Thursday 23 March 2017

படித்தது

நன்றி:மினிமீன்ஸ்

மெய்ப்பொருள்
எதையேனும் சார்ந்திரு
கவித்துவம்
தத்துவம், காதல்
இங்கிதம், சங்கீதமிப்படி.
எதன் மீதேனும் சாய்ந்திரு
இல்லையேல் உலகம்
காணாமல் போய் விடும்.
-வண்ணநிலவன்

பிரிவுகள்
நாளை இந்தக் குளத்தில்
நீர் வந்து விடும்.
இதன் ஊடே
ஊர்ந்து நடந்து
ஓடிச் செல்லும்
வண்டித் தடங்களை
இனி காண முடியாது.
இன்று புல்லைத்
தின்று கொண்டிருக்கும்
ஆடு, நாளை
அந்த இடத்தை
வெறுமையுடன்
சந்திக்கும்.
மேலே பறக்கும்
கழுகின் நிழல்
கீழே
கட்டாந்தரையில்
பறப்பதை
நாளை பார்க்க முடியாது.
இந்தக் குளத்தில் நாளை
நீர் வந்து விடும்.
-கலாப்ரியா

#பெருமழை
துரோகமும்
அவநம்பிக்கைகளின் கசப்புகளும்
வழிந்துகொண்டிருக்கும்
என் வீட்டின் மீது தான்
பெய்துபோனது
காதல் கடவுளின்
நேற்றையப்
பெருமழை.
-வா. மணிகண்டன்

#சற்றைக்கு முன்
சற்றைக்கு முன்
ஜன்னல் சட்டமிட்ட வானில்
பறந்துகொண்டிருந்த
பறவை
எங்கே?
அது
சற்றைக்கு முன்
பறந்து கொண்டிருக்கிறது.
-ஆனந்த்

#அதனால்தான்
நீ என்னருகில்
இருப்பதைவிட
இன்னும்
அருகில் நான்
இருக்கிறேன். இது
எவ்வாறு சாத்தியமென
நீ கேட்கிறாய்
அதனால்தான்.
-ஆனந்த்

#விபரீதம்
கிறுக்குப் பிடித்த பெண்ணைக்
கர்ப்பவதியாக்க
எவன் மனம் துணிந்தது இப்படி!
அதற்கு முன் இவளைப்
புஷ்பவதியாக்க
இறை மனம் துணிந்ததே எப்படி?
-ராஜ சுந்தரராஜன்

#எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் பிளேட்டோ சொன்னதுதான் சரி. நமக்குள் இருப்பதுதான் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது; அதை மீறி ஒன்றுமில்லை.
-நகுலன்

#குட்டி இளவரசியின் அறிதல்கள்
காலம் என்கிறீர்கள்
அகாலம் என்கிறீர்கள்
காலத்தை வெல்வதென்றும்
காலத்தைக் கடப்பதென்றும்
பயங்கரக் கதைகள் சொல்கிறீர்கள்
குட்டி இளவரசி சஹானா
'நாளைக்கு மழை பெய்தது'
என்கிறாள் அமைதியாக.
-மனுஷ்ய புத்திரன்

#இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க
பேருந்துக்கு வெளியே
பார்ப்பதாய்
பாசாங்கு செய்யும் நீ
என்னிடம்
எதை எதிர்பார்க்கிறாய்
காதலையா?
-சுகிர்தராணி

#விழித்திருக்கும் வேளையின் மொழி
அறிவதில்லை கனவின் வாக்கியங்களை
-முகுந்த் நாகராஜன்

#கார்ட்டூன் சேனலை
கண் விரித்துப் பார்க்க
பூனைக்குப் பயந்து ஓடிய
எலியைத் தேடுகிறாள்
பிடிபடாமல்
ஓடும்போது கை தட்டிச் சிரிக்கிறாள்
பாவம் பெரியவர்கள்
அழுகிற தொடர்களைப் பார்க்க
ஆவலாய் இருக்கிறார்கள்.
-செஞ்சி தமிழினியன்

படித்தது-மினிமீன்ஸ்

கவிதை என்பது ஒரு நுட்பமான, ஆழமான ஒரு ஆளுமையைப் பாதிக்கிற ஒரு சிறு பொறி முதல் பெரும் காட்டுத் தீ வரையான ஒரு பெரிய விஷயம். நம்ம பாரதி, பாப்லோ நெருதா போல ஒரு தேசியத்தையே பாதிக்கிற காட்டுத் தீ போன்ற ஒரு விஷயம்தான் கவிதை.
-சமயவேல்

ஆத்மாநாம்

நன்றி மினிமீன்ஸ்

ஐயோ
சொன்னால் மறுக்கிறார்கள்
எழுதினால் நிராகிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்
-ஆத்மாநாம்

Wednesday 22 March 2017

ஒட்டக கதை

அந்த ஒட்டகக்குட்டி தன் தாயிடம் கேட்டது.
"அம்மா, எனக்கு ஒரு சந்தேகம். நமக்கு ஏன் திமில்கள் பெரிதாக இருக்கின்றன?”
தாய் ஒட்டகம் சொன்னது,
"மகனே, அது நாம் பாலைவனத்தில் நெடுந்தொலைவு நடக்க நீர் போறாமல் போகக்கூடாது என்பதற்காக, நீர் சேகரிக்கும் பையாக செயல்படுகிறது.”
ஒட்டகக்குட்டி மேலும் கேட்டது,
"அம்மா, நமக்கு ஏன் கால்கள் இவ்வளவு நீண்டவையாகவும், மொழுக்கென்றும் உள்ளன?”
தாய் சொன்னது,
"மகனே, நாம் பாலைவனத்தில் நீண்ட தூரம் நடக்கவேண்டுமல்லவா? மணலில் நடக்க ஏதுவாக நமது கால்கள் அப்படி அமைந்துள்ளன”
ஒட்டகக்குட்டி மீண்டும்,
“அம்மா, நமது கண் பீலிகள் ஏன் இவ்வளவு பெரிதாக இருக்கின்றன? சில நேரம் எனது பார்வையை மறைக்கிறது” தாய் சொன்னது,
“நாம் பாலைவனத்தில் நடக்கும்போது, வெப்பக்காற்றிலும், மணற்புழுதியிலும் நமது விழிகளை பாதுகாக்க இவ்வாறு அமைந்துள்ளது."
ஒட்டகக்குட்டி மீண்டும் கேட்டது,
“அப்படி என்றால், நாம் பாலைவனத்தில் இல்லாமல், இங்கே மிருக காட்சி சாலையில் என்ன செய்கிறோம்....??!!

யுவன் சந்திரசேகர்

"ஒரு சிட்டுக்குருவியைக் கொல்வது
வெகு சுலபம்
முதலில் உள்ளங்கை நிரம்பிய
தானிய மணிகளால் அதைக்
கவர்ந்திழுக்க வேண்டும்.
ஆகாயத்தை விடவும்
கூண்டு பாதுகாப்பானது என்று
நம்பச் செய்ய வேண்டும்.
சுவாதீனம் படிந்த பிறகு,
எதிர்பாராத தருணமொன்றில்
அதன் சிறகுகளைத் தரித்துக்
குப்பையில் வீச வேண்டும்,தூவிகளில் ஒட்டிய
ஆகாயக் கனவுகள் மட்கும் வண்ணம்.
பிறகு
அதன் கால்களை ஒடித்துவிட வேண்டும்
உயிர்வாழும் வேட்கையால்
நடந்தேனும் இரைதேட விடாதபடி.
அடுத்ததாக,
அதன் அலகை முறித்து விடுவது நல்லது
தானாய் வந்து
சிக்கும் இரையைப் பிடிப்பதையும்
தடுத்து விடலாம்.
இப்போது சிட்டுக்குருவி
ஒரு கூழாங்கல் ஆகிவிட்டது
சிறு வித்தியாசத்துடன்.
கல்போலின்றி, பறந்த நாட்களை
நினைவு கூரும் குருவி.
பூர்விக நியாபகம் போல
உயிர் துடிக்கும்
அதன் கண்களில்.
இனி நீங்கள் செய்ய வேண்டியது
ஒன்று தான். குருவிமிச்சத்தைத்
தரையில் இட்டுக் காலால் தேய்த்துவிட வேண்டும்.
சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்மாவையோ
முறிப்பது போல,
மிக மிகச் சுலபம்"

- யுவன் சந்திரசேகர்

கார்ல்மார்க்ஸ்

கார்ல் மார்க்ஸ் - வரலாற்று நாயகர்!
============
"உலகத்தின் உடமைகள் அனைத்தும் மக்கள் அனைவருக்கும் பொதுவானவை அவற்றை காலப்போக்கில் சில வசதி படைத்த மனிதர்கள் தங்கள் தனியுடமையாக்கிக் கொண்டனர். தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டி முதலாளிகள் வளர்கின்றனர்.

