வார்த்தைகளில் வெளியிட்டால் சோபையற்ற வெறும் செயல்களாக மாறிவிடும் உள்ளத்துக்குள்ளையே சுவைத்துக் கொள்ளக்கூடிய பல அனுபவங்கள் அவளுக்கும் ஏற்பட்டன..
#சிறகுகள் முறியும் அம்பை
அம்பையின் கதைகளை பள்ளி நாட்களில் ஒரிரு கதைகள் படித்ததுண்டு. பின்பு நூலகத்தில் தான் அம்பையின் கதைகளை அவ்வப்போது படித்திருக்கிறேன். சாதாரண ஒரு பெண்மணியின் பார்வையில் விரியும் கதைகள் எல்லாமே ஒவ்வொரு ஆணையும் குற்ற உணர்ச்சி கூண்டில் ஏற்றி நிறுத்தும். அந்தக் கதைகள் யாவும் மிகையாகவும் இருக்காது, வலிந்து திணிக்கப்பட்டவை ஆகவும் இருக்காது. இயல்பாக ஒரு வீட்டில் நடக்கும் கதைகளாக தான் இருக்கும்.
அதுவே அந்த கதைகளை மிக ஈர்ப்புடன் ஒவ்வொரு ஆணையும் படிக்க தூண்டும்.
இயற்பெயரான லக்ஷ்மி என்னும் புனைபெயரைச் சூட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் வெள்ளிக்கிழமை பிறந்த எல்லா குழந்தைகளுக்கும் லக்ஷ்மி என்றுதான் பெயர் சூட்டுவார்கள். 'தேவன்’ எழுதிய பார்வதியின் சங்கல்பம் என்னும் நாவலில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாகிய பார்வதி 'அம்பை’ என்ற பெயரில்தான் எழுத ஆரம்பிப்பாள் என்பதால் அப்பெயரையே புனைப் பெயராக சூட்டிக்கொண்டதாய் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.
1971 முதல் 1976 வரை எழுதிய 13 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. முதலில் படித்த சூரியன் சிறுகதை இலங்கை போன்ற போர் பின்னணியில் போர்க்களத்தில் இரு பிள்ளைகளை காப்பாற்றும் அம்மாவின் உணவுகளை மிக அழகாக கடத்தியுள்ளார். பூமிக்கடியில் பதுங்குகளில் இருக்கும் அம்மா மகன் இருவரை விட்டு அக்கா பக்கத்தில் இருக்கும் தோட்டத்துக்கு செல்கிறார். ஒரு நாள் ஆகியும் வராததால் மகனை கையை பிடித்து வேகமாக அழைத்துக் கொண்டு பதுங்கி பதுங்கி செல்கிறார் .அப்போது தன் பிள்ளை இறந்து கிடந்ததை கண்டு பதை பதைத்தவாறு இருக்கும் நிலை மிகவும் கனமானது. அந்த சூழலில் மகனின் கையைப் பிடித்துக் கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பிக்கிறார் என்று முடிவது இன்னும் சோகமாக இருக்கும்.
வல்லூறுகள் கதையில் அம்மா மகளுக்கு இடையேயான உறவினையும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் நடக்கும் கசப்பு உணர்வையும் அழகாக வெளிப்படுத்தி இருப்பார். இறுதியில் அம்மா தற்கொலை செய்து கொள்வது போல் காட்டி இருப்பது படிப்போரையும் துன்பத்தில் பங்கெடுக்க வைக்கும்.
அம்பையின் மாஸ்டர் பீஸ் கதைகளில் ஒன்று சிறகுகள் முறியும். சாயா எனும் பெண்மணியின் கணவர் ஒரு கஞ்சத்தனமான கணக்கு பேர்வழி. அவளின் உணர்வுகளை ஒருநாளும் புரிந்து கொண்டது கிடையாது. எது செய்தாலும் செலவாகுமே என்றுதான் சொல்வான். இதையெல்லாம் மறந்துவிட்டு தன் மகன் சேகரை நம்பியே காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பார். ஆனால் அவ்வப்போது தன் மனதில் ஒவ்வொரு சட்டமாக பிறப்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வாள்.
' மென்மையே இல்லாத ஆண்களுக்கு குழந்தையே பிறக்க கூடாது என்று கட்டாய வாசக்டமி செய்து வட வேண்டும், ஆவலுடன் மனைவியின் கண்கள் ஒரு பொருளின் மீது படியும்போது பர்சை கெட்டியாக மூடிக்கொள்ளும் கணவனின் பர்ஸ் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இப்படி ஒவ்வொரு சட்டமாக மனதுக்குள் நிறைவேற்றிக் கொண்டே இருப்பார். அப்போது ஒரு நாள் தன் தங்கைக்கு திருமணம் நிச்சயம் செய்ததாக கடிதம் வரும். அப்போது தாய் வீட்டுக்கு செல்வதற்காக போகும்போது கணவனின் வார்த்தைகள் தினசரியும் கொடுக்குகள் போல் ஏதோ ஒன்று கொட்டிக் கொண்டே இருக்கும்.
ஆனாலும் கணவனுடன் அவர்களுக்குள் சந்தோசமாய் தான் இருப்பாள். இவ்வாறு செல்லும் வாழ்க்கையில் இறுதியில் இன்னொரு குழந்தை பிறக்கப் போகும் செய்தி அவளுக்கு தெரிகிறது. மௌனம் அறையில் நிலவியது. ஏற்படப்போகும் செலவு பட்டியலை அதை எப்படி பின்னால் ஈடு செய்ய வேண்டும் என்பதை பாஸ்கரன் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் சட்டம் சட்டம் சட்டம் சட்டம் சாயா தூங்கிவிட்டாள் என்று கதையை முடித்து இருப்பார்.நீ எத்தனை சட்டம் போட்டாலும் நடப்பது நடந்து கொண்டுதான் இருக்கும் என்பதை போல அவள் மனம் தூங்கிப் போய் இருக்கும். ஒவ்வொரு இடமும் இந்த கதையில் மிகவும் முக்கியமாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கும்
ஒரு சராசரியான பெண் ஆராய்ச்சி படிப்பை படிக்கும் போது ஏற்படும் இடைஞ்சல்கள் மிக அழகாக திரிசங்கு கதையில் சொல்லியிருப்பார் .எவ்வளவுதான் படித்தாலும் தன் அறிவு பற்றிய நிதர்சனம் அவளுக்கு பயங்கர கூச்சத்தை ஏற்படுத்தியது. ஒருமுறை பொது அறிவு தாள் வந்தது அதில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் கருப்பு ஈக்களாக பறந்தன.லியாகத் அலிகான் எனும் பெயரைப் படித்தவுடன் நிச்சயம் சித்தார்
கலைஞராக இருப்பார் என்று எண்ணுவாள். பகத்சிங் பெயர் கேட்டவுடன் அவர் நிச்சயம் ஹாக்கி ஆட்டக்காரராக இருப்பார் தான் என்று நினைப்பாள். இப்படியாக ஆராய்ச்சி படிப்பு சென்று கொண்டிருக்கும்போது ஒரு கருத்தரங்கில் அயல்நாட்டு விரிவுரையாளர் தன்னுடைய ஆய்வை சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் போது இவள் கேட்ட கேள்விகள் அங்கு இருப்பவரை வியப்பில் ஆழ்த்தும். அவள் பெருமிதத்தில் மிதந்து கொண்டிருக்கும்போது யாவரும் கண்டு கொள்ளாமல் எழுந்து சென்று விடுவார்கள். அதன் இறுதி வரிகள் மிகவும் முக்கியமானது
"பரந்த வெளியில் அமைந்திருக்கும் போது நிர்ப்பயமாக, கூச்சமின்றி, சுதந்திரமாக, அவளால் எதையும் வெளி காட்ட முடியாது என்று நினைத்தாள். கண்ணீரை கூட.. என்று முடித்திருப்பார். அந்த கண்ணீரை கூட என்பது இந்த கதைக்கான ஒட்டுமொத்த கணத்தையும் அந்த வார்த்தை கொண்டிருக்கும்.
#ரசித்தது
*எல்லாருக்குமே புகழ வந்து விடுகிறதா?
*கணவனை அனலை செய்வது போல் ஒரு முட்டாள்தனம் வேறு கிடையாது
*இரு நபர்கள் எவ்வளவு தான் இணைந்தாலும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உண்டு. அந்த சுதந்திரத்தை இருவருமே பலிக்கலாகாது என்பது அவள் கொள்கை.
*அவனை அவள் ஏன் மாற்ற முயல வேண்டும் .அவன் குணத்தின் கோணலை அவள் உணராத போது, ஏன் அந்த குணம் தான் சிறந்தது என்று அவன் கருதும் போது மாற்ற முயற்சி செய்வது மடமை
*எதற்குத்தான் சந்தோசப்படுவது என்று நியதி கிடையாதா. இத்தனை சின்ன வாண்டு பயல் அவளை அழகு என்று விட்டால் இப்படியா மனம் துள்ளுவது
*எல்லாமே அவளுக்கு பழகிவிட்டது அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற வேகம் கூட தணிந்து சிறகிழந்த பறவையாய் அவள் படுக்கையில் முடங்கி கொண்டாள்.
*அசத்தங்களை எரித்து சுத்திகரிக்கும் நெருப்பு அவள். ஒரு சிரிப்பில் மனதில் கோடான கோடி அழகுகளை தோரணமாக வைப்பவள் அவள்.
*அப்போது அவளுக்கு பேச எந்த சொற்களும் மனதில் உருவாகவில்லை. ஓராயிரம் சொற்கள் ஒரே அடியாக மனதில் எழுந்து புகையாய் பிசுபிசுத்து போயின
*எல்லாவற்றையும் மலையாய் நினைத்து அயரும் மலைப்பும் மும்முரமும் அவள் வர்க்கத்துக்கே உரியது என்று தோன்றியது.
*படிப்பில் கூட முதுகு ஓடியே படிக்கும் கழுதைத்தனம் தான் வந்தது.
இவரின் கதைகளில் வரும் கதாநாயகிகள் சாகசக்காரர்களோ பெண்ணியம் பேசியும் மேதாவிகளோ இல்லை. சாதாரண குடும்பப் பெண்களும், சாதாரணமாக படிப்பு வராத பெண்களும், சாதாரணமாக இருக்கும் இளம் வயது பெண்களும் ஆவார்கள். சாதாரண மனிதர்களின் உணர்வுகள் வெளிப்படுத்துவதை யாரும் அவ்வளவு சீக்கிரம் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் இவரின் கதைகள் வழியே படிக்கும் போது ஒவ்வொரு சாதாரண மனிதர்களையும் உற்றுநோக்கும் வாய்ப்பையும், தன் மனதில் அதனை விவாதித்து ஒரு முடிவுக்கு வரும் கேள்வி எழுப்பும் கலையையும் தன் கதைகளின் சொல்லியிருப்பார்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு