#Reading_Marathon2024
#24RM050
Book no:5/100+
களிற்றடி
-செளம்யா
ட்விட்டர் நண்பர் சௌமியாவின் முதல் சிறுகதை தொகுப்பு இது. இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் வாங்கியவை. சொற்களின் மூலம் ஓவியம் வரைவது என்பது மிகச் சிலருக்கு அது கைவந்த கலை. எழுத்துக்கள் இயல்பாகவும் கதை களத்தில் நின்று மீறாமலும் தனக்கே உரிய பாணியில் நம்மை அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றை வைப்பது அல்லது அருகில் இருந்து பார்க்க வைப்பது போன்ற உணர்வைத் தருகிறது இக்கதைகள். சுந்தரராமசாமியின் கதைகளை போல எந்தவித வார்த்தை ஜாலமும் அலங்காரமும் இல்லாமல் கதைகள் இருக்கின்றன. வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள இருண்ட பக்கங்களில் ஒரு டார்ச் லைட் அடித்து அதன் மூலம் இந்த கதையின் உள்ள கதாபாத்திரங்களின் பக்கம் நின்று நம்மையும் அறியாமல் கதைகளோடு ஒன்ற வைத்து சரி தவறு என மனதில் ஒரு உரையாடல் நிகழ்த்தி அல்லது ஏதேனும் ஒரு கதை மாந்தரின் கைகளை நேசக் கரம் கொண்டு நீட்டுவது அக்கதை சொல்லிக்கு கிடைத்த வெற்றியாகும்.
களிற்றடி கதையில் அப்பாவின் கால்களை அமுக்கி கதை கேட்கும்போது அதற்கு காரணமான வலியினை உரையாடல் மூலம் கேட்டு அவரின் பால்யத்தை மீட்டெடுக்கும் போது அவரின் குற்ற உணர்வும் தூர் வாரப்படுகிறது. மகளிடம் சொல்லிவிட்டு முகத்தை திருப்பும்போது கண் கலங்கி இருப்பார். அந்த கணத்தில் நம்முடைய விழிகளிலும் கொஞ்சம் ஈரம் இருக்கும்.
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை என்பார் வள்ளுவர். ஆனால் விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் தம்மின் தம் மக்கள் மேன்மை உடையவராக விளங்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். சாக்கடை அள்ளும்போது விசை வாய் தாக்கி இறந்த கணவன், மலம் அள்ளும் தொழிலை செய்யும் அம்மா.. மகன் மீண்டும் அதே தொழிலுக்கு வரக்கூடாது அவமானப்படக் கூடாது என எண்ணுகிறாள் தாய். அப்படி நினைக்கும் போது அவர்களின் சுயமரியாதை என்ன ஆனது .பசி எந்த அவமானத்தையும் வெல்லக் கூடியதாய் இருக்கும்போது இவர்களின் வீராப்பு வயிற்றுடன் போரிடுவதா அல்லது தம்மை இழிவு படுத்தும் மக்களுடன் போரிடுவதா என்ற போரில் யார் வென்றார்கள் என்பது இக்கதையின் முடிவு.
காருண்யம் மற்றும் ஊழ் கதைகள் இரண்டும் ஏறக்குறைய ஊனமுற்ற அல்லது சந்தர்ப்பத்தினால் குறைபாடு அடைந்த குழந்தையின் மீது காட்டும் தாயின் பாசப் போராட்டத்தையும் ஊழ் என்ற கதையில் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரனை குடும்பத்தில் உள்ளவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்ன நினைக்கிறார்கள்..உதாசீனம் செய்யும் சகோதரனுக்கு ஏற்பட்ட நிகழ்வை கனத்த இதயத்துடன் நம்மை படிக்க வைக்கிறது.
கொடுத்த கடனை வசூலிக்கச் செல்லும் ஒருவனின் மனநிலை பின்பு அவர்களின் நிலை அறிந்து இரக்கப்படும் போது தன்னால் இரக்கம் மட்டுமே பட முடியும் என நினைத்து திரும்பும் போது அந்த ஐந்தாயிரம் பணத்துடன் நம்முடைய மனமும் கொஞ்சம் கனக்கிறது.
அரிது அரிது கதையில் செக்கு மாடு போல் உழைக்கும் ஒரு கடைநிலை ஊழியன் ஜேக்கப் எவ்வாறெல்லாம் பிறரிடம் அவமரியாதை பெறுகிறான் என்பதை ஆரம்பம் முதல் இறுதி வரை சொல்லிவிட்டு இறுதியில் ஜேக்கப் இன்னொருவனுக்கு கரிசனம் ஏளனம் செய்வதை பார்த்து அதிர்ச்சி அடையும் பெண் போல நமக்கும் உலக இயல்பை ஒரு நிமிடம் சொல்லி இருப்பார்.
ஒரு நடுத்தர குடும்பத்தில் வாழும் ராஜேஷ் பணத் தேவையையும், மனைவியின் கௌரவத்தையும் காப்பாற்ற எவ்வாரெல்லாம் அதிகாரத்துடன் முட்டி மோதுகிறானா?அல்லது ஒத்துப் போகிறானா என்பதனையும் இறுதியில் அதிகாரம் ஜெயித்ததா அல்லது சுய கவுரவம் ஜெயித்ததா என்பதையும் படிக்கும் போது நம்மை கண்கலங்க வைத்திருப்பார்.