அதனால்தான் இருப்பவர்கள் சிலரும், இல்லாதவர்கள் பலருமாக சமுதாயம் மாறி வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். அதற்கு முதலாளிகள் இணங்க மாட்டார்கள். ஆகவே தொழிலாளிகள் ஒன்று திரண்டு போராடி புரட்சி செய்து தங்கள் உரிமைகளைப் பெற வேண்டும்".
இதுதான் பொதுவுடமைக் கொள்கை. இந்த சித்தாந்தத்திற்கு செயல் வடிவம் கொடுத்த ஒரு மாபெரும் புரட்சிக்காரரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

அவர்தான் 'ஜெர்மானிய தாடிக்காரன்' என்று அறிஞர்களால் மரியாதையுடனும், நேசத்துடனும் அழைக்கப்படும் கார்ல் மார்க்ஸ். 1818-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் நாள் ஜெர்மனியின் புருசியா என்ற பகுதியில் உள்ள ட்ரையர் எனும் நகரில் பிறந்தார் Karl Heinrich Marx.
அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். குடும்பம் வறுமையில் வாடினாலும், மார்க்ஸை சட்டம் படிக்க வைக்க வேண்டும் அதன் மூலம் வறுமையைப் போக்க வேண்டும் என்று தந்தை விரும்பினார். மார்க்ஸின் பெற்றோர் சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தாலும், மார்க்ஸுக்கு இனம், மதம் ஆகியவற்றில் பற்று இல்லை.
மதத்தலைவர்களின் போக்கினை வெறுத்த அவர் மதத்தால் மக்களுக்கு நன்மை ஏதும் கிடைக்காது என்று நம்பினார். இளம் வயதிலேயே அவரது சிந்தனைகள் புரட்சிகரமாக இருந்தன. தன் தந்தையின் எண்ணப்படியே தனது பதினேழாவது வயதில் பான் (University of Bonn) பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் சேர்ந்தார் மார்க்ஸ். ஆனால் வரலாற்றிலும், தத்துவத்திலும் அவரது கவனம் திரும்பியது. நிறைய தத்துவ நூல்களை வாசிக்கத் தொடங்கினார்.

அவர் மனதில் பொதுவுடமைத் தத்துவம் வேர் விடத்தொடங்கியது. தனது பொதுவுடமைக் கருத்துகளை துண்டு பிரசுரமாக வெளியிட்டு பல்கலைக்கழக மாணவர்களிடம் பரப்பினார். பல்கலைக்கழக நிர்வாகம் அவரை கண்டித்தும் அவர் தொடர்ந்ததால் வேறு வழியின்றி அவரை பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றியது.
சட்டத் துறையை ஏற்கனவே விரும்பாத மார்க்ஸ் பின்னர் பெர்லின் ( University of Berlin) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம் பயின்றார். 1841-ஆம் ஆண்டில் மார்க்ஸுக்கு தத்துவத்தில் முனைவர் பட்டம் கிடைத்தது. அதன் பிறகு அவரது சிந்தனைகள் மேலும் விரிவடைந்தன. பல்கலைக்கழக நாட்களில் ஜென்னி என்ற பெண்ணை விரும்பினார் மார்க்ஸ். செல்வந்தர் வீட்டுப் பெண்ணான ஜென்னியும் அவரை விரும்பினார். ஆனால் இருவருக்கும் இடையில் இருந்த பொருளாதார வேற்றுமைகளை காரணம் காட்டி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் ஜென்னியின் தந்தை. காதலின் பலம் அவர்களை ஒன்று சேர்த்து வைத்தது. காதலுக்காக செல்வ சுகத்தை தூக்கி எறிந்த ஜென்னி கடைசிவரை கார்ல் மார்க்ஸுக்கு ஆனிவேராக இருந்தார்.
முனைவர் பட்டம் பெற்ற பிறகு ஜெர்மன் பத்திரிகை ஒன்றின் ஆசிரியராக பொறுப்பேற்றார் மார்க்ஸ். ஆனால் அவரது புரட்சிகரமான எழுத்துக்கு அரசாங்கம் தடை விதித்தது. எனவே பாரிஸுக்கு சென்றார் அங்கு அரசியல் கட்டுரைகளை பல பத்திரிகைகளில் எழுதினார் அவை ரஷ்ய அரசாங்கத்தை தாக்குவதாக இருந்ததால் ரஷ்யா கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரை நாடு கடத்தியது பாரிஸ். இந்த சமயத்தில் மார்க்ஸுக்கு Friedrich Engels என்பவரின் நட்பு கிடைத்தது.

