Shu-Ha-Ri – மேதமையை நோக்கிய பயணம்.
ஷூ-ஹா-ரீ என்பதும் ஒரு ஜப்பானியத் தத்துவம். இதனை, ஒரு துறையில் திறன்கள் மற்றும் நுட்பங்களில் தேர்ச்சி பெறுவதற்கான படிநிலைகளாக ஜப்பானியர்கள் பின்பற்றுகின்றனர். இந்தத் தத்துவத்தை தேநீர் சடங்கு, தற்காப்புக் கலை, கைவினைத்திறன், கலை, வணிகம், வாழ்க்கை முறை, ஆன்மீக வளர்ச்சி என பலவித கற்றல்களிலும் டிஎன்ஏவாக ஜப்பானியர்கள் உட்புகுத்தியுள்ளனர்.
Shu-Ha-Ri, என்பது கற்றலின் மூன்று நிலைகளை கூறுகிறது, 1.கற்றுப்பழகுதல் (ஷூ - Shu), 2.சுயமாக மேம்படுதல் (ஹா - ha) மற்றும் 3.தனித்துவ அடையாளத்துடன் மேதையாதல் (ரீ - ri) என்ற மூன்று நிலைகள் அனைத்து விதமான கற்றலிலும் நாம் காணமுடியும். இதனை, ஒரு பட்டாம்பூச்சியின் உருமாற்றத்துடன் ஒப்பிடலாம். முதலில் புழுவாக இருக்கும் பட்டாம்பூச்சி, பிறகு கூட்டுப்புழுவாக மாறி, அதற்கடுத்து பட்டாம்பூச்சியாக வண்ணமயமாக வளர்ந்து சுதந்திரம் பெற்று, பறந்து மகிழ்கிறது.
முதல் நிலை Shu: செயலின் அடிப்படையை திரும்பத்திரும்ப செய்து பார்த்தல்:
-----------
ஒரு திறனையோ, பணியையோ குருவிடம் இருந்து கற்க ஆரம்பிப்போம். இந்த முதல் நிலையில், குருவிடம் மாணவர் தன்னை அர்பணிக்கவேண்டும். விசுவாசமாக இருக்க வேண்டும். பணியின் அடிப்படைகள், அதன் விதிகள், ஆகியவற்றை எந்தக் கேள்வியும் கேட்காமல், கீழ்படிந்து கற்றுக்கொண்டு, அதையே திரும்பத் திரும்ப செய்து பார்ப்பது அவசியம்.
ஒரே வேலையை திரும்பத்திரும்ப செய்வது, கடினமானதாக இருக்கலாம், சோர்வு தரலாம். ஆனால் நாம் பணிவுடன் நமக்கு செய்யக் கொடுக்கப்பட்டதைச் செய்ய அர்ப்பணித்தால் பயிற்சியின் போது, நமது மனம் அமைதியாகி ஒரு செயலின் அடிப்படை விதிகள், மந்திரம் போல மனதில் பதிந்துவிடும்.
இதனை, வண்ணத்துப்பூச்சியின் ஆரம்ப புழுவாக இருக்கும் கால கட்டம் எனலாம். அந்த பூச்சி நிலையில் ஒரு பட்டாம்பூச்சியைப் போல பறக்க முயன்றால், அது தோல்வியடைந்து தன்னைத்தானே அழித்துகொள்ளும். அந்த நேரத்தில் கூடுமானவரை இலைகளைத் திரும்பத் திரும்பத் தின்று, தன்னை பலப்படுத்திக்கொள்வது மட்டுமே அந்தப் புழுவின் வேலை.
இரண்டாம் நிலை: Ha - செயலில் பல்வேறு மாற்றங்களை அறியும் நிலை
------------
இந்த நிலையில், நாம் கற்றுக்கொண்டவற்றின் அடிப்படைகளை சிறப்பாகச் செய்ய முடிகிறது. ஆனால், நாம் அப்படியே தேங்கிவிடாமல், நாம் அறிந்த அடிப்படை வடிவங்களை உடைத்து, புதுமைகளை செய்து பார்க்கவும், அதே பணியை மற்றவர்கள் எப்படி செய்கிறார்கள் என்பதை ஒப்புமைப்படுத்தி, அந்த பணியில் நமக்கான பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை அறிந்து, நமது பாணிக்கு ஏற்றவாறு நமது திறனை செதுக்கிக் கொள்ளவேண்டும். இந்த நிலையில் கெய்சனை பயன்படுத்தி, நாம் மேற்கொண்ட திறனில் தொடந்து மேம்பட முயற்சிக்கவேண்டும்.
இது வண்ணத்துப்பூச்சின் புழு வடிவத்திலிருந்து கூட்டுப்புழுவாக மாறும் நிலை. கூட்டுப்புழு காலத்தில் தான் வண்ணத்துப்பூச்சி தனக்கான அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்திக் கொள்கிறது.
மூன்றாம் நிலை : Ri - சுதந்திரமாதல் மற்றும் மேதையாதல்
------------
இந்த கட்டத்தில், நமது திறன்கள் மற்றும் நுட்பங்களில் மட்டுமல்ல, நாம் மனதளவிலும் தெளிவுடன் இருப்போம். நம்மால் கற்றலையும், நம் ஆன்மாவையும் ஒன்றிணைத்திருக்க முடியும். நாமும் அந்த பணியும் வேறு வேறு அல்ல என்ற நிலையை எட்டியிருப்போம். குறிப்பிட்டத் துறையில் நாம் மாஸ்டர் ஆகியிருப்போம்.
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசை மேதைகளை எடுத்துக்கொண்டால், முதலில் அவர்கள் இசை கற்கும் போது, தமது குரு சொல்லித்தந்த அடிப்படைகளையே திரும்பத்திரும்ப செய்து பார்த்து பழகியிருப்பார்கள் இது முதல் நிலை (ஷூ). பிறகு வேறு பல இசை வடிவங்களை கற்று, அவற்றில் தமக்கு பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் தாமே சொந்தமாக இசையை படைப்பார்கள். தமக்கென சொந்தமாக ஒரு பாணியை உருவாக்கியிருப்பார்கள். இது இரண்டாம் நிலை (ஹா). இனி தம்மை நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லை என்றான பின், தமது மகிழ்ச்சிக்காக, ஆன்ம மேம்பாட்டுக்காக, இசையையும் தம்மையும் பிரிந்தறிய முடியாத நிலையை இப்போது அடைந்திருக்கிறார்கள். இது மூன்றாம் நிலையான (ரீ) யைக் குறிக்கும். இந்த நிலையில் இவர்கள் லெஜண்ட்களாக மாறியிருப்பார்கள். மற்றவர்களுக்கு குருவாக மாறியிருப்பார்கள். இந்த பரிணாம மாற்றத்தை விவசாயம் செய்வதிலிருந்து ராக்கெட் தயாரிப்பது வரை அனைத்துக்கும் பொருத்திப் பார்க்கலாம்.
ஒருவர் ஒரு துறையில் நிபுணத்துவம் பெறுவதற்கு இந்த மூன்று நிலைகளையும் கடந்தாக வேண்டும். இதில் குறுக்குவழி என்பதே இல்லை. விதிகளை மதித்து, அதனை செய்து பழகியவரே, விதிகளை மீறி, புதிய விதிகளை உருவாக்கும் உரிமை கொண்டவராகிறார்.
-janakiraman