இறுதியிலும் தொடக்கத்திலும் வரும் chellam calling எனும் அழைப்பு இருவித உணர்வுகளை நமக்கு தருகிறது
மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கும் கல்லூரி மாணவியான கீர்த்தனா பகுதிநேர ஊழியர். தினசரி அங்கு நடக்கும் அனுபவங்கள் மூலம் ஒரு பாடத்தினை கற்றுக் கொள்கிறார். தான் அதிகமாக வாங்கிய பணம் எவ்வாறு அவரை குற்ற உணர்ச்சிக்கு தோன்றியதோ அதேபோன்று தான் இழந்த பணமும் அதே குற்ற உணர்ச்சியை தூண்டுகிறது .தராசு முள் போல் அவரின் மனம் எங்கு சாய்ந்தது எங்கு எழுந்தது என்பதனை கதையில் சொல்லி இருக்கிறார்.
நாயின் மீதான பயத்திற்கு சைனோபோபியா என்று பெயர். சைனோ என்றால் கிரேக்க மொழியில் நாய் எவ்வளவு மென்மையான பெயர் என்ற சைனோ கதையின் மூலம் இந்த ஒரு புது தகவலை தெரிந்து கொண்டேன். நாயின் மீது வெறுப்பை உமிழும் தேவகி பின்னாளில் நாயுடன் தவறாக நடந்து கொண்ட மனிதன் யார் என்பதை இறுதியில் தெரிய வரும்போது ஒரு சஸ்பென்ஸ் படத்துக்கான திரில்லருடன் கதை முடிகிறது.
மன்னிப்பு பெற்றவர்களே மன்னிப்பு கொடுக்க தகுதி உள்ளவர்கள் எனும் ஜெயகாந்தனின் வரிகளை போல துயில் துணை கதையில் கணவன் சறுக்கிய அதே இடத்தில் மனைவியும் சறுக்குகிறாள். இறுதியில் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனரா அல்லது எதனை கற்றுக் கொண்டார் என்பதனை நமக்கும் கற்றுக் கொடுக்கிறார் இக்கதை மூலம்.
#ரசித்தது
*கேட்பவர்களின் ஆர்வத்திற்கேற்ப நிகழ்வுகளை கூட்டியோ குறைத்தோ நீட்டியோ வெட்டியோ சொல்கிறார்கள் அல்லது நிறுத்தி விடுகிறார்கள்
*டேய் சாப்பிட்டு போடா என அவள் கத்தி முடிக்கும் போது அதை கேட்கும் தூரம் கடந்து இருந்தான்
*ரோசம் பார்க்க சுயமரியாதை விட வசதி அவசியம்
*பசியில் இருக்கும்போது கணக்கு பாடம் நடத்துவதை நரகத்தில் கூட தண்டனையாக வைத்திருக்க மாட்டார்கள்
*அதுவரை பள்ளி விடுப்பு எடுக்க மட்டுமே பயன்பட்ட
காய்ச்சலின் மேல் முதல் முறையாக பயம் வந்தது
*அனுபவங்களின் வலியேறிய பின் தானே மனதில் முதிர்ச்சி கனிகிறது
*காலையிலிருந்து எதுவும் காணாத வயிறு கொள்ளி வைத்த பிணம் போல் பற்றி எரிந்தது
*அவர் சொன்னது எல்லாம் மலையாளத்தில்.மனம் தமிழில் குத்துமதிப்பாக மொழிபெயர்த்துக் கொண்டது
*கெட்ட வார்த்தை பேசியதை கேட்டவுடன் பேச்சு எழவில்லை. ஒரு பெண் மீதான இறுதி ஆயுதத்தை ஒரு ஆண் பிரயோகித்து விட்டான்.
*போதும் என்ற மனம் வந்துவிட்டால் தேங்கி நின்று விட வேண்டியதுதான்
*எடுத்துப் பேசுடா. கூப்பிடுறது பொண்டாட்டினா எடுக்குற வரை விட மாட்டார்கள்
*வெட்கத்தின் இன்பம் உடலெங்கும் பரவியது
*குழந்தைகளுக்குத்தான் எத்தனை பெரிய கொடுப்பினை.உலுக்கி எழுப்பினால் கூட சுலபமாய் எழுந்திருக்காத நல்லுறக்கம் வாய்க்கிறது.
*பதிலற்ற கேள்விகள் குழப்பங்களாக வடிவெடுத்தன
அதிகாலை அன் ரிசர்வ் பெட்டியில் பயணித்த போது தான் இந்த புத்தகத்தின் கதைகளை படித்தேன். அத்தனை கதைகளும் வெளியில் ஓடும் சித்திரங்களும் மனதில் ஒரு நேர பதிந்தன. கலைத்துப் போட்ட கண்ணாடி துண்டுகள் கலைடாஸ்கோப்பில் கலையாவது போல வெவ்வேறு உணர்வுகளும் விசித்திர நிகழ்வுகளும் இதில் விரிந்துள்ளது என குறிப்பிடப்பட்டது முற்றிலும் உண்மை. நல்ல சிறுகதை காலத்தை அசைபட வேண்டும், நம் வாழ்வை ஆசைப்பட வேண்டும். கதையில் உள்ள கதாபாத்திரம் ஒன்றின் மேல் நம் கவனம் குவிந்து அதனையே அனுபவமாக மாற்றும் அற்புதத்தை இந்த கதைகளின் வழியே கதை ஆசிரியர் நமக்கு எளிதில் கடத்தி விடுகிறார்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு