்த கணமே நம் சுதந்திரத்தை இழந்து விடுகிறோம். 

-ஜே.கிருஷ்ணமூர்த்தி

Thursday 14 October 2021

வெண்ணிலா

உள்ளுக்குள் ஊறுகின்றன
ஓராயிரம் வார்த்தைகள்

தோன்றுமிடமும் முடியுமிடமும் தெரியாமல் தோன்றிய கணத்தில் மறைகின்றன

உச்சரிக்கும் சொல்லிலிருந்து கிளைக்கிறது
வாழ்வின் அமுதமும் நஞ்சும்

-அ.வெண்ணிலா

Wednesday 13 October 2021

விநோதய சித்தம் விமர்சனம்*மணி

விநோதய சித்தம் விமர்சனம்

*மணி

விநோதய சித்தம் பேரை பார்த்ததும் எதோ டப்பிங் படம் போலத்தான் தோனுச்சு.ஆனால் படம் பார்க்க ஆரம்பிக்க கதையோடு நாமும் பயணப்படுவது போல் தோன்றியது. மலையாளத்தில் மட்டுமே வந்து கொண்டிருந்த இது போல் ஸ்டார் வேல்யூ, கமர்சியம் அம்சமின்றி வருவது தமிழிலும் முன்னெடுத்து நல்ல படத்தை கொடுத்துள்ளனர்.

டால்ஸ்டாயின் சிறுவயதில் அவருடைய ஆசிரியர்..ஒரு முறை அவனை கண்ணை மூட வைத்து.. இப்போது நீ இறந்துவிட்டாய் இப்போது நீ என்ன உணர்கிறாய் என கேட்பார்.அவர் சொன்னதை அப்படியே அவரின் மனசாட்சியாக ஒரு வெள்ளைத்தாளில் அனைத்தையும்  எழுதுவார். பின் கண் திறந்தால் டால்ஸ்டாய்க்கே புதிய உலகை கண்டது போல் திருப்தி வரும். இப்படத்தை பார்க்கும் போது இக்கதை நினைவுக்கு வந்தது. ஆனால் இப்படம் இதிலிருந்து மாறுபட்டது.20 வருடத்திற்கு முன்பு தான் பார்த்த ஒரு மேடை நாடகத்தை தற்போது திரைப்படமாக உருவாகி உள்ளதாக இயக்குநர் கூறினார்.

#கதை

சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர் தம்பி ராமையை.பிரஸ்டீஜ் பத்மநாபன் மாதிரி.கடமை, நேரந்தவறாமை என குடும்பத்தைக் கூட கவனிக்காமல் அலுவலகமே கதி என்று இருக்கிறார். விரைவில் general manager promotion ஐ எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

மறுநாள் 25ம் ஆண்டு திருமண கொண்டாட்டத்தை கூட பொருட்படுத்தாமல் விமானத்தில் கோவை சென்று காரில் திரும்புகிறார்.வரும் வழியில் கோர விபத்தில் தம்பி ராமையா உயிரிழக்கிறார்.அவரின் ஆன்மா  கதறுகிறது.அப்போது அங்கு தோன்றும் காலமான சமுத்திரக்கனி 90 நாள் உயிர் பிச்சை கொடுக்கிறார். தானும் உடன் இருப்பதாக நிபந்தனையுடன்.

இந்த மூன்று மாதங்களில் தம்பி ராமையாவின் வாழ்வில் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் நமக்கும் மிஸ்ட் கால் வந்தது போல் உணர வைப்பதுடன் நெகிழ்ச்சியாக முடிகிறது

#ப்ளஸ்

*படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி என்று சொன்னால் தான் தெரியுமளவிற்கு total different.சூப்பர் சார்

*பாடல்கள் இல்லாமல் பின்னணி இசையில் சத்யாவும், ரம்மியமான ஒளிப்பதிவில் ஈர்க்கிறார் என்.கே ஏகாம்பரம்

*ஹீரோ தம்பி ராமையா தான். ஆங்காங்கே பழைய மாடுலேசன் எட்டிப் பார்த்தாலும் ரசிக்க வைக்கிறார்.

*சம்பவங்கள் நடத்தப்படுகிறது,
சி.எம் ஆவதெல்லாம் ஆசை இல்ல வியாதி,
இருக்கிறவனுக்கு இருக்கிறதெல்லாம் பிரச்சனை
இல்லாதவனுக்கு இல்லைனு மட்டும் தான் பிரச்சனை,

கடவுளை வேண்டிக்க..
அப்ப உங்க உழைப்பு மேல நம்பிக்கையில்ல.

கிடைக்கலனா விதி
கிடைச்சா அதிர்ஷ்டம் என வசனங்கள் பெரும் பலம்.

வாழ்க்கையில எனக்கு இதுவரை எதுவுமே நல்லது நடக்கல, நான் இல்லனா எதுவுமே நடக்காது,
இந்த குடும்பமே என்ன நம்பித்தான் இருக்குது, இந்த ஆபிசில செங்கலுக்கு அடுத்து நான் தான் தாங்கி நிற்கிறேன் என நான் நான் என நினைக்கும் ஒவ்வொருத்தருக்கும் காலம் செவுல்லயே அப்பி இதானாடா நீனு சொல்லும் மாயக்கண்ணாடி இந்தப்படம்.

பாட்டு, காமெடி, ஹீரோயிசம் எதுவும் இல்லாமல் படம் ஆரம்பித்த  ஏழாவது நொடியே கதைக்குள் நுழைந்து வேறு உலகத்துக்கு போய் இங்கு வந்து வாழ்ந்த ஃபீல்.சினிமாத்தனம் இருக்காது.ஒன்றரை மணி நேரம் ஒரு மாறுபட்ட அனுபவத்தை பொழுது போக்காய் பார்க்க நினைப்போர் பார்க்கலாம்.

-மணிகண்டபிரபு

Tuesday 12 October 2021

கற்பதுவே பகிர்வதுவே-24*மணி


அதிர்வுகள் -இன்குலாப் பற்றிய கட்டுரைகள்
-பா செயபிரகாசம்

#RM314
12/100
Pages-464

"வாழ்வது இனிமையானது
போராட்டங்களோடும் புன்னகையோடும்.
இறப்பது நிறைவானது-நம்பிக்கையோடு"

இன்குலாப் என்றால் புரட்சி என்று அர்த்தம்.இன்குலாப் ஜிந்தாபாத் என்றால் புரட்சி ஓங்குக என்று அர்த்தம்.இறுதிவரை புரட்சியாளராக விளங்கிய ஒருவர்தான் கவிஞர் இன்குலாப்.எழுத்தாளராக, மார்க்சியவாதியாக, மார்க்சிய் லெனினியவாதியாக, ஈழ தமிழர் ஆதரவாளராக, பேராசிரியராக பல்வேறு முகங்களை கொண்டவர் இன்குலாப்.

இன்குலாப்பின் மறைவிற்கு பின் அவர் குறித்து பிரபலங்கள் பகிர்ந்த கட்டுரைகள் மற்றும் அனுபவங்களை நூல் முழுவதும் ஆவணப்படுத்தியுள்ளனர். பொதுவாக இன்குலாப் என்றவுடன் மனுசங்கடா கவிதையும் இன்ன பிற நறுக்குகளையும் கூறி சென்றுவிடுவோம்.ஆனால் அவரின் வாழ்வு ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டமும் இலட்சியத்தை அடைவதற்கான போராளியாகவும் இறுதிவரை இருந்துள்ளார். "மார்க்சிஸ்டாக வாழ்ந்த மார்க்சிஸ்ட்" என்று ஒரு திருமாவேலன் கூறுவார்.

இருபது வயதில் ஒருவன் இடதுசாரியாக மாறாவிட்டால் அவனுக்கு இதயம் இருக்கிறதா கேளுங்கள் என்பது தமிழறிஞர் ஒருவரின் கருத்து. துவக்கத்தில் இன்குலாபும் இடதுசாரி கருத்தியலில் துவங்கினார்.எந்த ஊருக்குப் பயணம் மேற்கொண்டாலும் சுற்றிப் பார்ப்பது அந்த ஊரின் நினைவுச் சின்னங்களையும் போர்குணமிக்க மக்களையும் தான்.பாப்லோ நெருடாவின் 'காண்டோ ஜெனரல்' எப்போதும் பெரும் செல்வமாய் பாதுகாத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தங்கள் மகளிடமும் கருத்தியல் ரீதியாக வார்த்தெடுத்த அனுபவத்தை மகள் ஆமினா பகிர்ந்துள்ளார்

மொழிப் போர் போராட்டத்தில் இன்குலாப் கலந்து கொண்டதையும்
மார்க்சியவாதியாக, ஈழ விடுதலை வேண்டிய போராளியாக பரிணமித்ததை அவரின் நண்பர் எடுத்துக்கூறுகிறார்.1979ல் தன் இரண்டாவது மகனுக்கு சூட்டிய இன்குலாப் எனும் பெயரை புனைப்பெயராக வரித்துக் கொண்டார்.80களில் நக்சலைட் இயக்கத்திற்கு ஆதரவாய் குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.
தனியார் கல்லூரியில் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் யார் தயவுமின்றி இருந்தவர்.

கவியரங்க நிகழ்வில் இன்குலாப்புடன் பயணித்த அனுபவித்தை விளக்கும் ஈரோடு தமிழன்பன்..அவரை சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்த அனுபவத்தையும் சுவைபட சொல்லியுள்ளார்.அரியலூர் குளப்பாடி ஊரின் கிணற்றில் மின்சாரம் பாய்ச்சி உயிரிழந்த மழலைகளுக்கு சொல்லும் இரங்கற்பாவில் 'மனுசங்கடா' கவிதை உருவானதையும்
ஈழ விடுதலைப் போராட்டங்களில் அவரின் பங்களிப்பை கூறியதுடன் மணிமேகலையை இன்குலாப் எழுதியதைப் போல தமிழகத்தில் யாரும் எழுதவில்லை என பட்டயம் தருகிறார் வை.கோ

இன்குலாபின் புரட்சி கவி நயத்தை அ.மார்க்ஸ்,மு.மேத்தா, கூறியதுடன் சிம்சன் தொழிற்சங்க போராட்டத்தில் கவி பாடியது குறத்தும் பாடல்கள் குறித்தும் பெ.மணியரசன் பதிவு செய்துள்ளார்.திராவிட இயக்க சிந்தனையில் துவங்கி, கீழ் வெண்மணிக்குப் பிறகு தீவிர கம்யூனிஸ்டு ஆனார். போராட்ட குணமுள்ள அவருக்கு அது ஏற்ற களமாகவும் இருந்தது.

பாரதி தன் தீப்பந்தங்களை தந்தது இருவரிடம் ஒருவர் பாரதிதாசன் மற்றவர் இன்குலாப் என்பார் நூலாசிரியர்.போலித்தனங்கள், ஜாதி ஒலிப்பு,பெண்களை, சமூக அவலங்களை தன் பாடு பொருளாக்கினார்.'உலகம்/பிணங்கள் உறங்கும்/கல்லறை அல்ல/புரட்சி துடிக்கும் கருவறை' என்று பாடினார்.ஒரு முறை காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்து வெளியேறும் போது "இனி என்ன செய்வீர்கள்? என்று ஏளனம் பொங்க கேட்ட போது சொன்னார் 'இதுவரை செய்ததை இனிமேல் இரண்டு மடங்காகச் செய்வேன்! என்று. அந்தத் துணிவு தான் அவர்.

" செருப்பணிந்து கொண்டு தெருவில் வராதே என்று
சொல்லுகின்றவனின் தோலை உரித்தே
செருப்பாக்கி மாட்டித் திமிர் நடை போடுவோர் என அந்நாளைய ஆதிக்க சக்திகளுக்கு எதிராய் குரல் கொடுத்தவர்."நான் பாடாவிட்டாலும் என் பாடலின் பொருளை என் தோழர்கள் புரிந்து கொள்வார்கள் என்று தோழர்களின் நாடித்துடிப்பையும் அறிந்தவர். புரட்சிகர பயணம் போராட்ட வாழ்க்கை ஒரு கட்டத்தில் சலிப்புத் தட்டிவிடும். ஆனால் ஒரு சிலர்க்கு மட்டுமே போராட்ட குணம் வற்றவே வற்றாது. அந்த ஊற்றுக்கண் அமைந்த ஒருவர் தான் இன்குலாப்

#ரசித்தது

*விளம்பர வெளிச்சத்தில் விட்டில் பூச்சிகளை கவர்ந்திழுப்பது கடினமானது அன்று.ஆட்சி மாற்றம் குறித்து

*எனது நிறத்திலும் மணத்திலும் நான் பூத்துக் கொண்டிருக்கின்றேன். இந்த மண்ணின் ஏதோ ஒரு மூலையில் நான் கருகும் வரை பூப்பேன்

*நியாய சூட்டால் சிவந்த கண்கள், உரிமை கேட்டுத்துடிக்கும் உதடுகள், கொடுமைகளுக்கு எதிராக உணரும் கைகள்-இவையே எனது பேனாவை இயக்கும் சக்திகள்

*சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன் இசைப்பேன்!

*நெருக்கடி நிலை காலத்தில் குரல்கள் எனும் நாடகம் அப்போது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

*அதிகாரவர்க்கம் எதையெல்லாம் எதிர்க்கிறதோ அதை எல்லாம் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும்

*இன்குலாப்பின் கடைசி கவிதை 'கண்ணாமூச்சு' உகரன் இதழில் வெளிவந்தது.

*வெள்ளையாய்த் தோன்றும்
எந்தச் சொல்லும் வெள்ளையாய்
இல்லாததால் 
இல்லை எனது சொல்லும்
வெள்ளையாய்

*தனிமை எனக்குப் பிடிக்கும். ஆனால் இது திணிக்கப்பட்ட தனிமை

*போயும் போயும்
அட்டைகளிடம் அல்லவா 
கேட்டோம் ரத்ததானம்

பெரியாருக்கு பின் வந்த திராவிட இயக்கங்களின் மீது விமர்சனம் இருந்தது.இறுதியாக இறக்கும் தருவாயில் கூட என்னை முழுமையாக மக்களுக்கு உரித்தாக்க விரும்பினேன்.ஆனால் நேர்ந்த வாழ்க்கை அதற்கான முழு வாய்ப்பை தரவில்லை என்றார். 
இறுதிவரை இலட்சிய பாதையிலேயே தன் பயணத்தை முடித்துக் கொண்டார்.திருமாவேலன் கூறியது போல் அவரை ப்போல எழுதலாம். அவரைவிட வேகமாக எழுதலாம். ஆனால் அவரைப் போல 'கொஞ்சமாகக் கூட' வாழ முடியாது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

info

தொழிலாளர்களுக்கு பேட்டா என்பது புழக்கத்தில் அதிகம் கேட்ட வார்த்தை.Boarding allowance (B.A),Travelling Allowance (T.A).என்பதன் சுருக்கமே பேட்டா ஆகும்

#info

கற்பதுவே பகிர்வதுவே-23*மணி



ஓநாய் குலச் சின்னம்
-ஜியாங் ரோங்

11/100
Pages-670

#Reading_marathon
#RM314

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் வாசித்தது..ஆனால் தற்போது முழுப் புத்தகத்தை வாசிக்கும் போது இன்னும் கவனமாய் படிக்க முடிந்தது.
இயற்கைக்கு எதிராக மனிதன் நிகழ்த்தும் செய்கையில் இயற்கையிடமும் உயிரிகளிடமும் தோற்றுப் போகிறான்.நாகரிக வளர்ச்சியில் அழிக்கப்பட்ட நகரங்களில் பூர்வ குடிகளின் இழப்பு தெரிகிறது.மங்கோலியர்கள் எவ்வாறு சீனர்களை வெற்றிக் கொண்டனர் என்பதையும் அறிய முடிகிறது.

