இப்படியெல்லாம் இந்தக்காலத்தில நடக்குமா?ஆணவக்கொலையெல்லாம் சுத்த ஹம்பக்னு சொல்றவங்க எல்லாரும் நியூஸ் பேப்பரில் கிரிக்கெட் செய்தியும் தலைப்புச் செய்தியும் பார்க்கிற கூட்டமா தான் இருக்கும். ஒரு புலனாய்வு வார இதழில் மாதத்தில் குறைந்தது இரு இதழ்களிலாவது ஆணவ கொலைகள் அட்டைப்படத்துடன் வருவதை பார்த்திருக்கிறேன். நிச்சயம் இதுபோல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அதனை ரத்தின சுருக்கமாக மனம் கனக்கும் வகையில்,உள்ளது உள்ளபடியே படைத்த நான்கு இயக்குநருக்கும் சபாஷ். ஆந்த்ராலஜி படம்னாலே ஓவியத்திலிருந்தோ, கார்ட்டூனிலிருந்தோ படம் விரிய வேண்டும் என்பது சாங்கியம் போல இருக்கு.
#தங்கம்
1981ல் கோவையை பின்னணியாக கொண்ட கதையில் திருநங்கையாக காளிதாஸ் ஜெயராம்.அவரின் தங்கையை விரும்பும் நாயகனாக சாந்தனு.இந்து-முஸ்லிம் ஈகோ வர அண்ணனான காளிதாஸே இருவரையும் இணைத்து ஊருக்கு அனுப்புகிறார்.முடிவில் என்ன்ச் என்பது கதை.கிட்டதட்ட பம்பாய் போல செல்லும் கதையில் இறுதியில் நெகிழ வைக்கின்றனர். காளிதாஸின் நடிப்பு அபாரம். கோவை நேட்டிவிட்டினாலே ஒன்ற,என்றனு சினிமாத்தன பேச்சு பேசாமல் "ஈடு,ஆகாவலி, திருவாத்தான்,ஒத்தனம் குடு,சித்தங்காட்டி,கதவநீக்கு"என பேச்சு வழக்கை பேச்சுவாக்கில் சொன்னது சிறப்பு.அம்மாவின் அழுகை சோககீதம்.
#லவ் பண்ணா உட்றணும்
விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் யதார்த்தமாய் ஆரம்பித்து வேறு பாணியில் செல்கிறது.தேனி ஈஸ்வரனின் கிராமம் அழகியல்.
காதல் மிக புனிதமானது
நம் பிள்ளைகளுக்கு வராத வரை னு ஒருகாலத்தில் ஷேக்ஸ்பியரே சொல்லியிருக்காரு.
கலப்பு திருமணம் செய்து வைக்கும் ஊர் பெரியவருக்கு இரட்டையர் அஞ்சலி.இருவரும் பேசிக்கொள்வதில்லை.மூத்த மகள் ஒருவரை காதலித்தார் என்பதால் கொலை செய்துவிடுகிறார்.இது தெரியவரும் இளையமகள் என்ன செய்தார் என்பது கதை.
அல்லக்கை நரிக்குட்டியாக வருபவர் சிக்ஸர் அடித்திருக்கிறார். லெஸ்பியன்னா ESPN சேனல்தானேனு சொல்லும் இடமும் தாடி வைத்தவரை KGF என அழைப்பது லகலக.அக்கா கொலையை கண்டுபிடிக்கும் போது புத்திசாலித்தனமா எதாச்சும் நடக்கும்னு நினைச்சா புஸ்ஸூனு போகிடுச்சு பாஸ்.நான்கில் கடைசி இடம்தான் இதற்கு.
#வான்மகள்
இருமகள்,ஒரு மகனுக்கு அப்பாவாகவும்,சிம்ரனுக்கு கணவனாகவும் வாழ்ந்து வருகிறார் கெளதம் வாசுதேவ்மேனன். பாசத்தில் திளைத்து மூவரையும் கண்ணும் கருத்துமாய் வளர்க்கிறார்.
மூத்தவள் வயதுக்கு வந்தவுடன் சிம்ரன் பேசும் வசனம் கூர்மையானது "இந்த உடம்பு உன்னுது..உனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு.அதனால் உன் உடம்பை மதிக்க கத்துக்க, பாதுகாக்க கத்துக்க என பேசும் இடம் நச்.
எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழும் போது குடும்பமே உடைந்து போகிறது.வழக்கமான ஆணவக்கொலை போல் அல்லாமல் பெண்ணின் பார்வையில் சொல்லியிருப்பது நுட்பம்.ஆனால் ஒரு பெண் இவ்வளவு தூரம் செய்வார்களா என்பது ஆச்சர்யமளிக்கிறது.
#ஓர் இரவு
அண்ணாவின் ஓர் இரவு போல் அல்லாமல் நெஞ்சை கனக்க வைக்கிறது வெற்றி மாறனின் ஓர் இரவு.பிரகாஷ்ராஜ்க்கு மூன்று மகள்கள் ஒரு மகன்.அக்குடும்பத்தில் ஒருவரான சாய்பல்லவி காதல் திருமணம் செய்து பெங்களூருவில் செட்டிலாகிறார்.கர்ப்பமாய் இருப்பதால் ஊருக்கு அழைத்து வளைகாப்பு செய்ய நினைக்கிறார் பிரகாஷ் ராஜ்.அந்த ஓர் இரவில் என்ன நடந்தது என்பது நெஞ்சை கனக்க வைக்கும் கதையாய் சொல்லி இருக்கிறார்.
மகளுக்காக பாசத்தில் மருகுவதும், மருமகனின் கையால் தண்ணீர் கூட குடிக்காமல் கெத்து காட்டு ஊர் மனுஷனாக வாழ்ந்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.நேர்த்தியான நடிப்பிலும்,தன்னால் படிப்பு பாதிக்கப்பட்ட சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்பதிலும் ஸ்கோர் செய்கிறார் சாய்பல்லவி.
4கதைகளும் சொல்லும் பாடம் இன்னும் ஆணவ கொலைகள் இருக்கிறதென மக்களிடம் ஆவண படுத்தியிருக்கிறது.இதற்கு தீர்வு இல்லையானு இயக்குநர்களை கேட்காமல் இப்படிப்பட்ட கேடுகெட்ட காரியங்களை செய்யாமல் இருப்பதும்,இப்படி செய்வோரை சட்டத்தில் பிடித்து தருவதும், இது பற்றி இளைஞர்கள் விவாதிப்பதும் தான் தீர்வாக அமையும்.ஜாதியை ஒழிக்க முடியாது.. புறக்கணிக்க கற்றிக்கொண்டாலே ஜாதி ஒழியும்
நான்கு படங்களுமே கெளரவ கொலைகள் குறித்த படம் தான். இதில டூயட் இல்ல, காமெடி இல்லனு சொல்லாம இது குறித்து படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்ற நால்வருக்கும் பூங்கொத்துக்கள்
-மணிகண்டபிரபு