ஒரு முதலாளியின் மகனாக இருந்தும், தொழிலாளர்கள் நலனைப் பற்றி அதிகம் கவலைப்பட்டவர் ஏங்கல்ஸ். எனவே இருவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. தொழிலாளர் நலனை மேம்படுத்த மார்க்ஸும், ஏங்கல்ஸும் திட்டம் தீட்டினர்.
தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை எப்படி போராடி பெறுவது என்பதை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொதுவுடமை அறிக்கை என்ற பெயரில் இருவரும் வெளியிட்டனர். அதில் முதலாளித்துவ சமுதாய அமைப்பினை வன்முறை புரட்சிகளால் உடைத்தெறியுமாறு தொழிலாளிகளுக்கு அறிவுறுத்தினார் மார்க்ஸ். 1847-ஆம் ஆண்டு லண்டனில் தொழிலாளர்கள் மாநாடு ஒன்று நடந்தது. அந்த மாநாட்டில்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (The Communist Manifesto) என்ற கம்யூனிச சித்தாந்தத்தை அறிமுகப்படுத்தி 'உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' (Workers of All Land Unite) என்ற முழக்கத்தை மார்க்ஸும், ஏங்கல்ஸும் முன்வைத்தனர். மார்க்ஸ் பல நாடுகளில் சுற்றித் திரிந்து தன் கொள்கைகளைப் பரப்பினார். கடைசியில் 1849-ஆம் ஆண்டு ஏங்கல்ஸின் உதவியுடன் அவர் லண்டனில் நிரந்தமராக குடியேறினார்.
பெரும்பாலான நேரங்களை அவர் பிரிட்டிஸ் அரும்பொருளகத்தில் நூல்களை படிப்பதில் செலவிட்டார். அப்போது அவர் அதிகம் சிந்தித்து எழுதிய அவரது முதல் நூல் கேப்பிடல் (Das Capital) அதாவது மூலதனம்.
"சமுதாயத்தின் இறந்தகால வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறு, முதலாளிகளின் பொருளாதார பலம் பெருக பெருக தொழிலாளிகள் நசுக்கப்படுகிறார்கள். பொருத்தது போதும் என்று பொங்கியெழுந்து தொழிலாளிகள் ஒன்றுபட்டு முதலாளித்துவ போக்கை மாற்ற வேண்டும். தொழிலாளிகள் தங்கள் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள தொழிற்சங்க அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்".
இதுதான் மூலதனம் என்ற அந்த நூலில் கார்ல் மார்க்ஸ் வாதிட்ட அடிப்படைக் கருத்து. இன்று உலகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் இருப்பதற்கு காரணம் கார்ல் மார்க்ஸ்தான். மார்க்ஸின் பொதுவுடமை கருத்துகள் உலகம் முழுவதும் பரவி வலுப்பெறத் தொடங்கின. மார்க்ஸ் முன்னுரைத்தது போலவே புரட்சிகள் வெடிக்கத் தொடங்கின. 1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நவம்பர் புரட்சி நடந்து லெனின் தலமையில் பொதுவுடமை ஆட்சி (கம்யூனிஸ்ட் ஆட்சி) மலர்ந்தது. அதன் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக ச்செக்கோஸ்லோவாகியா, யூகோஸ்லாவியா, கிழக்க்கு ஜெர்மனி, ஹங்கேரி, போலந்து, பல்கேரியா, ருமேனியா, அல்பீரியா, சீனா, வடகொரியா, வியட்நாம், கியூபா போன்ற நாடுகளுக்கு கம்யூனிசம் பரவியது.
உலகம் உய்வு பெற வேண்டும் என்று உழைத்த மார்க்ஸின் குடும்பம் வறுமையில் உழன்றது. பணக்கார குடும்பத்திலிருந்து வந்தும் தனது கணவரின் கொள்கைக்காக அனைத்தையும் துறந்த ஜென்னி, தாங்கள் அனுபவித்த வேதனைகளையும், தனது மகளின் மரணத்தையும் டைரியில் குறித்திருக்கிறார் இவ்வாறு...
