Wednesday 29 September 2021

எம்டன் கப்பல் சென்னையைத் தாக்கியது எப்படி? - குட்டி ஸ்டோரி


யுத்தம் பொறுமைக் கோருகிறது. மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, சந்தர்ப்பங்கள் தம்மை முன்னிறுத்தும்போது பொறுமைசாலிகளே அத்தகைய சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.
ஜியாங் ரோங்

முதலாம் உலகப்போர் 1914-ம் ஆண்டு துவங்கியது. உலக நாடுகள் எல்லாம் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் அமைதிப் பூங்காவான தமிழகம் நவராத்திரி கொண்டாட்டங்களில் கவனம் செலுத்திக் கொண்டு இருந்தது. போர்க் காலம் என்பதால் வங்கக் கடலில் தீவிர கண்காணிப்புடன் இருந்தனர் ஆங்கிலேய படை வீரர்கள். அவர்களின் கண்களில் படாமல் சென்னை துறைமுகத்திற்கு 2.7 கி.மீ தொலைவில் கேப்டன் கார்ல் வான் முல்லர் தலைமையில் தமிழரான பொறியாளர் செண்பகராமன் உட்பட பல வீரர்களும் இருந்த எம்டன் போர்க்கப்பல் நங்கூரம் பாய்ச்சி நின்றது


போலந்து நாட்டில் உருவாக்கப்பட்டு.. எத்தகைய அலையிலும் முன்னேறிச் செல்லும் பொருள்கொண்ட எம்டன் கப்பல் ஒரு ஜெர்மானிய போர்க்கப்பல் ஆகும்.


ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த, எம்டன் கப்பல், தன் பணி காலத்தில், 31 கப்பல்களை மூழ்கடித்திருக்கிறது. தன் வசீகர தோற்றத்தால், 'கிழக்கின் அன்னப்பறவை' என, எதிரி படைகளாலும் வர்ணிக்கப்பட்ட பெருமை, இதற்கு உண்டு. திடீர் தாக்குதல் மூலம் வெற்றி பெற்ற எம்டன் இருபதுக்கும் மேற்பட்ட கப்பல்களை கைப்பற்றியுள்ளது.

மோஸ்கெட் எனும் போர்கப்பலையும், செம்ச்சுக் எனும் ரஷ்யக் கப்பலையும் மூழ்கடித்துள்ளது.


கைப்பற்றப்பட்டவற்றுள் எஸ்.எஸ்.ரியாசான்,எஸ்.எம்.எஸ் கார்மோரான் என்பவைகள் ஜெர்மன் போர்க்கப்பலாக மாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து புயல் போல் வேகத்தில் வந்த குண்டுகள் முதலில் துறைமுகத்தில் இருந்த 'பர்மா ஆயில் கம்பெனியின்' 5000லிட்டர் கொள்ளளவு கொண்ட மண்ணெண்ணெய் கிடங்கை தாக்கியதில் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தன. சென்னை மக்கள் அதனை நீண்டநேரமாய் வானவேடிக்கை பார்த்தனர்.


மூன்று கிடங்குகளும், ஒரு வர்த்தக கப்பலும் சேதமடைந்தது. சிறிய வணிக கப்பலை சுட்டு வீழ்த்தியதிலில் மூன்று பேர் உயிர் இழந்ததுடன் சிலர் காயமும் அடைந்தனர். சென்னை துறைமுகம் அறுபது சதவீதம் சேதம் அடைந்ததாக தெரிவித்தன்ர். உயர்நீதி மன்றத்தின் கிழக்குச் சுவர் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. முதல் உலகப் போரில் இந்தியாவின் மீது நடந்த ஒரே தாக்குதல் இதுதான் எனும் பெருமையையும் எம்டன் தான் சென்னைக்கு பெற்றுத் தந்தது.


ஜெர்மானிய கப்பல் படையில் முக்கிய அங்கம் வகித்த, இந்த கப்பலுக்கு, 1913ல், வான் முல்லர் என்பவர், எம்டனின் கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார்.பல்வேறு வெற்றிகளைப் பெற்று தந்த ராசியான எமகாதகன் எம்டன் சீனா தேசத்தில் வெற்றிக் கொண்ட பெருமிதத்துடன் வங்காள விரிகுடாவில் வலது காலை எடுத்து வைத்து தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தான். கேப்டன் தனது திட்டத்தை விளக்கி முடித்தவுடன்.

இரவு 9.30 மணியைத் தாண்டியவுடன் தாக்குதல் துவங்கியது. சற்றும் எதிர்பாராத ஆங்கிலேயர்கள் நிலைகுலைந்து போயினர். 13 சுற்றுகள் ஒரு சுற்றுக்கு 10 குண்டுகள் வீதம் 130 குண்டுகளிலும் சென்னையின் பெயர் எழுதப்பட்டிருந்தது. தாக்குதலில் இருந்து காக்க ஆங்கிலேயர்கள் புத்திசாலித்தனமாக நகர் முழுவதும் மின்சாரத்தை துண்டித்தனர். ஆனால் கலங்கரை விளக்கம் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற கோபுர விளக்கை அடையாளம் கொண்டு தாக்குதலை துவங்கினர்.


பிரிட்டன் படைகள், சுதாரித்து, எதிர்தாக்குதல் நடத்த, அரைமணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது.

தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில் மறைந்தது.சென்னை வாழ் மக்கள் பலருக்கு இந்த உண்மையே விடிந்தவுடன் தான் தெரிந்தது. விஷயம் அறிந்தவுடன் சிலர் பீதியில் ஊரைவிட்டு சென்றாதகவும் கூறப்படுகிறது.அப்போதைய சென்னை ஆளுநராக இருந்த பெண்ட்லாண்ட் ஓய்விற்காக ஊட்டி சென்றிருந்தார்.தகவல் அறிந்ததும் செப்டம்பர் 25ம் தேதி சென்னை திரும்பினார்.


ஆங்கிலேயரையே தலை குனிய வைத்த எம்டனை சென்னை மக்கள் பெருமையுடன்பேசினர்.வெடிக்காமல் கிடந்த குண்டு எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.


#ஜெய்ஹிந்த் செண்பகராமன்


எம்டன் என்றவுடன் நினைவுக்கு வரும் பெயர் பொறியாளர் செண்பகராமன். இக்கப்பலில் உதவிப் பொறியாளராக பணியாற்றினார்.1891ல் திருவனந்தபுரத்தில் பணியாற்றிய காவல் அதிகாரியின் மகனாய் பிறந்த தமிழ்க் குடும்பத்தை சேர்ந்தவரான இவர், இளம் வயதிலேயே சுதந்திர வேட்கையுடன் இருந்தார். ஜெர்மானிய உளவு அதிகாரியான சர்.வில்லியம் உடன் தன் 17ம் வயதில் அயல்நாடுகளுக்கு சென்று கல்வி பயின்றார். சுவிட்ஸர்லாந்தில் அறிவியலில் பட்டமும், ஜெர்மனியில் பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். 12க்கும் மேற்பட்ட மொழிகளை கற்றார்.


நிறவெறிக்கு எதிரான பார்வையும், அடிமைத்தளையை உடைத்தெறியும் கோபமும் இயல்பாகவே அவரிடம் இருந்தது.'ப்ரோ இந்தியா' பத்திரிக்கையை ஆரம்பித்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும்இந்தியாவுக்கு ஆதரவான செய்திகளையும் வெளியிட்டார்.

ஜெர்மனியில் கெய்சர் இவர்பால் ஈர்க்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பெர்லினில் சக்தி வாய்ந்த மனிதராக வலம் வந்தார்.1933ம் ஆண்டு வியன்னா நகரில் நடைபெற்ற மாநாட்டில் தான் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.ஜெய் ஹிந்துஸ்தான் (jai Hindustan) எனும் வெல்க இந்தியா எனும் பொருளில் ஜெய்ஹிந்த் அமைந்திருந்தது. நேதாஜி இந்திய ராணுவ படைக்கு இந்த மந்திரத்தையே பயன்படுத்தினர்.


இந்தியர்கள் பிரிட்டிஷாருக்கு அடிமையாகவே இருக்கவே தகுதி படைத்தவர் எனக்கூறிய ஹிட்லரை தன் வாதத் திறத்தால் மன்னிப்பு கேட்க வைத்தார். இதனை வெறுத்த ஜெர்மானியர்கள் உணவில் விஷம் வைத்து கொன்றதாக கூறப்படுகிறது. இறக்கும் தருவாயில் மனைவி தனக்குப் பின் இந்திய சுதந்திரத்திற்காக போராட் வேண்டுமெனவும் தனது அஸ்தியை கரமனை ஆற்றிலும், நாஞ்சில் நாட்டு வயல்களிலும் தூவும் படியும் கூறிவிட்டு மறைந்தார்.


எம்டனின் இறுதிக்காலம்


சென்னை உள்ளிட்ட பகுதிகளை தாக்கிவிட்டு இறுதியாக ஆஸ்திரேலியா சென்றான் எம்டன்.அங்கு நடைபெற்ற கடற்படை சண்டையில் HMAS Sydney என்ற கப்பலினால் தாக்கப்பட்டதால் “எம்டன்”கப்பல் 1914 நவம்பர் 09 அன்று கடலில் தரைதட்டி நிறுத்தப்பட்டது.கப்பலில் இருந்த 376 பேரில் 133 பேர் கொல்லப்பட்டு மீதமுள்ளோர் சிறைபிடிக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.அப்போது வென்றஇந்த சிட்னி கப்பலை இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் கப்பலான கார்மோரான் தாக்கி மூழ்கடித்து தானும் மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


சென்னையில் 'எம்டன்' கப்பல் குண்டு வீசிய பகுதியான உயர்நீதிமன்ற வளாகத்தில் நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. குண்டு வீசிய பொறியாளர் செண்பகராமனுக்கு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. "நீரைவிட பலவீனமானது வேறொன்றுமில்லை ஆனால் வன்மையை வெற்றிக் கொள்வதில் அதைவிட உயர்ந்தது வேறொன்றுமில்லை"ம்என்பார் தாவோ. தனியொரு மனிதனாக அயல் தேசம் சென்றாலும் தாய் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டு ஆங்கிலேயரால் பிடிக்க முடியாமல் உயிர்துறந்த செண்பகராமன் எம்டன் குண்டுவீச்சினை நினைக்கும் போதெல்லாம் நினைவு கூறப்படுவார்.


-மணிகண்டபிரபு

Tuesday 28 September 2021

செல்வேந்திரன்

நாளிதழ்களுக்கு ‘லிவிங் டெக்ஸ்ட் புக்’ என்றொரு சிறப்புண்டு. பாடப்புத்தகங்கள் கூட காலமாற்றத்தில் காலாவதியாகிவிடும். ஆனால், நாளிதழ்கள் அறிவைச் சுமந்து வருபவை.

தினம் தினம் புதிய விஷயங்களால் புதுப்பித்துக் கொள்பவை. நாளிதழைச் சுமந்து வருபவன் நமக்கு அறிவைச் சுமந்து வருகிறான். நாம் இந்த உலகோடுச் சமகாலப் பிரக்ஞையோடு உறவாட வகை செய்கிறவன் அவனே என்பது நம்மில் பலருக்குப் புரிவதில்லை

-செல்வேந்திரன்

Monday 27 September 2021

நாலடியார்

குறிஞ்சி யழகும் கொடுத்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு

-நாலடியார்

நல்லொழுக்கத்தையும் அறிவையும் தருகிற கல்வியே மக்களுக்கு உயர்ந்தோர் அழகு

திருச்செந்தாழை

முதல் வார்த்தைக்கான யோசிப்புடன் தாமதித்த படியிருந்தனர்.
இருவருக்குமிடையே நிழல் வெளியை மெளனமாய்த் தின்று கொண்டிருந்தது பகல்

-பா.திருச்செந்தாழை

Sunday 26 September 2021

ஜெயமோகன்

“இலக்கியம் வாழ்க்கைக்குச் சோறு போடாது; ஆனால் சோற்றால் மட்டுமே நிரம்பி விடாத ஏதோ ஒன்று உனக்குள் இருக்குமாயின் அந்த இடத்தை இலக்கியம் நிரப்பும்”

-ஜெயமோகன்

பாரதியார்

மெய்மை கொண்ட நூலையே அன்போடு வேதமென்று போற்றுவாய்

வல்ல நூல் கெடாது காப்பார்
வாழி அன்னை வாழியே

வெற்றி கூறுமின் வெண் சங்கூதுமின்
கற்றவராலே உலகு காப்புற்றது

-பாரதியார்

பெரும்பாலும் ரயில்கள் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது?


1996 முன்பு ரயில் எல்லாம் ஒரு ரெட்டிஷ் reddish (துரு பிடிச்ச) கலரில் தான் இருந்தது..

1996 பிறகு ரயில் எல்லாவற்றிலும் வேக்கும் (vaccum)பிரேக் பொருத்தினார்கள்.அந்த ரயில் என்று வித்தியசாம் தெரிவதற்காக நீல நிறத்தில் வண்ணம் பூசினார்கள்.

#information

ஹெர்னியா

ஹெர்னியா என்பது பொதுவான பெயர். எந்த ஓர் உறுப்பும் அதன் இடத்தில் இருந்து இறங்குவதை ஹெர்னியா என்று கூறுவோம்.
அது மூளையாகக் கூட இருக்கலாம்.ஆனால் பொதுவாக ஹெர்னியா என்றாலே குடலிறக்கம் என நினைக்கிறோம்

#info

Friday 24 September 2021

ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் விமர்சனம்*மணி

ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் விமர்சனம்
*மணி

ஆட்டுக்கார அலமேலு, கும்கி, அழகர்சாமியின் குதிரை போல 
விலங்கினை(மாடுகள்) மையமாய் வைத்து பின்னப்பட்ட  கிராமத்துக் கதை.சூர்யா தயாரிப்பு, யூ ட்யூப் புகழ் கோடாங்கி வடிவேலு எல்லாம் நடிச்சிருக்காங்க.. ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.நிறைவேறுச்சானு கடைசியில் பார்ப்போம்

#கதை

காவல் நிலையத்தில் வெள்ளையன் கருப்பனை கானோம்னு கம்ப்ளைண்ட் கொடுக்க வர்றார் ஹீரோ மிதுன் மாணிக்கம்.யாருனு கம்ளைண்ட் எழுத விசாரிக்கும் போது
அது மாடுகள்னு சொன்ன போது விரட்டி விடுகிறார்.

உயிருக்குயிராய் வீட்டில் இருந்த 
மாடுகளை தேட செல்லும் போது மீடியா செய்தியாளர் வாணிபோஜன் உதவியுடன் மாடுகளை கண்டுபிடித்தார்களா?அதன் மூலம் கிராமத்தில் என்னவெல்லாம் நடந்தது என்பதே கதை

#ப்ளஸ்

*அறிமுக நடிகர் மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், அப்பத்தா, வடிவேல் முருகன், வாணி போஜன் என  முக்கிய கதாபாத்திரங்கள் நன்றாய் நடித்துள்ளனர்

*சுகுமாரின் ஒளிப்பதிவு பொட்டல் காட்டையும் கண் முன் அழகாய் காட்டுகிறது

*போகிற போக்கில் பாஜகவினரையும், சீமானையும் சீண்டிட்டு போயிருக்காங்க

*வடிவேல் முருகனின் டைமிங் வசனம் நன்று. இன்னும் கொஞ்சம் ஸ்கோப் குடுத்திருக்கலாம்

*கரண்ட்டே இல்லாமல் இலவச பொருள் கொடுப்பது

*இன்ஜுனியரிங் படித்த புரோட்டா மாஸ்டர் தேவை, இந்தியில் ஊர்ப் பெயர் இருக்கும் இணையத்தில் வந்த பளிச் டெம்ப்ளேட்டுகளையும் பயன்படுத்தியுள்ளனர்

#மைனஸ்

*காணாமல் போன மாடுகளால் படும் வேதனையை அனுதாபமாய் பார்க்க வைக்கிறாங்களே தவிர அழுத்தமாய் சொல்லியிருந்தால் ஆடியன்சும் பதறியிருப்பாங்க

*ரம்யா பாண்டியன் வீட்டிலிருந்து வந்த சீதனமாய் வந்த மாடுகள் மீது அவ்வளவு ஈர்ப்பு உடனே ஹீரோவுக்கு வருமா.அதற்கு எதாச்சும் அழுத்தமான காட்சிகள் இல்லை

*முதல் பாதியில் இருந்த க்ரிப் இரண்டாம் பாதியில் இல்லாததால் ஒரு சோர்வு வந்துவிடுகிறது.

