நான் காற்றோடு போகும் போது,
என்னுடைய அன்பும்
என்னுடைய நினைவும்
உங்களுக்கு போதுமானதாக இருக்கும்..!
மரணம் என்னை மறைத்தாலும்..
நிர்ச்சலனம் என்னை சூழ்ந்துவிட்டாலும்..
உங்கள் உணர்வுகளில்
உறைந்து நிற்பேன்..!
மனிதர்களின்
தேவைகள் மாறலாம்..
ஆனால்
அன்பு மாறுவதில்லை..!
- கலீல் ஜிப்ரான்.
Monday 25 September 2017
கலீல்ஜிப்ரான்
@மணி
இனியவை நாற்பது
*******************
தெய்வம் மறுத்தல் தேரினை இழுத்தல்
கொள்கை மறத்தல் கூட்டணி வைத்தல்
அறங்கள் அழித்தல் ஆட்சி அமைத்தல்
உறவு மிகுதல் ஊழல் மலிதல்
களவு செய்தல் கடல்கடந்து பதுக்கல்
ஊர்ப்பணம் உவத்தல் உலகை மயக்கல்
ஏழையை அணைத்தல் ஏமாளி ஆக்கல்
கைது செய்தல் காவலில் அடைத்தல்
கொலைத்தொழில் புரிதல் கோட்டையைப் பிடித்தல்
கண்கள் துஞ்சல் கடற்கரையில் புதைத்தல்
இவையும் இவைபோல் பிறவும்
இனியவை நாற்பது என்மனார் புலவர். -
*சுகிர்தராணி
#முன் கடந்து போவோரின்
முகம் காண முடியவில்லை.
பின் நின்று சிரிப்போரின்
எண்ணம் எனக்கு புரியவில்லை.
தலை தாழ்ந்தே எங்கும் பயணம்.
தொடுதிரையை தொட்டபடி
உள்ளங்கையில் தான் உலகம்.
என் கைபேசி காதலியானாள்- நான்
கட்டிய மனையாள் நெடுந்தூரம் போனாள்...
உற்றாரும் உறவினரும் Family குரூப்பில்,
நண்பனும் அவனின் நண்பனும் நட்பெனும் குரூப்பில்.
சாமக் கோழி கூவிய பின்னும்,
கொக்கரக்கோ கேட்கும் முன்னும்,
வாட்ஸ்சாப்பில் மூழ்கலானேன் - நிஜமெனும் வசந்தத்தை நிழலாலே மறந்தும் போனேன்.
எவர் எவருக்கோ பிறந்த நாள் வாழ்த்து.. அடுத்தவர் இழப்பிற்கு துக்கச்சேதி.
Hi என எவரோ அனுப்ப
Hai என பதிலுரைத்தேன் - ஏனோ
நான் பெற்ற பிள்ளை
'அப்பா'என்றழைக்க,
சற்றே புருவம் உயர்த்தி
பார்வையாலே சுட்டெரித்தேன்...
அடுத்தவரின்,
Status பார்த்து ரசித்தேன்,
profile பார்த்து வியந்தேன்,
Picture Msg பார்த்து லயித்தேன்,
video பதிவிறக்க ஆர்வத்தில்.
கை அலம்பியபின் யோசித்தேன்.
நான் என்ன சாப்பிட்டேன் என்பதை...
மாமன் வீட்டு மீன் குழம்பு,
மாமி பொறித்த அப்பளம்,
தங்கை வீட்டு தக்காளிச்சோறு,
மதனி சொன்னாள் கூட்டுக்கறி என்று இத்தனையும் மனதில் கொண்டு, நித்தம் நித்தம் சண்டையிட்டேன்,
அமிர்தம் தந்த மனையாளிடம்.
இது நஞ்சை விட கேவலமென்று...
நானாய் சிரித்தேன்,
நானாய் அழுதேன்,
நானாய் வியந்தேன்,
நானாய் ரசித்தேன்-ஏனோ
நான்,
நானாய் மட்டும் இல்லை...
ஆண்ட்ராய்டில் அனைத்தும் உள்ளதென அங்கலாய்த்தேன்.
என் குடும்பம் விலகி போவதை கண்டும் கூட
Network கிடைக்கும் இடம் தேடி அலையலானேன்...
கீமோஜியில் கூட
சிரிப்பு, அழுகை, சோகம், வெட்கம் ,
ஆடல், பாடல், குடும்பம், நட்பு என அனைத்தும்.
ஆனால்...
நான் நிமிர்ந்து பார்க்கும் போது
என் முன்னே எவருமில்லை.,
சுற்றமும், நட்பும்
உள்ளங்கை உலகத்தோடு எனை கடந்து போயினர்...
இது வாட்ஸ் ஆப்(பு) உலகம்-போதும்
சொந்தமே.,
இனி என்னோடு நேரினில் புன்னகையிடுங்கள்.
நட்பே., வா தெருவோர டீக்கடை நமக்காய் தவம் தவம் கிடக்கிறது...!🙌
-படித்தது
பாரத்பாரதி
💥எழுத்தாளர் ஒருவர் எதிர்கொள்ளும் கேள்விகளில் அடிக்கடி இடம் பெறுவது இந்தக் கேள்வி :
"நீங்கள் குறிப்புகள் எடுத்துக் கொள்வீர்களா?"
💥என்னுடைய பதில் :
"இல்லை, மனதில் ஒன்று தங்கவில்லையென்றால், அது முக்கியமானதல்ல என்று பொருள்."
ஆமாம், சந்தேகமில்லாமல். என்னைப் பொறுத்தவரை அது சரியாகவே இருக்கிறது. எப்போதும் அது சரியாகவே இருந்திருக்கிறது...
- பியரெத் ஃப்லுசியோ.
(’சின்ன சின்ன வாக்கியங்கள்’ நாவலில்..)
பெரியார்
பெரியார் பிறந்த தின சிறப்பு பகிர்வு.. பெரியார் 25
-ப.திருமாவேலன்
தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி. அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...
* ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!
* பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான். இவர்களுக்கு ஈ.வெ.ரா.ம. என்பது இனிஷியல்!
* தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் எடைக்கு எடை பொருட்கள் தரப்பட்டது இவருக்குத்தான். வெள்ளி, நெல் மூட்டைகள், பேரீச்சம்பழம், பெட்ஷீட் தொடங்கி வெங்காயம் வரை தரப்பட்டுள்ளது!
* தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!
* வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!
* பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தார். பிரெஞ்சு தொடங்கி ராஜபாளையம் வரை பல வகைகள் இருக்கும். வெளியூர் பயணத்தின்போதும் அவை வேனில் ஏறி வந்து மேடைக்குக் கீழே உட்கார்ந்திருக்கும்!
* தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்துவைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!
* வாரம் ஒருமுறை, பத்து நாளைக்கு ஒருமுறைதான் குளிப்பார். ''குளிக்கணும்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்ல. அதை ஒரு தொந்தரவாக நினைக்கிறேன்'' என்பார்!
* தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!
* இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!
* உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!
* தன்னுடைய மனைவி நாகம்மை, அம்மா சின்னத் தாய் ஆகியோர் இறந்தபோது, தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பகிரங்கமாக அறிவித்தார். 'எனக்குஇருந்த குடும்பத் தொல்லைகள் ஒழிந்தன' என்று காரணம் சொன்னார்!
* இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!
* இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 42 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!
* தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!
* தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரதுசேகரிப் பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!
* முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார் யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!
* உலகம் முழுவதும் பெண்ணியவாதிகள் தங்களது வேதப்புத்தகமாகச் சொல்லும் 'செகண்ட் செக்ஸ்' வெளிவருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவர் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகம் வெளியாகிவிட்டது!
* 'நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். நான் கொள்கையை மாற்றிக்கொண்டே இருப்பேன். எப்போது மாறுவேன் என்று எனக்கே தெரியாது'' என்று எல்லாக் கூட்டத்திலும் மறக்காமல் சொல்வார்!
* அவருடைய நண்பர்களில் எட்டுப் பேர் 42 வயதில் இறந்துவிட்டார்களாம். தானும் 42 வயதில் இறந்து போவோம் என்று நினைத்தாராம். ஆனால், அதன்பிறகுதான் தீவிரப் பொது வாழ்க்கையில் இறங்கினார்!
