கற்றதும் பெற்றதும்-86
*மணி
ஒளகாரத்தைப் பிரித்து இரண்டெழுத்தாக்கி 'ஒ' என்றும்,'ள' என்றும் கூற முடியும்.ஆனால் ஊகாரத்தை அப்படிக்கூற முடியாது. கொள்கைப் பிடிப்புள்ளவர்களையும் அப்படித்தான் அவர்கள் சார்ந்த கட்சியிலிருந்து பிரித்துப் பார்க்க முடிகிறது.
-க.பொ.இளம்வழுதி.
#இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு
கம்யூனிஸ்ட் பற்றி பேசினால் பலருக்கு வேப்பங்காய் போல் பேசினால் கசக்கும்.ஆனால் அவர்களின் எளிமையினையும் செயல்பாட்டினையும் பேசினால் அப்போதைக்கு வாதத்தில் உயர்த்தி பேசுவார்கள்.பின் மீண்டும் அவர்களுக்கு வேலை இல்லை, கொடிபிடிப்பார்கள் சண்டையிடுவார்கள் என்பர். வாதத்திலோ இணையத்திலோ அவர்களை பேச்சில் மடக்கியும் மட்டம்தட்டியும் பேசினால் ஒரு அறிவுஜீவிகளை வென்றதாக ஒரு புளகாங்கிதம் உள்ளூர ஏற்படுவதாக எண்ணுவர்.இன்றும் ஒரு அடிப்படை தேவைக்காக முதலில் குரல் கொடுத்து போராட்டம் நடத்துவது இடதுசாரி தோழர்களே.இன்றும் மகத்தான தலைவர்களாக நல்லகண்ணு,
சங்கரய்யா போன்றோர் தமிழகத்தில் உள்ளனர்.
#இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1920 அக் 17ம் நாளில்தான் முந்தைய சோவியத் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை ஏழு தோழர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.கட்சியின் செயலாளராக முகமது சஃபீக் தேர்வு செய்யப்பட்டார்.
பின் இந்தியாவில் 1920லிருந்து ஆரம்பமாகிறது.1923ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் இரு இடங்களில் மேதினத்தை கொண்டாடினர்.
26-12 -1925ம் ஆண்டு கான்பூரில் ம.சிங்காரவேலர் தலைமையில் கூடியது.1934இல், மீரட் சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்தவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய கட்சியாக செயல்படத்தொடங்கியது
தமிழகத்தில் 1936ல் கிளை துவங்கியது.பி.சுந்தரய்யா மற்றும் எஸ்.வி காட்டே முயற்சியில் துவங்கப்பட்டது.
#முதல் பிரகடனம் செய்தது இடதுசாரிகளே
*1921ல் ஆமதபாத் மாநாட்டில் கம்யூனிஸ்ட்களான ஸ்ரீசரத் மொகானி முழுவிடுதலை தீர்மானம் முன்மொழிய சுவாமி குமரானந்தா வழிமொழிந்தார்
*1922ல் கயா காங்கிரஸ் மாநாட்டில் சிங்காரவேலர், டாங்கே ஆகியோர் முழுவிடுதலை முன்மொழிந்தனர்
*1925ல் கெளகாத்தி மாநாட்டிலும் வீரேந்திர சட்டோபாத்தியாயா தீர்மானம் கொண்டுவந்ததை நிராகரித்து 1929 லாகூரில் காங் கொண்டு வந்தது ஏற்றுக்கொள்ளப்பட்டது.இதுவரை காங் தான் முதலில் கொண்டு வந்ததாக வரலாறு எழுதிக்கொண்டது.
#தடை
பிரிட்டனுக்கு கம்யூனிஸ்ட் என்றாலே ஆகாது.ஆதலால் 1934,,&1937ல் தடைவிதித்தது. பின் 1942ல் இரண்டாம் உலகப்போரின் காரணமாக தடையை நீக்கியது. அதற்கு பிறகு விடுதலை அடைந்தபின் காங்கிரஸ் கட்சி 1948ல் தடை விதித்தது.குறிப்பாக இவர்களை ஒடுக்க
1920-22 பெஷாவர் சதி வழக்கு
1923-லாகூர் சதி வழக்கு
1924-கான்பூர் சதி வழக்கு
1925-மீரட் சதி வழக்கு
இவ்வழக்குகளில் பலரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைத்தது குறிப்பிடத்தக்கது.