*மாடு கதையா , அடிப்படை வசதி இல்லாத கிராமம் னு இன்னொரு ட்ராக் போவதால் எது மையக்கதைனு தெரியல

*லைனா மீடியா முழுக்க நுழையும் காட்சிகள்.

மாடுகளை பிள்ளை போல் வளர்க்கும் கிராமங்களை அறிவோம்.அவை உழவுக்கு,பால் கறக்க,வண்டி இழுக்க,குடும்பத்தின் ஜீவாதாரமாய் அந்த மாடுகள் இருக்கும்.அப்போது அந்த மாடுகள் பறிபோகும் போது நமக்கே பரிதாப உணர்ச்சி வரும். அடடா இனி அந்த குடும்பம்  பொருளாதார தேவைக்கு என்ன செய்வார்கள் என்று.இது இப்படத்தில் மிஸ்ஸிங்.கரண்ட்டே இல்லாத கிராமம் இருக்கானு யோசிக்க வைக்கிறாங்க. கிராமத்து மனிதர்களையும் அவர்களின் எளிய வாழ்வியலையும் பேசியதற்காக பாராட்டலாம்.

சூப்பரும் இல்லை சுமாரும் இல்லை. மீடியம்.
ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
அழுத்தம் இல்லாததால் எந்த அனுதாபமும் இல்லை

-மணிகண்டபிரபு

Thursday 23 September 2021

பாரதியார் குறித்து இன்குலாப் சொன்ன வரிகள்

கவிஞர்களை அரசாங்கம் கண்ணியப்படுத்தும்
வாழ்ந்து பிணமானால் உன் போன்றோரை
பிணமாக வாழ்ந்தால் என் போன்றோரை

-பாரதியார் குறித்து இன்குலாப் சொன்ன வரிகள்

Wednesday 22 September 2021

யாழிசை மணிவண்ணன்

வேகத்தடைகள்..
சாலை விபத்துகளில்
அகாலமடைந்தவர்களின் புதைமேடுகள்.,
மௌன அஞ்சலிக்கான 
மரியாதையாக இருக்கட்டும்
மெதுவாக கடந்திடுங்கள்.

-யாழிசை மணிவண்ணன்

ஜெயமோகன்

தன் வாழ்நாளில் இறந்து மீண்டும் பிறக்காதவன் வாழவே இல்லை என்று சொல்வேன்.நம்மில் அதைப் போன்ற ஒரு தருணம் வாழ்வில் அமைந்திருக்கும்.நம்மை கண்டடையும் தருணம் அது.

முன்பிருந்த நாம் எச்சமில்லாமல் அழுந்து, முற்றிலும் புதிய ஒருவர் நம்மில் எழுவது தான் மறுபிறப்பு

-ஜெயமோகன்

சமஸ்

ஒரு மனிதர் அகச்சூழலில் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்றால், புறச்சூழலிலும் சுதந்திரத்தை அவர் உணர வேண்டும். சுதந்திரவுணர்வுக்கு எதிராக ஒருவரை ஒடுக்கி வைத்திருப்பது அச்சம். நவீன வாழ்வில் பொருளாதாரத்துக்கு இதில் முக்கியமான பங்கு உண்டு.

-சமஸ்

Friday 17 September 2021

பெரியாரின் பொன்மொழிகள் நூறு


தில்லி எலிக்கு வான் பருந்து தெற்குத் திசையின் படை மருந்து கல்லாதோர்க்கு நன் மருந்து கற்றவர்க்கு வண்ணச் சிந்து
பெரியார் குறித்து பாரதிதாசன்

பெரியாரை முதல் முதலில் தெரிந்து கொண்டது ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் தான்.'தொண்டு செய்து பழுத்த பழம்..' என ஆரம்பிக்கும் பாடலில் அவரின் முழு உருவமும் தெரிந்தது.பின்பு காலஒட்டத்தில் அவரை படிக்கும் போதெல்லாம் பல விஷயங்கள் அறிய முடிந்தது. முனைவர் நன்னன் தொகுத்த பெரியாரைக் கேளுங்கள், பெரியார் கணினி, பெரியார் களஞ்சியம்,பெரியார் மொழிகள் என்று அவர் சொன்ன கருத்துகள் எல்லாம் அவ்வப்போது குறித்து வந்துள்ளேன்.'பெரியாரை துணைகொள் என்பது போல் சில வரிகள் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் இருக்கும், சில வரிகள் தத்துவார்த்தமாய் இருக்கும்.


பெரியாரின் இக்கருத்துகள் யாவும் படித்த கருத்துகளோ, மேலை நாட்டு சிந்தனையோ அல்ல.. தம் கண் முன் கண்ட காட்சிகளை கருத்தாக கூறியிருக்கிறார்.அவற்றையும் பகுத்தறிவு கொண்டு தெளியும்படி வலியுறுத்தியிருக்கிறார்.அறிவும், அனுபவமும் மனிதர்க்கு இருப்பதால் அதை ஆராய்ந்து தெளிய அறிவுறுத்துகிறார்.

இதில் எளிமையும் இனிமையும் நிறைந்த 100 பொன்மொழிகளில் உள்ளன


*காலமெல்லாம் மடையனாக இருந்து சாவதைவிட அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டும் என்றார்.from bad to the worse என்பது போல் கெட்டதிலிருந்து கழிசடைக்கு செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


*" என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர் சிலர் உண்மை அஃதன்று;நான் நம்பிக்கை வைக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்பட காணோமே என ஏங்குபவன் நான்


*கடவுள் மறுப்பாளன் என்று என்னை குறிப்பிடாதீர்கள். அதனையும் தேடி அலைந்து அலுத்துக் களைத்து ஓய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னை குறிப்பிடுங்கள். ஏனெனில் நான் கடவுள் வேண்டாம் என்று அது இருக்கக் கூடாது என்று கூறவில்லையே


*மக்களில் இரண்டு விதப் பிறவி உண்டு ஒன்று மக்களைப்போல் மக்களை அனுசரித்து மக்கள் விருப்பப்படி நடப்பது; மற்றொன்று தங்களை மக்களில் ஒருவன் என்றே கருதாமல் தங்களை தனிப்பிறவி என்று கருதிக்கொண்டு மக்கள் கருத்தை பற்றி கவலை இல்லாமல் நடப்பது.என தலைவனை பற்றி கூறுகிறார்


* எதிரிகளுடன் போராடுவது முக்கிய வேலை தான் ஆயினும் அதைவிட முக்கியம் துரோகிகளை ஒழிக்க போராடுவது ஆகும்

* எவனுக்கு பொய் சொல்ல தைரியம் இருக்கின்றதோ எவனுக்கு பொருள் செலவு செய்ய சக்தி இருக்கிறதோ எவனுக்கு பொய் பிரச்சாரம் செய்ய சௌகரியம் இருக்கிறதோ அவனுக்கு வெற்றி கொடுக்க நம்நாடு தயாராக இருக்கிறது


*வாழ்க்கை ஒழுக்கத்தில் கணவனுக்கு ஒரு சட்டம் மனைவிக்கு வேறு சட்டம் இருக்கிறது


* நிந்தனையான பேச்சுக்கள் எப்போதும் ஒரு விஷயத்துக்கு நியாயமான பதிலாக முடியாது


* வளைய முடியாத (கொள்கையுள்ள) கல்தூணில் (போட்டி என்னும்) பிளவு ஏற்பட்டால் பிறகு அபாயத்தை தான் எதிர் பார்க்க நேரிடும்


* நமக்கெல்லாம் கடவுள் எது என்றால் இந்தப் புராணங்களில் வரும் பாத்திரங்கள் கடவுள்களாக இருக்கின்றனவே தவிர தத்துவப்படி ஆன கடவுள் நமக்கு இல்லை


* கையாலாகாதவனுக்கு கடவுள் துணை, அறிவு இல்லாதவனுக்கு ஆண்டவன் செயல். தவற்றை உணரமுடியாத உனக்கு தலைவிதி


*கணவனிழந்த பெண்ணை எப்படி விதவை என்று கூப்பிடுகிறோமோ அது போலவே மனைவி இழந்த புருசனை விதவன் என்று கூப்பிட வேண்டும்.


*மற்ற நாடுகளில் மக்களை ஒன்று படுத்தவே கடவுள் மதம் இருக்கின்றன. நமது நாட்டில் மக்களை வேறு வேறாக பிரிக்கவே கடவுள் மதம் இருக்கின்றன


*சிந்திப்பவன் மனிதன்

சிந்திக்க மறுப்பவன் மதவாதி

சிந்திக்காதவான் மிருகம்

சிந்திக்க பயப்படுகிறவன் கோழை


* கல்லை கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் ஒரு மனிதனை மற்ற மனிதனுக்கு சமத்துவமான மனிதனாக்க கூடாது


* மற்ற நாடுகளில் மக்களை ஒன்று படுத்தவே கடவுள் மதம் இருக்கின்றன. நமது நாட்டில் மக்களை வேறு வேறாக பிரிக்கவே கடவுள் மதம் இருக்கின்றன


*உலகிலுள்ள மக்களில் பலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்றாலும் அவர்களெல்லாம் நம்மைப் போல் முட்டாள் தனமாக கடவுளை நம்புவதில்லை


*மனிதன் பிறந்தநாள் முதற்கொண்டு சாகின்ற வரையில் உலகில் மாணவனாக இருக்கிறான்.அவன் கற்றுக்கொள்ள வேண்டியது அவ்வளவு இருக்கின்றது.


* பச்சை உண்மையானது மக்களுக்கு எப்போதும் கலப்பு உண்மையை விட அதிகமான அதிருப்தியை கொடுக்கக்கூடியதாக இருக்கும். உண்மையை மறைக்கப் பேசுவது என்பது, எப்போதும் பேசுகின்றவனுக்கும், பேச்சு கேட்பவர்களுக்கும் திருப்தியை கொடுக்கக்கூடியதாக இருக்கும். திருப்தியை உண்டாக்கும்படியும் செய்து கொள்ளலாம். ஆனால் உண்மை பேசுவதன் மூலம் அப்படி செய்ய முடியாது.


*ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது.


*முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது.அறிவு சற்று தீப்பிடிக்க தாமதமாகும்.

*ஊரில் பேசிக் கொள்கிறார்கள் என்பது கீழ்த்தரமான தன்மையாகும்


*மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்;மானமற்ற ஒருவருடன் போராடுவது கஷ்டமான காரியம்.


*ஓய்வு ,சலிப்பு என்பவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன்.


*நீ இன்ன காரியம் செய்தால் உன் பாவம் மன்னிக்கப்படும்;பரிகாரமாகி விடும்;நீ பாவமற்றவனாக ஆகிவிடுவாய் என்று சொல்வதால் ஒழுக்கக்கேடே வளர்கிறது.


*தெரியாததை,இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகி விடுகின்றான்.


*என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தை தயவு செய்து மறந்துவிட்டு இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க்கையைப் பொருத்துங்கள்.


*எண்ணெய் இருந்தால்தான் விளக்கு எரியும் என்பது போலச் சிந்தனை இருந்தால்தான் உண்மை விளங்க முடியும்.


*உள்ளதைப் பங்கிட்டு உண்பது, உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு வேலையோ அவசியமோ இருக்காது.


*ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும்.


*துறவிகள் மோட்சத்திற்கு போக வேண்டும் என்று பாடுபடுகின்றார்களே தவிர, சமூகத்தில் மனித மேம்பாட்டுக்காக பாடுபடுவதில்லை

*முன்நோக்கிச் செல்லும் போது பணிவாக இரு.. ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்.


*ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்.


*விதி என்பது மிதிக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கொதித்து எழாதிருக்க செய்யப்பட்ட சதியாகும்


*பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவது நாத்திகமேயாகும். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கும் போது நாம் அவனுக்கு சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான செயல் தானே.

*நாத்திகம் என்றால் தன் அறிவுகொண்டு எதையும் ஆராய்ந்து பார்ப்பவன்


*சமுதாய சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொதுவுடைமை என்பதைப் போலவே நாத்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லையாகும்


*தண்டனை என்பது குற்றவாளிக்குக் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடியதாய் இருக்க வேண்டுமே தவிர,கண்டிப்பாய் சுகம் கொடுக்கக் கூடியதாக இருக்க கூடாது


*தேசாபிமானம் பாஷாபிமானத்தை விட உயர்ந்தது மனிதாபிமானம்


*மக்கள் தங்கள் தகுதிக்கேற்ற தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்


*ஆயுதமும் காகிதமும் பூஜை செய்ய அல்ல..புரட்சி செய்ய..


*எப்போதும் நான் நன்றி பெறுவதில் கவலைப்படுவதே இல்லை.மனித ஜீவனிடம் நன்றி எதிர்பார்ப்பது அறிவில்லாத தன்மையே யாகும்


*நன்றி என்பது பலன் பெற்றவர் காட்ட வேண்டிய குணம்.செயல் செய்தவர் எதிர்பார்க்கக் கூடாது


*என்னை 'உண்மையாய்' எதிர்க்கத் துவங்குங்கள். அந்த உண்மை ஏன் எதிர்க்கின்றோம் என்ற கேள்வியை மூளைக்குள் எழுப்பும். அந்த கேள்விக்கான தேடல் நீங்கள் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் இந்தியாவில் எப்படிப்பட்ட அடிமுட்டாளாய் வாழ்கிறீர்கள் எனும் விடையில் கொண்டு சேர்க்கும் -


*அச்சத்துக்கும் அறியாமைக்கும் பிறந்த குழந்தையே கடவுள்


*நான்கு ஆண்களும்,ஒரு பெண்ணும் குடும்பத்தில் இருந்தால் முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும்


*அறிவுக்கு ஏற்றது,மக்களுக்கு நன்மை பயப்பது,மக்களின் அறிவை வளர்ச்சியடையச் செய்வது எதுவோ அதைப்பற்றி பேசு


*ஆரியமே! நீ என்னை முழ்கடிக்க முயற்சிக்கும் பேரெல்லாம் ஆழிப்பேரலையாய் உயர்ந்து வருவேன்.


*கல்வி அறிவும்,சுயமரியாதை எண்ணமும்,பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்!


*உன்னை யோசிக்க வைப்பதுதான் என் நோக்கமே தவிர..என்னைப் பின்பற்று,உன்னை மாற்றிக்கொள் என்பது அல்ல..நீ நீயாகவே இரு.!


*முற்போக்கு அறிவும்,அக்கறையும் வளர வளர, புரட்சிகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.


*என் கஷ்டத்தைச் சாத்திரமும், மதமும், கடவுளும் கவனிக்கவில்லை. ஆதலால் நான் ஏன் அவைகளை மதிக்க வேண்டும்?


*தகுதியும், திறமையும் பெறத்தான் ஒருவன் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ வருகிறான்.ஆனால் பள்ளிக்கோ கல்லூரிக்கோ வரவே தகுதி திறமை தேவை என்பது மிகப்பெரிய அயோக்கியத்தனம் "


*அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒத்து வராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடையாத மனிதனாகிறான்


*மனித வாழ்வில் வெற்றி என்னவென்றால் அவனவன் மனத் திருப்தியோடு வாழ்வதுதான்


*மற்றவர்களிடம் பழகும் விதத்தையும், ஒழுக்கத்தையும் சிறுவயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்வில் பெரிய மனிதனாகிறான்


*மனசாட்சி என்று சொல்லுவதே அகிம்சை என்பதைப் போல கோழைகளுடைய ஆயுதமாகிவிட்டது


*ஒருவன் வாழ்வது என்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகங்கண்டார்கள் என்று அமைய வேண்டும்.


*மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல;மனிதனாக வாழ்வதுதான் பெருமை


*எந்த மனிதனுக்கும் அவனுடைய கருத்தை எடுத்துச் சொல்ல உரிமையுண்டு.அதைத் தடுப்பது அயொக்கியத்தனம்


*மனிதன் தன் வாழ்நாளில் அடைந்த வெற்றிக்கு,மேன்மைக்கு அறிகுறி, முடிவின் போது அடையும் புகழ்தான்


*மதம் மனிதனை மிருகமாக்கும் சாதி மனிதனை சாக்கடையாக்கும்

*சாதியின் கடைசி வேர் அறுபடும்வரை என் சிந்தனைகள் தொடரும்


*எந்த பாவத்தை செய்தாவது சாதியை ஒழிக்க வேண்டும்..


*ஒரு கருத்தை யார் சொல்லியிருந்தாலும் நானே சொல்லியிருந்தாலும் பகுத்தறிவுக்கு முரணாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளாதே"


*ஆத்மாவைப் பற்றி பேச வேண்டுமெனில் அறிவையும், அனுபவத்தையும் தூர வைத்துவிட்டு வெறும் நம்பிக்கை மீதே ஒப்புக்கொண்டு பேச வேண்டியதாய் இருக்கிறது.


*ஆத்மா என்பது ஆகாயத்தில் தளவாடம் இல்லாமல் கட்டப்பட்ட ஒரு கோட்டை


*நூறு அறிவாளிகளுடன் மோதுவதை விட, ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது

*என் அபிப்ராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு.ஆனால் என் அபிப்ராயத்தை வெளியிட எனக்கு உரிமையுண்டு.


*எதிரியை அடக்கணும், அவனை ஒழிக்கணும் என்றால் நாம் அவனை வெறுக்கணும். கூண்டோடு நம்மை அவன் ஒழித்தாலும் சரி என்று துணிந்து இறங்கினால் தானே அவன் பயப்படுவான்


*நாதசுரக்குழாயாய் இருந்தால் ஊதியாக வேண்டும்; தவுலாயிருந்தால் அடிபட்டுத்தானாக வேண்டும் என்பது போல் எனக்குத் தொண்டை, குரல் உள்ள வரை பேசியாக வேண்டும்; பிரசங்கம் செய்தாக வேண்டும்


*நானே எழுதி, நானே அச்சுக்கோர்த்து, நானே அச்சடித்து, யாரும் வாங்காவிட்டாலும் நான் ஒருவனே படிப்பேன்


*வேறு ஒருவன் வந்து உங்களுக்கு உதவி செய்வான் என்று எதிர்பார்ப்பதும் பெரிய முட்டாள்தனமாகும். உங்களையே நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளத் துணிவு கொள்ள வேண்டும்


*நம்மை எவன் இழிவுபடுத்துகிறானோ, அவனை நாம் மதிப்பதில்லை என்று முடிவு கட்டிக்கொள்ள வேண்டும்.


*சாதியை ஒழிப்பது என்பது செங்குத்தான மலையில் தலைகீழாக ஏறுவது போன்றது.


*தலைவிதி,முன் சென்மக் கர்மப்பலன் என்பவைகள் மனிதனுடைய முட்டாள்தனத்துக்கும் அயோக்கியத்தனத்துக்கும் பரிகாரமாக்கப்படுகிறது.


*சகுனம் பார்க்கிறோமே! சாப்பிடும் போது சகுனமோ, ராகுகாலமோ பார்க்கிறோமா?நீதி மன்றத்தில் ராகுகாலம் பார்த்தால் என்ன ஆகும்?

*வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்


*எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறதென்றால் துணிவு ஒன்றுதான்.வேறு எந்த யோக்கியதையும் எனக்கு கிடையாது.


*யாரோ ஒருவன், எப்போதோ ஒரு காலத்தில், ஏதோ ஒரு மொழியில், என்னமோ ஒரு உத்தேசத்தின் மீது சொன்னதாக, யாராலோ எழுதி வைக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு பின்பற்றச் சம்மதிப்பதை விடப் பெரிய அடிமைத்தனம் வேறு இல்லை


*வாழ்த்து என்பது ஒரு சம்பிரதாயம் ஒழிய அதனால் எந்த பயனும் இல்லை. இந்த முறை எல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முந்தியது.


*சுயமரியாதை உடையவன் இந்தியை ஆதரிக்க மாட்டான்


*பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவதாகும்


*எந்த மனிதனும் எனக்கு கீழானவன் இல்லை.அதேபோல் எவனும் எனக்கு மேலானவனும் இல்லை


*கல்வியினுடைய குறிக்கோள் என்பது பணம் சம்பாதிப்பது மாத்திரம் என்று நினைக்கக் கூடாது


*முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். இதுதான் ஜனநாயகம்


*மூட்டை தூக்கும் பொழுது பாரத்தினாலே நான் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, வெட்கத்தினால் ஒரு போதும் கஷ்டப்பட்டதில்லை.


*கோர்ட் மக்கள் சவுகரியத்திற்காகவே தவிர, வக்கீல்கள் சவுகரியத்துக்காக அல்ல


*பக்தி ஆசையிலிருந்தும் அன்னியர் பார்த்து மதிப்பதிலிருந்தும் வளருகிறது


*பக்தி ஆசையிலிருந்தும் அன்னியர் பார்த்து மதிப்பதிலிருந்தும் வளருகிறது


*நமது அறிவிக்கு ஒரு காரியம் சரி என்று பட்டாலும் அனேக விஷயங்களை உணர்ந்தே அதைப் பிரயோகிக்க வேண்டும்


*எனக்கும் கடவுளுக்கும் என்ன முன்விரோதமா?நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை!’


*கீழ்சாதி என்பதற்கும், தொடக்கூடாதவர் என்பதற்கும் மதத்தையோ கடவுளையோ காரணம் காட்டுவது வெறும் பித்தலாட்டம்.


*பக்தி என்பது தனிச்சொத்து ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து


*பக்தி வந்தால் புத்தி போகும்; புத்தி வந்தால் பக்தி போகும்


*எந்த இனம் தன்னுடைய உரிமைக்காகப் போராட முன் வரவில்லையோ அந்த இனம் உரிமைகளை அனுபவிக்க தகுதியற்றது


*எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டிததில்லை..எங்கே வழுக்கியது என்று பார்க்க வேண்டும்


*இந்த சமுதாயத்தை மானமும் அறிவுமுள்ளதாக மாற்றவும், மனிதனுக்கு மனிதன் ஜாதிய ஏற்றத்தாழ்வில்லாமல் வாழச் செய்வதே என் லட்சியம்


*என்னைக் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர். நம்பிக்கை வைக்கத்தக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்படக் காணோமே என ஏங்குபவன் நான்


*சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதை பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம் தான்


*தொடர்ந்து கற்றுக்கொள்,

ஆய்வு செய்

உருமாறு.!


இதில் உள்ள கருத்துக்கள் எல்லாம் சிலரால் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம்.ஆனால் ஏதேனும் ஒரு கருத்து உங்கள் இதயத்தை தொட்டது என்றால் அதுவே பெரியாரின் வெற்றி.இந்த வரிகளோடு நம் வாழ்வை உயர்த்த விரும்பிய பெரியாரை இந்த நன்நாளில் நினைவு கூர்வோம்.

மணிகண்டபிரபு

info

வெடிப் பட்டாசுகளை சீனி வெடி என்று சொல்லும் வழக்கம் இன்றும் இருக்கிறது. அக்காலத்தில் சீனா நாட்டிலிருந்து வெடி வகைகள் இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தன.

சீனாவிலிருந்து வந்ததால் சீனா வெடி-சீன வெடி-சீனி வெடி என்று மருவி அழைக்கப்பட்டு வருகிறது.