மேய்ச்சல் நிலம் என்பது பரந்துபட்ட பரப்பு.பெரிய உயிர்களை சார்ந்து வாழும் சிறிய உயிர்களின் நெருக்கடிகள்,இவற்றில் ஏதேனும் ஒன்றை இழந்தால் உணவுச்சங்கிலியில் ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றை விளக்குகிறது.

மாவோவின் கட்டளைக்கு கீழ்படிந்து மலைப்பகுதி கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களோடு வாழ்கின்றனர் இளைஞர்கள்.இதில் நான்கு பேர் மேய்ச்சல் நிலத்தினால் ஈர்க்கப்பட்டு அங்கு சென்று வாழ்கின்றனர்.அதில் ஒருவனான ஜென் சென் ஓநாய்களின் வாழ்வியலை அறிய விரும்புகிறான்.
அவனுக்கு முதியவரான பில்ஜியின் வழிகாட்டுதல் கிடைக்கிறது. இவரிடம் கேட்காமலேயே ஓநாயின் குகையிலிருந்து ஓநாய் குட்டியை எடுத்து வளர்க்கிறான்.அந்தக் குட்டியை எடுக்கப்போகும் இடம் செம த்ரில்.

ஓநாய்களை வணங்கும் மனிதர்களின் மனமாற்றமும், மனிதர்களை வேட்டையாட நினைக்கும் ஓநாய்களின் மனநிலையும் அருகிலிருந்து பார்ப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன.இறுதியில் வென்றது ஓநாய்களா, மனிதர்களா, இயற்கையா என்பதே இந்நாவல்

ஓநாய்களின் வேட்டையை ஒரு இடத்தில் தத் ரூபமாய் விளக்கியிருப்பார்.
"ஒரு ஓநாய் பகல் வெளிச்சத்தில் தனித்திருக்கும் ஒரு மான்மீது தன் தன் கவனத்தைக் குவிக்கும்.ஆனால் இரவு கவிழும் வரை எதுவும் செய்யாது.உறங்கும் போதும் தாக்காது.ஏனெனில் தூங்கும் போதும் உஷாராய் இருக்கும்

ஓநாய் இரவு முழுதும் அருகிலேயே காத்திருக்கும்.சூரிய உதயத்தின் போது,சிறுநீர்ப்பை முழுவதும் நிறைந்திருக்க மான் விழித்தெழும். அப்போது ஓநாய் பாயத் தயாராயிருக்கும்.ஒரு மானால் ஓடிக் கொண்டிருக்கும் போது சிறுநீர் கழிக்க முடியாது.ஆக,அதிகதூரம் ஓட முடியாமல் சிறுநீர் முட்டத் தொடங்கியதும் நின்றுவிடும்.

ஒரு மான் காற்றைப் போல எல்லா நேரமும் ஓட முடியாத போது,
தனித்திருக்கும் ஒன்றை எப்போது வீழ்த்துவது என்பதை ஓநாய்கள் நன்கு அறியும் என்று படித்த முடித்தவுடன் ஒரு ஓநாய் வேட்டையாடுவதை நேரடியாய் பார்த்தது போல் இருந்தது. இந்த ஆன்மாதான் இந்த புத்தகம் முழுவதும் கையைப் பிடித்து இழுத்து செல்லும்.ஓநாய்கள் மனிதர்கள் அளவுக்குத் தீயவை அல்ல”என்ற வரி நாவலின் ஒட்டுமொத்த சாராம்சத்தையும் விளக்கும் வரி. கதையினூடே வரும் இதுபோன்ற தத்துவங்கள் புத்தகத்தை இறுதுவரை பற்றிக் கொண்டு செல்ல உதவுகிறது.

மனிதர்களின் பேராசைக்கும் இயற்கைக்கும் நடக்கும் யுத்தத்தில் பின்விளைவுகளை இயற்கை நின்று ஏற்படுத்துகிறது.

காட்டிற்கே ராஜாபோல் திரிந்த ஓநாய்
"நிலவுலகின் கூரையென வானம் பூமியை மூடியிருக்கிறது/வானம் இருண்டு விரிந்திருக்கிறது/ காற்றடிக்கும் போது புல் சாய்கிறது/ ஒரு ஓநாயும் கண்ணில் படவில்லை." எனும் வரியை படிக்கும் போது மனம் வலிக்கிறது.