"எங்கள் குட்டி தேவதை பிரெஞ்சஸ்கா மார்புச் சளியால் மூன்று நாட்கள் மூச்சு திணறி இறந்தாள். எங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அவள் பிறந்தபோது தொட்டில் வாங்ககூட எங்களிடம் காசு இல்லை, இறந்தபோது சவப்பெட்டி வாங்ககூட காசு இல்லை".
மார்க்ஸ் என்ற மாமனிதனுக்கு தூணாக நின்ற ஜென்னிக்கு புற்றுநோய் ஏற்பட்டது. அவருக்கு மருந்து வாங்ககூட முடியாமல் தவித்தார் உலகம் உய்வு பெற வேண்டும் என்று கனவு கண்ட மார்க்ஸ். ஜென்னியையும் மரணம் கொண்டு போக நிலைகுலைந்து போன மார்க்ஸ் இரண்டே ஆண்டுகளில் 1883-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் தனது 64-ஆவது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
மார்க்ஸின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டு பேசிய, அவரது உயிர் நண்பர் பிரெட்ரிக் ஏங்கல்ஸ், மார்ச் 14-ஆம் தேதி மாலை மூன்று மணியாவதற்கு 15 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது, நம்மிடையே வாழ்ந்து கொண்டிருந்த மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்தி விட்டார். இரண்டு நிமிடங்கள் மட்டுமே தனிமையில் விடப் பட்டிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அவர் தனது சாய்வு நாற்காலியில் மீளாத் துயிலில் ஆழ்ந்து விட்டதைக் கண்டோம்." என்றார்.
பாட்டாளிகளை அவர் அன்புடன் 'காம்ரேட்ஸ்' அதாவது 'தோழர்களே' என்றுதான் அழைத்தார். இன்றும்கூட தொழிற்சங்கங்களில் அந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. பொதுவுடமைக் கொள்கையில் அடிப்படையில் எந்த பிரச்சினையும் கிடையாது. கம்யூனிசத்தின் இன்றைய அழிவிற்கு அது நடைமுறைப் படுத்தப்பட்ட விதம்தான் காரணமே தவிர, அதன் அடிப்படை நோக்கங்கள் அல்ல. அந்த நோக்கங்கள் உயரியவை. மார்க்ஸ் நினைத்தது போலவே அது செயல்படுத்தப் பட்டிருந்தால் அதைவிட ஒரு நியாயமான பொருளியல் சித்தாந்தம் இருக்குமா என்பது சந்தேகமே.
உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, தங்க இடமின்றி வாழ நேர்ந்த போதும் 'சமதர்மகொள்கை' என்ற தன் இலக்கிலிருந்து மாறவே இல்லை மார்க்ஸ் என்ற அந்த மாமனிதன். அவருக்கு வானம் வசப்பட்ட அளவிற்கு வாழ்க்கை வசப்படவில்லைதான். ஆனால் இன்றைய உலகில் ஒரு தொழிலாளியின் நலன் காக்கப்படும் ஒவ்வொரு கணமும் மார்க்ஸுக்குதான் நன்றி சொல்கிறது வரலாறு. மார்க்ஸின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம் இதுதான்...துன்பமும், துயரமும் போட்டிப் போட்டுக்கொண்டு நம்மை தாக்கினாலும், நாம் வகுத்துக் கொண்ட இலக்கை நோக்கி நம் பயணம் விடாமுயற்சியுடன் தொய்வின்றி தொடர வேண்டும். அவ்வாறு தொடர்ந்தால் ஒருவேளை வாழ்க்கை வசப்படாவிட்டாலும், நிச்சயம் நாம் விரும்பும் வானம் வசப்படும்.
"உலகத் தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள்!
நீங்கள் இழப்பதற்கு எதுவுமே இல்லை-
அடிமைத்தனத்தை தவிர! ஆனால்
வெல்வதற்கு இந்த உலகமே இருக்கிறது!"
"நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாகிறது!"
-கார்ல் மார்க்ஸ்
(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

மகளதிகாரம்

🙋மகளதிகாரம்*

பிறந்ததும்
ஒரு வெள்ளைத் துணி
ஏந்திக் கொடுத்தார்கள்
என் இளஞ்சிவப்புத் தேவதையை…
அதன் மூடிய இமைகளுக்குள்
இரு விழிகள்
அசைவது போலத்தான் இருந்தது
அதுவரையில் என் இதயம்…!

🙋

மகள் கோலம் வரைகையில்
அது முடியும் மட்டும்
நம்பிக்கையோடு
காத்திருக்கின்றன
சில தெய்வங்கள்...
கோலத்திலேயே வாழ்ந்துவிட!

👩

அள்ளிக் கொடுத்தாலும்
ஆறாத மனம்
மகள் கிள்ளிக் கொடுத்ததில்
அடங்கிவிடுகிறது..

👩

மகள் சாதம் பறிமாறியபோது
தட்டில் கொஞ்சம் சோறும்
நிரம்பி வழியும் சந்தோசமும்
இருந்தது.

👩

ஒவ்வொரு இரவும்
தூங்கும் மகளின்
முகம் பார்த்துக் கொண்டிருப்பேன்
அது தவிர
தியானம் என்று
தனியாக எதுவும்
செய்வதில்லை நான்…!

👩‍🔧

பொட்டு வைத்துப் போனாள்
பின்
அதற்கு நேராக
என் புருவங்களை
நகர்த்திக் கொண்டேன்…

👩‍🔧

மகள் பிறந்ததும்
முதலில்,
சுண்டு விரல்தான்
பிடித்துப் பார்த்தேன்.
அதன் நினைவாய்,
எங்கும், என்
சுண்டுவிரல் பிடித்தே வருகிறாள்

👣🙋

மகளின்
பாதங்களால்
நிறைகிறது
என் வீடு

👩‍🔧

மகள் முத்தமிட்ட எச்சில்
ஈர நினைவாகி விடுகிறது.

🙋

குவளை நீர் மொத்தமும்
சிந்திவிட்டாலும்
மகள் கொண்டு வந்ததில்
என் தாகம் தீர்ந்தது…

🙋

நெஞ்சில் தான் படுத்திருப்பாள்
அவள் இல்லாத நேரத்தில்
பதிலுக்கு தலையணை
கொடுத்துப் போனாள்…
மூச்சுத் திணறியது.

👩

நான் அழும்போது
மகள் தன் பிஞ்சுக் கைகளால்
என் கண்ணீர் குளத்தின்
மொத்தத் தண்ணீரையும்
வாரி இறைத்து
வற்ற வைத்துவிடுகிறாள்…

👩

கோபித்துக்கொள்ளும் மகளிடம்
மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பேன்…
தெய்வங்கள் போலில்லை
உடனே மன்னித்துவிடுகிறாள் மகள்…!

🙋

மகள் வரைந்ததும்
இந்த பறவைகள் பறந்து விட்டால்
எப்போது முடிப்பது ஓவியத்தை!?

👩

மகள் கோபத்தில்
இருக்கும் போது
மிக அருகில்
அமர்ந்து விடுவேன்
சமாதானத்திற்கு
தலை நிமிரும் போது
ஆளில்லை என்றால்
பாவம் வாடிவிடும்…

🙋

நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்த மகள்
நடுவிலேயே தூங்கிவிட்டாள்.
நான் எவ்வளவு சொல்லியும்
இரவு முழுவதும் காத்திருந்தன
நட்சத்திரங்கள்
அவள் எப்படியும் எழுந்துவிடுவாள் என.

🌹

பூந்தொட்டித் தண்ணீரில்
நிலா தவறி விழுந்துவிட்டதென
காப்பாற்றச் சொல்லி நிற்கிறாள் மகள்
இப்போது அவளுள் தவறி விழுந்த என்னை 🌕💫
அந்த நிலா தான் காப்பாற்றியாக வேண்டும்…

👨‍👩‍👦‍👦அப்பா
அம்மா
அண்ணா
தனக்கு
என ,
நட்சத்திரங்களுக்குப்
பெயர் வைத்துக் கொண்டிருந்த மகளுக்கு
நான்கு நட்சத்திரங்களே போதுமானதாயிருக்கிறது.

*மகளை பெற்ற என் நண்பர்களுக்கு சமர்ப்பணம்*🔱🙏🏻

விமர்சனம்

கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீது விமர்சனமே இல்லையா? இருக்கிறது.
தேசிய இனப் பிரச்சினையில் ஈழத்திற்கு ஓர் அளவுகோலும், பாலஸ்தீனத்திற்கு ஓர் அளவுகோலும் வைத்திருப்பது...
இந்திய சமூகத்தில் சாதியும் ஒரு முக்கிய பிரச்சினை என்பதை சுயபரிசீலனை செய்ய 70 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது...
இன்னும் 'பார்ப்பனர்கள், பார்ப்பனியம்' என்ற தமிழ் வார்த்தைகளுக்குப் பதிலாக, பார்ப்பனர்கள் நம் மீது திணிக்கும் 'பிராமணர்கள், பிராமணியம்' என்ற வார்த்தைகளையே பயன்படுத்துவது...
தீண்டாமை ஒழிப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, சாதி ஒழிப்பிற்கும், இந்து மத ஒழிப்பிற்கும் கொடுக்காதது...
கம்யூனிசத்தையும், கம்யூனிசத் தலைவர்களையும் கொச்சைப்படுத்தி
யவர்களின் கருத்து சுதந்திரத்திற்காகப் போராடுவது; கருஞ்சட்டைத் தோழர்களின் கருத்து சுதந்திரம் நசுக்கப்படும்போது அமைதி காப்பது...
கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியை காரில் அழைத்துவந்த, இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சேவோடு நட்பு பாராட்டிய இந்து என்.ராமை தனது மேடைகளில் ஏற்றுவது; காலமெல்லாம் தமிழ் மக்களுக்காகப் போராடும் கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கருஞ்சட்டைத் தோழர்களைத் தள்ளி வைப்பது...
பெரியாரின் நாத்திகப் பிரச்சாரத்தை 'வறட்டு நாத்திகம்' என்று விமர்சித்துவிட்டு, இதுவரை 'அறிவியல்பூர்வ நாத்திகத்தை' முன்னெடுக்காதது...
தொழிற்சங்க அணிகளை அரசியல்மயப்படுத
்தாமல் இருப்பது...
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நாடாளுமன்றத் தேர்தல் பாதையிலேயே முழுமையாகக் கரைந்துபோய், கட்சித் தோழர்களின் உழைப்பை வீணடிப்பது.
இந்த விமர்சனங்களில் ஒன்றிரண்டைத் தவிர மீதி அனைத்தையும் அல்லது இன்னும் கூடுதல் விமர்சனங்களையும் திமுக, அதிமுக மீது வைக்க முடியும்.
இந்த விமர்சனங்கள் இருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் ஊரார் சொத்தைக் கொள்ளையடித்து தனது பாக்கெட்டை நிரப்பிக் கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணமும், தங்களின் சக்திக்கும், புரிதலுக்கும் உட்பட்டு தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுவார்கள் என்ற நம்பிக்கையும் என்னைப் போன்ற பலருக்கு இருக்கிறது. ஆனால், இந்த நம்பிக்கை ஒருபோதும் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் மீது வராது.

புத்தக அறிமுகம்

நன்றி: புத்தக அறிமுகம்

வாழ்வை மாற்றிய புத்தகம் - உழைப்பே அழகு!
‘`என் வாழ்க்கையில் புத்தகங்களுக்கு மிகப்பெரிய இடம் உண்டு. வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புத்தகத்தின் பங்கு இருந்திருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு புத்தகம் என்றால், அது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’. உலகப்புகழ் பெற்ற நூல். வரலாற்று ஆசிரியரான ராகுல் சாங்கிரித்யாயன் (ராகுல்ஜி) எழுதியது. சமுதாய வரலாறு பற்றி எனக்குச் சொல்லிக்கொடுத்த முதல் நூலாகவே இதைப் பார்க்கிறேன்.
திராவிட இயக்கக் குடும்பத்தில் வந்தவள் என்பதால், எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. பெரியாரின் கருத்துகள் எனக்கு வாழ்க்கையாகவே உட்புகுந்தவை. 16 வயதில் இப்படியொரு நூலை மிகச்சரியாக புரிந்துகொள்வதற்கான களம் அமைத்துக்கொடுத்ததும் அந்த பெரியார் சிந்தனைதான்.
குடும்ப அமைப்பிலும் மத அமைப்பிலும்தான் குழந்தைகள் வளர்கிறார்கள். பள்ளிக்கூடம் உள்பட அப்படி ஓர் அமைப்புதான் குழந்தையின் சிந்தனையைச் செதுக்குகிறது. இப்படித்தான், நம்மை அறியாமலேயே சில விஷயங்களை உள்வாங்கிக்கொள்கிறோம். குடும்பத்தில் இருந்து தொடங்கியே சமுதாயத்தைப் பார்க்கிறோம். `என் குடும்பம், என் ஊர்' என்றுதான் குழந்தையின் பார்வை கட்டமைக்கப்படுகிறது. இந்தப் புத்தகமோ, சமுதாயத்தில் இருந்து குடும்பம் எப்படி உருவானது என்பதை மிக எளிமையான நடையில் சிறுசிறு கதைகள் மூலம், ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் சொல்கிறது.
நூலின் தொடக்கத்தில், நமது சமூகம் தாய்வழி சமூகமாக இருந்து தந்தைவழி சமூகமாக எப்படி உருமாறியது என்கிற விஷயம் பல்வேறு கதைகள் மூலம் காட்சிகளாக விரிகின்றன. பின்னர், பெண்ணின் தலைமையில் இருந்த ஆதிமனித சமூகம் ஆணின் தலைமைக்கு மாறியிருக்கிறது.
இந்தப் புத்தகத்தைப் படித்த அதே வயதில்தான், ‘குடும்பம் தனிச்சொத்து அரசு’ என்கிற புத்தகத்தைப் படிக்க முயற்சி செய்து தோற்றுப் போயிருக் கிறேன். பத்து பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. அவ்வளவு கடினமான மொழிநடை. அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட அதே விஷயங்களைத் தான், `வால்காவிலிருந்து கங்கை வரை’யில் கதைகளாக மாற்றிக்கொடுத்திருக்கிறார் ராகுல்ஜி.
இந்நூலைப் படித்த பிறகு சமூகம், குடும்பம், ஆண்/பெண், காதல், போர் பற்றிய பிம்பங்கள் எல்லாம் அழகான மாற்றங்களுக்கு உள்ளாயின. அதன்பிறகு சமுதாயத்தை நான் வேறொரு விதமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். `எதையும் மாற்ற முடியும்' என்கிற நம்பிக்கையை இந்த நூல் தருகிறது. `சமூகம் என்பது படைக்கப்பட்டது அல்ல... பரிணாமம் பெற்றது' என்பது புரிந்தது. வாழ்க்கையில் நான் நன்றிக்கடன் பட்ட விஷயங்கள் என்கிற பட்டியலில் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ புத்தகத்துக்கு முக்கிய இடம் உண்டு.
புத்தகத்தில் என்னை ஈர்த்த பகுதிகள் எனச் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். கதையின் தொடக்கம் பிரமாதமானதாக இருக்கும். கூட்டத் தின் தலைமையை ஏற்பது யார் என தாய்க்கும் மகளுக்கும் இடையே ஒரு போராட்டத்துடன்தான் கதையே தொடங்கும். அதில் தாயை, மகள் கொன்றுவிட்டுத் தலைமையைப் பிடிப்பாள். பெண்ணின் தலைமை என்கிறபோது அநியாயங்களே நடப்பதில்லை எனச் சொல்வதாகப் பலரும் புரிந்துகொள்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. எந்தப் பாலினத்தின் கையில் இருந்தாலும் ஆதிக்கம் என்பது தவறாகத்தான் பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் புத்தகத்தில் என்னை பிரமிக்கவைத்த இன்னொரு இடமும் உண்டு. அழகை ஆராதிக்கிற மனநிலை மனிதர்களுக்கு அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது என்பதைச் சொல்வதாக ஒரு கதை வரும். அதில் பேரழகியான ஒரு பெண், தான் முதுமை அடைந்தால் தன் அழகு போய்விடுமோ என யோசிக்கிறாள். அதற்காகத் தற்கொலை செய்து கொள்கிறாள். `என் காதலனின் மனதில் நான் எப்போதும் இதே உருவத்துடன் இருப்பேன்' என்று சொல்லிவிட்டு சாகிறாள். இது ஏற்புடைய கருத்தில்லை என்றாலும் எனக்குப் பிரமிப்பைக் கொடுத்தது என்று சொல்வேன்.
பெண்ணின் அழகைப் பற்றிப் பேசும் பல இடங்கள் இந்தப் புத்தகத்தில் உண்டு. அழகாக இருக்க வேண்டும் என்கிற நினைப்பில் உடல் உழைப்பில் இருந்து விலகி இருப்பார்கள். அதனால் அவர்களுடைய கைகள் மிருதுவாகிவிடும். ஒரு பெண் தன் காதலனிடம், ‘இந்தப் பெண்கள் கைகள் மிருதுவாக வேண்டும் என்பதற்காக உழைப்பே இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் அவர்களது கைகள் பலமே இன்றி அசிங்கமாகக் காணப்படுகின்றன’ என்று சொல்வாள். அதாவது ஒரு பிரிவினர் எதை அழகு என நினைத்தார்களோ, அதற்கு நேர் மாறான கருத்தை முன்வைப்பாள் அந்தப் பெண்.
நூலின் முடிவில் இப்போதைய அரசியலைப் பற்றிய பேச்சும் இருக்கும். காந்தியின் அஹிம்சைத் தத்துவம் சரியானதா என்பது பற்றியும் இந்திய அரசியல் அமைப்பு பற்றிய திறனாய்வு பற்றியும் பேசப்பட்டிருக்கும்..
புதிதாக வாசிக்கத் தொடங்குகிற பிள்ளைகளுக்கு நான் பரிந்துரைக்கிற புத்தகங்களில் இந்தப் புத்தகம் முக்கியமானது. இதைப் படித்தால்தான் சமூகப் பரிண