#info

Wednesday 15 September 2021

கார்ப்ரேட் சுயமுன்னேற்ற நூல்கள் தன்னம்பிக்கையை தருகின்றனவா..? - வாசகர் வாய்ஸ்


கடைசியாக மிச்சமிருப்பது இது ஒன்றுதான். நிஜ வாழ்க்கையின் யதார்த்தத்தோடு மோதிவிடுவது மட்டும் தான்.
-தஸ்தயெவ்ஸ்கி

வாசிப்பின் துவக்க நிலையில் வரலாற்று நாவல்களை படித்த பின் அனைவரும் தேர்ந்தெடுத்து வாசிப்பது சுயமுன்னேற்ற நூல்கள் தான். தமிழில் வந்த சுயமுன்னேற்ற நூல்களை விட கார்ப்ரேட் சுயமுன்னேற்ற நூல்கள் அதிகம் வாசிப்போர் உண்டு. எழுந்திரு, ஓடு, லட்சியம் மொட்டை மாடியில் துணி காய்வது போல காய்ந்து கொண்டிருக்கிறது ஓடிப்போய் எடுனு நம்மை உசுப்பேற்றும் வாசகங்கள் அதிகம் இருக்கும். கொஞ்சம் தெலுங்கு டப்பிங் படம் பார்ப்பது போல அது ஒரு அனுபவமாய் இருக்கும். அந்த போதையில் இருந்து விடுபடாமல் அதிலேயே பயணிப்பது சுகம்.


விதி, எண்ணங்கள், ஆசைகள், மனப்பான்மைகள், குறிக்கோள்கள், ஆன்மா, முயற்சி, திட்டவட்டம், கற்பனை, யோசனை, வெற்றி, தோல்வி, துறைசார் அறிவு,பணம், தன்னம்பிக்கை, தூண்டுதல் போன்ற நூறு வார்த்தைகள் பக்கத்துக்கு பக்கம் இடம் பெற்றிருக்கும். அட்டைப் படத்தின் மேல் மானே தேனே மாதிரி 5 கோடி பிரதி விற்றது, 6 கோடி பிரதி விற்றது என அச்சிட வேண்டும். இது தான் கார்ப்ரேட் சுயமுன்னேற்ற நூலுக்கான பிள்ளையார் சுழி.


ஃபோர்டு, எடிசன், ஐன்ஸ்டீன் வாழ்வியல் கதைகள், சம்பவங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையெனில் தெய்வக் குத்தம் ஆகிடும். சில பக்கங்களுக்கு ஒரு முறையாவது கும்கியை மாணிக்கமாக மாற்ற பார்கே பார்கேனு சொல்வது மாதிரி நம்பிக்கை நம்பிக்கைனு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அயல்நாட்டு கிராமத்தில ஒரு செண்ட்/டாலர்/யென் என விரும்பிய பணத்தை வைத்துக் கொண்டு ஒரு சிறுவன் முன்னேறி பெரிய தொழிலதிபரான கதையை சிலாகித்து சொல்ல வேண்டும்.

கொஞ்சம் பைபாஸ் சாலையில் இருந்து இறங்கி ஊருக்குள் போவது மாதிரி உளவியல் பக்கம் போய் ஆழ்மனம், அமானுஷ்ய சக்தி, பேராற்றல் எல்லாம் நீங்க பொறக்கும் போதே டீஃபால்ட்டா இருக்குனு நம்ப வைக்கனும். குறிப்புச்சட்டம் இல்லாமல் ஒவ்வொரு கட்டுரையிலும் பத்து மார்க் கேள்வி எழுதற மாதிரி புல்லட்டின் பாய்ண்ட் போட்டு பேரா பேராவா எழுது கிறங்கடிக்கனும்.


அறிவு என்பது தானா முளைக்கிற முருங்கை மரம் இல்ல அது பாதுகாப்பா பொத்தி பொத்தி வளர்க்க வேண்டிய குரோட்டன்ஸ் செடிங்கிற மாதிரி கம்பி கட்டனும்.

பெல் அடிக்கும் போது விலங்கியல் பீரியடில் மூளை பாடம் நடத்துற மாதிரி அவசர அவசரமா மூளையின் படம் வரையாமலேயே அதன் பாகம்,பணி,செயல்பாடுனு அவசர அவசரமா சொல்லி விளக்கனும். சுருக்கமா அந்த மூளைய வச்சு சிபில் ஸ்கோர் இல்லாமலேயே பர்சனல் லோன் வாங்கலாங்கிற ரேஞ்சுக்கு சொல்லனும். அதுக்கு உதாரணமாய் மொராக்கோ, சிக்காக்கோவில் நடந்த வெற்றிக் கதையை வெறி புடிச்ச மாதிரி சொல்லனும்.

சமயத்தில இருட்டில் வரும் வின்னர் கைப்புள்ள மாதிரி யார்னே நீ இம்புட்டு வெவரமா பேசுறனேனு நம்மையே கேட்க வெச்சிடுவாங்க.


அடுத்தது தலைமைப் பண்பை பத்தி க்ளாஸ் எடுப்பாங்க.இது அசத்தும் புலி, இது அசராப்புலினு டி ஆர் பேசும் வசனம் போல தலைமைப்பண்பு என்பது சுயமாய் முடிவெடுக்கனும், தடுமாற்றமில்லாமல் முடிவெடுக்கனும், சீராக முடிவெடுக்கனும்,அறிவார்ந்து பேசனும், புரிதல் இருக்கனும், திட்டமிட்டு எடுக்கனும்னு அடேய் இப்பிடி எல்லாம் இல்லாம இருந்தாலே ஈசியா முடிவெடுத்திருப்பனேனு யோசிக்க வைப்பாங்க.

இதுக்குப் பின் என்ன.. தோல்வியைப் பத்தி தான். அடிச்சு துவைச்சு கிழிஞ்சு போன சண்டே மார்க்கெட் துணி மாதிரி தோல்வியைப்பத்தி பத்தி பத்தியா எழுதனும்.நார்மலா நாம தோற்றுப் போனால் எல்லாம் விதி, எல்லாம் நேரம் சரியில்லனு சொல்வோம். ஆனால் கார்ப்ரேட் உலகில் அப்படி சொல்லக்கூடாது. குறிக்கோளின்மை, இலட்சியமின்மை சுயஒழுங்கின்மை, சுய கட்டுப்பாடின்மை, நலக்குறைவு, தாக்கங்கள், காலம் தாழ்த்துதல், திறமையின்மை,போல இன்மை, விடாமுயற்சியின்மைனு சொல்லி 30 வகையான ரெசிபி செய்யறது மாதிரி அடுக்கிக்கிட்டே போகனும்.


உன்னையே நீ எண்ணிப்பாரு னு பிதாமகன் சித்தன் சொல்லுவது மாதிரி சொல்லுவாங்க. மூன்று டாபிக் முன்னால் முடிவெடுத்தலில் சொதப்பியதற்கு போரிங் பவுடர் போடுவது மாதிரி.. அடுத்து விரைவாய் எப்பிடி முடிவெடுக்கிறது என்பதை விக்கிரவாண்டி மோட்டலில் சாப்பிட்டுக்கிட்டே சொல்வது மாதிரி சொல்லுவாங்க. அபிப்ராயம், திட்டமிடு, மூளையும் மனமும் ஒன்றாய் இருக்கும் போது முடிவெடு, மேலபாரு, கீழபாரு என்று சொல்லி.. முடிவெடுத்தலால் மாறிய வரலாற்று சம்பவங்களை எல்லாம் வானலியில் போட்டு வறுக்கனும். எல்லா ராசிபலனிலும் வரும் ஓபன் வரிகளை போட்டு ஃபில்ட் அப் பன்னனும்.

சின்ன வயசுல நோட் மேக்கிங் எழுதும் போது என்ன எழுதறோம்னே தெரியாம Rough copyயை அடித்துவிடுவது போல.. என்னன்னே தெரியாம படித்து படித்து பக்கத்தை திருப்பிக் கிட்டே இருப்போம்.


*பணத்தைத் தேடி ஓடாதே. பணம் உன்னைத் தேடி வரும். (அடப் போங்க பாஸ் இ.எம்.ஐ தான் தொரத்து தொரத்துனு தொரத்துது)


*உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் கூற்று ( அப்ப நாங்க மட்டும் யாரு)

*உங்கள் அணுகுமுறையை மாற்றுங்கள் வெற்றி அடைவீர்கள்

(நேர்மையா இருக்கோம், உண்மையா இருக்கோம் என ஆழ்மனசில் இருப்பதால் எச்சரிக்கையா இருக்கிறோம் இதுக்குமேலயும் வெற்றி வரலைனா சர்வர் பிரச்சனை இருக்குனு மனசை தேத்திக்கிறோம்)


*நேர்மறை சிந்தனை எப்போதும் இருக்கனும் (அதுக்காகத்தான் ஒவ்வொரு கையிலும் கருப்பு, சிவப்பு கயிறு கட்டியிருக்கோம்)


*சிந்தனையைக் குவி (ஏங்க அதென்னா எம் சாண்டா குவிச்சு விளையாட)


*சதுரங்க வேட்டை நட்டி மாதிரி உன்னிடம் முடிவிலா பேரறிவு இருக்கு, அதில் சேகரிக்கப்பட்ட அனுபவத்தையும், ஒருங்கமைக்கப்பட்ட ஆற்றலையும் சேர்த்தா அந்த முயற்சி உன்னை மூலாதாரத்துக்கே கூகுள் மேப்பில் கொண்டு சேர்க்குனு படிக்கும் போது உடல் சிலிர்க்கும்.

*உங்கள் ஆழ்மனசிலிருக்கும் சிந்தனையைத் தூண்டுங்க (நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பன்றேன்)


இவையனைத்தையும் படிக்கும் போது உத்வேகம் வரும். ஆனால் யதார்த்த வாழ்வு கனவு குமிழி போல் இவைகளை எளிதில் உடைத்துவிட்டு சென்றுவிடும். இவைகள் அனைத்தையும் நெஞ்சில் நிறுத்தினாலும் சூழலும் காலமும் தான் சில விஷயங்களை தீர்மானிக்கின்றன. இவைகள் பெரும்பாலும் முதலாளிகளின் பார்வையிலிருந்தே சொல்லப்படுகின்றன. தொழிலாளியின் பார்வையில் பார்த்தால் வேறு ஒரு தோற்றம் காணலாம். சொற்களில் தோரணங்கள் கட்டும் நிலையினை காணும்போதெல்லாம் சி ஆர் ரவீந்திரனின் 'சராசரிகள்' கதை நினைவுக்கு வரும்.


கருவேல மரங்கள் நிரம்பிய ஒரு காட்டில் துரை எனும் இளைஞன் தேர்வு நேரம் என்பதால் அந்திவரை அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறான்.அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு பாம்பினை இருவர் துரத்தியபடி வருகின்றனர். நாகப்பாம்பு என்று தெரிந்தவுடன் ஒருவன் கையில் கற்கள்,உண்டிவில் சகிதம் கையில் இருக்கிறது. இரையைத் தின்ற பாம்பு ஐந்து பேர்கூடியவுடன் படமெடுக்கிறது. யாரும் அடிக்காமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.


அதில் ஒருவர் பாம்பை அடித்தால் மாமா திட்டுவார் என்றும், மற்றவர் கைவலிப்பதால் தன் குறி தவறிவிடும் எனவும், தன் மனைவி கருவுற்றிருப்பதால் அடிக்கக்கூடாதென ஒருவரும், இருட்டிவிட்டதால் தன் கன்பார்வை சரியில்லையென்று ஒருவரும் சொல்ல.. இறுதியில் பாம்பை கொல்லும் முயற்சியை கைவிட்டு எல்லோரும் திரும்புகிறார்கள்.அந்த பாம்பு தான் பல அம்சங்களின் குறியீடாக உள்ளதென எழுத்தாளர் பாவண்ணன் குறிப்பிடுவார்.வறுமை, சாதி, ஊழல், பொறாமை அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டியவை.ஆனால் அவற்றை அகற்றும் செயலில் ஈடுபட தயக்கம் இருக்கவே செய்கிறது. எல்லா அறிவும் வெற்றிக்கான ஃபார்முலாவாக இருந்தாலும் உண்மையான யதார்த்தத்தை காணும் போது தோற்றுதான் போகிறோம்.


அந்த யதார்த்தத்தை அஞ்சாமல் நோக்கும் துணிவுதான் ஒவ்வொருவரும் வளர்க்க வேண்டிய சுயமுன்னேற்றம்.விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையுறு மனங்கேட்டேன்- நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன் எனச் சொல்லும் பாரதி போல யதார்த்தமாக மனம் சொல்வதை உடல் செய்யும் அற்புதத்தைத் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தொழிலதிபர் விழாவில் பேசும் போது..ஒரே ஒரு மஞ்சப்பையை கொண்டுதான் இந்த பட்டணத்துக்கு வந்தேன்.அதை வைத்துத்தான் வெற்றி பெற்றேன் என்றார்.அதைக்கேட்டு கூட்டமே சிலாகித்து கைதட்டி கலைந்தது. ஒரே ஒருவர் மட்டும் அந்த பையில் என்ன இருந்தது எனக் கேட்க அதற்கு அவர் அதில் ஒரு இலட்சம் ரூபாய் பணம் இருந்தது என்று கூறி சிரித்தாராம்


சிரித்ததோடு அனைவரும் கேட்டுவிட்டு சென்றனர் ஆனால் நீ ஒருவன் மட்டும் அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்ததை சொல்லி பாராட்டினாராம். எந்த வெற்றிக்கும் ஒரே ஃபார்முலா இல்லை. அது கண்டுபிடிக்கவும் இல்லை.சுய முன்னேற்றம் நம் உழைப்பில் தான் இருக்கிறது.


கரை ஓரமாய் நின்று கால் நனைப்பது நன்றாகத் தான் இருக்கும்.கடலில் இயங்கினால் தான் உண்மை தெரியும்.அப்போது கற்றது பலவும் மதிப்பிழந்து புதிதாய் ஒன்றை கற்றுக் கொள்வோம். அதுவே அனுபவ கற்றல்.சுய முன்னேற்ற நூல்களில் நம் வாழ்வுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு வாழ்வில் செயல்படுத்தி பார்த்து அல்லவைகளை தவிர்த்து நல்லவைகளை பயன்படுத்திப் பார்க்கலாம்.எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சொல்லப்பட்டிருக்கும் சில புத்தகங்கள்.சில கருத்துக்கள் சுயநலம்தான் சுய முன்னேற்றமோ என தவறாய் புரிந்து கொள்ளப்படும்.


ஒவ்வொரு மனிதனின் பலவீனங்களை அவர்களே நீக்கி தன்னை வெற்றி கொள்ளுதலே சுயமுன்னெற்றம்.அதற்கு பேராற்றல் சூழல் காலம் அறிவினைக் கொண்டு, தான் பெற்ற அனுபவங்கள் மூலம் அதை அடையும் போது இன்னும் உயரம் தொடலாம்.


-மணிகண்டபிரபு

Tuesday 14 September 2021

இன்குலாப்

நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கைகளில் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்!

-இன்குலாப்

Monday 13 September 2021

வேலை செஞ்சாலும் வசைகள் வாங்குறாங்க! - தடுப்பூசி பணியில் கிராமப் புற செவிலியர்கள்


எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்நில்லா தோட நீ எனக் கருள்வாய்...
அருணகிரிநாதர்

கொரொனா அலைகள் முடிந்த பின்.. மக்கள் தடுப்பூசிகளை ஆர்வமுடன் போட்டுக்கொள்ளும் நேரம். தடுப்பூசி மையத்தில் அன்று ஒருநாள் நூறு ஊசி மட்டும் போடப்படும் என்பதால் மக்கள் அனைவரும் அதிகாலை முதலே காத்திருந்தனர். நேரம் ஆக ஆக செவிலியரை வசைபாட துவங்கினர். சிறிது நேரத்தில் செவிலியர் ஒருவர் வியர்க்க விறுவிறுக்க மருந்து பெட்டி சகிதம் வந்து சேர்ந்தார். வந்தவுடன் மின்சாரம் பாய்ச்சியது போல் அத்தனை வேகத்துடன் அத்தனை பேருக்கும் முகம் சுழிக்காமல் ஊசி போட்டு முடித்தார்.


பின்பு தான் கொண்டு வந்த உணவுப் பொட்டலத்தை பிரித்து உண்ணத் துவங்கினார். விசாரித்ததில் வீட்டைவிட்டு காலை ஏழு மணிக்கு கிளம்பி.. இப்போதுதான் காலை உணவையே உண்பதாக இரண்டு மணிக்கு கூறினார். இது போல் சம்பவங்கள் நிறைய முறை நடந்துள்ளதாகவும் சொன்னார். உண்மையில் அனைத்து மக்களுக்கும் கொரொனா தடுப்பூசி செலுத்துவதில் தொண்ணூறு சதவீத பங்கு செவிலியர்களையே சாரும்.