#ரசித்தது

*ஓநாய்கள் உண்மையான வர்க்க எதிரிகள்.உலகெங்கும் பரவியிருக்கிற பிற்போக்குவாதிகள் அனைவருமே பேராசை கொண்ட ஓநாய்கள்தான்

*மேய்ச்சல் நிலத்தில் இன்னும் சிலகாலம் இருந்தால் நாமும் ஓநாய்களாக மாறிவிடுவோம்

*புல்லை எரிப்பது சொர்க்கத்தின் விதிகளை மீறும் செயல்

*மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி.ஆனால் ஓநாய்கள் எல்லாமே ஒரே மாதிரி

*யுத்த களத்தில் ஒரு முட்டாள் குதிரையால் வெல்ல முடியாததுதான்.ஆனால் குதிரைகள் முட்டாள்தனமாக இருப்பதற்கு முக்கிய காரணம், மக்கள் முட்டாள்களாக இருப்பதுதான்

*ஒரு மனிதன் அல்லது இனம், சரணடைவதற்கு முன்பாக மரணத்தை தேர்வு செய்யும் ஆன்ம பலத்தைக் கொண்டிருக்காவிட்டால், அடிமையாவதுதான் தவிர்க்க முடியாத விளைவாக இருக்கும்

*யுத்தம் பொறுமைக் கோருகிறது.மனிதனாக இருந்தாலும் சரி,மிருகமாக இருந்தாலும் சரி,சந்தர்ப்பங்கள் தம்மை முன்னிறுத்தும்போது பொறுமைசாலிகளே அத்தகைய சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொள்கிறார்கள்

*அளவுக்கு மீறிய 
மக்கள் தொகை கொண்ட 
ஒர் இனத்தின் 
மிக முக்கிய பிரச்சினை ...
உயிர் வாழ்ந்திருப்பது 
மட்டும் தான் ." 

*மேய்ச்சல் நிலத்தில் நேரம்தான் உணவு.ஒரு ஓநாய் ஆற அமர சாப்பிடுவதாக இருந்தால்,அது பசியிலேயே செத்துவிடும்.

*புல்லைத் தின்னும் ஜீவன்கள் இறைச்சி உண்ணும் ஜீவன்களை விட மோசமானவை. உன்னைப் பொறுத்தவரை, மான்கள்மீது இரக்கம் காட்ட வேண்டும். புல்மீது இரக்கம் காட்ட வேண்டியதில்லை,”

*புல்வெளியே பெரிய உயிர் மற்ற விலங்குகள் அனைத்தும் ஏன் மனிதன் கூட சிறிய உயிர்தான் பெரிய உயிரை போற்றினால்தான் சிறிய உயிர்கள் வாழமுடியும்”

*அதிக அளவில் நிலமும் மக்களும் இருப்பதால் மட்டும் எவராலும் ஒரு யுத்தத்தை வென்றுவிட முடியாது. நீ ஒரு ஓநாயா ஆடா என்பதைப் பொறுத்தது அது"

*கால்நடைகளை வளர்ப்பதென்பது தாவரங்களை பயிர் செய்வதைக் காட்டிலும் மிகவும் கடினம்

*ஒரு கூட்டின் அணில்கள் ஒரு மானைவிட அதிகப் புல் தின்னும்

*உணவுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடுவதே ஓநாய்களின் அடிப்படை

 ஓநாய்களிடமிருந்தே மங்கோலியர்கள் வேட்டையாட கற்றனர்.மங்கோலியர்களில் புகழ் பெற்றவன் செங்கிஸ்கான். தனது எதிரி கூட தனக்கு சரிசமமாய் இருந்தால் மட்டுமே மோதுவானாம். விரைந்து தாக்குவது, சுற்றி வளைப்பது, மறைந்துருந்து தாக்குவது( தீரன் அதிகாரம் ஒன்றில் வருவது போல்)என ஓநாய்களிடமிருந்தே கற்றுள்ளான. அதீத நுகர்வினால் ஏற்படும் இன்னல்கள் என்ன என்பதை அந்த விளைநிலங்கள் புரியவைக்கின்றன.
வேகமாய் படிக்காமல் நிதானமாய் படிக்கும் போது பல உண்மைகள் ஆழமாய் புரிகின்றன

-மணிகண்டபிரபு

Monday 11 October 2021

தற்புகழ் வேண்டா;

பலகற்றோம் யாம் என்று தற்புகழ் வேண்டா;
அலர்கதிர் ஞாயிற்றை கைக்குடையும் காக்கும்;
சில கற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு
அச்சாணி அன்னதோர் சொல்

-கதிரவனை கைக்குடை மறைப்பது போல் பல நூல் கற்றோம் என தற்புகழ்ச்சி வேண்டாம்.இவர்களை விட கொஞ்சம் கற்றோர் இடத்தில்  உறுதிச்சொல் இருக்கும்

நேரு

நிருபர்:உங்கள் தேசத்தில் பெரும்பான்மையினர் படிப்பறிவற்றவர்கள். அவர்களுக்கு வாக்குரிமை அளித்தது தவறு..

நேரு:எனது மக்கள் பெரும்பாலானோர் கல்வி கற்காதவர்கள் தான். ஆனால் புத்திசாலிகள்;அவர்களிடம் கிராமியப் பொது அறிவு உண்டு;எது சரி,எது தவறு-என முடிவு எடுக்கும் திறன் நிரம்ப உண்டு

-நேரு

Sunday 10 October 2021

ஜியாங் ரோங்

யுத்த களத்தில் ஒரு முட்டாள் குதிரையால் வெல்ல முடியாததுதான்.ஆனால் குதிரைகள் முட்டாள்தனமாக இருப்பதற்கு முக்கிய காரணம், மக்கள் முட்டாள்களாக இருப்பதுதான்

-ஜியாங் ரோங்

info

காலில் அணியும் ஷூக்கள் 1850ம் ஆண்டு வரை கைகளால் செய்யப்பட்டு வந்தன. அப்போது வலது இடது பேதம் இல்லாமல்..எந்த காலுக்கும் போட்டுக் கொள்ளலாம்

1850க்குப் பின் இயந்திரத்தில் தயாரிக்கப்பட்ட பின்னரே வலது இடதுக்கென தனித்தனி ஷூக்கள் தயாரிக்கப்பட்டன

#info

மருதன்

நம்மைச் சுற்றியுள்ள இருள் விலக வேண்டுமானால் அறிவின் வெளிச்சம் தேவை. அந்த வெளிச்சத்தைப் பெற நான் படிக்க வேண்டும். என் சுதந்திரத்தைப் பறித்து என்னைப் பிணைத்து வைத்திருக்கும் அனைவரிடமிருந்தும், அனைத்திடமிருந்தும் விடுபட விரும்புகிறேன். அதற்கு நான் படித்தாக வேண்டும்.

-மருதன்

Thursday 7 October 2021

என்ன செய்வதிந்தக் கையைஎன்றேன் என்ன செய்வதென்றால்என்றான் பெரியசாமி.கைக்கு வேலைஎன்றிருந்தால் பிரச்னையில்லை;மற்ற நேரம் நடக்கும்போதும்நிற்கும்போதும் இந்தக் கைகள்வெறும் தோள்முனைத் தொங்கல்; தாங்காதஉறுத்தல் வடிவம் தொல்லை என்றேன்.கையக் காலாக்கென்றான்.-சி.மணி

பாக் தேசிய கீதம்

ஓ!புனித பாகிஸ்தான் தேசமே!
உனது ஒவ்வொரு துகளும்
நட்சத்திரங்களால்
ஒளிவீசிப் பிரகாசிக்கிறதே!
உனது சிறுதூசியும் கூட
வானவில்லைப் போல
வண்ண ஒளி வீசுகிறதே!

பாகிஸ்தானில் முதல் முதலில் பாடப்பட்ட இந்த தேசிய கீதத்தை எழுதியது இந்து கவிஞரான ஜகன்னாத் ஆசாத்.
சுதந்திர தினத்தில் கராச்சி வானொலியில் நிலையத்தின் மூலம் ஒலிபரப்பப்பட்டது.இதற்குப் பின் எதிர்ப்பு கிளம்பியது. ஜின்னாவின் மறைவிற்குப் பின் உருது கவிஞர் ஹபீஸ் ஜலந்தாரி எழுதிய கவிதை தேசிய கீதமாக ஒலிக்கத் துவங்கியது

வணிகத் தேவைக்காக நாட்டு விலங்குகள் படும் துயர்! - தெளிவாக விளக்கும் புத்தகம்


ஒரு வழிகாட்டின்றி தேடி அலையும் பாதையிலே நடப்பவனுக்கு இரண்டு நாள் வழியும் நூறுநாள் வழியாக ஆகிவிடும்
ரூமி மஸ்னவி

பொதுவாக சூழ்நிலையியல் வகுப்பில் உனக்குத் தெரிந்த காட்டு விலங்குகள் பெயரையும் நாட்டு விலங்குகள் பெயரையும் எழுதி வரச்சொல்லுவோம். உண்மையில் வீட்டு விலங்குகள் வீட்டிலேயே தோன்றியதா என யோசித்து இருக்கிறேன். ஒவ்வொரு வீட்டு விலங்கினங்களுக்கும் இருக்கும் வரலாற்றினை அறியும் போது பிரம்மிப்பாக இருக்கிறது. மனிதன் தன் சுய தேவைக்காக விலங்கினங்களை மாற்றியதும், வணிகத் தேவைக்காக இந்த நாட்டு விலங்கினங்கள் படும் துயரத்தையும் விளக்கும் நூலாக சூழலியலாளர் கோவை சதாசிவம் எழுதி குறிஞ்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


ஒரு ஆறு துவங்கும் இடத்தில் இருக்கும் ஒருவர்.. இறுதியாய் கடலில் கலக்கும் இடத்தை பார்க்கும் போது எவ்வளவு துயர் அடைவாரோ அது போலத்தான் நாய்களின் வரலாற்றினை அறியும் போது தெரிகிறது. நாயினம் காட்டு விலங்கான சாம்பல் நிற ஓநாயிலிருந்து பரிணாம வளர்ச்சியிலிருந்து வந்தது. நாய்க்கும் மனிதனுக்கும் உள்ள உறவையும், ஊளையிடல், குரைத்தலுக்கான காரணங்களையும், நாய்களின் வரலாறினையும் விரிவாய் எடுத்துக்கூறுகிறது. நாயின் நாக்கு போல் விளிம்பு முனை கொண்ட நாவாய் கப்பல் உருவாக்கியதும், நாய்களின் பல்வேறு குணாம்சங்களை கூறுவதுடன் தெருநாய்கள் தண்ணீரை மட்டுமே குடித்துக் கொண்டு ஒரு வாரம் உயிர்வாழப் பழகியவை என இது போன்ற பல அறியப்படாத செய்திகளை சொல்கின்றன.


மாடும் முருங்கையும் இருந்த வீடு வறுமையை சந்திக்காது என்பது பெரியோர்களின் மொழி. மேய்ச்சல் நிலத்தில் தொழுவத்திற்குப் பின்பே குடில் அமைப்பார்கள் என்றும், யானைக்கு நிகரான பலமுள்ள காளையை மனிதன் ஏன் அடக்கினான் என்பதை காரண காரியத்துடன் விளக்குகிறது. Man's best friend ஆக நாயைச் சொன்னாலும் மாடுகள் தான் மனிதனுக்கு நீர் இறைக்க, உழவுக்கு, பொதிசுமக்க என குடும்பத்தில் ஒருவராய் வாழ்ந்து வருகிறது. அந்த அற்புதமான நாட்டு மாட்டினங்கள் அருகி வரும் உண்மையும், கலப்பின மாடுகளின் அதிகரிப்பையும் படிக்கும்போது இத்தனை மாட்டினங்கள் வலம் வந்த நம் தமிழகத்தில் நாம் தொலைத்தவை என்ன என்பதை உணர வைக்கிறார்.


"கருங்காலி கட்டைக்கு நாணாக் கோடாலி

இருங்கதலி கட்டைக்கு நாணும்- பெருங்கானில்

கார் எருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது

ஈரிறவு துஞ்சாது என் கண்

கருங்காலி கட்டையால் ஆன கோடாலி எந்த பெரிய மரத்தையும் வெட்டிவிடும். ஆனால் வாழை மரத்தை வெட்டும் போது வழுக்குவது போல் எருமை மேய்க்கும் சிறுவனிடம் தான் தோற்றதை பாடுகிறார் ஒளவையார்.சோதனை முடிந்தவுடன் தோன்றும் முருகன்..ஒளவையின் தமிழை அறியவே பெருமைக்கு எருமை மேய்த்ததாய் சொல்லுவார்.


இதன் மூலம் மேய்ச்சல் நில காலத்திலிருந்தே எருமை இருப்பதும் அதனை மனிதன் மேய்த்ததும் அறிய முடிகிறது. ஆனால் நவீன கால மனிதன் எருமை என்றாலே அபசகுனம், எமனின் வாகனம் என உதாசீனம் செய்கிறான். ஆனால் மாடுகள் சமவெளியில் உழுவது போல் சதுப்பு நிலங்களில் எருமைகள் தான் உழுகின்றன. அதாவது சேற்று நிலத்தை உழக்க எருமைகளை பயன்படுத்தி தமிழர்கள் பயிர் செய்ததை இப்புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது.பழங்குடியினரான தோடர்கள் ஏன் எருமைகளை வளர்த்தனர்,சபரிமலையில் உள்ள எருமேலி என்பதற்கான பெயர்காரணம் என்ன என கூறுவதும் சுவாரஸ்யமானது.


கால்நடை பொருளாதாரத்தில் ஆடுகளின் பங்கு இன்றியமையாதது. சங்கப் பாடலில் வரையாடுகள் முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆடுகள் மனிதனுக்கு எங்ஙனம் உதவியாய் இருந்ததை விளக்கும் ஆசிரியர் வெள்ளாடுகளின் தனிச்சிறப்பையும்,

கிடாமுட்டு, உணவுச்சங்கிலியில் ஆடுகளின் பங்களிப்பையும், அதன் தோல்கள் இன்று வணிகமயமானதையும் கூறுகிறது.

இதனை படிக்கும் போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது..

"ஒரு செம்மறி ஆட்டு மந்தையின் மேய்ப்பன்..ஆடுகளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிடுகிறான். குளிர்காலம் நெருங்குவதால் ஒவ்வொரு ஆடுகளுக்கும் கம்பளிப் போர்வை தருவதாக கூறுகிறான். அனைவரும் கைதட்டி மகிழும் போது ஒரு செம்மறி ஆடு மட்டும் இந்த

கம்பளிக்கான ரோமங்கள் எங்கிருந்து வரும் என கேட்டவுடன் திகைப்படைகிறான்.மற்ற ஆட்டினங்கள் தங்களுக்கு கம்பளி கிடைக்காமல் செய்யப் பார்க்கிறாயா எனக்கூறி அடித்து விரட்டுகின்றன. இதனை படித்தவுடன் இக்காலத்தின் மக்களுக்கும் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது.


காடறிதல் பயணத்தில் ஆதி உழவனான பன்றியை சந்திக்காமல் இருந்ததில்லை என்கிறார் கோவை சதாசிவம். பன்றிகள் குறித்து அறியாத பல சுவாரஸ்யமான தகவல்களை இதில் பகிர்ந்துள்ளார்.

ஆடுகள் மேய்க்கும் கீதாரிகளை தெரிந்து கொள்ளும் நாம் பன்னியாண்டிகளைப் பற்றியும் அவர்களின் பணிகளையும் இன்றைக்கு அவர்களின் வாழ் நிலையினையும் எடுத்துக் கூறியிருக்கிறார்.

You own a dog but cat owns you. உங்களுக்கு நாய்களைப் பிடித்தால் போதும்.ஆனால் பூனைகளுக்கு உங்களைப் பிடித்தால் மட்டுமே பழக முடியும்.பூனைகளின் வரலாறும் அதன் குணங்களும் கூறும்போது அதன் தனிச்சிறப்புகள் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன.பூனையின் மீசையில் இத்தனை விசயங்கள் இருக்கிறதா எனவும் இன்றைய உலகில் பூனைகளை மனிதன் எவ்வாறு நடத்துகிறான் எனவும் பாடம் எடுத்திருக்கிறார்.அடுத்து முட்டையா? கோழியா? என்பதற்கு விளக்கமும், கூமுட்டை என ஏன் சொல்கிறோம் என்பதற்கான பெயர்

காரணத்தையும் இதில் விளக்கியுள்ளார்.முல்லை நிலத்தில் காட்டுயிரியாகவும், மருத நிலத்தில் வீட்டு உயிரியாகவும் மாறிய கோழிகளின் வாழ்வியலைப் படம் பிடித்துள்ளார்.இன்றைய நாட்டுக் கோழிகளையும் பிராய்லர் கோழிகளையும் ஒப்பிட்டு கூறியுள்ளார்.


கடைசி அத்தியாயத்தில் ஆதிகாலத்தில் விலங்கினங்கள் பலியிடுவதற்கான நம்பிக்கைகளின் வேர்களையும், கிராமத்து மக்களின் வாழ்வியலையும் சொல்லியிருக்கிறார்.சிறு தெய்வ வழிபாடு,தூய்மையின் குறியீடாக நெருப்பு இருந்ததையும், மனிதர்கள் குலசாமியிடம் தூய்மையை நிரூபிக்க தீ மிதிப்பதும், தீ சட்டி தூக்குவதும் என இன்றளவும் புழக்கத்தில் உள்ள வழக்கங்களையும் பதிவு செய்துள்ளார்.சடங்குகளில் கலப்பின ஆடு,மாடு, கோழிகளை குலசாமிகளுக்கு ஏன் நேர்ந்து விடுவதில்லை என கேள்வி கேட்கும் போது நம்மை நாமே சுய பரிசோதனை செய்துகொள்ள வைக்கிறார்.


கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என காந்தி சொன்னதற்கான காரணங்களில் தற்சார்பு பொருளாதாரமும் ஒன்று.

தங்களுக்கு தேவையானவற்றை தாங்களே உற்பத்தி செய்து தன்னிறைவு பெற்றனர்.இதற்கு அங்கிருந்த நாட்டு விலங்கினங்களும் உதவி செய்தன.

ட்ராக்டர் கண்டுபிடிக்கப்பட்ட போது ட்ராக்டர்கள் சாணி போடுமா என ஜே.சி குமரப்பா சொன்னதும் நினைவுக்கு வருகிறது.

தற்போது கிராமத்துக்குள் நுழைந்த பன்னாட்டு வர்த்தகம் கொஞ்சம் கொஞ்சமாய் இயற்கையோடு இயைந்த வாழ்வை சிதைத்து வருவது வருத்தத்திற்கு உரியது. ஒவ்வொரு விலங்கினங்களின் வரலாற்றை பார்க்கும் போது.. தற்போது யாரும் கண்டு கொள்ளாமல் தெரு விலங்குகளாய் இருப்பதையும், கலப்பின ஊசிகளின் விளைவால் நாட்டு உயிரினங்கள் அழிந்து வருவதையும் படிக்கும் போது குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது. சூழலியலில் நாட்டு உயிரினங்களின் தாக்கத்தையும் பேசுகிறது.


-மணிகண்டபிரபு

Tuesday 5 October 2021

அந்தோன் செகாவ்

பல நேரங்களில், குற்றத்தை விட தண்டனைதான் அதிகமாகத் தீங்கு விளைவிக்கிறது - அந்தோன் செகாவ்

Monday 4 October 2021

மொய்

மொய்' என்ற சொல் 'மொய்' என்ற வினையடிப் பிறந்த பெயர்ச்சொல் ஆகும்.

'எறும்புகள் மொய்க்கின்றன' என்ற வாக்கியத்தில் 'எறும்புகள் கூட்டமாகக் கூடி உண்ணும் செயலைச் செய்கின்றன'என்று பொருள் தருகிறது.

அதுபோலவே திருமணங்களில் 'மொய்' என்பது உறவும் நட்பும் ஒன்றுகூடி மணமக்களுக்குப் பணம் கொடுத்து, அவர்கள் தனி இல்வாழ்க்கை நடத்துவதற்காக ஊக்கப்படுத்தும் செயல் ஆகும். பிற்காலத்தில் இதனைப் பெற்றோர்கள் பெற்று அதன் பயனையே மாற்றிவிட்டார்கள்.

-படித்தது

Saturday 2 October 2021

காந்தி

முதலில் உன்னை உதாசீனம் செய்வார்கள்,
பிறகு கேலி செய்வார்கள்,
அதன் பிறகு சண்டையிடுவார்கள்,
கடைசியில் நீ வென்றுவிடுவாய்.

-காந்தி

ராஜன்

அன்றாடம் வாசிக்கும் புத்தகங்களில், நம்மைச் செறிவூட்டக்கூடிய ஒரே ஒரு வரியை வாசித்தாலே போதுமானது. அன்றாடம் செறிவுபெறுகிறோம் என்பதே மற்ற எல்லாவற்றையும்விட மகிழ்ச்சிதரக்கூடியதாகவும் திருப்திதரக்கூடியதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது.

-த.ராஜன்