நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி..
மறுவாசல் வைப்பான்.. இறைவன்
-வாலி
#வாலிப வாலி
-நெல்லை ஜெயந்தா
வாலிப வாலி நிகழ்ச்சி பொதிகை டிவியில் ஒளிபரப்பும் போது வாரம் தவறாமல் பார்த்துவிடுவேன்.நல்ல அனுபவமுள்ள மனிதரின் பேச்சுகள் சுவாரஸ்யமாய் இருக்கும்.வாலியின் பேச்சுக்களும் அத்தன்மையதே. ரிப்பீட்டட் வராது, நான் ஒரு பெரிய மேதை எனும் மமதை கிடையாது. உள்ளதை உள்ளவாறு சுவாரஸ்யத்தோடு சொன்னாலே போதும் எல்லோருக்கும் பிடித்துப் போய்விடும்.
ஒரு கவிஞர் ஒரு படத்தில் ஐந்து பாடல் எழுதியிருப்பார்.ஆனால் வாலி ஒரு பாட்டு தான் எழுதியிருப்பார். ஆனால் அது சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருக்கும்.உதாரணத்துக்கு சர்வர் சுந்தரத்துக்கு கண்ணதாசன் எழுதியதை விட அதில் வந்த அவளுக்கென்ன அழகிய முகம் பாடல் சூப்பர் ஹிட்.வாலிக்கு அந்த ராசி உண்டு.காதலனில் வரும் முக்காபுலா, ஜென்டில்மேனில் வரும் சிக்குபுக்கு பாட்டுகள் ஒர்பதம். "சுஜாதா குமுதம் அரசு பதிலில் 'எத்தனை பாட்டு கஷ்டப்பட்டு மற்றவர் எழுதினாலும் வாலி ஒரு பாடல் எழுதி மூக்கறுக்கிறாரே.அதுக்கு உதாரணம் முக்காப்புலா' என எழுதியிருப்பார்.
82 வாரங்கள் கேள்வி பதில் பாணியில் இப்புத்தகம் சுவாரஸ்யமான தனது அனுபவத்தை பகிர்ந்திருப்பார் வாலி.
ஸ்ரீரங்கத்தில் ஓவியராய் பயணத்தை துவங்கி,ஓவியர் மாலியின் உந்துதலில் ரங்கராஜன் எனும் பெயரை வாலி என மாற்றியுள்ளார்.
அன்பில் தர்மலிங்கத்தின் வழியில் தன் நாடகம் மூலம் கலைஞர், பெரியார் சந்திப்பு,ரேடியோ அனுபவம் மூலம் சென்னைக்கு வந்து எம்.பி.சீனிவாசன் வாய்ப்பு கேட்டதும் திருப்பி அனுப்பியுள்ளார்.அழகர் மலைக்கள்ளனில் முதல் பாட்டு எழுதிய பிறகுதான் நல்லவன் வாழ்வான் படத்தில் இரண்டாவது பாடல் எழுதியுள்ளார். அதிலிருந்து வாலியின் கிராஃப் ஏறுமுகம் தான்.
கற்பகம்,படகோட்டி மற்றும் எம்.ஜி.ஆர் படங்களென அவரின் வேகம் அதிகரித்தது. வீரம்,காதல் என எழுத வரும்.. தத்துவம் எழுத வருமா என நினைப்போர்க்கு கண் போன போக்கிலே ஒரு உதாரணம்..
*நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்..என உருக வைத்திருப்பார். இப்பாடல் மற்றும் கற்பகத்தில் வரும் பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே வடம் புடிச்சான் வரியை மிகவுன் சிலாகித்தார் கண்ணதாசன்
பிறர் மயங்கும் "பாடலை" நான் எழுதினால்,என்னை மயக்கும் "பாட்டிலை" எனக்குப் பரிசாய் தருவார் கண்ணதாசன் என சொல்வார் வாலி.
#ட்ரேட் மார்க்
பூ பூக்கும் மாசம் தைமாசம், மகாநதியில் வரும் தை பொங்கலும்,
நியூ இயருக்கு வரும் ஹாப்பி நியூ இயர் பாடல்,இளையராஜா இன்றும் கச்சேரி துவங்கும் முன் பாடும் ஜனனி ஜனனி (இப்பாடல் கேட்டபின் தான் பாரதிராஜா தன் மகளுக்கு ஜனனி என பெயர் வைத்தது)
வாங்கய்யா வாத்தியாராய்யா நம்நாடு படத்தில் எழுதியது எம்ஜிஆரை வாத்தியார் என மேலும் பிரபலப்படுத்தியது, ஜெயலலிதா பாடிய அம்மா என்றால் அன்பு மற்றும்
ஆசியாவில் பிரபலமான பாடலான ராக்கம்மா கையத்தட்டு, முஸ்தபா முஸ்தபா, என அனைத்தும் வாலியின் ட்ரேட் மார்க் பாடல்கள்.
ராஜாவும் வாலியும்
பத்ரகாளி படத்தில் வரும் வாங்கோன்னா பாடல் தான் இளையராஜாவுக்கு எழுதிய முதல் பாடல். அதன் பிறகு பல பாடல்களை ராஜாவுடன் இணைந்து எழுதியுள்ளார் வாலி.இருட்டி போயிருச்சு என்பது கிராமத்துல தண்ணி கருத்திருச்சு என வினயமாக சொல்லுவாங்க என இளையராஜா சொன்னதைக் கேட்டு தான் தண்ணி கருத்திருச்சு பாடல் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் தான் எழுதியதாக வாலி குறிப்பிடுவது ஆச்சரியமாயிருந்தது.
மலைய மருத ராகத்தில் கண்மணி நீ வர பாடலும்,தர்பாரி கனடா ராகத்தில் ஆகாய வெண்ணிலாவே,
சக்கரவாக ராகத்தில் நீ பாதி நான் பாதி பாடலும் என வித்யாசமான ராகத்தில் ராஜா முயற்சித்ததாக குறிப்பிடுவார்.ரீதி கெளளை ராகத்தில் சின்னக்கண்ணன் அழைக்கிறான் பாடலை அமைத்த ராஜாவின் திறமையை வெகுவாய் பாராட்டுவார்.
#ரஹ்மானும் வாலியும்
எப்போதும் ரஹ்மானுக்கு தனக்கும் உள்ள நட்பை சிலாகித்துள்ளார். ஜென்டில் மேனில் ஆரம்பித்து மரியான் வரை அவரின் பயணம் இனிமையானது.இந்தியனில் இவர் எழுதிய கப்பலேறி போயாச்சும், அக்கடானு நாங்க பாடலும் ஒன்றுக் கொன்று மாறுபட்டவை.பாய்ஸ் பட க்ளைமேக்ஸ்ல் வரும் மாரோ மாரோ பாடலில் லக்கை பற்றியும், எல்லா புகழும் பாடலில் தன்னம்பிக்கை டானிக்கையும் கலந்து எழுதியிருப்பார்.காதலர் தினம் பாடல் ஒவ்வொன்றும் வாலியின் பெயர் சொல்லும்
இதேபோல் இசையமைப்பாளர் தேவா, சந்திரபோஸ், சி.வி.குமார், ஆர்.டி பர்மன், லட்சுமிகாந்த் பியாரிலால்,வித்யாசாகர், எஸ் ஏ ராஜ்குமார்என ஒவ்வொரு இசையமைப்பாளர் உடன் பணிபுரிந்த அனுபவத்தை மிகவும் சிலாகித்துக் கூறியுள்ளார்.
பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தாலும் எழுதுவார் லாலாக்கு டோல் டப்பிமாவும் எழுதுவார்
அவர்தான் வாலி.
#ரசித்தது.
*உன்னை நீயே உயர்வாக நினைக்காவிடில் உலகம் எப்படி உயர்வாக நினைக்கும்.
*வீணை எஸ் பாலச்சந்தர் ஒரு கதை வைத்திருந்தார்.அதை பஞ்சு அருணாசலத்துக்கு கொடுத்தாராம். அண்ணன் இறந்து விடுவான், அவன் ஆவி தம்பி உடம்பில் புகுந்து கொள்கிறது. அண்ணன் பேர் மாது இவன் மாது னு சொன்னாலே அவன் இவனுக்குள் வந்து விடுவான். இதுதான் பின்னாடி கல்யாணராமன் படமாக வந்தது.
*அவசரமாய் எழுதியதில் நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு பாடலும், சிவப்பு ரோஜாக்கள் படத்தில் வரும் நினைவோ ஒரு பறவை என்ற பாடலும் அவசரஅவசரமாக எழுதிக் கொடுத்தாராம்.
*வாலி எழுதி எம் எஸ் விஸ்வநாதன் பாடிய அல்லா அல்லா பாடல் இசையமைப்பாளரை பாட வைத்தது குறிப்பிடத்தக்கது.
*மேடையை போலே வாழ்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஒடையை போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
*கண்ணதாசனும் நானும் எலியும் பூனையும் அல்ல
எதுகையும் மோனையும்
*கைக்கு கை மாறும் பணமே
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே
நீ தேடும்போது வருவதுண்டோ
விட்டுப் போகும்போது சொல்வதுண்டோ
*நில்லடி என்றது நாணம்!
விட்டுச் செல்லடி என்றது ஆசை
*உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை
தனக்குத் தானே துணையென நினைத்தால்
உலகத்தில் ஏது தனிமை"
அவரின் வார்த்தைக்கென்று ஒரு மதிப்பு உண்டு.
உழை,உழை,உழை!
உழைப்பைக் கொண்டு
பிழை,பிழை,பிழை!
உழைக்காமல் பிழைப்பது
பிழை,பிழை,பிழை!
தொடர்ந்து பகிர்வோம்
தோழமையுடன் மணிகண்டபிரபு