#கிராம சுகாதார செவிலியர்கள்

ஒரு கிராமத்தில் ஐயாயிரம் மக்கள் தொகை இருந்தால் துணை சுகாதார நிலையங்களும், முப்பத்தைந்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் பேர் இருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆரம்பிக்கப்படும். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் இருப்பார்கள்.இங்கு பணிபுரியும் செவிலியர்கள் அந்த கிராமத்தில் இருக்கும் அங்கன்வாடி மையங்களுக்கு சென்று கருவுற்ற தாய்மார்கள், குழந்தை பேறு பெற்ற தாய்மார்களை கண்காணிப்பார்கள்.


கருவுற்ற பெண்களின் உடல்நலனை பேணுவதுடன் அரசு வழங்கும் தொகையினையும் பெற்று தருவது, சிறுவியாதிகளுக்கு நிவாரணம் வழங்குதல், குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளை, ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளையும் கண்காணிக்கின்றனர்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது, தாய்-சேய் நல அட்டை வழங்குவது,சத்து மாத்திரை கொடுப்பது, இளம் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவது என தனக்கு ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் சென்று இது போன்ற 40க்கும் மேற்பட்ட விபரங்கள் அடங்கிய படிவங்களையும் பராமரிக்க பணிகளை செய்து வருகின்றனர்.


#தடுப்பூசி போடும் பணி


கொரொனாவை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுப்பூசி ஒன்று தான் நம் முன் இருக்கும் ஒரே கவசம் என உலகின் பல்வேறு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி செலுத்தும் களப்பணியில் கிராமப்புற செவிலியர்களின் பங்கு அளப்பரியது.


காலையில் 7 மணிக்கு பணிக்கு செல்லும் செவிலியர்கள்.. அங்கன்வாடியில் தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு சென்று பதிவேடுகள், கர்ப்பிணியை ஆய்வு செய்து விட்டு ஆரம்ப சுகாதார நிலையம் செல்கிறார். அங்கு தனக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளை சரிபார்த்து வாங்கிக் கொண்டு தடுப்பூசி போடும் மையங்களுக்கு வர பத்து மணியாகிவிடும்.வந்தவுடன் தடுப்பூசி போடுவோரின் பெயர் எழுதி,செல்போனில் பதிவிட்டு சான்றிதழ் கிடைக்க வழிவகை செய்கிறார்.


சில கிராமங்களில் டவர் கிடைக்காது. ஒவ்வொருவரின் பெயர், ஆதார் பதிவிட பத்து நிமிடமாகும். தாமதமானால் காத்திருப்போரின் வசைகளையும் வாங்கும் நிலை. ஊசி போட ஒருவரே இருப்பதால் ஊசி பிரித்து போடும்போது நூறு தடுப்பூசிகள் போட 1 மணியாகிவிடும்.200 என்றால் 3 மணியாகிவிடும்.ஒரு முறை 300ஊசி போட 6 மணியான நிகழ்வுகளும் நடந்ததுண்டு.ஒரு செவிலியர் அதிக பட்சம் 600 தடுப்பூசி ஒரே நாளில் போட்டுள்ளதாக கூறினார்


#செவிலியர்கள் சந்திக்கும் இடர்கள்

புதிதாய் கட்டப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறம் இருப்பதால் அங்கு சென்று மருந்து எடுத்து வர தாமதமாகிறது. அங்கன்வாடி இருக்கும் பகுதியும் ஆரம்ப சுகாதார நிலையமும் தூரமாய் இருப்பதால் இந்த நிலை. சிலருக்கு வாகனம் இல்லாததால் பேருந்திற்காக காத்திருந்து செல்வதால் இன்னும் தாமதமாகிறது. இதனால் காலை உணவை கூட தவிர்த்துவிட்டு ஊசி போடும் பணியில் ஈடுபடுகின்றனர்.


ஊசி போடும் முன் சந்திக்கும் பிரச்சனையில் தலையாயது மக்களுக்கு டோக்கன் கொடுப்பது. ஆரம்ப நாட்களில் இதில் பல சண்டைகள் வரும்.அரசியல் கட்சியினர் பல டோக்கன் எடுத்துவிட காத்திருந்த மக்கள் கொதித்தெழ தள்ளுமுள்ளு நடந்த சம்பவங்களும் உண்டு.தற்போது கிராம நிர்வாக அலுவலகம் மூலம் கொடுப்பதால் ஓரளவு பிரச்சனை இல்லை. இருப்பினும் சிலர் கடைசி நேரத்தில் வந்து உறவினருக்கு தடுப்பூசி போடவேண்டும் என சங்கடப்படுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.


*இடையில் தேநீருக்கோ, இயற்கை உபாதை கழிக்க கூட செல்ல இயலாத சூழல்.


*பதிவேடு எழுத ஒவ்வொரு முறையும் ஆட்களை பிடித்து உதவி செய்ய வேண்டியுள்ளது


*அலைபேசி எண்ணிற்கு ஒரு நாளில் குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகிறது. எடுக்கவில்லையென்றாலோ, அணைத்து வைத்துவிட்டாலோ பிரச்சனை தான்


*ஒவ்வொரு முறை மருந்து எடுத்துச் சென்று திரும்பவும் ஊசி போடும் மையத்திற்கு வருவது சவால்தான்.


*பேருந்து வசதி இல்லாத பகுதிகளில் நடந்தே சென்று சேவை செய்ய வேண்டிய சூழல் உள்ளது.


*குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் போடும் போது.. குழந்தைகள் ஒத்துழைக்க தாமதப்படுத்துவார்கள்.

இதனால் சில சமயங்களில் தடுப்பூசி போட தாமதமாக செல்லும் நிலை ஏற்படுகிறது.


*பல மாதங்களாக விடுப்பு இன்றி பணியாற்றி வருகின்றனர். தொடர்ச்சியாக கொரொனா கால தடுப்பூசி போடுவது பணிப்பளுவை அதிகரித்துள்ளது.


ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறோம். ஒவ்வொரு நாள் மாலையிலும் வீட்டுக்குச் சென்று தன் குழந்தைகளை கொஞ்சும் போது மனது உறுத்தலாகவே இருக்கும். பெரும்பாலும் குழந்தைகளை தூக்குவதையே தவிர்த்துவிடுவேன் என மனம் கனத்த குரலில் பேசினார் ஒரு செவிலியர்.தினசரி கிளம்பும்போது இன்று எந்த பிரச்சனையும் இன்றி தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டுதான் கிளம்புவதாக ஒருவர் கூறினார்.


தமிழகம் சுகாதாரத்துறையில் முன்னேறிய மாநிலமாக மாறியதற்கும்,பேறுகால இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கும்,கொரொனா காலத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியிலும் கிராமப்புற செவிலியர்களின் பங்கும் முக்கியமானது.
கிரிமியன் போரில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவமனையில் கையில் விளக்குடன் வலம் வந்த நைட்டிங்கேலின் வழியில் தான் இன்றைய கொரொனா காலகட்டத்தில் கையில் சிரஞ்சுடன் நாள்தோறும் வலம் வருகின்றனர் செவிலியர்கள்.


கடந்த செவிலியர் தினத்தில் இவர்களின் பணியைப் போற்றும் வகையில் கோவையில் செவிலியர்களின் காலில் விழுந்து, ‘‘நீங்கள்தான் இப்போதைய சூழலில் கடவுள்’ என இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் கூறியது இவர்களின் பணிக்கு கிடைத்த மகத்தான அங்கீகாரம்.
செவிலியர் என்பவர்கள் மருத்துவர்கள் அல்லர்,ஆனால் மருத்துவத்தை விட, ஒரு நோயாளியை வெகு அக்கறையோடு கவனிப்பதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இனிமேலாவது அவர்களை ஊசிபோடும் இடங்களில் கண்டால் கருணையோடு பார்த்தாலே போதும்.. அவர்களின் பணிக்கு நாம் கொடுக்கும் அங்கீகாரமும் அதுதான்.

Care for one that is love, Care for hundreds that is nursing"

-மணிகண்டபிரபு