* 'தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!
* புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!
* பெரியார் அதிகமாக உச்சரித்த வார்த்தை-வெங்காயம். ''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்றார்!
* நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்!
* 95 வயது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!
படித்தது
ஒவ்வொரு முறை மற்றவர்கள்
உங்களை அவமானம் படுத்தும் போது உணருங்கள்....
*அவர்கள் உங்களிடம்* *இன்னும் வெற்றிகளை*
*எதிர்பார்க்கிறார்கள்* என்று
ஒவ்வொரு முறை மற்றவர்கள்
உங்களை தனிமை படுத்தும் போது உணருங்கள்....
*அவர்கள் மட்டுமே இந்த* *பூமியில்*
*வாழவில்லையென்று*
ஒவ்வொரு முறை மற்றவர்கள்
உங்களிடம் பேசாமல் இருக்கும் போது உணருங்கள்....
*நாளை உங்கள்* *வெற்றிகளை*
*பார்த்து கை* *தட்டுவார்கள் என்று*
இன்று உங்களை தூற்றிய உதடுகள்
தான், *நாளை உங்கள் வெற்றிகளை முத்தமிட வரும்*
துணிந்து சென்றால்
*உங்களை நீங்கள் அறிவீர்கள்*
*உங்கள் வீட்டிற்கு* *இருக்கும் முகவரி*
*நாளை உங்கள்* *பெயருக்கும்* *இருக்கட்டும்..👍*
#*கி.ரா*
கிராமத்தில் நடக்கும் பஞ்சாயத்துகளும் தீர்ப்புகளும் சுவாரஸ்யமானவை.
*எள்ளுக்காய் பிளந்ததுபோல சொல்லிவிட்டார் தீர்ப்பு* என்று ஒரு பிரயோகம் உண்டு.
இதன் அர்த்தம், எள்ளுக்காய் பிளந்தது போல அவ்வளவு சரியாக ஒரு வழக்கை தீர்த்து வைக்க முடியாது என்பதே.
வாதியோ, பிரதிவாதியோ யாராவது ஒருவர் பாதிக்கப்படுவார். இரண்டுபேரும் சந்தோசமாக ஒப்புக்கொள்ளும் தீர்ப்பை தரமுடியாது. அப்படியிருந்தால் அவர்களுக்குள் ஏன் தகராறு வரவேண்டும்.
*-கரிசல் காட்டுக் கடுதாசி*
மினிமீன்ஸ்
எதுவும் கேட்காத என்ஜினியர்ஸ்…
நான் ரியாத் வந்து கிட்டத்தட்ட ரெண்டு வருடங்கள் ஆகப்போகிறது.
ரியாத் மெட்ரோ ப்ராஜக்ட்.
உலகின் மிகச் சிறந்த கம்பெனியில், உலகின் பெரிய ப்ராஜக்ட்டில், உலகின் அனைத்து நாட்டுப் பொறியாளர்களுடனும் கலந்து பழகி வேலை செய்யும் வாய்ப்பு.
இந்தப் ப்ராஜக்ட் முடியும் வரை நான் இருப்பேனா என்பது தெரியவில்லை.
ஆனால், முடிந்த மறுநாள் எனக்கும் இந்த ட்ரெய்னுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஹேண்டிங் ஓவர் முடிந்த அடுத்த நாள் இந்த ட்ரெயினில் ஏற வேண்டுமானால் நான் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும்.
அவ்வளவுதான் எனக்கும் அதற்குமான உறவு.
சும்மா பெருமைக்கு சொல்லிக் கொள்ளலாம். நானும் இந்த ப்ராஜக்ட்டில் இருந்தேன் என்று. அவ்வளவுதான். வெறும் வெத்துப் பெருமை.
பொறியாளர்கள்… யோசித்துப் பார்க்கிறேன்.
நன்றியையே எதிர்பார்க்காத, நாடு,குடும்பம், நேரம், ஜாதி, மதம் என்று எதையும் கருதா ஒரு சமூகம் இது.
ஒரு காட்டையே நாடாய் சமைத்துவிட்டு அடுத்த காட்டை நோக்கி ஓடும் நாடோடிகள்.
பொறியாளன் இல்லாத சமூகம் எப்படி இருந்திருக்கும்… காட்டுவாசியாய்த்தானே.?
அறிவியலாளன் இல்லாவிட்டால் பொறியாளன் ஏது என்பார்கள்.
அறிவியலாளன் எதையும் கண்டுபிடிப்பான். அதோடு அவன் வேலை முடிந்தது. பொறியாளன் தான் அதை நமது தேவைக்குத் தகுந்தபடி வடிவமைப்பான்.
பறக்கலாம் என யோசித்த அறிவியலாளன் விமானம் கண்டுபிடிப்பான். அவன் பெயர் சரித்திரத்தில் இருக்கும்.
ஆனால், அதை இத்தனை பேர் அமர்ந்து செல்ல தோதாய் மெல்ல மெல்ல மெருகேற்றி வடிவமைத்தவன் பெயர் யாருக்காவது தெரியுமா.? சொகுசுக்கு ஒரு ப்ளேன். பட்ஜெட்டுக்கு ஒரு ப்ளேன். போருக்கு ஒரு ப்ளேன். உளவுக்கு வேறொன்று. ஆளில்லாமல் ஒன்று. அதற்கடுத்த தேவை வந்தால் அதற்கும் ஒன்று என்று வடிவமைத்தது இவன் தானே.?
கூட்டு முயற்சி என்பார்கள்.
இன்னும் குறிப்பாய்ச் சொல்லலாம் என்றால், தாஜ்மஹாலைக் கட்டியது யார் என்றால், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியது யார் என்றால், காவிரியில் கல்லணையைக் கட்டியது யார் என்றால் பணம் போட்ட மன்னரைக் கைகாட்டும் வரலாறு அதைக் கட்டிய பொறியாளனை ஒரு குறிப்பாகவாவது குறித்து வைத்திருக்குமா என்றால் பெரும்பாலும் இருக்காது.
ஆசிரியர் இல்லாமல் இதுவெல்லாம் சாத்தியமா என்போர் இதை கவனிக்க வேண்டும்.
ஏரோப்ளான் கண்டுபிடிக்கும் முன் ஏரோடைனமிக்ஸ் இல்லை.
டீசல் என்ஜின் கண்டுபிடிக்கும் முன் ஆட்டோமொபல் இல்லை.
முதல் குடிசை கட்டுவதற்கு முன் சிவில் என்ஜினியரிங் இருந்திருக்காது.
ஆனால், கண்டுபிடித்து அதில் முன்னேற்றங்களைக் கொண்டு வந்து கொடுத்தபின் அதன் இயல் சார்ந்து ஒரு படிப்பு உருவாகும். அதைச் சொல்லிக் கொடுக்க ஒரு ஆசிரியர் உண்டாவார். அவர் கேட்கும் மரியாதையைக் கூட இவர்கள் கேட்பதில்லை என்பதுதான் உண்மை.
மனிதன் இவ்வுலகில் இரண்டு விதமான பொருட்களால் வாழ்கிறான்.
ஒன்று மனிதனால் செய்யவே முடியாத ஐம்பெரும்பூதங்களால் ஆன இயற்கை சமைத்த பொருட்கள். இன்னொன்று முழுக்க முழுக்க மனிதனால் மட்டுமே செய்யப்பட்ட, நம் வாழ்க்கையை சீரமைத்து சுலபமாக்கும் நூறு சதவீத செயற்கைப் பொருட்கள்.
நீங்கள் உடுத்தும் உடை, நீங்கள் எழுதும் பேனா, நீங்கள் படிக்கும் புத்தகம்,பயணிக்கும் வாகனம், அது செல்ல சாலை, வீட்டில் பார்க்க டெலிவிஷன், தியேட்டரில் பார்க்க சினிமா, பாக்கெட்டில் இருக்கும் செல்ஃபோன், மூக்குக் கண்ணாடி, அதை முடிவு செய்யும் டெஸ்ட், ஆரோக்கியத்துக்கான மாத்திரை, அதற்குப் போடும் ஊசி… என எங்கே இல்லை என்ஜினியரிங்..
ஆனால்… இதுவரை மற்ற துறை போல எங்காவது என்னை மதியுங்கள் என்று கேட்டிருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால் இல்லவே இல்லை என்றுதான் தோன்றுகிறது.
பணம் பெற்றுக் கொண்டுதானே செய்கிறீர்கள் என்பார்கள். யார்தான் சும்மா செய்கிறோம்.? அது மட்டும் போதவில்லை இல்லையா வாழ்க்கைக்கு.?
அண்ணா
#தென்னாட்டு_காந்தி, #இந்நாட்டு_இங்கர்சால் #பேரறிஞர்_அண்ணா-வின் 109-வது பிறந்தநாள் இன்று...
அண்ணாவின் பேச்சுக்கு யாரும் அவ்வளவு எளிதில் மறுத்து பேசிவிடமுடியாது. வலுவான வாதங்களை வைப்பதில் சமர்த்தர் அவர்.
ஒருமுறை பெரியாரை காண சுதேச கிருபளானி வந்தார். அந்த வார “ரிவோல்ட்” இதழில் கதர் கட்டுவது மூடநம்பிக்கை என பொருள்படும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் #பெரியார்.
இதை குறிப்பிட்ட கிருபாளினி,
"நீங்கள் ஒரு காங்கிரஸ்காரராக இருந்து தெருத் தெருவாக கதரை சுமந்து விற்று கட்சியை வளர்த்திருக்கிறீர்கள். ஆனால் இப்போது இப்படி எழுதுவது தவறு!" என்றார்.
அதற்கு பதில் கூற பெரியார் குறுக்கே புகுந்த அண்ணா,
" 'விபூதி அணிந்தவன் சிவபக்தன். நாமம் போட்டவன்தான் வைணவன்!' என்று சொல்லும் நம்பிக்கை போன்றதுதான் கதர் கட்டுபவன்தான் தேசபக்தன் என்பது" என்று ஒரே போடாக போட, அமைதியானார் கிருபளானி. அதுதான் அண்ணாவின் நாவன்மை.
1963-ல் #அண்ணா மாநிலங்களவைக்கு தேர்வாகி சென்ற அண்ணாவின் முதல் கன்னிப் பேச்சை கேட்டு “நான்சென்ஸ்’ என்று அண்ணாவை கண்டித்த அதே நேரு, உணர்ச்சிவயப்பட்டு ‘அவரை தொந்தரவு செய்யாதீர்கள்.பேசவிடுங்கள் என சபாநாயரை கேட்டுக்கொண்ட அதிசயம் நடந்தது.
'#சென்னை_மாகாணம் என்பதை #தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்திடக்கோரும் தீர்மானம் ஒன்றை அண்ணா, நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார்.
காங்கிரஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. எம்.என் லிங்கம் என்ற உறுப்பினர்,
"தமிழ்நாடு என பெயர் மாறினால் நீங்கள் என்ன லாபம் அடைந்துவிட போகிறீர்கள்?" என்று கேட்டார் .
“நாடாளுமன்றத்திற்கு லோக்சபா என்றும், மக்களவைக்கு ராஜ்யசபா என்றும், ஜனாதிபதிக்கு ராஷ்ட்ரபதி என்றும் பெயர் மாற்றம் செய்திருக்கீறீர்களே. இதனால் நீங்கள் கண்ட லாபம் என்ன?” என்றதும் பதிலேதுமில்லை எதிர்கட்சியிடமிருந்து.
1967-தமிழக சட்டமன்றதேர்தலில் அறுதி பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தது திமுக. பதவி ஏற்பதற்கு முன்தினம், தனது நுங்கம்பாக்கம் வீட்டில் கவலையோடு இருந்தார் அண்ணா.
“தவறு செய்துவிட்டோம். இவ்வளவு சீக்கிரம் நாம் பொறுப்புக்கு வந்திருக்கக்கூடாது. இன்னும் சில காலம் நாம் பொறுத்திருந்திருக்கவேண்டும்.
நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரசையே நம்மை நம்பி துார எறிந்துவிட்டு நம்மை தேர்ந்தெடுத்து உள்ளனர் மக்கள். நம்மிடம் அவர்கள் எதிர்பார்ப்பதை எப்படி நிறைவேற்றுவது” என தன்னை வாழ்த்த வந்த கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களிடம் புலம்பினார்.
ஒரு சமயம் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அண்ணாவிடம், "மிருககாட்சி சாலைக்கு நான் தந்த ஆண்புலிக்குட்டி சரியாக கவனிக்கப்படவில்லை. ஆனால் #எம்ஜிஆர் தந்த பெண்புலிக்குட்டி மட்டும் நன்கு கவனிக்ப்படுகிறது" என்று குற்றஞ்சாட்டிப்பேச,
உடனே குறுக்கிட்ட அண்ணா "சம்பந்திகள் இருவரும் உட்காரந்து பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் உங்கள் பிரச்னையை” என்றதும் சபை சிரிப்பால் நிறைந்தது .
'சென்னை மாகாணத்தக்கு தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டு அது விழாவாக கொண்டாடப்பட்ட அன்று வாந்தியும் மயக்கமுமாக சோர்ந்திருந்தார் அண்ணா. மருத்துவர்கள் அந்த விழாவுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்க, கோபத்துடன்,
"என் தாய்நாட்டுக்கு பெயர் சூட்டும் இந்த நாளில் போகாமல் உயிருடன் இருபபதை காட்டிலும் இறப்பதே மேல்!" என்றார் எரிச்சலாக.
அண்ணாவின் படத்தை திறந்து வைத்ததுதான் கலைவாணரின் இறுதி நிகழ்ச்சி.
அதே போல் நோய்வாய்ப்பட்ட நிலையில் கலைவாணரின் சிலை திறந்ததுதான் அண்ணாவின் இறுதி நிகழ்ச்சியானது.
சாமான்யனாக பிறந்து சாதனையாளனான அண்ணா இறப்பிலும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். அவரது இறுதிப்பயணம் கின்னஸில் இடம்பெற்றிருக்கிறது. எந்த தலைவரின் இறுதி ஊர்வலத்திலும் இதுவரை இப்படி ஒரு கூட்டம் வந்ததில்லலையாம்.
அண்ணாவின் மீது அளப்பரிய காதல் கொண்டிருந்த எம். ஜி. ஆர்., அண்ணா வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை 1980-ம் ஆண்டு நினைவு இல்லமாக்கினார்.
திறப்பு விழாவில் கலந்துகொண்ட அன்றைய குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி,
”இந்த எளிய இல்லத்தில் பிறந்த ஒருவர் பின்னாளில் ஒரு மாநிலத்துக்கு முதல்வரானது என்பது ஜனநாயகம் இங்கு தழைப்பதையே காட்டுகிறது. நான் அண்ணா அளவுக்கு படித்தவனல்ல என்றாலும் சாமான்யனாகிய நானும் குடியரசு தலைவராக ஆனதற்கு நமது ஜனநாயக அமைப்பே காரணம்" என்றார்.
அநேகமாக மாநில முதல்வராக இருந்த ஒருவரின் நினைவு இல்லத்தை குடியரசு தலைவர் திறந்து வைத்தது என்பது இதுவே முதல்முறை.
ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி பேசுகையில்,
"திராவிட இயக்க அரசியல்வாதியாக அண்ணாவை பார்த்தாலும் அவர் ஒரு காந்தியவாதியாக இருந்தவர் எதையும் யாருக்கும் புரியும் வகையில் சொல்வதில் அவர் கெட்டிக்காரர்.
குடும்பக் கட்டுப்பாட்டை பற்றி பேசும்போது பாமரர்களுக்கு புரியும்படி “பெருமாளுக்கு 2 பிள்ளைகள்” எனக் கூறினார்.
தீவிர நாத்திகவாதியான அவர், மக்களுக்கு புரிய வேண்டுமென்பதற்காக தன் கொள்கைளை தள்ளிவைத்து கடவுளை துணைக்கு அழைக்கவும் தயங்கவில்லை. அவர் ஒரு ஜென்டில்மேன்" என்றார்.
-எஸ்.கிருபாகரன், விகடனுக்காக எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி..