கி.ரா எனும் கதைசொல்லி
*மணி
எழுதுகிறவனைத் தெரிந்துகொள்ள அவனுடைய படைப்புகள் உதவுகின்றன.
சரிதான்.இன்னும் அதிகம் அவனைப் பற்றி அறிந்து கொள்ள உதவுவது கட்டுரைகளே
-கி.ரா
வயசானவங்க இன்னும் ஒரு நிகழ்வை பத்தி சொல்லும்போதெல்லாம், ஒரு அனுபவத்தை அப்படியே சொல்லாமல் அதில் தங்கள் ஆளுமையை கொஞ்சம் கூட்டிச் செல்வார்கள்.உதாரணத்திற்கு அந்தக்காலத்தில நான் ரொம்ப கோபக்காரன்னு தொடங்கி,அந்த உரையாடல் முழுவதுமே தன்முனைப்பை வெளிப்படுத்துவாங்க. இது கேட்பவருக்கு அயர்ச்சியை தரும். உண்மையை உள்ளவாறே ரசனையுடன் சொல்ல வேண்டும்.இது கேட்பவரை உற்சாகப்படுத்தும்.உண்மையில்
அனைத்தையும் இழந்த பிறகு நம்மிடம் மிஞ்சி இருப்பதற்கு பெயரே "அனுபவம்".
"அனுபவம் என்றால் அது சாதாரண சிந்தனைகளை தூண்டிவிடுவதாக இருக்க வேண்டும்- கநாசு"
அதுபோல் தான் கி.ரா வும்,தன் அனுபவத்தை கூறும்போதெல்லாம் நம் அனுபவத்தையும் வாழ்க்கையையும் எண்ணிப் பார்க்கும்படி இருக்கும்.
அவ்வகையில் மனதில் உள்ள கட்டுரைகள் சில..
#பள்ளிக்கூடத்தில் எனக்குப்பிடிக்காதது பாடம் சொல்லிக்கொடுக்கிறது ஒன்றுதான்.அதுமட்டுமில்லை எனில் சொர்க்கம்.குழந்தைகளுக்கு கற்றுக்கொள்கிற சுபாவம் பிறவியிலேயே இருக்கிறது. அதனால்தான் கேள்வி கேட்டுகொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட பிள்ளைகளிடம் வாத்தியார் கேள்வி கேட்பது என்ன நியாயம் எனக் கேட்பார். அது கற்றுக்கொள்ளும் சுபாவத்தை மழுங்கடித்துவிடும் என்பார்.
#ஜீவாவைப் பற்றி சிலாகிக்கும்போது..
மே தினத்தைப் பற்றி ஒரு தடவை கோவில்பட்டி வந்து பேசினார். அந்த மாதிரி ஒரு பேச்சை நான் என் வாழ்நாளில் கேட்டதில்லை. பேச்சுக்கு இவ்வளவு மகத்துவம் உண்டா என்று எண்ணியது அப்போது. அவர் பிரசங்கத்தை ஆரம்பிப்பதே ஒரு தனியாக இருக்கும். முதல் ஒரு நிமிஷம் அவர் பேசுவது ஒன்றும் ஒருவருக்கும் கேட்காது.. இதன் விளைவு முதலில் கூட்டத்தில் இருக்கும் மிகச்சிறிய ஒலிச்சலனங்கள் கூட ஒடுங்கிவிடும். இரண்டாவது அங்கங்கே கூட்டத்தில் சிதறிக்கிடக்கும் எல்லாம் ஒரு நிமிடத்தில் மேடையை நோக்கி நெருங்கி வருவார்கள். அப்புறம் இறுதி கட்ட. ஆரம்பிக்கும். அவர் முன் பக்கம் சாய்ந்தால், கூட்டத்தில் இருப்பவர்கள் முன் பக்கம் சாய்வார். பக்கவாட்டில் சாய்ந்து ஆர்ப்பாட்டம் செய்வார்கள். ஜீவாவை கண்டேன் என்பதைவிட ஜீவாவை கேட்டேன் என்பதே சரி.என்பார்.