#தத்துவார்த்த ரீதியில் பிரிந்த கம்யூனிஸ்ட் கட்சிகள்
1964ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி வலது,இடது என பிரிந்தது.காரணம் சீன ஆக்கிரமிப்பு.சீனாவுடனான எல்லைப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை தான் தீர்வு என்றார் ஈ.எம்.எஸ்.நம்பூதரிபாட்.ஆனால் சீனாவுக்கு எதிரான நேருவின் ராணுவ நடவடிக்கை நிலைப்பாட்டை டாங்கே போன்றோர் ஆதரித்தனர்.ஈ.எம் எஸ் இவர்களை காங்கிரசின் வால் என விமர்சிக்க, பதிலுக்கு அவர்கள் சீன ஏஜெண்ட் என்றதால் கட்சி உடைந்து ஈ.எம் எஸ் அணி மார்க்சிஸ்ட் ஆகவும்,டாங்கே அணி இந்திய கம்யூனிஸ்டாகவும் இன்றுவரை தொடர்கிறது. இந்திராவின் எமர்ஜென்சியை இந்தியாவில் ஆதரித்த இரண்டே கட்சிகள் எம்.ஜி.ஆரின் அதிமுகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுமே என்பது குறிப்பிடத்தக்கது.அப்போரில் இந்தியா தோற்றதும் ஒரு வரலாறு.
#மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்த மார்க்சிஸ்ட்கள்
முதல் பொதுத்தேர்தலில் கேரளாவில் ஈ.எம்.எஸ் தலைமையில் இடதுசாரிகள் ஆட்சியை பிடித்தனர்.பின் மேற்குவங்கம், திரிபுராவில் ஆட்சியை பிடித்தனர்
#மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் (எம்.எல்)
1967-ம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தைச் சேர்ந்த நக்சல்பாரி பகுதியில் எழுந்த உழவர் எழுச்சியினால் உந்தப்பட்டு ஆந்திரா, மேற்கு வங்கம், பீகார் போன்ற மாநிலங்களில் புரட்சியில் ஈடுபாடு கொண்டு 1969-ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி மா-லெ உருவாக்கப்பட்டது.சாரு மஜூம்தார் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தமிழகத்திலிருந்து, எல் அப்புவும், ஏ எம் கோதண்டராமனும் மத்திய கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
கட்சி சிறிது காலத்துக்குள்ளாகவே கடும் அடக்குமுறைகளையும், மிகப்பலத்த இழப்புகளையும் எதிர் கொண்டு நாடு முழுவதும் பின்னடைவைச் சந்தித்தது.
#கற்றதும் பெற்றதும்
தேர்தல் அரசியல் கடந்து இடதுசாரிகளிடம் பிடித்த விஷயம் எளிதில் அணுகலாம். விவாதம் செய்யலாம்.மக்களோடு மக்களாகத் தான் இருப்பார்கள்.நிரம்ப படிப்பார்கள்.படிக்காமல் அக்கட்சியில் நீண்டநாள் நீடிக்க இயலாது.அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை குரல் எழுப்புவோர் அவர்களேயாவர்.இன்றும் ஜனசக்தியிலும்,தீக்கதிரிலும் வரும் கட்டுரைகள் சிந்திக்க வைக்கும். தன் கட்சியினருக்கு அனைத்து அறிவார்ந்த விஷயங்களையும் கற்பிக்க மெனக்கெடும்.
வலது,அதி தீவிர வலது என்று சென்றுகொண்டிருக்கும் காலகட்டத்தில் இடதுசாரிகளை வளர்க்க வேண்டிய கடமை நமக்குண்டு.ஆனால் அவர்கள் சுத்தமாக இல்லை எனக்கூறி நாம் அழுக்கான கையை கொண்டிருக்கிறோம்.
கம்யூனிஸ்ட்காரர்களை புறக்கணிப்பதாய் கூறி கம்யூனிசத்தை புறந்தள்ளுகிறோம். கம்யூனிசத்துக்கு அழிவில்லை அது இன்னும் பல்லாண்டு வாழும்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு