நன்றி:மினிமீன்ஸ்
மெய்ப்பொருள்
எதையேனும் சார்ந்திரு
கவித்துவம்
தத்துவம், காதல்
இங்கிதம், சங்கீதமிப்படி.
எதன் மீதேனும் சாய்ந்திரு
இல்லையேல் உலகம்
காணாமல் போய் விடும்.
-வண்ணநிலவன்
பிரிவுகள்
நாளை இந்தக் குளத்தில்
நீர் வந்து விடும்.
இதன் ஊடே
ஊர்ந்து நடந்து
ஓடிச் செல்லும்
வண்டித் தடங்களை
இனி காண முடியாது.
இன்று புல்லைத்
தின்று கொண்டிருக்கும்
ஆடு, நாளை
அந்த இடத்தை
வெறுமையுடன்
சந்திக்கும்.
மேலே பறக்கும்
கழுகின் நிழல்
கீழே
கட்டாந்தரையில்
பறப்பதை
நாளை பார்க்க முடியாது.
இந்தக் குளத்தில் நாளை
நீர் வந்து விடும்.
-கலாப்ரியா
#பெருமழை
துரோகமும்
அவநம்பிக்கைகளின் கசப்புகளும்
வழிந்துகொண்டிருக்கும்
என் வீட்டின் மீது தான்
பெய்துபோனது
காதல் கடவுளின்
நேற்றையப்
பெருமழை.
-வா. மணிகண்டன்
#சற்றைக்கு முன்
சற்றைக்கு முன்
ஜன்னல் சட்டமிட்ட வானில்
பறந்துகொண்டிருந்த
பறவை
எங்கே?
அது
சற்றைக்கு முன்
பறந்து கொண்டிருக்கிறது.
-ஆனந்த்
#அதனால்தான்
நீ என்னருகில்
இருப்பதைவிட
இன்னும்
அருகில் நான்
இருக்கிறேன். இது
எவ்வாறு சாத்தியமென
நீ கேட்கிறாய்
அதனால்தான்.
-ஆனந்த்
#விபரீதம்
கிறுக்குப் பிடித்த பெண்ணைக்
கர்ப்பவதியாக்க
எவன் மனம் துணிந்தது இப்படி!
அதற்கு முன் இவளைப்
புஷ்பவதியாக்க
இறை மனம் துணிந்ததே எப்படி?
-ராஜ சுந்தரராஜன்
#எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் பிளேட்டோ சொன்னதுதான் சரி. நமக்குள் இருப்பதுதான் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது; அதை மீறி ஒன்றுமில்லை.
-நகுலன்
#குட்டி இளவரசியின் அறிதல்கள்
காலம் என்கிறீர்கள்
அகாலம் என்கிறீர்கள்
காலத்தை வெல்வதென்றும்
காலத்தைக் கடப்பதென்றும்
பயங்கரக் கதைகள் சொல்கிறீர்கள்
குட்டி இளவரசி சஹானா
'நாளைக்கு மழை பெய்தது'
என்கிறாள் அமைதியாக.
-மனுஷ்ய புத்திரன்
#இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க
பேருந்துக்கு வெளியே
பார்ப்பதாய்
பாசாங்கு செய்யும் நீ
என்னிடம்
எதை எதிர்பார்க்கிறாய்
காதலையா?
-சுகிர்தராணி
#விழித்திருக்கும் வேளையின் மொழி
அறிவதில்லை கனவின் வாக்கியங்களை
-முகுந்த் நாகராஜன்
#கார்ட்டூன் சேனலை
கண் விரித்துப் பார்க்க
பூனைக்குப் பயந்து ஓடிய
எலியைத் தேடுகிறாள்
பிடிபடாமல்
ஓடும்போது கை தட்டிச் சிரிக்கிறாள்
பாவம் பெரியவர்கள்
அழுகிற தொடர்களைப் பார்க்க
ஆவலாய் இருக்கிறார்கள்.
-செஞ்சி தமிழினியன்