#கதை எழுதுவது வேதனை
கதை எழுத உட்கார்ந்தால் அது ஒரு 'பிரசவ வேதனை'. எழுதும்போது நம்பிக்கை கிடையாது. எழுதி முடித்த பின்னர் தீர்த்த ஏற்படவே செய்யாது.
கதை எழுத ஆரம்பித்த சில வரிகளை எழுதிவிட்டு, பேனாவைக் கையில் பிடித்து கொண்டே கதையை மேற்கொண்டு மனசுக்குள்ளேயே மனோராஜ்யம் செய்து கொண்டு போவதில் தான் சுகம் கண்டிருக்கிறேன் நான். என்னால் அவைகளை மடக்கிப் பிடித்து எழுத்துக்குக் கொண்டு வருவது என்பது, குழந்தை வண்ணத்துப்பூச்சிக்குப் பின்னாலேயே திரிந்து அது உட்காரும் இடங்களில் எல்லாம் நின்று, நின்று பிடித்துக் கொண்டு வருகிற மாதிரி தான்.
#கதவு கதை உருவானவிதம்
கி. ராவின் கதைகளில் முக்கியமானது கதவு எனும் சிறுகதை.ஒரு கதைக்கான கரு நான்கு இடங்களில் கிடைக்குமாம். "கேள்விப்பட்டது", "பார்த்தது", "அனுபவித்தது", "கற்பனை".
ஒருநாள் தீர்வைத் தருவதற்கு கி.ரா ஊர் கிராம முன்சீப் கச்சேரிக்குப் போய் இருந்தபோது அவர் அறையில் தற்செயலாக எட்டிப் பார்த்தாராம். அங்கே தரையில் சுவரின் மேல் ஒரு கதவு சாத்தி வைக்கப்பட்டிருந்தது . இதுபற்றி கேட்டபோது தீர்வை பாக்கிக்காக இந்த கதவை கொண்டு வந்திருப்பதாக சொன்னார்.தனக்கு ஆச்சரியமாக இருந்ததாகவும்,"எட்டு அணா' பாக்கிக்காக கதவு பிடுங்கி வந்ததாக கூறினார்.
இது என்னை மிகவும் பாதித்தது. அந்த கதவை பார்த்து அதில் தீப்பெட்டி படம் ஒட்டியது தெரிந்தது. அது மிகவும் வேதனையாக இருந்தது.. என்று அந்த கதை உருவான விதம் குறித்து தன் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
#எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்
கி.ரா ஒவ்வொரு முறை ஒரு கட்டுரை சொல்லும்போதும் இடையில ஒரு நாட்டுப்புறக் கதைகளைச் சொல்லுவார். அது மிகவும் சுவாரசியமாக இருக்கும். அப்படி சொன்ன ஒரு கதைதான் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்.
ஒரு கிராமத்திலே படித்தவன் எல்லாம் தெரிந்தவன் என்று பீற்றிக் கொண்டு ஒரு சிலர் இருப்பார்கள். எது கேட்டாலும் தெரியாது என்று மட்டும் சொல்ல மாட்டார்கள்., எல்லாமே தெரியும் என்பார்கள். ஒருநாள் கிராமத்து மக்கள் ஒரு யானையை பார்த்தார்கள். முதன்முதலில் அப்போதுதான் யானையை பார்க்கிறார்கள்.
அப்போது ஏகாம்பரத்திடம் கேட்கிறார்கள் இது என்ன என்று அவனுக்கு தெரியவில்லை. உடனே அவன் சொன்னான் "நேற்றிரவு இருட்டு இருந்திச்சு இல்ல., அதோட மிச்சம்தான் இப்போது கருப்பா அப்படி போகுது என்றானாம். இப்படித்தான் பல ஏகாம்பரங்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களின் வழித்தோன்றல்களாக.
#இந்தியாவிலேயே முதன்முதலாக வட்டார வழக்குச் சொல்லகராதியை 1982இல் கி.ரா. தொகுத்தார். பாலியல் கதைகளை கழனியூரனோடு சேர்ந்து ‘மறைவாய் சொன்ன கதைகள்’ என்ற தலைப்பில் நூலைக் வெளிக்கொண்டு வந்தார்.
#மனதை கவர்ந்த வரிகள்
*ருசி என்பதே,நாக்கைப் பழக்கப்படுத்துகிற ஒரு காரியம்தான்.
*வேட்டிக்கு இடுப்பு பழகனும்
இடுப்புக்கு வேட்டி பழகனும்
*ருசி என்பதே, நாக்கைப் பழக்கப்படுத்துகிற ஒரு
காரியம்தான்
*தமிழன் தலை எப்போது நிமிரும்?
மிக உயரமான கட் அவுட்களை பார்க்க நேரும்போது"!
*காதல் ஒரு தடவை மட்டும் வந்து போவதில்லை; வந்துகொண்டே இருப்பது
*மனுசனுக்கு ஒரு நிம்மதி வேண்டுமென்றால், நம்பிக்கை என்பது தேவைப்படுகிறது
*படிக்க ஆலாப் பறந்த காலம் ஒன்று உண்டு; எப்ப பார்த்தாலும் வெள்ளாடு மேய்கிறது போல
சாப்பாடு சுருங்கினதுபோல படிப்பும் சுருங்கிவிட்டது
*நாட்கள் அதுபாட்டுக்கு வருது போவுது.நாமதான் அதுகிட்ட சூதானமா இருக்க வேண்டியிருக்கு
* பூனைகள் வாழ்ந்து கொண்டிருக்கிற வீட்டில்தான் எலிகள் பேரன் பேத்திகள் எடுக்கின்றனவாம்.கி.ரா வுக்கு பிடித்த சொலவடை
* பறவைக்கு இரண்டு இருக்கைகள் இருக்கிற மாதிரி ஒரு இயக்கத்திற்கு இரண்டு இருக்கைகள் வேண்டும். ஒன்று அரசியல்; மற்றது கலை இலக்கியம். இதில் எது குறைந்தாலும் அந்த பறவையாய் பறந்து செல்ல இயலாது.
* வளருகிற மிச்ச நகத்தை எப்படி நோகாமல் வெட்டி எடுக்கிறோமோ அதேபோல, ஒரு அரசு ஜனங்களிடமிருந்து வரிகளை தீவிரப்படுத்தாமல் பெற்றுக்கொள்ள வேண்டும்.
*எழுத்தாளர்கள் ஏகலைவன் மாதிரி. அவர்கள் எந்த வாத்தியாரையும் வைத்துக்கொண்டு தொழில் கற்றுக் கொண்டதில்லை. அதேபோல் எந்த ஒருவருக்கும் வாத்தியாராக இருந்து கற்றுக் கொடுக்க விரும்புவதுமில்லை.
*ஒரு மனிதனுக்கு இத்தனை அனுபவம் கிடைத்திருக்குமா என்று ஒவ்வொரு முறை பிரம்மிக்கத் தோன்றும்.கி. ராவின் மிகப்பெரிய பலமே புத்தகம் படிப்பதும், நாட்டுப்புறக் கதைகளை தேடுவதும் தான். ஒரு நாட்டின் கருவூலம் எது என்றால் இதிகாச புராணங்கள் அல்ல. நாட்டுப்புறக் கதைகளே என்று கூறுவார்கள்.
அவ்வகையில் தமிழ் நாட்டுப்புறக் கதைகளை தொகுத்ததில் கி.ராஜநாராயணனும் கழனியூரனும் தமிழுக்கு மிக முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள். நாட்டுப்புறக் கதை களஞ்சியம் என்று அன்னம் பதிப்பகம் மற்றும் சாகித்ய அகாடமியின் நூல்களாகத் தொகுத்து வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் பொக்கிசம் என்பது நாட்டுப்புறக் கதைகளே.அக்கதைகள் இருக்கும் வரை கி.ரா நினைவு கூறப்படுவார்.
நினைவஞ்சலிகள்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு